அன்றும் இன்றும் (சென்றவாரத் தொடர்ச்சி - 3)

 


 

           

                         

                                   சிவஞானச்சுடர்

                                                     பல்வைத்திய கலாநிதி

                                        பாரதி இளமுருகனார்

                                                   (வாழ்நாட் சாதனையாளர்)

 




இன்று கூட்டுக் குடும்ப வாழ்க்கை விட்டுத் தனிமை நாடுவோர் அதிகம்!

 

நாட்டைவிட்டுப் புலம்பெயர் தமிழர் இன்று

    நடைமுறைக்கு ஒவ்வாது என்றோ அன்றி

ஏட்டுச்சுரைக் காயென்றா கூட்டுக் குடும்ப

    எண்ணத்தைக் கைவிட்ட எண்ணிக்கை யதிகம்!

வீட்டினிலே போதியவிடம் இல்லையென் றாலும்

    விழுமியத்தை ஓம்பிவாழுஞ் சிலரோ குறையைக்

காட்டிடாது மகிழ்வுடனே கூடிவாழ் கின்றார்!

    கண்டிப்பாய் அவர்செயலைப் போற்ற வேண்டும்!.

 

 

 சிதைக்கப்படும்  செந்தமிழ்!

 

பைந்தமிழின் பழம்நூல்கள் அழியா தென்றும்

    பாரினிலே தமிழ்மொழியே சிறந்த தென்றும்

செந்தமிழின் சுவைதேனின் இனிமை என்றம்

    தெரிந்திருந்தும் சுயநலத்தின் தேவைக் காக

விந்தையம்மா! வேண்டுமட்டும் ஆங்கிலங் கலந்து

    விழலெழுதித் தமிழ்க்கொலையைச் செய்கின் றாரே!

இந்தநிலை மாற்றிடவே துணிவு மிக்க

    இனியுமொரு மறைமலையார் பிறந்திடு வாரோ?

 

 

வீறுடனே சிறுகதைகள் எழுதுஞ் சிலரோ

    வேற்றுமொழி கலந்தாற்றான் கதைக்கு ‘மவுசு’என

ஆறுபக்கக் கதையொன்றை எழுதும் போது

    அறுபதுக்குமேற்; பிறமொழியாம் ஆங்கிலச் சொற்களைப்

பேறிதனாற் பெற்றோமே எனம கிழ்ந்து

    பெருமையுடன் எழுதுகின்றர்! வெட்கக் கேடு!

கூறுகிறேன் கண்டனத்தாற் பயனோ வராது!

    கொடுமையிது! நாய்வாலை நிமிர்த்த லாமோ?

 

 

வீட்டிலோ அல்லது பள்ளியிலோ  தமிழைப் பேசி எழுதிப் படிக்க வசதி இருப்பின் பிள்ளைகளை ஊக்குவிப்பது பெற்றோரின் கடமையே!

 

காலங்கள் மாறுதம்மா கன்னித் தமிழைக்

    கற்றிடுதல் கடினமென்று புறக்கணிப் போர்சிலர்!

கோலங்கள் மாறுதம்மா!   பள்ளியில் அவர்கள்

    கூடுதலாய் உலகமொழி ஆங்கி லத்தைச்

சாலங்கள் போடாது விரைவிற் கற்றுச்

    சரளமாகப் பேசுகின்றார்! ஏனோ இவர்கள்

ஏலாது நாம்தமிழைப் படிக்க மாட்டோம்

    என்றடம்பிடிக் கின்றாரே! ஏது செய்வோம்!

 

 பாட்டிசொல்லை நீங்களென்றும் தட்டா தீர்கள்!

      பழந்தமிழாம் தாய்மொழியைப் படிக்க வாரீர்

  வீட்டிலேநீர் பேசும்மொழி புரிய வில்லை

      வேதனைப்படு கின்றோமே! விளங்கு மட்டும்

  காட்டிநாமும் தருகின்றோம் எழுத்தெ ழுத்தாய்க்

      கற்றிடுவீர் கன்னித்தமிழ்என்று  அன்பாய்க்   

  கேட்டதுமே முகஞ்சுழித்துக் கிட்ட வராது

       எட்டியவர் ஒதுங்குகிறார் என்ன செய்யலாம்?

 

 

    

இன்றுவாழும் தமிழ்ப் பிள்ளைகளின் பெற்றோர்களுடைய  தலையாய கடன்!

 

 

சொந்தங்களே தமிழ்பேசத் தெரியா தோர்க்குச்

    சொல்லவேண்டும் தமிழ்கற்றல் சுலப மென்று!

எந்தவேறு வேலைப்பழு இருந்த போதும்

    எப்படியோ தமிழ்ப்பள்ளி  செல்ல உங்கள்

சந்ததியில் வந்தோரை ஊக்கு வித்துத்

    தவறாது அனுப்பிவைத்;தல் கடமை என்ற

சிந்தனையொடு செயலாற்றி வருவீ ரானால்

    செந்தமிழைச் சந்ததிக்குக் கொடுக்க லாமே!.

 

 

தாய்பாலைப் பருக்குகின்ற காலந் தொட்டுக்

    தமிழ்மொழியின் சிறப்புகளை ஒவ்வொன் றாகத்

சேய்கேட்க அடிக்கடியே எடுத்து ரைத்து

    சீர்மைமிகு தமிழுணர்வை வளர்க்க வேண்டும்!

வாய்ப்பேச்சில் நல்லதமிழ் துலங்க வேண்டும்!

    வசனத்தில் ஆங்கிலத்தைக் கலத்தல் வேண்டாம்!

தேய்ந்துவரும் விழுமியங்கள்  மீண்டுஞ் செழிக்கத்

     தெரியவைத்துப் போற்றிநாம் பேண வேண்டும்!

 

தமிழை முற்றாக மறந்து கைவிட்டவர்களை எந்த இனம் என்று

அழைப்பது?- பிள்ளைகள் - பெற்றோர்கள் சிந்தனைக்கு!

 

இன்றுள்ள பெற்றோர்கள் பிள்ளை கட்கு

    இனியதமிழ் பயிற்றுவிக்கத் தவறி விட்டால்

என்றுமவர் சந்ததியில் வருவோர் தம்மை

    என்னஇனம் என்றுதம்மைக் கூறு வார்கள்?

தொன்றுதொட்டுப் பெருமையொடு தமிழன் நானென

    சொன்னபடி தமிழ்மறந்தாற் சொல்ல லாமோ?

பொன்னனைய தமிழனென்ற தனித்துவம் மறைந்ததும்

    புதியதொரு இனப்பெயரைச் சூட்டு வாரோ?

No comments: