நாளுமே
ஒழுக்கமே முதன்மையாய்க் கொண்டு
நானிலம் மீதினில் வாழ்ந்திடு சிறப்பாய்!
நாளுமே
வளர்ச்சியை நோக்கிநீ முயன்றால்
நலமுடன் இலக்கினை விரைவிலே அடைவாய்!
ஆளுமை
யோடுநீ அனைவரின் வாழ்த்தை
அன்புடன் பெற்றுமே அமைதியில் வாழ்வாய்;
தாளுமே
பணிந்துநீ இறைவனைப் போற்றித்
தளர்விலா அன்புடன் வணங்கியே வாழ்வாய்! (1)
என்றுமே
உண்மையும் நேர்மையும் கொண்டே
ஏற்றமும் பெற்றிட முயன்றுநீ உழைப்பாய்;
அன்றுதான்
சீர்த்தியில் வாழ்ந்திட வழியும்
அருகினில் தோன்றிடும், அவ்வழிச் செல்வாய்!
இன்றுநீ
இளமையாய் இருப்பினும் என்றும்
இனியநல் பண்பினைப் போற்றியே வாழ்வாய்;
வென்றுநீ
வாழ்வினில் உயர்ந்திடப் படியாய்
விளங்குமே பண்புமே என்பதை அறிவாய். (2)
-------------------------------
No comments:
Post a Comment