இலங்கைச் செய்திகள்

நடைமுறைச் சாத்தியமான சமாதானம் மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றை அவர்கள் இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்
-மெலனி மானல் பெரேரா

a9_roadf-119 மே,2011ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (எல்.ரீ.ரீ.ஈ) எதிரான போரில் வெற்றி பெற்றதன் இரண்டாவது ஆண்டு நிறைவை ஸ்ரீலங்கா கொண்டாடி மகிழ்ந்தது. எல்.ரீ.ரீ.ஈ யின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை 19 மே, 2009ல் கொன்றதின் பின்னர் அரசாங்கம் மூன்று தசாப்தங்களாக நடந்த உள்நாட்டு யுத்தத்தை முடித்துவைத்து தனது வெற்றியை அறிவித்திருந்தது.

இங்கு பெரும்பான்மையோர், சிறுபான்மையோர் என்கிற பேதம் எதுவும் இல்லை, ல்லோரும் சமமானவர்களே மற்றும் இங்கு தாய்நாட்டை நேசிப்பவர்கள் தாய்நாட்டை நேசிக்காதவர்கள் என இரண்டு இனங்கள் மட்டுமே உள்ளன என அரசாங்கம் தெரிவித்தது.

மேலும் ஜனாதிபதி தெரிவித்தது. சமத்துவம் மற்றும் நீதி’ என்பன எல்லோருக்கும் பொதுவானது என்று. தென்பகுதியில் உள்ள மக்கள் இவற்றை அனுபவிக்கிறார்கள் ஆனால் வடபகுதியில் வாழும் மக்களுக்கு அவை கிடைப்பதில்லை. பல வகையான ஆட்களைத் தொடர்பு கொண்டதில் இன்னமும் அவர்கள் பேசுவதற்குக் கூட அச்சப்படும் நிலையில்தான் வாழ்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது.


உள்நாட்டு யுத்தத்தை முடித்துவைத்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டன, எந்தவித யுத்தங்களோ எதுவிதமான குண்டுத் தாக்குதல்களோ இடம் பெறாததால் ஸ்ரீலங்கா மக்கள் ஒரு விதமான ஆறுதலான தன்மையை உணர்கிறார்கள். அது உண்மைதான், ஸ்ரீலங்காவில் ஒரு அமைதியான காலநிலை நிலவுகிறது என்பதற்குச் சாட்சியாக குண்டு வெடிக்கும் ஓசைகளோ, அம்புலன்ஸ் வண்டிகள் ஓடித் திரிவதையோ மற்றும் தங்கள் உடன்பிறப்புகள் இன்னமும் பணியிலிருந்து வீடு திரும்பவில்லை என்கிற அமைதியற்ற மனதுடன் காத்திருப்போரையோ அல்லது குண்டுகள் இருக்கும் அச்சத்தையோ,அல்லது எல்.ரீ.ரீ.ஈ யின் தாக்குதல்களையோ இப்போது காணமுடிவதில்லை.

அத்தோடு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் மற்றும் பெரும்பாலான புத்த பிக்குகளும் (அனுபவம் வாய்ந்த புத்த பிக்குவான வண.ஆரியவன்சலங்கார தேரோ அவர்களின் கூற்றுப்படி) ஒரு போரை நடத்தி எதிரியைத் தோற்கடிக்கும்படி கட்டளையிட்டு அதற்கான ஊக்கத்தையும் அனுமதியையும் வழங்கியிருப்பதும் ஒரு காரணம். (இந்தக் கட்டளைகளும் அனுமதியும் எப்படி வேலை செய்தன, ஏற்றுக் கொள்ளப்பட்ட பொறிமுறையின்படியா, இல்லையா என்பது வேறு விடயம்)
eastஎனவே நாட்டின் தென்பகுதியில் உள்ள மக்கள் ஒரு சமாதானமான வாழ்க்கையை நோக்கி முன்னேறுகிறார்கள் எனக் கூறுவதில் தவறில்லை. அவர்களுக்கு கவலைகள் இன்றி வாழ சொந்தமாக வீடு உள்ளது. வாழ்க்கைச் செலவுக்கான பணத்தைச் சம்பாதிக்கச் சொந்தமாகத் தொழில்கள் உள்ளன. சொந்தக் காணிகளில் விவசாயம் செய்து அதன்பலனை அனுபவிக்க முடிகிறது. சென்று நன்றாக் கல்வி கற்று உயர் நிலைக்கு வருவதற்கு அவர்களுக்கு சொந்தமாகப் பாடசாலைகள் உள்ளன மற்றும் எல்லாவற்றையும் விட ஒரு நாளின் 24 மணி நேரமும் அவர்கள் விரும்பியதைச் செய்ய அவர்களுக்குச் சுதந்திரம் உள்ளது.

ஆனால் தெற்கு, கிழக்கு, மற்றும் வடக்கு பகுதிகளில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் மற்றும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலுள்ள மத குருமார்கள் மற்றும் பொதுநிலையிலுள்ளவர்கள் உட்பட்ட தமிழர்கள் அல்லாதவர்கள் அனைவரும் ஸ்ரீலங்காவின் யுத்தத்தின் பின்னான நிலமையின் தன்மையைப் பற்றி இன்னமும் இருமனப் போக்குள்ளவர்களாகவே உள்ளார்கள்.

மக்கள் இன்னமும் மறுவாழ்வு மற்றும் நல்லிணக்கம் என்பதன் நடைமுறைக் கருத்து என்ன என்பதை அறிவதற்காகக் காத்திருக்கிறார்கள்

மக்கள் அங்கு எப்படி வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பது ஒரு பெரிய கேள்வி?

வடபகுதியில் உள்ள அநேக மக்கள் தங்களைப் பற்றிப் பேசுவதற்கே அச்சப் படுகிறார்கள். “எங்கள் மன உளைச்சலைப் பற்றிப் பேசுவதைக் காட்டிலும் மௌனமாக இருப்பதே மேல்”என வழக்கமாகச் சொல்லுகிறார்கள். அங்கு அரசாங்கத்திடம் இருந்து உதவிகளைப் பெறும் மக்கள் உள்ளார்கள். ஆனால் அவர்களில் பலரும் இன்னமும் தங்கள் வாழ்க்கையை முகாம்களிலேயே தொடர்கிறார்கள். ஸ்ரீலங்கா அரசாங்கம் காலத்துக்கு காலம் அம் மக்களை குடியமர்த்தி விட்டதாக அறிவித்த போதிலும் பாதிக்கப் பட்ட அநேகர் இன்னமும் இடைத் தங்கல் முகாம்களிலேயே உள்ளனர். சில மக்கள் தங்கள் மீள்குடியேற்ற நடவடிக்கைக்காக தங்கள் மீள்குடியேற்ற இடங்களில் ஓரு தங்குமிடத்தை அமைப்பதற்காக 10 தகரங்களை மட்டுமே பெற்றுள்ளார்கள். அவர்களில் பலருக்கும் உணவுக்கான கொடுப்பனவுகள். அது ஆறு மாதங்களுக்கு மட்டுமே உரித்தானது எனக்கூறி தற்பொழுது மறுக்கப் பட்டுள்ளது. வேலை வாய்ப்புகள் குறைவாக உள்ளதால் அவர்கள் உணவுப் பற்றாக்குறைக்கும் முகம் கொடுக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார்கள்.

இந்த உணவுப் பற்றாக்குறையினாலும் மற்றும் இனங்கூற முடியாத காரணங்களாலும், இளைஞர்கள் மற்றும் வயதான தமிழ் ஆண்கள் மற்றும் பெண்கள் என 48 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். அவர்களில் பலரும் நன்கு படித்தவர்கள் எனத் தெரிவிக்கப் படுகிறது. ஆனால் தற்கொலைக்கான காரணங்களை இன்னமும் அறிய முடியவில்லை.

பெரும்பாலான காணிகள் அதன் உரிமையாளர்களின் அழுகைக்கு மத்தில் பாதுகாப்பு படையினராலும் பல்தேசிய நிறுவனங்களாலும் பறிமுதல் செய்யப் படுகிறது. இன்னமும் பல பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்கள் காணப் படுகின்றன. பெரும்பாலானா பகுதிகள் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிய போதிலும், அங்கு கடத்தல் காணாமற் போதல் போன்ற பல சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன. ஆகவே மக்கள் இங்கு தங்களுக்கு சமாதானமான மனநிலை இல்லை எனக் கூறுகிறார்கள். கண்ணுக்குத் தெரியும் அபிவிருத்தி, கட்டிடங்கள், வீதிகள், மற்றும் பாலங்கள் போன்றவற்றின் கட்டுமானப் பணிகள் மட்டும்தான்.

மக்கள் அத்தகைய அபிவிருத்திகளைக் காண்பதற்கு விரும்புகிறார்கள்தான். ஆனால் அதே நேரத்தில் அவர்கள் கூறுவது: “ இவைகளுக்கு முன்னதாக நாங்கள் உயிர் வாழ வேண்டும் மற்றும் எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் மேலும் யுத்தத்திற்கு முன்பு எங்களிடம் எது இருந்ததோ அதுவும் எங்களுக்கு கிடைக்க வேண்டும். எங்களுக்கு எல்லாம் நடந்து முடிந்து விட்டது,….நாங்கள் எங்கள் பிரியப்பட்டவர்களை இழந்து விட்டோம். எங்களது சில உறவினர்களைப் பற்றி ஒரு செய்தி கூட அறிய முடியவில்லை.அவர்கள் உயிருடன் உள்ளார்களா அல்லது இந்தத் தீவின் எந்த ஒரு பகுதியிலும் அவர்கள் இல்லையா…. நாங்கள் எங்கள் உடமைகளை இழந்து விட்டோம். நாங்கள் எங்கள் கண்ணியத்தை இழந்து பிச்சைக்காரர்களாக மற்றவர்களில் தங்கியிருப்பவர்களாக மாறிவிட்டோம்….இப்போது குறைந்தது நாங்கள் எங்கள் வாழ்க்கையை எங்கள் விருப்பப்படி இங்கேயே மீளமைத்துக் கொள்ளவேண்டிய தேவை உள்ளது…”

அவர்கள் இன்னமும் மறுவாழ்வு மற்றும் நல்லிணக்கம் என்பதன் நடைமுறைக் கருத்து என்ன என்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்

உதாரணத்துக்கு பிரதான நகரமாகிய ஓமந்தையில் இருந்து யாழ்ப்பாண நகரம் வரையான வீதி நெடுக சுமார் 60க்கும் அதிகமான உணவு விடுதிகளையும் தங்கும் விடுதிகளையும் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் நடத்தி வருகிறார்கள். தமிழ் மக்கள் இடையே எழுந்துள்ள கேள்வி இந்தச் சந்தர்ப்பத்தை தமிழ் மக்களுக்கு வழங்கி அவர்கள் ஏதாவது உழைத்து தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு உதவாமல் இராணுவம் இவற்றை ஏன் நடத்த வேண்டும்? என்பதுதான்.

கேட்பதற்கே மனது வலிக்கும் ஒரு கதையாக மன்னார் மாவட்டத்தின் மடுக்கரை பகுதியில் யுத்த விதவைகளின் ஏழ்மைநிலை காரணமாக ஒரு சிவப்பு விளக்குப் பகுதி இயங்கி வருகிறதாம். மாவட்டத்தில் உள்ள பல தரப்பட்ட ஆண்களாலும் இந்தப் பெண்கள் உபயோகப் படுத்தப் படுவதாகச் சொல்லப் படுகிறது. இந்த யுத்த விதவைகளுக்கு தங்கள் வாழக்கையையும் தங்கள் அப்பாவிக் குழந்தைகளின் வாழ்க்கையையும் உயர்த்துவதற்கு வேறு எந்த வழியுமே தெரியவில்லை. அத்தோடு சொல்லப் படுவது சில விதவைப் பெண்கள் ஸ்ரீலங்கா இராணுவம் நடத்தும் கடைகளுக்கு தங்கள் செல்லிடப் பேசிக்கு மீள் இணைப்புகளை மேற்கொள்ளச் செல்லும்போது இராணுவ வீரர்கள் இந்த விதவைகளின் தொலைபேசி இலக்கங்களைப் பதிவு செய்து வைத்திருந்து இரவு நேரங்களில் அவர்களை அழைத்து தொல்லைப் படுத்துகிறார்களாம். இதனால் அது அவர்களுக்கு ஒரு நிரந்தரத் தொல்லையாக மாறிவிட்டதாம்.

மேலும் சொல்லப் படுவது வடபகுதிக்கு பயணம் செய்யும் ஒருவர் அனுராதபுரம், பொலன்னறுவ போன்ற பௌத்த நகரங்களுக்கு பயணம் செய்யும் ஒரு வித அனுபவத்தை அடைவார் என்று ஏனென்றால் விசேடமாக கிளிநொச்சி மற்றும் வவுனியாப் பகுதிகளில் அந்த அளவுக்கு அரச மரங்களை நட்டு அதன்கீழ் புத்தரின் சிலைகளை ஸ்தாபித்துள்ளார்கள்.

மொத்தத்தில் யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் முடிந்து விட்டாலும், அந்த மக்கள் அல்லது யுத்தத்தினால் பாதிப்படைந்தவர்கள் தங்களது உண்மையான சொந்த நிகழ்ச்சிகள் பலவற்றினதும் காரணமாக அச்சத்தால் சூழப்பட்டவர்களாக காணப்படுகிறார்கள். ஆனால் தென்னிலங்கையின் பல குழுக்களைச் சேர்ந்த மதத் தலைவர்கள், தர்ம ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பார்வையாளர்கள எனப் பலரும்; போரினால் பாதிக்கப்பட்டவர்களைக் காணச் செல்லும்போது அவற்றில் மறைந்து கிடக்கும் உண்மைகள் யாவற்றையும் தெரிந்து கொள்கிறார்கள், ஆனால் நல்லிணக்கம் பற்றிய எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படாமல் அந்த மக்களின் மனக் கொதிப்பு யாவும் அவர்களின் குறிப்பு புத்தகங்களுடனோ அல்லது கோப்புகளுடனோ முடக்கப் பட்டு வடுகின்றன. சேகரிக்கப் பட்ட உண்மையான தரவுகள், தகவல்கள், அல்லது அதன் உண்மையான வடிவத்தை பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவத் தக்க விதத்தில் ஊடகங்களிடம் வழங்கவேண்டும் என்கிற கருத்து ஏனோ அவர்களிடம் தோன்றுவதில்லை.

அவர்கள் ஊடகங்களுடன் பேசினாலும் கசப்பான உண்மைகளை கூறுவதற்குப் பதிலாக ஒரு பொதுப்படையான எண்ணத்தையே தெரிவிக்கிறார்கள். மறுபக்கத்தில் துன்பப்பட்டுக் கதறும் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவும் நோக்குடன் ஒரு சில கையளவு எண்ணிக்கையிலான கிறீஸ்தவ தேவாலயத் தலைவர்கள் அந்தப் பகுதியின் அடிமட்ட மக்களைப் பற்றிய அல்லது அந்த இடங்களைப் பற்றிய உண்மையான தகவல்களுடன் முன்னுக்கு வரும்போது அவர்கள் புலிகளின் நண்பர்கள் அல்லது நேரடியாகவே “கொட்டியா” என முத்திரை குத்தப் படுகிறார்கள்.

ஆனால்; பொறுப்பான அதிகாரமுள்ளவர்களுக்கு போரினால் பாதிக்கப் பட்டவர்களுக்கிடையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றை மீளாராம்பிப்பதற்கு புத்த பகவானின் 2600ம் ஆண்டு ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தியின் புனித கொண்டாட்டங்கள் நடைபெறும் இத் தருணமே சிறந்த தருணம்,இதை பௌத்த சிங்கள மக்கள் பெரிய அளவில் கொண்டாடும் அதேவேளை, அவர்களது தமிழ் சகோதர சகோதரிகள் தீர்வு காணமுடியாத பிரச்சனைகளுக்குள் அமிழ்ந்து போயுள்ளார்கள்.

அப்படி நடக்குமாயின் அதுதான் ஸ்ரீலங்காவின் வரலாற்றில் மறக்க முடியாத கொண்டாட்டமாக இருக்கும், அதுவும் இது ஒரு சிங்கள பௌத்த நாடு என அழைக்கப் படுவதால், சிங்கள பௌத்த தன்மையின் யதார்த்த நிலைப்பாட்டைக் காண்பிப்பதாகவும், உண்மையான பௌத்த மதத்தின் நறுமணம் கமழத் தக்கதாகவும் இருக்கும். நாட்டின் பொறுப்பான அதிகாரமிக்கவர்கள் உச்சரிக்கும் வார்த்தைகளின் உண்மையான ஆழத்தை வெளிக்காட்டும் விதத்தில்!!

(மெலனி மானல் பெரேரா ஒரு ஊடகவியலாளரும் ஏசியா நியுஸின் ஸ்ரீலங்கா நிருபருமாவார்)

தமிழில்: எஸ்.குமார்

நன்றி தேனீ இணையம்


யாழ். மாவட்டத்தில் 47,300 பேர் இன்னும் மீள்குடயேற்றப்படவில்லை: அரசாங்க அதிபர்
wanni4யாழ். மாவட்டத்தில் 47 ஆயிரத்து 300பேர் இதுவரை தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்படவில்லை என்றும் அவர்கள் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர் என்றும் யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். போரினால் இடம்பெயர்ந்த மக்களைக் குறிப்பிட்ட அளவில் மீளக்குடியமர்த்தி உள்ளோம். இருப்பினும் இன்னும் பெரும்பாளான மக்கள் உறவினர், நண்பர்களின் வீடுகளில் மக்கள் தங்கியுள்ளனர் என அவர் குறிப்பிட்டார். பிரதேச செயலக பிரிவுவாரியாக மீள்குடியேற்றம் செய்யப்படாமல் இருக்கும் மக்களின் விபரங்களையும் அரசாங்க அதிபர் வெளியிட்டுள்ளார். அவற்றின் விபரங்கள் பின்வருமாறு, வலணைப்பிரதேச செயலகப்பிரிவு – 93 குடும்பங்கள்: 376பேர், ஊர்காவற்துறை பிரதேச செயலகப்பிரிவு – 11 குடும்பங்கள்: 41பேர், காரைநகர் பிரதேச செயலகப்பிரிவு - 114 குடும்பங்கள்: 350பேர், யாழ்ப்பாண பிரதேச செயலகப்பிரிவு – 641 குடும்பங்கள்: 2,531பேர், நல்லூர் பிரதேச செயலகப்பிரிவு – 648 குடும்பங்கள்: 2,584பேர், சண்டிலிப்பாய் பிரதேச செயலகப்பிரிவு - 228 குடும்பங்கள்: 737பேர், சங்கானை பிரதேச செயலகப்பிரிவு - 660 குடும்பங்கள்: 2,551பேர், உடுவில் பிரதேச செயலகப்பிரிவு - 143 குடும்பங்கள்: 559 பேர், தெல்லிப்பளை பிரதேச செயலகப்பிரிவு – 6,443 குடும்பங்கள்: 29,237 பேர், கோப்பாய் பிரதேச செயலகப்பிரிவு – 211 குடும்பங்கள்: 559 பேர், சாவகச்சேரி பிரதேச செயலகப்பிரிவு 616 குடும்பங்கள்: 2,167 பேர், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப்பிரிவு – 1,300 குடும்பங்கள்: 5,608 பேர். இந்நிலையில், மொத்தம் 11 ஆயிரத்து 108 குடும்பங்களைச் சேர்ந்த 47 ஆயிரத்து 300 பேர் இன்னமும் மீள்குடியேற்றம் செய்யப்படாது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் முகாம்களிலும் தங்கியுள்ளனர் என யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் மேலும் குறிப்பிட்டார்.

நன்றி தேனீ இணையம்


கிழக்கில் இன ஒற்றுமையினை வலியுறுத்தி ஆர்ப்பாட்ட பேரணி
eastdemoகோறளைப்பற்று தெற்கு (கிராண்) பிரதேச செயலகத்துக்குட்பட்ட 18 கிராம சேவையாளர் பிரிவை இணைத்து தனியான பிரதேச சபையினை அமைத்து தருமாறு கோரியும் இன ஒற்றுமையினை வலியுறுத்தியும் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியும் நடாத்தப்பட்டுள்ளது.

கிராண் சமூக பொருளாதார அபிவிருத்தி மன்றத்தினால் நடாத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணியானது முறக்கொட்டாஞ்சேனையில் ஆரம்பமாகி கிராண் சந்தி வரையில் இடம்பெற்றது.

கிராணில் வைத்து சங்கத்தின் சார்ப்பில் பிரதேச செயலாளருக்கான மகஜர் பிரதேச செயலக அதிகாரிகளிடமும், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கான மகஜர் அதன் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரனிடமும், மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னத்திடமும் கையளிக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பிரதேச சபையின் கீழ் உப பிரதேச சபையாக இயங்கிவரும் கிராண் பிரதேசசபையை முழுமையான பிரதேச சபையாக உறுவாக்கித்தருவதன் மூலம் இப்பிரதேசத்தில் உள்ள 18 கிராம சேவையாளர் பிரிவு மக்கள் நன்மையடைவார்கள் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

அத்தடன் தமிழ் மக்களின் வயல் காணிகள் வலுக்கட்டாயமாக பிடிக்கப்படுவதை உடனடியாக தடுக்குமாறும் பலாத்காரமாக தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்ட மிட்ட குடியேற்றங்களை நிறுத்துமாறும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

நூறுவீதம் தமிழ் மக்களைக் கொண்ட கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஐந்து தமிழ் கிராமங்களை ஓட்டமாவடியுடன் இணைக்குமாறு கோரி நடாத்தப்பட்ட ஹர்த்தாலுக்கும் இங்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வாறான செயற்பாடுகளில் சில அரசியல்வாதிகளும், சில கடும் இஸ்லாமிய அமைப்புக்களும் இயங்கிவருவதாகவும் அவர்களின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கிராண் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

இந்த பேரணியில் கலந்துகொண்டோர் எமது பிரதேசத்தை சூறையாடாதே, எமக்கென தனிப்பிரதேச சபை வேண்டும், எமக்கும் தனி அரசியல் பலம் உண்டு, அரசே அத்துமீறி காணி பிடிப்பவர்களை உடன்கைதுசெய், எமது நிலம் எமக்கு வேண்டும் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

இதன்போது பல்வேறு அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டு தமது ஆதரவினை வழங்கியிருந்தனர் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
- அததெரண-

நன்றி தேனீ இணையம்


இலங்கையின் நிலைப்பாட்டில் மாற்றம் வருமா? _

5/22/2011

தமிழ் மக்களின் சுமார் 60 வருடகாலப் போராட்டம் இறுதியில் "பயங்கரவாதம்' என்ற சொற் பதத்துடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தப் "பயங்கரவாதம்' என்ற சொற் பதத்திற்கு காரணங்களாக இரு அம்சங்கள் உள்ளன.

இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிபீடமேறிய சிங்களத் தலைமைகள் மேற்கொண்ட தமிழ் மக்களுக்கெதிரான செயற்பாடுகள். இதன் விளைவாகத் தமிழ் மக்களிடையே எழுந்த அதிருப்தி பல்வேறு வகையான போராட்டங்களாக மேலெழுந்தன. இறுதியில் இவை தீவிரவாதமாக மாறுவதற்கு ஆட்சியாளர்களின் போக்கே காரணமாகியது.

அடுத்ததாக இந்தத் தீவிரவாதத்தை வளர்த்தெடுத்ததில் இந்தியாவுக்குப் பெரும் பங்கு உண்டென்பதை எவரும் மறுக்க முடியாது. சர்வதேச நாடுகளில் ஆட்சியில் அமர்ந்திருந்த அரசாங்கங்கள் கூட "பயங்கரவாத' சொற் பிரயோகத்திற்குள் இழுபட்டன. இலங்கை அரசாங்கம் இந்தியா, சீனா மற்றும் பல நாடுகளின் உதவியுடன் ""பயங்கரவாதத்தைத்'' தோற்கடித்தது.

இந்தப் ""பயங்கரவாதத்துடன்'' பின்னிப் பிணைந்திருந்த தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்து இலங்கைத் தரப்புக் கவனமெடுப்பதாகவோ அதனை நிறைவேற்ற வேண்டுமென்ற கரிசனை கொள்வதாகவோ தெரியவில்லை.

இந்தியாவும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷை குறித்து பெரிதும் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. "பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள்' என்று ஒப்புக்கு இலங்கைக்குக் கூறுவதுடன் தனது கடமை முடிந்ததென இந்தியா நினைக்கிறது போலும். தமிழர் தரப்பின் தீவிரவாதத்தை ஊக்குவித்த இந்தியா அதனுடன் இணைந்திருந்த அரசியல் அபிலாஷைகளுக்கான தீர்வு நோக்கி இலங்கையை நெருக்குவதாக இல்லை.

ஆனால் சர்வதேச சமூகம் தீவிரவாதத்துடன் பிணைந்திருந்த தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைக்குத் தீர்வு காணப்படவேண்டுமென்பதில் முனைப்பாக உள்ளது.

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அமைத்த நிபுணர் குழு தனது அறிக்கையில் போர்க் குற்றச்சாட்டுப் பற்றி மட்டும் கூறவில்லை. இன விவகாரத்துக்கான தீர்வு குறித்தும் பேசியுள்ளது.

இலங்கை அரசாங்கம் தன்மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக் குறித்து அதீத கவலை கொள்ளும் அதேவேளையில், இந்தக் குற்றச்சாட்டுகளை எவ்வாறு முறியடித்துவிடுவது அல்லது கிடப்பில் போடச் செய்வது என்பது குறித்து அதிக அக்கறை எடுத்துச் செயற்படுகிறது.

இதற்காகச் சிங்களத் தரப்புகளை மாத்திரமல்ல தமிழர் தரப்பினையும் தம்முடன் கைகோர்த்து நிற்கவேண்டுமென எதிர்பார்க்கிறது. இந்த ஒரு பின்னணியிலேயே நிபுணர்குழு அறிக்கை தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையைக் கூட விசனத்துடன் பார்க்கிறது.

மறுபுறம் அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றகரமான நகர்வுகளுக்கும் இடம் கொடுக்காது இழுத்தடிக்கும் போக்கில் காய்களை இலங்கை அரசாங்கம் நகர்த்துகிறது.

இவ்வேளையில் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க துணைபுரிந்த இந்தியாவை நிபுணர்குழு அறிக்கைக்கு எதிரான போரிலும் வெற்றி கொள்வதற்கு துணைக்கு அழைக்கின்றது.

"இந்தியாவின் உதவியுடனேயே பிரபாகரனைத் தோல்வியடையச் செய்தோம். அதேபோன்று ஐ.நா.வின் பக்க சார்பான நிபுணர் குழுவின் அறிக்கையையும் இந்தியாவின் உதவியுடன் தோற்கடிப்போம்' என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளமையை இங்கு குறிப்பிட விரும்புகிறோம். இவ்வேளையில் விடுதலைப் புலிகளுடனான மோதலின்போது அரசாங்கம் போர்க்குற்றங்களை இழைத்ததாக குற்றச்சாட்டுக்களைக் கூறுகின்ற ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கையால் எழுந்துள்ள சர்வதேச அழுத்ததைக் குறைப்பதற்காக உள்நாட்டில் துரிதமான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கைக்கு இந்தியா ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்தியாவின் இந்த விருப்பத்திற்குப் பதிலாக 13ஆவது திருத்தத்தின் அடிப்படையில் அர்த்தபுஷ்டியான அதிகாரப் பகிர்வுப் பொதி முன்வைக்கப்படுமென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியாவுக்கு உறுதியளித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் 6 சுற்றுப் பேச்சுகளை நடத்தியிருக்கும் நிலையில் தற்போது அந்தப் பேச்சுவார்த்தைகள் முக்கியமான விவகாரங்கள் தொடர்பாக முன்நகர்ந்திருப்பதாகவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இந்தியாவுக்கும் சர்வதேசத்திற்கும் விடுக்கும் செய்தியாக இது அமைந்துள்ளது. ஆனால் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் இல்லையென்றும் பேச்சுவார்த்தைக்கு வருவோர் எவ்வித நோக்கமுமின்றி எவ்வித நிகழ்ச்சி நிரலுமின்றி வந்து போகின்றனர்.

பேச்சுவார்த்தையில் உறுதியளிக்கப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்படாமல் அப்படியே கிடக்கின்றன. பேச்சு வார்த்தையை முன் நகர்த்தும் நிலையில் அன்றி ஏதாவதொரு சாக்குப் போக்குக் கூறி இழுத்தடிக்கும் போக்கே அரச தரப்பில் காணப்படுகின்றது எனவும் அரசியல் தீர்வு குறித்து அக்கறை அரசு தரப்பின் சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் குழுவுக்கு இருப்பதாகக் கருதமுடியவில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறுகின்றனர்.

போர்க் குற்றச்சாட்டுகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் தீர்ப்பதற்குக் கூட மனமின்றி போர்க்குற்றங்களிலிருந்து எவ்வாறு தப்பித்துக் கொள்வது என்பது குறித்தே அரசதரப்பு கூடுதலான அக்கறை காட்டி வருகின்றது என்பதை உணர முடிகின்றது. ஐ.நா அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனைகளையோ, சர்வதேச சமூகம் முன்வைக்கும் கருத்துகளையோ, இந்தியாவின் உபதேசங்களையோ இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் உள்ளதா என்பது கேள்விக்குரியதாகும்.
நன்றி வீரகேசரி இணையம்

நான் உயிரோடு உள்ளவரை இனியொரு கிளர்ச்சி ஏற்பட விடமாட்டேன்! இந்திய தொலைக்காட்சிக்கு கே.பி. பேட்டி


24 மே 2011
தான் உயிருடன் உள்ளவரை அதாவது தன்னைக் கொன்றுவிட்ட பின்னர்தான் இலங்கையில் இனியொரு கிளர்ச்சியை புலம்பெயர் தமிழர்களால் ஏற்படுத்த முடியும் என்று உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார் விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆயுதத் தரகரும் பின்னர் தன்னைத் தலைவர் என்று அறிவித்துக் கொண்டவருமான குமரன் பத்மநாதன்.

இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு இந்த மாத ஆரம்பத்தில் வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று ஒளிபரப்பப்பட்ட அந்தப் பேட்டியில் தெரிவிக்கப்பட்ட சில விடயங்கள் வருமாறு:

கே: இலங்கைப் படையினர் மீது போர்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் ஐ.நா. அறிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ப: நாம் புதிய சகாப்தம் ஒன்றின் ஆரம்பத்தில் இருக்கிறோம். நடந்ததெல்லாம் நடந்ததுதான். ஐ.நா. அறிக்கையின்படி இரு தரப்புகளுமே தவறிழைத்துள்ளன. இந்த அறிக்கை எந்தவொரு நல்லிணக்கத்துக்கும் உதவப்போவதில்லை. இது ஒரு இடைஞ்சல்தான். யாருக்கும் இந்த அறிக்கையால் பயனில்லை. அது ஒரு தகவல் அறியும் நடவடிக்கை; ஒரு அறிக்கை, அவ்வளவுதான்.

இந்த அறிக்கையுடன் வன்னிக்குப் போனால் ஆயிரம் அல்லது லட்சம் மக்கள் இதனால் பயனடைவார்களாக இருந்தால்... அப்போது அது வேறு கதையாக இருக்கும். ஆனால் இந்த அறிக்கையால் எவருமே நன்மையடையப் போவதில்லை என்பதுதான் உண்மை. முழு நாடும் இந்த அறிக்கைக்கு எதிராக இருக்கிறது. கள யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். முடிந்தது முடிந்ததுதான். போரின் முதல் அர்த்தமே சாவுதான். போரில் எது முதலில் சாகிறது? உண்மைதான். எல்லா இடத்திலுமே போருக்கு ஒரே பொருள்தான். நல்ல போர் கெட்ட போர் என்று ஒன்றுமில்லை. போர் எப்போதும் எங்கேயும் போர்தான். இங்கே வெற்றி பெறுவதற்காக இரு தரப்புகளும் முடிந்தளவுக்கு முயற்சித்தன. நடக்கிற எல்லாப் போர்கள் தொடர்பிலும் ஐ.நா. அறிக்கை வேண்டும் என்றால் எங்கு போய் முடியும்?

போர் முடிந்து விட்டதாகவே கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நான் உணர்கிறேன். இதுதான் மிக முக்கியமான புள்ளி. இந்தப் போரில் அரசுதான் வெற்றியாளர்; புலிகள் தோல்வியாளர்கள். ஆனால் தோற்றவர்களின் பக்கம் இன்னும் கொஞ்சம் பேர் மிச்சம் இருக்கிறார்கள். இப்போதும் அவர்கள் இங்கேதான் வாழ்கிறார்கள், நான் உட்பட. எந்தவொரு போரிலோ தாக்குதலிலோ பங்கெடுக்கவில்லை என்றாலும் நானும்கூட ஒரு விடுதலைப் புலி உறுப்பினன்தான். இந்தப் போரால் யாருக்கு என்ன பயன்? ஒருத்தருக்கும் கிடையாது. மக்களுக்கு வேண்டியதெல்லாம் உணவும் உடுப்புகளும்தான். தங்கள் வாழ்வை அவர்கள் மீளக்கடியெழுப்பியாக வேண்டும். ஐ.நா. அறிக்கை ஒரு தகவல் அறியும் நடவடிக்கை; அது ஒரு அறிக்கை. ஏன் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?

கே: ஓ...! அப்படியென்றால்... அடிப்படையில் தமிழர்களுக்கு கல்வி, அபிவிருத்தி, சுகாதாரம் இவைதான் வேண்டும் என்கிறீர்கள்... இப்போது அவர்கள் வேண்டுவதெல்லாம் இவைதான் என்கிறீர்களா?

ப: அட்சரசுத்தமாக அதுதான். கடந்த 2 வருடங்களாக போர் ஓய்ந்து விட்டது. ஆனால் மக்கள் தொடர்ந்து துன்பப்படுகிறார்கள். சரி! எங்களுக்கு பல கசப்பான கடந்த கால அனுபவங்கள் இருக்கின்றன தான். முன்னர் நடந்த பேச்சுக்கள் தோல்விதான். வரலாற்றில் பல விடயங்கள் நடைபெற்றுள்ளன தான். ஆனால் எப்போதுமே முடிந்ததைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க முடியாது. வாழ்க்கையில் சில சமயங்களில் நல்லதும் நடக்கும் கெட்டதும் நடக்கும். நாங்கள் அதனை எதிர்கொண்டுதானாகவேண்டும்.

இரு தரப்புக்களும் ஒரு தீர்வை எட்ட முடியும் என்ற எதிர்பார்ப்புடன் எல்லாவற்றையும் நாங்கள் எதிர்கொண்டுதானாக வேண்டும். சேர்ந்து வாழ்வதற்கான (இரு இனங்களும்) வழிவகைகளைக் கண்டறிய வேண்டும். நீங்கள் என்ன சொன்னீர்களோ அவற்றைத்தான் உண்மையில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கு உணவு தேவை, அவர்களுக்கு வேலை தேவை, அவர்களுக்கு உடுப்புகள் தேவை, அவர்களது குழந்தைகளுக்கு பால் தேவை. அவர்கள் அடிப்படைத் தேவைகளைத்தான் கேட்கிறார்கள்.

எனவே இவற்றைத்தான் அனைத்துலக சமூகத்திடமும் புலம்பெயர் தமிழர்களிடமும் நானும் கேட்கிறேன். இதன் பின்னர் புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் பற்றியும் அங்கு யார் எல்லாம் இன்னும் தீவிரத்தனத்தோடு செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் விலாவரியாக விளக்குகிறார் கே.பி. தொடர்ந்து...

கே: அப்படியானல், மீண்டும் ஆயுத இயக்கத்தை புலம்பெயர் தமிழர்கள் உருவாக்க முயன்றார்கள்! அதனை நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள் என்கிறீர்கள்... அப்படித்தானே?

ப: நிச்சயமாக! அவர்கள் அப்படிச் செய்ய முயன்றால், இங்கு பிரச்சினைகளை உருவாக்க முயன்றால் அவர்களை நான் உயிருள்ளவரை விடமாட்டேன். அப்படிச் செய்வதாயின் முதலில் அவர்கள் என்னைக் கொல்ல வேண்டும்.

கே: போரின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகளின் உயர் தலைமையைக் காப்பாற்றி மீட்கும் நடவடிக்கை ஒன்றுக்கு ஐரோப்பிய நாடுகள் சில முயன்றன என்பது உண்மை இல்லையா?

ப: உண்மையிலேயே அப்படித்தான். 2009 ஜனவரியில் போரை நிறுத்துவதற்கு நாம் கடுமையாக முயன்றுகொண்டிருந்தோம். போரை நிறுத்த இரவு பகலாக நான் கடும் பாடுபட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், அதற்கு ஆதரவு கிடைக்கவில்லை; குறிப்பாக எமது தரப்பிடம் இருந்து கடைசிக் கணம் வரை ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் நான் எதிர்பார்ப்புக்களை இழந்து விட்டேன். கடைசித் தருணத்தில், மே மாதம் 16, 17 ம் திகதிகளில் அல்லது 15 ம் திகதியாகவும் இருக்கலாம்... அவர்கள் (புலிகளின் தலைவர்கள்) நாட்டைவிட்டு வெளியேறத் தயாராக இருந்தால் தாங்கள் (ஐ.நா. மற்றும் ஐரோப்பிய நாடு ஒன்று) கப்பல் ஒன்றை அனுப்பி வைப்பதாகவும் எங்காவது போகுமாறும் கூறினார்கள்.

கே: எந்த நாடுகள்?

ப: சரியாகச் சொன்னால் ஐ.நாவும் மற்றொரு நாடும். அந்த நாட்டின் பெயரைக் சொல்வதற்கு நான் விரும்பவில்லை. ஆனால் அது ஒரு ஐரோப்பிய நாடு.

கே: மீட்டுச் செல்ல அவர்கள் முயற்சித்தார்களா?

ப: ஆம்! மீட்டுச் செல்லத்தான் அவர்கள் முயன்றார்கள். ஆனால் எல்லாம் காலம் கடந்திருந்தது. 2009 ஜனவரியில் இருந்து எல்லா விடயங்களிலும் எல்லா வழிகளிலும் நாம் ஒவ்வொரு தருணத்திலும் தாமதித்துக் கொண்டிருந்தோம் என்றே நான் நினைக்கிறேன்.

3ம் இணைப்பு

ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்

வாய்ப்பு கிடைத்திருந்தால் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலைப் புலிகள் கொன்றிருப்பர். அதற்காக அவர்கள் பெரிதும் முயன்றனர். ஆனால் அவர்களால் அந்தச் சதியில் வெற்றி பெற முடியவில்லை என்று கேபி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாபன் கூறியுள்ளார்.

புலிகளின் முக்கிய நிதிப் பிரிவுத் தலைவர்களில் ஒருவராக இருந்து மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட கே.பி. இப்போது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவராகிவிட்டார்.

இந் நிலையில் இந்தியத் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறியதாவது,

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் அதன் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும்தான் திட்டமிட்டு கொன்றனர். அது பிரபாகரனால் நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டது. இது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

இந்திய மக்களுக்கும் குறிப்பாக ராஜிவ் காந்தி குடும்பத்தினருக்கும் நான் கூற விரும்புவது என்னவென்றால் பிரபாகரனின் தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

தந்தையை இழந்த ராஜீவின் குழந்தைகளின் வலி எங்களுக்குப் புரிகிறது. தயவுசெய்து எங்களை மன்னித்து விடுங்கள். எங்கள் மக்கள் இப்போது சிக்கலில் உள்ளனர். மனிதர்களாக வாழ எங்களுக்கு உதவி செய்யுங்கள். போரில் நிறைய இழந்துவிட்டோம். இனி நாங்கள் இழப்பதற்கு எதுமில்லை.

எப்போதுமே விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலை கொண்டவர் ஜெயலலிதா. இதனால் வாய்ப்பு கிடைத்தால் அவரையும் புலிகள் கொலை செய்திருப்பர். அதற்காக அவர்கள் எவ்வளவோ முயன்றனர். ஆனால் சில சமயம் அவர்களால் வெற்றி பெற முடிந்ததில்லை என்று கூறியுள்ளார்.

தமிழக அரசியல்வாதிகளும், தமிழக அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களை வன்முறைப் பாதைக்குள் தள்ளினார்களா? என்ற கேள்விக்கு கே.பி. பதிலளிக்கையில்,

திராவிட நாடு வேண்டும் என பெரியார் விரும்பினார். அதாவது வடக்கில் இருந்து தமிழகம், கேரளா, ஆந்திராவை பிரிக்க வேண்டும் என்றார். இந்த கொள்கையுடன் அவர் அமைப்பைத் தொடங்கினார். அந்த வழியில் வந்தவர்கள் தான் அண்ணாதுரையும், கருணாநிதியும். ஆனால், திராவிட நாடு கோரிக்கை தோல்வி அடைந்தது.

ஆனாலும் அந்தக் கொள்கையை பிரபாகரனுக்கு அவர்கள் தந்தனர். பிராமணர்களுக்கு எதிரான கொள்கைகளால் பிரபாகரனை அவர்கள் கவர்ந்தனர். அதனால்தான் பிரபாகரன் அனைத்து தவறுகளையும் செய்தார்.

வைகோ முன்பு திமுகவில் இருந்தார். அவரும் திமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சிலரும் எங்களுடன் நெருக்கமாக இருந்தனர். ஆனால் கருணாநிதி விடுதலைப் புலிகளை தனது நலனுக்காக அவ்வப்போது பயன்படுத்திக் கொண்டார் என்றறு கூறியுள்ளார் கே.பி.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நிருபர்களை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா கே.பி.யின் பேட்டி குறித்து கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 1991-ல் இருந்தே எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது. அதில் புதிய விஷயம் ஏதுமில்லை. ராஜீவ் காந்தி படுகொலையின் பின்னணியில் திமுகவுக்கு மறைமுகமாக தொடர்பு இருக்கிறது என்றே நாங்கள் சொல்லி வந்துள்ளோம். என்றார் முதல்வர் ஜெயலலிதா.

நன்றி தமிழ்வின்


தமிழ்ச்செல்வனின் மனைவி, பிள்ளைகள் விடுதலை


இலங்கை பாதுகாப்பு படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந் தமீழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகாவும் அவரின் இரு பிள்ளைகளும் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சு.ப.தமிழ்ச்செல்வன் 02.11.2007 ஆம் திகதி இலங்கை விமானப்படையின் குண்டுத்தாக்குதலில் பலியானார். அவரின் மனைவியும் பிள்ளைகளும் யுத்ததத்தின் இறுதிக்கட்டத்தில் வவுனியா அகதிகள் முகாமுக்கு இடம்பெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தேனீ

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தை சர்வாதிகாரமாக அடக்கியாள முற்படுகின்றார்: பேராசிரியர் ரட்னஜீவன் ஹுில்


25 மே 2011

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தை தனது சர்வாதிகாரப் பிடிக்குள் வைத்துக் கொண்டு அடக்கியாள முற்படுவதாக பேராசிரியர் ரட்னஜீவன் ஹுில் குற்றம் சாட்டுகின்றார்.

முன்னொரு காலத்தில் விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை எவ்வாறு அடக்கியாள முற்பட்டார்களோ அதேவழியிலேயே டக்ளஸ் தேவானந்தாவும் சர்வாதிகாரமாக நடந்து கொள்ள முற்படுகின்றார் என்றும் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுில் மேலும் தெரிவித்துள்ளார்.

சிங்களப் பத்திரிகையான லக்பிமவுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தின் கவுன்சிலுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட 25 பேரில் 13 பேர் டக்ளஸ் தேவானந்தாவால் தெரிவு செய்யப்பட்டவர்கள். அதேபோன்று யாழ்.பல்கலைக்கழக கவுன்சில் கூட்டம் நடைபெற முன்பாக டக்ளஸினால் ஒரு அதன் உறுப்பினர்களுடன் ஒரு கலந்துரையாடல் நடாத்தப்படும். பல்கலைக்கழக கவுன்சில் கூட்டத்தில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான கட்டளைகள் அங்கு வழங்கப்பட்டு விடும்.

துணைவேந்தர் தெரிவில் யாருக்கு வாக்களிப்பது போன்ற முடிவுகள் உட்பட எல்லா முடிவுகளும் ஏற்கெனவே எடுக்கப்பட்டு விடும். துணைவேந்தரைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது அவருக்கு அவசியமாக உள்ளது. இதனால் எனது நியமனத்தை அவர் விரும்பவில்லை. கிறிஸ்தவனான என்னை துணைவேந்தராக நியமித்தால் இந்துக்கள் கோபம் கொள்வார்கள் என அவர் ஜனாதிபதிக்குச் சொல்லி இருக்கிறார். இதனால் எனக்கு அவர்கள் ஆதரவு தெரிவிப்பதாக முக்கியமான இந்துத் தலைவர்களிடம் அறிக்கை பெற்று வருமாறு கோரப்பட்டேன். பெரும்பாலான இந்துக்கள் நான் துணைவேந்தராக வருவதையே விரும்புகிறார்கள். ஜனாதிபதிக்கு டக்ளஸ் அவ்வாறு சொன்னதன் ஊடாக அவர்களை அவர் அவமானப்படுத்தி இருக்கிறார்.

தேவானந்தாவுக்கு வேண்டியவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் பல்வேறு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அப்பதவிகளுக்கான எத்தகைய விண்ணப்பங்களும் பகிரங்கமாகக் கோரப்பட்டதில்லை. அந்நியமனங்களில் எத்தகைய ஒழுங்கும் கடைப்பிடிக்கப்படவுமில்லை.

அதேபோன்று தான் பல்கலைக்கழகத்திற்கான விடுதிகள் கட்டுவது தொடர்பான 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான கட்டிட ஒப்பந்தமும் சட்டத்தற்குப் புறம்பான வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

குறிப்பாக அண்மைய கொள்ளைகளுக்கும் கொலைகளுக்கும் ஈபிடிபி உறுப்பினர்களே பொறுப்பு என ஜெனரல் மகிந்த ஹத்ருசிங்க கூறியதன் பின்பு இந்த முறைகேடுகள் தொடர்பாக எங்காவது முறையிட மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சுயாதீனத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய மூலங்களில்லை. தமிழ் மக்களோடு தொடர்பு கொள்வதென்றால் ஜனாதிபதி தேவானந்தாவை விட்டுவிட்டு தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தலைவர்களுடன் அவர் பேச வேண்டும்.

யாழ்.பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருக்கான வாக்களிப்பில் முதல் மூவருள் ஒருவராக நான் தெரிவு செய்யப்பட்டேன். முன்னதாக இருந்த துணைவேந்தரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக ஜனாதிபதியால் நானும் எனது மனைவியும் அலரி மாளிகைக்கு தேநீர் விருந்தொன்றுக்கு அழைக்கப்பட்டோம். யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு என்னை நியமிப்பதற்கான நியமனக் கடிதம் மறுநாள் காலை ஜனாதிபதிச் செயலகத்திலிருந்து அனுப்பப்படும் என்ற உறுதிமொழியுடன் நாங்கள் விடைபெற்றோம்.

ஆனால் பின்னர் அவ்வாறு நடைபெறவில்லை. டக்ளஸ்தேவானந்தாவின் எதிர்ப்புக்காரணமாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை மீறி விட்டார் என்றும் பேராசிரியர் ஹுில் தனது நோ்காணலில் மேலும் குறிப்பிட்டு்ளளார்.

நன்றி தமிழ்வின்


நெடியவன், விநாயகம், பிதா இம்மானுவல், தமிழ்நெற் இணையத் தளத்தை இயக்கும் ஜெயச்சந்திரன் போன்றவர்கள் இளைய தலைமுறையினருக்கு நஞ்சூட்டுகிறார்கள்.


முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்.ரீ.ரீ.ஈ) தலைவர் கேபி உடனான ஒரு நேர்முகம் (பகுதி 1)

- வி.கே.சசிகுமார்
sasikumarKp-in-1ரிஎச்எல் மீடியாகுரூவ் ஊடகப் பிரிவின் தலைவர் விகே சசிகுமார், 56 வயதான கேபியை இம் மாத ஆரம்பத்தில் ஸ்ரீலங்காவிலுள்ள ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்து நேர்காணல் நடத்தியிருந்தார். ஸ்ரீலங்காவைத் தவிர்ந்த வெளியாள் ஒருவருக்கு அவர் வழங்கும் முதல் நேர்முகம் இதுதான். அவர் முற்றிலும் மாற்றமடைந்த ஒரு மனிதராகத் தோற்றமளித்தார். தமிழ் மக்களுக்காக நடத்தப்பட்டது எனச்சொல்லப் பட்டாலும் அவர்களுக்கு எந்த நன்மையையும் தராமல் இன்னல்களை மட்டுமே பரிசளித்த விதிமுறையோ கட்டுப்பாடோ இல்லாத உள்நாட்டு யுத்தத்தில் தனது அனுபவங்களினால் பெயர் பெற்றிருந்த கேபி, யுத்தம் நடைபெற்ற வருடங்களில் எல்.ரீ.ரீ.ஈ யினுள் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதைப் பற்றி நல்ல தெளிவான அறிவினைக் கொண்டிருந்தார்.

அவரது நேர்முகத்தின் போது கேபி முடிவடையாத சொற்றொடர்களிலேயே பேசினார். ஆனால் பெஸ்ட் போஸ்ட் அவரது சொற்றொடர்கள் மற்றும் முடிவடையா வசனங்கள் என்பனவற்றை படிப்பதற்கு இலகுவாகவும், இசைந்திணைகிற வகையிலும் தணிக்கை செய்துள்ளது. - – (தொகுப்பாளர்கள்)

வி.கே.சசிகுமார் (விகேஎஸ்): திரு.செல்வராசா பத்மநாதன் அவர்களே! நீங்கள் கேபி என பிரசித்தமாக அழைக்கப் படுகிறீர்கள். இது உங்கள் முதல் நேர்முகம் மற்றும் இது மிகவும் முக்கியமான ஒன்று எனவும் சொல்லலாம் ஏனெனில் வே. பிரபாகரனின் மறைவுக்குப் பின் நீங்கள் எல்.ரீ.ரீ.ஈ யின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றுக் கொண்டீர்கள். அதன் பின்விளைவாக நீங்கள் கைது செய்யப்பட்டு ஸ்ரீலங்காவுக்கு கொண்டுவரப் பட்டீர்கள். எல்.ரீ.ரீ.ஈ யினை இறுதி முடிவுக்கு இட்டுச்சென்ற யுத்தத்தை திரும்பிப் பார்க்கும் போது உங்கள் மனதில் தோன்றும் முதல் பிரதிபலிப்புகள் எவை?

கேபி: இப்போது ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப் படுகிறது. யுத்தம் முடிவடைந்து விட்டது. நாங்கள் விடுதலைக்காகப் போராடினோம் ஆனால் அது தோற்றுப்போய் விட்டது. எல்லாம் நிறைவடைந்து விட்டது. புதிய உலக அமைப்பு (பனிப் போரின் பின்னர்) எங்களுக்கு பாடம் புகட்டுவது,….நாங்கள் ஒன்றிணைந்து வாழவேண்டும் என்பதையே. எங்களது கடந்த கால அனுபவங்களிலிருந்தும் நாம் கற்றுக் கொண்டது இரண்டு இனங்களுக்கிடையில் (சிங்களவர் மற்றும் தமிழர்) நாங்கள் ஒரு பாலம் அமைக்க வேண்டும் என்பதனையே.

இந்த நாடு ஒரு சிறிய தீவு. அது அதிகமான துன்பங்களை அனுபவித்து விட்டது. ஜேவிபி க்கு எதிராக, எல்.ரீ.ரீ.ஈ க்கு எதிராக இங்கு அநேக ஆயுதப் போராட்டங்கள் இடம் பெற்றன என்பது உங்களுக்குத் தெரியும். இவை போதும். இது ஒரு சிறிய நாடு இங்கிருப்பது சிறிய அளவிலான குடிமக்கள் என்பதை நான் உணருகிறேன். நாங்கள் அதிக விலை கொடுத்து ஏராளமான வலிகளை அனுபவித்து விட்டோம். போதுமய்யா! ஒருவரை ஒருவர் மதித்து, ஒவ்வொருவருடைய கண்ணியத்தையும் ஏற்றுக் கொண்டு, வாழ்க்கையை அனுபவித்து மற்றும் புதிய தலைமுறையினருக்கு நல்லதோர் எதிர்காலத்தை வழங்கி நாங்கள் ஒருமித்து வாழ வேண்டும். எங்களைப் போன்றவர்களது வாழ்க்கை கிட்டத்தட்ட ஒரு முடிவுகாலத்தை அண்மித்து விட்டது. ஆனால் இனிவரும் புதிய தலைமுறையினராவது இந்த நாட்டில் சமாதானத்துடன் வாழவேண்டும். அதற்கு வேண்டித்தான் நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

விகேஎஸ்: இப்போது நீங்கள் பின் திரும்பி நோக்கும் போது, உங்கள் இயக்கம் என்ன மாதிரியான தவறுகளைச் செய்துள்ளது என நீங்கள் எண்ணுகிறீர்கள்?

கேபி: நீங்கள் உலக வரலாறுகளைப் பார்த்தால் கொரில்லா யுத்தமானது சே குவேராவுடன் ஆரம்பமானது. இந்த யுத்தமுறை உலகெங்கும் பரவினாலும் அது கியுபாவில் மட்டும்தான் வெற்றியடைந்தது. ஆனால் பல நாடுகளில் ஏராளமான இளைஞர்கள் இதற்காகத் தங்கள் உயிர்களைப் பலி கொடுத்தார்கள். ஸ்ரீலங்காவிலும் இது உண்மையாகியுள்ளது. இந்த நாட்டில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப் பட்டபோது உலகில் நடந்து கொண்டிருந்த பனிப்போர் அதன் முடிவினை எட்டியிருந்தது.எங்கள் ஆயுதப் போராட்டம் மிகவும் தாமதமாகி விட்டது. அதன் தோல்விக்கு இது ஒரு முக்கிய காரணம். ஏனெனில் உலகம் மக்கள் ஐக்கியப் படுவதைத்தான் விரும்பியது. இரண்டாம் உலக யுத்தத்தின் பிறகு இடம்பெற்ற அமெரிக்க – ரஷ்ய பனிப்போர் வரை உலகானது முதலாளித்துவம் மற்றும் கம்யுனிசம் எனும் தத்துவங்களினால் பிளவு பட்டிருந்தது. புதிய நாடுகள் பிறந்து கொண்டிருந்த காலம் அது. பிரிவினைவாதம் இந்தப் பனிப்போரின் ஒழுங்கின் ஒரு பகுதியாகும். ஆனால் பனிப்போரின் முடிவின் பின்னர் புதிய உலக ஒழுங்கானது உலக அரசியல் சூழலுக்கு ஏற்ப மாற்றம் பெற்றது. எங்கள் ஆயுதப் போராட்டம் ஏன் தோல்வியடைந்தது என்பதன் பிரதான காரணம் இதுதான்.

இந்தப் புதிய உலக ஒழுங்கானது சகல பிரிவினைவாத போராட்டங்களுக்கும் எதிராக மாறியது. நீங்கள் 2006 ல் நடந்ததை நினைவு கூர்ந்தால் பிரபாகரன் உலக சமூகத்திடம் எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் ஆயுதப் போராட்டமான சுதந்திரப் போராட்டத்தை ஆதரிக்கும்படி வேண்டுகோள் விடுத்தபோது எந்த ஒரு நாடுகூட தனது ஆதரவினை வழங்க முன்வரவில்லை. எனவேதான் உலகம் பிரிவினைக்கு எதிராக மாற்றம் பெற்றுள்ளது என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.

2001ல் நிகழ்ந்த 9ஃ11க்கு பிறகு கூட சமாதானத் தீர்வு ஒன்றுக்கு வருவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை உலகம் எங்களுக்கு வழங்கியிருந்தது. ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் ஒரு சமாதான உடன்பாட்டுக்கு வருவதற்கான வாய்ப்பினைப் போன்ற ஒன்றை உலக சமூகம் ஹமாஸ் இயக்கத்துக்கு கூட வழங்க முன்வரவில்லை. சர்வதேச சமூகம் சமாதானத் தீர்வுக்கான இந்தச் சந்தர்ப்பத்தை எங்களுக்கு வழங்கியது. ஜேர்மனி, நோர்வே, அமெரிக்கா, கனடா, யப்பான் போன்ற நாடுகள் ஸ்ரீலங்காவின் இனமோதலுக்கு ஒரு சமாதானத் தீர்வினைக் கொண்டு வருவதற்காக பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தன என்பதும் உங்களுக்கு தெரியும். ஆனால் எல்.ரீ.ரீ.ஈ பேரம் பேசலுக்கோ அல்லது வளைந்து கொடுக்கும் தன்மையுடைய ஒரு கொள்கைக்கோ தயாராக இருக்கவில்லை. தங்கள் பிரிவினை இலக்கை அடையும் தங்கள் கடுமையான நிலைப்பாட்டினையே அவர்கள் தொடர்ந்தும் கடைப்பிடித்தார்கள்.

எனக்கு நினைவிருக்கிறது எல்.ரீ.ரீ.ஈ க்கு எதிரான ஸ்ரீலங்கா இராணுவத்தினரது இறுதி யுத்தம் 2008ல் ஆரம்பித்தபோது, அமெரிக்க ஜனாதிபதி ஐநாவுக்கோ அல்லது ஐரோப்பிய ஒன்றியத்துக்கோ அறிக்கை ஒன்றினை விடுத்து எல்.ரீ.ரீ.ஈயினருக்கான சகல நிதி உதவிகளையும் நிறுத்தும்படி கேட்டிருந்தார். உலகத்துக்கு எதிராக எங்களால் தனித்து நிற்க முடியாது.

விகேஎஸ்: இலங்கைப் படைகள் மீது யுத்தக் குற்றச்சாட்டுகளைச சுமத்தும் ஐநா அறிக்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

கேபி: நாங்கள் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பத்தில் காலடி வைத்துள்ளோம்.நடந்தவை நடந்தவைகள்தான். இரு தரப்பினருமே தவறிழைத்துள்ளனர் என ஐநா அறிக்கை கூறுகிறது. எந்தவிதமான நல்லிணக்கத்தை மேற்கொள்வதற்கும் இந்த அறிக்கை உதவப்போவதில்லை. இது ஒரு தடைக்கல். நல்லிணக்கத்தை மேற்கொள்வதற்கு இது தடையாக இருக்கிறது. இந்த அறிக்கையால் எவரும் எந்தப்பயனையும் அடையப் போவதில்லை. இது ஒரு காரணம் கண்டறியும் நடவடிக்கை. அது ஒரு அறிக்கை அவ்வளவுதான். நீங்கள் வன்னிக்குச் சென்று இந்த அறிக்கையின் மூலம் ஆயிரம் அல்லது இலட்சம் குடும்பங்கள் பயனடையும் எனக் கண்டறிந்தால், அப்போது அது ஒரு வித்தியாசமான கதையாக இருக்கும். ஆனால் இத்தகைய அறிக்கைகளால் எவரும் எத்தகைய பயனையும் அடையப் போவதில்லை என்பதுதான் உண்மை நிலை. முழு நாடுமே இந்த அறிக்கைக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ளது. களநிலமையின் யதார்;த்தத்தை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். கடந்து போனவை, போனவைகள்தான்.யுத்தம் என்றால் அதன் முதல் கருத்து அநேகம் பேர் மரணமடைவார்கள் என்பதுதான். யுத்தம் என்பதன் மற்றொரு கருத்து யார் முதலில் சாவார்கள் என்பதுதான். உண்மை கூட அதில் மடிந்து போகும். எல்லா இடத்திலும் யுத்தம் ஒரே தன்மையைத்தான் கொண்டிருக்கிறது. யுத்தம் என்றால் யுத்தம்தான் அதில் நல்ல யுத்தம் கெட்ட யுத்தம் என்று வகைப் படுத்த முடியாது.

ஸ்ரீலங்காவில் இரு தரப்பினருமே தங்களால் முடிந்தளவு வெற்றி பெற முயற்சித்தார்கள். நடக்கும் ஒவ்வொரு யுத்தத்துக்கும் ஐநா அறிக்கை தயாரித்தால் அது எங்கு போய் முடியும்? போர் முடிந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகி விட்டதாகவே நான் உணர்கிறேன். இங்குதான் முக்கியமான விடயம் உள்ளது. இந்தப் போரில் அரசாங்கம் வெற்றி பெற்றது, எல்.ரீ.ரீ.ஈ யினர் தோற்றார்கள். ஆனால் தோற்றவர்கள் பக்கத்தில் இன்னும் சிலர் எஞ்சியுள்ளார்கள். இப்போதும் அவர்கள் இங்குதான் வாழ்கிறார்கள். என்னையும் சேர்த்து. எந்தவொரு தாக்குதலிலோ அல்லது இராணுவ நடவடிக்கையிலோ ஈடுபட்டிருக்காவிட்டாலும் கூட நானும் ஒரு எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவனே.

இந்தப் போரினால் யாருக்கு நன்மை கிட்டியது? எவருக்குமேயில்லை.உணவும் உடைகளும்தான் மக்களின் தேவைகளாக உள்ளதுடன் அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீள ஆரம்பிக்கவும் வேண்டும். ஐநா அறிக்கையின் வெளிப்பாடு ஒரு தகவல் அறியும் முயற்சி.அது ஒரு அறிக்கை மாத்திரமே. ஏன் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

விகேஎஸ்: எனவே ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்களுக்கு அடிப்படைத் தேவையாக இருப்பவவை கல்வி, அபிவிருத்தி, சுகாதாரம் என்பனவை தான் என்று நீங்கள் சொல்கிறீர்கள். இப்போது அவர்களுக்கு வேண்டியவை இவைகள்தானா?

கேபி: ஆம் நிச்சயமாக. போர் முடிவடைந்து இரண்டு வருடங்களாகி விட்டன.ஆனால் மக்கள் இன்னும் துன்பம் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். சரி நாங்கள் பல கசப்பான கடந்தகால அனுபவங்களைப் பெற்றிருக்கிறோம். கடந்த கால அரசியல் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்திருக்கின்றன. கடந்து போன காலங்களில் அநேக விடயங்கள் நடந்தேறியிருக்கின்றன. ஆனால் நாங்கள் கடந்த காலத்தைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்க முடியாது. வாழ்க்கையில் எங்களுக்கு சில சமயங்களில் கசப்பான அனுபவங்கள் ஏற்படும் வேறு சில சமயங்களில் நல்லவைகளும் நடக்கும்.நாங்கள் ஒருமித்துப் பணியாற்றி அவற்றுக்கான தீர்வை காணவேண்டும் மற்றும் ஒருமித்து வாழ்வதற்கான வழியைக் காணவேண்டும் என்கிற நம்பிக்கையுடன் அவற்றை எதிர் கொள்ள வேண்டும். நீங்கள் சொன்னவைகளைத்தான் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இப்போது கேட்கிறார்கள். அவர்களுக்கு உணவு தேவை, அவர்களுக்கு வேலைகள் தேவை, அவர்களுக்கு உடைகள் தேவை, மேலும் அவர்கள் குழந்தைகளுக்கு பால் தேவை. அவர்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைத்தான் கேட்கிறார்கள். எனவே தமிழ் புலம் பெயர் சமூகத்தினரிடமிருந்தும் சர்வதேச சமூகத்தினரிடமிருந்தும் நானும் இவைகளைத்தான் கேட்கிறேன்.

விகேஎஸ்: தமிழ் புலம் பெயர் சமூகத்துக்கு நீங்கள் என்ன சேதியைச் சொல்கிறீர்கள்?

கேபி: முதலில் அவர்கள் இந்த மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும். உதாரணத்துக்கு, அவர்கள் பால் வேண்டி அழும்போது நாங்கள் அவர்களிடம் பொறு,பொறு ஐநா வந்து கொண்டிருக்கிறது, வரப்போகும் அரசியல் தீர்வுக்குப் பிறகு இவற்றுக்குப் பின்னால் நாங்கள் உதவி செய்வோம் எனச் சொல்ல முடியாது. அவர்கள் இறந்து விடுவார்கள் இல்லையா? எனவே அவர்கள் இப்போது உணவு வேண்டி அழுது கொண்டிருக்கிறார்கள். முதலில் ஒவ்வொருவரும் அதற்காகப் பணியாற்ற வேண்டும். ஸ்ரீலங்காவிலுள்ள தமிழர்கள் சாதாரண வாழ்க்கையை வாழத் தொடங்கிய பிறகு அவர்களுக்கு வேண்டியதை நாங்கள் கேட்கலாம். இப்போது வன்னியில் உள்ள மக்களிடம் சென்று அரசியலமைப்பின் 13வது திருத்தத்தைப் பற்றிப் பேசினால் அவர்கள் உணர்ச்சியற்ற முகங்களோடுதான் காட்சியளிப்பார்கள். அவர்களுக்கு இப்போது தெரிந்ததெல்லாம் பாணும், சோறும் மாத்திரமே. இதுதான் பிரச்சினை தமிழ் புலம் பெயர் சமூகத்தினர் களநிலவரங்களின் யதார்த்தங்களை புரிந்து கொள்ள வேண்டும். முதலில் தமிழர்களை தங்கள் சொந்தக் கால்களில் நிற்க வைக்க வேண்டும்.

விகேஎஸ்: ஆகவே அடிப்படையில் நீங்கள் சொல்ல வருவது, மற்றைய நாடுகளில் குடியுரிமையுள்ள நல்ல நிலைமையில் வாழ்ந்து வருபவர்களும் மற்றும் ஸ்ரீலங்காவுக்கு ஒருபோதும் வருகை தந்திராதவர்களுமாகிய தமிழர்களைக் கொண்ட, தமிழ் புலம் பெயர் சமூகத்தினர், இந்த ஆயுதப் போராட்டத்துக்கு நிதியுதவி வழங்கினார்கள் என்றெல்லாம்… அவைகளை நிறுத்திக் கொண்டு சமாதானத்துக்காக உழைக்கும்படி நீங்கள் அவர்களுக்குச் சொல்லுகிறீர்கள் அப்படித்தானே?

கேபி: மிகச் சரியானது! நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகி விட்டது. எங்களுக்கு ஒரே வழி, ஒரே சந்தர்ப்பம் மட்டுமே உள்ளது. அதுதான் சமாதானமான வழி, சமாதானமான பேரம் பேசல்கள், மற்றும் தொடர்ந்துள்ள ஈடுபாடு. நம்பிக்கையான அநேகமான விடயங்கள் உள்ளன. நூறு வருடங்களுக்கு மேலான பிரச்சினகள். அரசாங்கத்தின் நடைமுறை மிகவும் தாமதமானது என்பது எனக்கு விளங்கும். ஆனால் நாங்கள் முன்னேறிப் போவதற்குரிய ஒரே வழி அது மட்டுமே – அமைதியான முறையில் பொறுமையுடன் சமாதானத்தை கொண்டு வருவதற்கு.

தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்து வரும் ஸ்ரீலங்காவிலுள்ள மலையகத் தமிழர்களின் தலைவர் திரு.தொண்டமானைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். அவர் மிகுந்த பொறுமைசாலி. தனது சரியான தருணம் வருவதற்காக, ஒரு லட்சத்துக்கும் மேலான மலையகத் தமிழர்களான தேயிலைத் தோட்ட வேலைக்காரர்களினது பிரஜா உரிமையை அடைவதற்காக அவர் 50 வருடங்களுக்கு மேலாகக் காத்திருந்தார்.

எனக்கு அவருடன் பேசுவதற்கான ஒரு வாய்ப்பு கிட்டியிருந்தது,அப்போது அவர் என்னிடம் சொன்னார். உங்களது மக்கள் கல்வியறிவு உள்ளவர்கள். ஆனால் உங்களிடம் நல்ல தலைவர்கள் கிடையாது. விட்டுக் கொடுக்கும் தன்மையுள்ள தலைவர்கள் உங்களிடம் இல்லை என்று. ஆமாம் விட்டுக் கொடுக்கும் தன்மையுள்ள தலைவர்கள்தான் எங்களுக்கத் தேவை. அதன் காரணமாகத்தான் எங்களது பிரச்சினைகள் இவ்வளவு நீண்ட காலத்துக்கு இழுபட்டது..

எதிர்மறையான உணர்வுகள் எந்த நல்லதையும் கொண்டு வராது. ஆம்! நாங்கள் ஒரு யுத்தத்தை செய்தோம் மற்றும் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே நூறு வருட காலப் பிரச்சினைகள் உள்ளன. எனவே அவைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக நாங்கள் சிறிது காலத்தைச் செலவிடுவோம். திரும்பவும் நாங்கள் தமிழ் புலம் பெயர் சமூகத்தினர் விடயத்துக்கு வருவோம். நான் அவர்களுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றியுள்ளேன். அவர்களில் 90 சத வீதமானவர்கள் மிகவும் நல்லவர்கள்.

சிலர் தங்களது வாழ்க்கையை இங்கு கழித்துள்ளார்கள். மற்றும் சிலர் புலம் பெயர் இடங்களிலேயே பிறந்தவர்கள் ஆனால் அவர்கள் தங்கள் சொந்த பந்தங்கள் மீது மிகுந்த நல்லுணர்வைக் கொண்டுள்ளார்கள். அவர்கள் ஸ்ரீலங்காவிலுள்ள தமிழர்களுக்கு உதவி செய்ததுடன் ஆயுதப் போராட்டத்துக்கும் ஆதரவு வழங்கினார்கள்.இப்போதுள்ள பிரச்சினை என்னவென்றால் 10 விகிதமான தீவிரவாதக் குழுவினரை நான் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. ஸ்ரீலங்காவிலுள்ள தமிழர்களுக்கு அவர்கள் இடையூறுகளை விளைவிக்கிறார்கள்.

விகேஎஸ்: அவர்களின் பெயர்களைக் கூற முடியுமா?

கேபி: ஆம்! அவர்கள் நெடியவன், விநாயகம், பிதா இம்மானுவல், தமிழ்நெற் இணையத் தளத்தை இயக்கும் ஜெயச்சந்திரன், பிரித்தானிய தமிழர் பேரவை, மற்றும் உலகத் தமிழர் பேரவை போன்றவை. இந்தக் குழுக்கள் ஐரோப்பாவில் மிகவும் வசதி படைத்தவைகளாக உள்ளன. அவர்களின் பிள்ளைகள் மிகவும் வசதியாக வாழ்கிறார்கள். அவர்கள் இளைய தலைமுறையினருக்கு நஞ்சூட்டுகிறார்கள். அவர்களின் குழந்தைகள் நல்ல நிலையில் உள்ளபொழுது இவர்கள் எங்கே விஷம் வைக்கலாம் என்று தேடி அலைகிறார்கள். ஆனால் அவர்கள் அந்த விளையாட்டை இங்கே நடத்துவதற்கு நான் விடப்போவதில்லை. அவர்கள் இங்கேயும் நஞ்சூட்ட வேணடுமானால் முதலில் அவர்கள் என்னைக் கொல்ல வேண்டும். அதன் பிறகுதான் அவர்களால் உள்நுழைய முடியும். ஏற்கனவே அவர்கள் மூன்று தசாப்தங்களை, முப்பது வருடங்களுக்கு மேலான காலத்தை மோதல்களில் செலவழித்து விட்டார்கள். ஸ்ரீலங்காவிலுள்ள தமிழர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதைக் காண நான் விரும்புகிறேன். இப்போது அவர்களின் முகங்களை உங்களால் பார்க்க முடியாது. மகிழ்ச்சியைக் காணாத சோகம் தோய்ந்த நிலையிலேயே அவர்கள் எப்போதும் இருக்கிறார்கள். நான் அவர்களின் சந்தோஷத்தைக் காணவேண்டும். அவர்கள் புன்னகை சிந்துவதைக் காணவேண்டும்.

ஸ்ரீலங்காவிலுள்ள தமிழர்கள் பிறந்த நாளிலிருந்தே மகிழ்ச்சியைக் காணாதவர்கள்.ஆனால் இந்த தமிழ் புலம் பெயர் சமூகத்தினர் குழுக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார்கள். அவர்கள் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். இங்கே வன்னியில் உள்ள பிள்ளைகள் மகிழ்ச்சியாக இல்லை. அந்தப் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதற்கு மிதி வண்டிகள் கூடக்கிடையாது. காலை வேளைகளில் சாலையோரமாக நீங்கள் நடந்து சென்றால் மாணவர்கள் இரண்டு மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்து செல்வதைக் காண முடியும். இங்கேயுள்ள வாழ்க்கை அதுதான். தமிழர்கள் தங்கள் எதிர்காலத்துக்காக ஏங்கி அழுகிறார்கள். திரும்பவும் அவர்கள் தவறான இடத்தில் விழுவதை என்னால் அனுமதிக்க முடியாது.

விகேஎஸ்: ஐரோப்பாவிலும் ஏனைய பிற இடங்களிலுமுள்ள இத்தகைய சிறுபான்மைக் குழுக்கள் ஆயுதப் போராட்டத்துக்கு புத்துயிர்; ஊட்ட முயற்சிப்பதை நீங்கள் அனுமதிக்கப் போவதில்லை என்றுதானே சொல்ல வருகிறீர்கள்?

கேபி: மிகச் சரி! அவர்கள் இயங்க முயற்சித்தால்,இங்கே குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்தால் அதைச் செய்ய அவர்களை நான் விடப்போவதில்லை.முதலில் அவர்கள் என்னைக் கொல்ல வேண்டும்.

விகேஎஸ்: ஐரோப்பாவிலுள்ள சில நாடுகள் இறுதிக்கட்டப் போரின்போது விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்கிற முயற்சிகளில் ஈடுபட்டிருந்தன எனக் கூறப்படுவதும் உண்மையான தகவல் இல்லையா?

கேபி: மிகச் சரியானதே! 2009 ஜனவரியில் நாங்கள் யுத்தத்தை நிறுத்துவதற்கு முயன்று கொண்டிருந்தோம். இந்த யுத்தத்தை நிறுத்துவதற்காக இரவு பகல் பாராது நான் முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஆனால் எல்.ரீ.ரீ.ஈ யினராகிய எங்கள் பக்கத்திலிருந்து கடைசி நிமிடம் வரை அதற்கு ஆதரவு தெரிவிக்க முன்வரவில்லை. எனவே நான் நம்பிக்கையை கைவிட்டேன். இறுதிக் கணத்தில் 2009 மே 15,16 அல்லது 17 அளவில் ஐநா மற்றும் ஒரு வெளிநாட்டு அரசாங்கமும், சில எல்.ரீ.ரீ.ஈ தலைவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருந்தால் அவர்கள் எங்காவது செல்வதற்கு தங்களால் ஒரு கப்பலை அனுப்ப முடியும் எனத் தெரிவித்தன.

விகேஎஸ்: எந்த நாடு?

கேபி: உண்மையில் அது ஐநாவும் மற்றும் ஒரு நாடும் ஆகும்.அந்த நாட்டின் பெயரைக் குறிப்பிட நான் விரும்பவில்லை,ஆனால் அது ஒரு மேற்கத்தைய நாடு.

விகேஎஸ்: அவர்கள் உங்களைக் காப்பாற்ற முயன்றார்களா?

கேபி: ஆமாம். அவர்கள் காப்பாற்ற முயற்சித்தார்கள். ஆனால் அது மிகவும் தாமதமான ஒரு முயற்சி. ஜனவரி 2009இலிருந்தே ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு நகர்விலும் நாங்கள் தாமதமடைவதை நான் கண்டேன்.

விகேஎஸ்: ஏன்? எல்.ரீ.ரீ.ஈ சமாதானத்துக்கான வாய்ப்புக்களை ஏன் 2002 தொடக்கத்திலிருந்து தவறவிட்டு வந்திருக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்கள்?

கேபி: 2002 முதலிருந்து மட்டுமல்ல, அதற்கு முன்பான கட்டத்திலிருந்தே.இந்தியப் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஜெயவர்தனாவுடன் பேசி ஒரு வகையான தீர்வுக்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார். அதிகாரப் பகிர்வுக்கான 13வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப் படுவதற்கு முன்பே கூட அவர் முயற்சித்தார் ஆனால் எல்.ரீ.ரீ.ஈ சந்தர்ப்பத்தைத் தவற விட்டது. திரும்பவும் இந்திய - ஸ்ரீலங்கா உடன்படிக்கை கைச்சாத்தாகி அமைதியை நிலைநாட்ட இந்திய இராணுவம் ஸ்ரீலங்காவுக்கு வரும் நிலை வந்தது. இப்போதும் நாங்கள் சந்தர்ப்பத்தை நழுவ விட்டோம். பிரபாகரனுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றுதான் அதுதான் “தமிழீழம்” – தனிநாடு. இதைப் பேரம் பேசலுக்கு உட்படுத்த அவர் விரும்பவில்லை….எனவே அந்தக் கனவுடனேயே அவர் போய்விட்டார்.

விகேஎஸ்: 2002 யுத்த நிறுத்தம் உபாயங்களைத் தாமதப் படுத்துவதற்காக மேற் கொண்ட ஒரு தந்திரம் போன்றதா?

கேபி: நிச்சயமாக. எல்.ரீ.ரீ.ஈ அந்த நேரத்தில் ஒரு யுத்த வெற்றியை அடைந்திருந்தது,ஆனால் பொருளாதாரம், உணவு, போன்ற சகல விடயங்களிலும் அது ஒரு மோசமான நிலையை அடைந்திருந்தது. வெளி உலகம் மிகவும் வித்தியாசமாக மாற்றம் பெற்றிருந்தது. 9ஃ11க்கு பிறகு, அமெரிக்க ஜனாதிபதி கடுமையான நிலைப்பாடுகளையும் மற்றும் பயங்கரவாதிகளைக் கண்டவறிவதற்காக திறமையான வலையமைப்பையையும் ஏற்படுத்தியிருந்தார். 9ஃ11க்கு பிறகு, எல்லா ஆயுதப் போராட்டங்களும்,மற்றும் ஆயுத இயக்கங்களும் பயங்கரவாத இயக்கங்களாக மாற்றப் பட்டிருந்தன. அது மிகப் பெரிய ஒரு பின்னடைவு. 9ஃ11க்கு பிறகு, நாங்கள் ஏராளமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியவர்களானோம்.

விகேஎஸ்: 2002க்கு பின்னான காலப் பகுதியில் ஏராளமான தூதுக் குழுக்கள் வெளிநாடுகளுக்குச் சென்றன. ஒரு எல்.ரீ.ரீ.ஈ தூதுக் குழுவும் சமாதானப் பேச்சுக்களுக்காக ஐரோப்பா சென்றதாகத் தெரிகிறது. அது ஏன் தோல்வியுற்றது? அதன் பின்னணியில் வேறு ஏதாவது நடைபெற்றதா?

கேபி: நான் முன்பு கூறியதைப்போல, பிரபாகரன் தமிழீழம் பேரம் பேசலுக்கு உட்படுவதை ஒருபோதும் சம்மதிக்கவில்லை. இதுதான் மிகவும் இலகுவான பதில்.

விகேஎஸ்: அப்படியாயின் எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களால் மேற்கொள்ளப் பட்ட அந்தப் பிரயாணங்கள்,அவர்கள் எதற்காகப் போனார்கள்?

கேபி: அது சமாதானப் பேச்சுக்களின் ஒரு பகுதிதான், ஏனெனில் தங்கள் பலத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு அவர்களுக்கு சிறிது அவகாசம் தேவைப்பட்டது. பொதுக்கூட்டங்களில் அவர்கள் பேசியது ஒன்று, தீர்வு மேசையில் அவர்கள் பேசியது மற்றொன்று, தமிழ் புலம் பெயர் சமூகத்தினர் முன்பாக அவர்கள் பேசியது பிறிதொன்று என்பது சகலரும் அறிந்த விடயம்தான்.

விகேஎஸ்: எனவே அடிப்படையில் அந்தக் காலகட்டத்தில் அவர்கள் உண்மையில் போருக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தார்கள் அப்படித்தானே?

கேபி: அவர்கள் பொருளாதாரப் பகுதியையும் ஆயுதப் பகுதியையும் பலப் படுத்துவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

விகேஎஸ்: நீங்கள் இதற்காக வருத்தப் படுகிறீர்களா? நீங்கள் எல்.ரீ.ரீ.ஈ யின் சர்வதேசச் செயலகத்தை தலைமையேற்று நடத்தி ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை கொள்வனவு செய்வதற்காக உதவியுள்ளீர்கள். உங்கள் பாத்திரத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

கேபி: 1970 களில் ஸ்ரீலங்காவிலிருந்த தமிழ் இளைஞர்கள் உணர்ச்சிகரமான ஒரு சுதந்திரப் போராட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள், அவர்களில் நானும் ஒருவன். இந்த ஆயுதப் போராட்டத்தில் நாங்கள் ஏராளமான தமிழ் இளைஞர்களைப் பலி கொடுத்துள்ளோம். சுதந்திரத்துக்கு முன்பு தமிழ் தலைவர் ஜி;ஜி பொன்னம்பலம், பாராளுமன்றத்தில் சிங்களவருக்கும் தமிழர்களுக்கும் பாராளுமன்றத்தில் 50:50 பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் எனக்கோரினார். இறுதியில் பெரும்பான்மை முடிவு 55 – 45 எனத் தீர்மானிக்கப் பட்டது. ஆனால் அதன் பிறகு கூட தமிழ்கட்சிகள் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இவ்வாறு பிரிக்கப் படுவதை ஏற்றுக் கொள்ளவில்லை. இன்று தமிழர்களாகிய நாங்கள் மூன்றாவது நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளோம். சிங்களவர்கள் முதலாம் இடத்திலும் அதன் பின் முஸ்லிம்கள் இரண்டாம் இடத்திலும் உள்ளார்கள். தமிழர்கள் வெறும் மூன்றாம் இடத்தில்தான் உள்ளார்கள். எனவே சாத்தியப் படக்கூடிய 50:50 பிரதிநிதித்துவத்திலிருந்து பாராளுமன்றத்தில் நாங்கள் வெறும் 15 அல்லது 20 இடங்களுக்கு குறைக்கப் பட்டுள்ளோம்.

(தொடரும்)

நன்றி தேனீ

ஓமந்தைவரை யாழ்தேவி
27 / 05 / 2011
21 ஆண்டுகளுக்கு பின்னர் வடபகுதிக்கான ரயில் சேவை இன்று வெள்ளிக்கிழமை ஓமந்தை வரை செல்லவுள்ளது. மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் ஓமந்தை ரயில் நிலையம் வைபவரீதியாக பயணிகளுடைய பாவனைக்கு இன்று திறந்துவைக்கப்படும். போரின் காரணமாக பாதிக்கப்பட்ட வட பகுதிக்கான ரயில் பாதை புனரமைப்பு பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. ஓமந்தை முதல் பளை வரையிலான பாதை புனரமைப்பினை இந்திய நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. ஆனால் தாண்டிக்குளம் முதல் ஓமந்தை வரையிலான ரயில் பாதை இராணுவத்தினராலும் ரயில்வே திணைக்களத்தினாலும் புனரமைக்கப்பட்டது. ஓமந்தை ரயில் நிலைய திறப்பு விழாவில் போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம, பிரதி அமைச்சர் றோகண குமாரதிசாநாயக்க ரயில்வே பொது முகாமையாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள். 1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் வவுனியாவிற்கு அப்பால் ரயில் சேவை நடைபெறவில்லை. இன்று காலை கோட்டையிலிருந்து வரும் யாழ்தேவி நேரடியாக ஓமந்தை சென்றடையும். வழமைபோல் அனைத்து ரயில்களும் ஓமந்தையிலிருந்தே ஆரம்பிக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்


நன்றி தேனீ



No comments: