குழந்தை சண்முகலிங்கம் மாஸ்டர்: ஈழத் தமிழ்அரங்கில் ஒரு சகாப்தம் - ஓர் அஞ்சலிக் குறிப்பு - கன்பரா யோகன்

குழந்தை மாஸ்டர் என்று பலராலும் அழைக்கப்படும்


திரு ம.சண்முகலிங்கம் மாஸ்டர் அவர்களை சரியாக ஒரு வருடத்துக்கு முன் கடந்த 2024 ஆம் ஆண்டு தை மாதத்தில் அவரது திருநெல்வேலி வீட்டில் சந்திக்க நானும் மனைவியும் போயிருந்தோம்.  

அன்றைக்கு மாஸ்டரின் வீட்டைக் கண்டுபிடிப்பது சற்றுச் சிரமமாகவிருந்தது. எட்டு வருடங்களுக்குப் பிறகு சென்றதால் தெருக்கள், வீடுகளில் மாற்றம் இருந்தது என்பது ஒரு காரணம். இன்னொன்று நாம் வழமையாக செல்லும் திருநெல்வேலிச் சந்தி வழியாக வராமல் இம்முறை எதிர்த்திசையிலிருந்து கல்வியங்காட்டுச் சந்தி ஊடாக வந்ததும் ஒரு காரணமாயிருந்திருக்க வேண்டும். இரண்டு முறை ஆட்களிடம் விசாரித்துத் தெரிந்து கொண்டோம்.

 

அப்போது சண்முகலிங்கம் மாஸ்டருக்கு 92 வயது.  நினைவுகள் மங்கிக் கொண்டு வரும் வயதாகையால் எம்மை அடையாளம் காண்பதற்கு சிரமப்பட்டார்

 

1985 இன் ஆரம்பத்தில் யாழ் பல்கலைக்கழக கலாச்சாரக்  குழுவினரின் நாடக அரங்கேற்றுகைக்காக அவரை அணுகிய காலங்களில்தான் நான் அவரை முதலில் சந்திக்க நேர்ந்தது. சண்முகலிங்கம் மாஸ்டர் கைப்பட எழுதிய ‘மண் சுமந்த மேனியர்’ நாடகப் பிரதியை நாடக இயக்குனர்

க.சிதம்பரநாதன் எமக்கு தந்திருந்தார். அதில் செறிந்திருந்த சுருக்கமான, ஆனால் ஆழ்ந்த அர்த்தம் கொண்ட உரையாடல்கள், பல இடங்களில் சிலேடையும், நகைச்சுவையும் கொண்ட வசனங்கள், கதையோட்டத்துக்கு பொருத்தமான திருவாசகப் பாடல்கள், நாட்டார் பாடல்கள், நவீன கவிதை வரிகள் என்று அவரின் நாட பிரதி தனித்துவமாக இருந்தது.

 

நாடகப் பயிற்சிகள் பல்கலைக்கழக மாணவர் பொது அறையில், பின்னர் கைலாசபதி கலையரங்கில் என்று நடைபெற்று வந்த காலத்தில்,

பயிற்சிகளுக்கு வரும் நடிகர்களுக்கு 'ரோசம் கெட்டவன் ராசாவிலும் பெரியவன்' என்ற பழமொழியை சண்முகலிங்கம் மாஸ்டர் அடிக்கடி சொல்லி நினைவு படுத்திக் கொள்வது வழக்கம். நடிகர் ஒருவர் மேடையில் ஏறிவிட்டால் வெட்கமோ, ரோசமோ இல்லாது நடிக்கப் பழக வேண்டுமென்பதற்காகவே இதை அவர் சொல்வது வழக்கம்.

 

நானும், மனைவி செல்வியும் மண் சுமந்த மேனியர் பாகம் 1 ல் பங்கு பற்றியிருந்தோம். நான் பிறகு பாகம் 2 இலும் பங்குபற்றியிருந்தேன்.

 

‘மண் சுமந்த மேனியர்’ நாடகம் பாகம் 1, பாகம் 2  என்று வெளியாகி குடா நாடெங்கும் அரங்கேறிய காலங்களில், மாலை நேரங்களில், திருநெல்வேலி-ஆடிய பாதம் வீதியிலுள்ள சண்முகலிங்கம் மாஸ்டர் வீட்டுத்திண்ணையில் அமர்ந்து உரையாடிச் சென்று வந்த நினைவுகள் மனதில் எழுகின்றன. 

 

1970 களின் நடுப்பகுதியில் கொழும்பில் நாடக டிப்ளோமா கற்கை நெறியைப் பயின்ற குழந்தை மாஸ்டர் பின்னர் சில அரங்கியலாளருடன் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் நவீன நாடகத்துக்கான 

நாடக அரங்க கல்லூரி ஒன்றை நிறுவி நவீன அரங்கில் ஆர்வம் கொண்டோருக்கான பயிற்சிக் களமாக அதனை இயக்கி வந்தார். இதில்

. தாஸீசியஸும் அரங்க பயிற்சிகளில் பங்களிப்பு வழங்கி வந்தார். 

 

1985 மார்ச் மாதம் மண்சுமந்த மேனியர் கைலாசபதி கலையரங்கில் அரங்காற்றுகைக்குப் பின்னர் நாடக அரங்கக் கல்லூரி நண்பர்களுக்கும், எமது கலாச்சாரக் குழுவுக்குமிடையிலான நெருக்கம் அதிகரித்தது. அரங்க கல்லூரி நடிகர்கள் எம்மிலும் வயதில் மூத்தவர்களாயினும் அந்த நட்புக்குப் பாலமாக அமைந்தவர் சண்முகலிங்கம் மாஸ்டர். வயது வேறுபாடின்றிப் பழகும் குணம் அவருக்கிருந்தது.

மாலை நேரங்களில் நாடக அரங்க கல்லூரியின் மூத்த நடிகர்கள் பிரான்சிஸ் ஜெனம், அரசையா, உருத்திரமூர்த்தி, சுந்தரலிங்கம் ஆகியோருடன் உரையாடிச் செல்வது வழக்கமாயிருந்தது. இவர்கள் அனைவருமே

நா. சுந்தரலிங்கத்தின் ‘அபசுரம்’ நாடகத்தில் நடித்திருந்ததை உங்களில் சிலர் அறிந்திருப்பீர்கள்.    

 

சிறுவர் அரங்கத்தில் மாஸ்டருக்கு எப்போதும் பெரிய விருப்பம் இருந்தது.

அவரது  பி.எ பட்டப் படிப்பை சென்னையில்  முடித்துக் கொண்டு இலங்கை திரும்பியவர் கல்வியங்காடு செங்குந்தா பாடசாலை, பளை மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.  இதனாலேயே அவருக்கு சிறுவர்க்கான நாடகங்களில் அதிக ஆர்வம் வந்திருக்க வேண்டும்.

 

‘சத்திய சோதனை’, ‘புழுவாய் மரமாகி’ போன்ற நாடகங்களை பாடசாலை மாணவர்க்கேற்ற கருப்பொருட்களை கொண்டு எழுதினார். 'மாதொரு பாகம்'  நாடகத்தை சுண்டுக்குளி மகளிர்  கல்லூரி மாணவிகள் நடிப்பதற்காக எழுதினார். இவற்றை நெறியாள்கை செய்வதில் திரு க. சிதம்பரநாதன் அவர்களின் பெரும் பங்கும் இருந்தது.  இந்த நாடகங்கள் சமூகத்தில் புதிய சிந்தனைகளைத் தூண்டி பெரு வரவேற்பைப் பெற்றன,

 

இதனால்  அவரிடம் பல பாடசாலை அதிபர்கள் தங்கள் பாடசாலைகளில்  சிறுவர் அரங்கப் பயிற்சிகளை நடத்துமாறு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தனர்.

ஓருமுறை 1987 இன் நடுப்பகுதியில் என்று நினைவு. நாங்கள் அவருடன்

3 நாட்கள் தங்கியிருந்து அரங்கப் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்துவதற்காக ஊர்காவற்துறை சென்ற நினைவுகள் நெஞ்சில் எழுகின்றன. 

 

அப்போது பண்ணைப் பாலத்தினூடாகச் செல்ல முடியாத ஒரு சூழ்நிலையில் அராலித் துறைக்குச் சென்று படகொன்றின் மூலம் வேலணை செல்ல தீர்மானித்திருந்தோம்.   

ஒரு ஆளின் இடுப்பளளவு தண்ணீரே உள்ள அந்த பரவைக் கடலில் வள்ளங்களில் செல்வதற்கு கூடியிருந்த கூட்டத்துடன் நாங்களும் இணைந்த  அந்த மாலை நேர பயண முடிவில் மறு கரையான வேலணைத் துறையில் இறங்கியபோது செக்கல் பொழுதாகிவிட்டது.      

அங்கிருந்து எம்மை ஊர்காவற்துறைக்கு கூட்டிச் செல்லவென்று வரவிருந்த வாகனம் வரவில்லை. அந்த நிலவொளியில் மாஸ்டருடன், சிதம்பரநாதன் மாஸ்டர், பிரான்சிஸ் ஜெனம், உட்பட எமது நண்பர்கள் சர்வேந்திரா, இரவி, மோகன் ஆகியோருடன் ஊர்காவற்துறை நோக்கி  நடந்து செல்கையில் மாஸ்டர் களைப்புத் தெரியாமல் எங்களை உற்சாகப படுத்த சொல்லிவந்த நகைச்சுவை துணுக்குகளை இன்றும் நினைப்பதுண்டு.   

 

பகல்  முழுவதும் பாடசாலையில் பயிற்சிப் பட்டறைகள் நடக்க  இரவில் நாங்கள் தங்கி நின்ற வீட்டில் எல்லோரும் அமர்ந்திருந்து உரையாடி மாஸ்டரின் நகைச்சுவைப் பேச்சைக் கேட்டு ரசித்திருந்தோம்.

அது அவரது கடந்த கால நாடக அனுபவத்தில்  சிரிப்பூட்டும் நிகழ்வாகவோ அல்லது ஒருவர் பற்றிய கிண்டலாகவோ கூட இருந்தது. அதை விட  கொழும்பில் தனது நாடக டிப்ளோமா பயிற்சியில் தன்னிலும் வயது குறைந்த இயக்குனரிடம் தான் கடுமையாக திட்டு வாங்கியதைக்கூட எம்முடன் பகிர்ந்து கொண்டார். 

குறிப்பாக அவர் போலச் செய்வதில் (Mime) வல்லவர், ஒரு கிழவர் சுருட்டுப் பிடிப்பதை போல செய்து காட்டி அசத்தினார்.

 

இளமைக்காலத்தில் திறமையான நாடக நடிகராக குறிப்பாக கலையரசு சொர்ணலிங்கம் தயாரித்த 'தேரோட்டி மகன்'  போன்ற  நாடகங்களிலும், சரித்திர நாடகங்கள், ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் என்று பலவற்றிலும் நடித்திருந்தார். ஈழத்தில் எழுபதுகளில் வெளிவந்த  ‘பொன்மணி’ என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

 

இந்த அனுபவங்கள்தான் அவரை நாடக ஆசிரியராக,  இயக்குநராக, அரங்க ஆய்வாளராக, கட்டுரையாளராக, விமரிசகராக என்று பல பரிமாணங்களில் பயணிக்க வைத்தது

 

மாஸ்டர் எப்போதுமே தன்னை முன் நிறுத்தாது பணிவுடன் அமைதியாக இயங்குபவர். மேடைகளில் பேசுவது குறைவு என்றாலும் அவரது எழுத்துக்கள், கருத்துக்கள் பல நூறு அரங்கங்களில் பேசி நடிக்கப்பட்டன.

 

யாழ் பல்கலைக் கழக விரிவுரையாளராகவும் இருந்த மாஸ்டர், நாடகமும் அரங்கியழும் பாடத்திட்டத்தை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றியிருந்தார்.  

 

நூற்று ஐம்பதுக்கு மேற்பட்ட நாடகங்களை எழுதி (சில மொழி பெயர்ப்பு உட்பட) தமிழுக்கு தந்திருக்குகிறார். இதைவிட  ஏராளமான சிறுவர் நாடகங்கள், பாடசாலை மாணவர், இளைஞர்களுக்கு உரியவை என்று ஏராளமாக எழுதியிருக்கிறார்..

அவை எல்லாமே ஒரு வகையில் சமூக நோக்குடைய அந்தந்த காலத்துக்கேற்ற சீர்திருத்தக் கருத்தை சொல்பவைதான். வெறும் பொழுது போக்கு நாடகம் என்று அவர் எதையும் எழுதியதில்லை.

நவீன மோடிப்படுத்தப்பட்ட நாடகங்களையே அவர் எழுதினார். நடிகரின் ஆக்கத்திறனுக்கு முதன்மை கொடுக்கும் இந் நாடங்களில் உரைஞர் இருப்பார்கள். நடிகர்-பார்வையாளர் இடைவெளியைக் குறைக்கும் உத்திகள் இருந்தன. மேடையில் பொருட்களின் பாவனை குறைந்திருந்ததால் சைகைகள்,அபிநயங்கள் மூலம் செயல்கள் காட்டப்பட்டன. பாரம்பரிய இசையும், நடனமும், கூத்தும் தேவைக்கேற்றபடி சேர்க்கப்பட்டிருந்தன.

தான் எழுதிய  பல நாடகங்களை அவரே நெறியாண்டும், தயாரித்துமிருக்கிறார். பல நாடகங்கள் நூலுருவிலும் வெளிவந்தன.

 

யுத்த காலத்தில் தயாரித்த 'எந்தையும் தாயும்'  நாடகத்தை பரிசோதனை முயற்சியாக ஒரு நாற்சார் வீட்டுக்குளேயே நிகழ்த்திக் காட்டினார்.  இவர் எழுதிய ‘அன்னை இட்ட தீ’ என்ற நாடகம் போருக்குள் அகப்பட்ட மக்களின் உளவியல் தாக்கத்தை சொல்லியது.

ஈழத்தில் மட்டுமன்றி புலம் பெயர் நாடுகளிலும் இவரது நாடகங்கள் குறிப்பாக 'எந்தையும் தாயும்', சிறுவர் நாடகமான கூடி 'விளையாடு பாப்பா' என்பன அரங்கேறி வரவேற்பைப் பெற்றன.

கிழக்குப் பல்கலைக் கழகம் குழந்தை மாஸ்டருக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்திருந்தது.

 

நாங்கள் கடைசியாக சென்ற ஆண்டு தை மாதத்தில் மாஸ்டரைச்  சந்தித்தபோது  அப்போது கனடாவிலிருந்து வந்திருந்த அவரது மகன் குரு மாஸ்டர் வீட்டிலிருந்தார். அவரது தாயார் - மாஸ்டரின் மனைவி கடும் சுகவீனமுற்றிருக்கிறார் என்று அறிந்திருந்தேன்.

 

முன்பெல்லாம் நாங்கள் திண்ணையில் பேசிக்கொண்டிருக்கும்போது நாங்கள் ஆன்டி என்றழைக்கும் மாஸ்டரின் மனைவி வெளியே வந்து எங்களை சுகம் விசாரிக்காமல் இருந்ததில்லை.

அவரை உள்ளே சென்று பார்க்க முடியுமா என்று கேட்கலாமா என்று நாங்கள் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தோம்

 

சந்திப்பை முடித்துக் கொண்டு விடைபெறமுன் திடீரென்று எதையோ அறிந்து கொண்டவர் போல, அவர் மனத்துக்குத் தோன்றியதோ என்னவோ ஆன்டியை பார்க்கப் போறீரோ என்றார் குழந்தை மாஸ்டர்.   

உள்ளே சென்று ஆன்டியைப் பார்த்தோம். அவர் சுய நினைவின்றி இறுதி யாத்திரைக்கு தயாராகிக் கொண்டிருப்பது தெரிந்தது. 

 

மகன் குரு தந்தையின் நாடக பிரதிகள், கட்டுரைகள், புகைப்பட, வீடியோக்கள் என்று அனைத்தையும் தொகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சொன்னார்.

 

அதுவே ஆன்டியை இறுதியாக பார்த்தது மட்டுமல்ல அதுதான்

மாஸ்டருடனான இறுதிச் சந்திப்பு என்றறியாமலே மாஸ்டரிடம் விடை பெற்றுக் கொண்டோம்.

ஆம். நாங்கள் சந்தித்த பின் சில நாட்களிலேயே தை மாத நடுப்பகுதியில்  அண்டி மறைந்து விட்டார். சரியாக ஒரு வருடம் கழித்து இந்த தை மாத நடுப்பகுதியில் மாஸ்டர் ஆன்டியை பின் தொடர்ந்து சென்று விட்டார்.

 

இந்த ஒரு வருடத்தில் சிதம்பரநாதன் மாஸ்டருடன் பேசிய சில தருணங்களில் குழந்தை மாஸ்டர் எப்படியிருக்கிறார் என்று கேட்டுக் கொள்வேன். அவர் நினைவுகளை படிப்படியாக இழந்து வருகிறார் அவரை அடிக்கடி  சென்று பார்ப்பதற்கென்று ஒழுங்குகள் செய்துள்ளோம் என்றார் அவர். அதுவே மாஸ்டர் பற்றி நாங்கள் கடைசியாக அறிந்து கொண்டது.

 

அவரோடு நாடக அரங்காற்றுகைகளில் பங்காற்றிய பலர் இன்றைக்கு

அங்கு இல்லை.  என்றாலும் அவர் நீண்ட காலம் அந்த மண்ணிலேயே நின்று தமிழ் நாடகத்துக்கென்று அர்ப்பணிப்போடு பயணித்திருக்கிறார்.

 

தமிழ் நாடக உலகில் பீஷ்மர் போல ஒரு கர்ம யோகி அவர்.

 

அவருக்கு எமது இதய பூர்வமான அஞ்சலி.  

 

 

(கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் முரசில் பிரசுரமாகிய சண்முகலிங்கம் மாஸ்டர் பற்றிய எனது கட்டுரையிலிருந்து சில பகுதிகளை இணைத்துள்ளேன்.)

 

கன்பரா யோகன்

 

No comments: