உதயனின் நினைவுகளில் இருந்து நித்தி அண்ணை ! உதயன் – மெல்பன்


நித்தி அண்ணையை  முதன் முதலாய் கண்டது 1993 ஆம் ஆண்டு மே மாசம்  clayton Hall இல்.  இந்த  ஆண்டு அவரது கொழும்பு மெயில்,  கண்டம் மாறியவர்கள் நிகழ்ச்சிகளில்   அவரை சந்தித்தேன்.

 அங்கே நானும் எனது வீடியோ தொழில் பார்ட்னர் மூர்த்தியும்  இணைந்து அந்த நிகழ்ச்சிகளை  மல்டி கெமரா முறையில் படம்பிடிக்க அழைக்கப்பட்டோம்.

 முந்திய காலகட்டத்தில எங்க ஒரு நிகழ்ச்சிக்கு போனாலும்,  அரை மணித்தியாலம் முக்கால் மணித்தியாலம் பிந்தித்தான்  நிகழ்ச்சிகள் தொடங்குறதையே வழக்கமாய் கொண்டிருந்தார்கள்.

 அன்றுதான்    நித்தி அண்ணையின்  நேரம் தவறாமையையும்


 நேர்த்தியாக  அவர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதையும் பார்த்தேன்.  அதுக்காகவே கடுமையாக  உழைக்கிற ஒருத்தர் அவர்  என்றதையும்  ஆச்சரியத்தோட பார்த்தேன். பார்த்த இடத்திலேயே இனம்புரியாத ஒரு இணைப்பு அவருடன் உருவாகியது  

  அந்தத்  தொடர்புகளுக்கு பிறகு அன்று எங்களில  அவருக்கு என்ன பிடிச்சுதோ   தெரியாது,  அவர்  தங்கட பிள்ளையளுக்கு தமிழ் நாடகம் படிப்பிக்க ஒரு வீடியோ செய்வமோ எண்டு கோல் அடிச்சார்.  நாங்கள் நாடகத்தைப்  பழக்கி  பிள்ளைகளை நடிக்க வைக்கிறோம்.     நீங்கள் ரெண்டுபேரும் நான் போடுற நாடகத்தை வீடியோ எடுத்து எடிட் பண்ணி தாருங்கோ எண்டு கேட்டார்.

   அந்தக்காலத்தில நடன அரங்கேற்றம் நடக்கிற மாதிரி எல்லாமே indoor படப்பிடிப்புத்தான் , அவருக்கோ யாரையும் கரைசச்சல்


படுத்தக்கூடாது என்ற எண்ணம்.  தாங்கள் அரங்கேத்திறதை  அப்பிடியே எடுத்து கெமராவுக்குள் படம் பிடிச்சால் போதும் என்றதோட  அவர் நிக்க,  எனக்கும் மூர்த்திக்கும் இதை எப்படி   பார்க்கிறவைக்கு பிடிக்கிறமாதிரி ஒரு commercial aspect ஆக மாத்த வேணும் என்ற நினைப்பு.

 நாங்க ஒவ்வொரு காட்சியையும்   திருப்பி திருப்பி படம் எடுக்க நித்தி அண்ணைக்கு மண்டை காஞ்சு போச்சுது.. இருந்தாலும்,  பெடியள் ஏதோ நல்லாத்தான் செய்யப்போறாங்கள் எண்டு நம்பி எங்களுக்கு அந்த space தந்தார்

 அந்த வீடியோ வெளியே வந்து, வரவேற்பு கொஞ்சம் கொஞ்சமாக கூட,  அண்ணை ஒருநாள் மீண்டும்  போன் அடிச்சார்.  “  உதயன் எப்பிடி ? என்ன நடக்குது  ? இங்க பிள்ளையள் எல்லாம் இந்த வீடியோவைத்தான் வீட்டில பாக்கினமாம் , பிள்ளயளுக்கு சாப்பாடு தீத்தேக்க  கூட இந்த வீடியோதான் ஓடுதாம் ….. அடுத்த பாகம் எடுப்பமே  “ என்று அவர் தொடங்க,  நான் சொன்ன ஒரே விசயம்,   “அண்ணை  இந்தமுறை outdoor ஷூட்டிங் தான் எடுக்கோணும் .   “ என்றேன்.

 அவருக்கோ இது எதிர்பாராத  தலையிடி.  ஆனாலும்  முதலாவது பாகத்திலையே எங்களில  அவருக்கு ஒரு அசையாத நம்பிக்கை.  வேற வழியில்லாமல் அண்ணை ஒத்துக்கொண்டது தான் பாப்பா பாரதியின்  2 ஆம் 3 ஆம் பாகத்துக்கான வெற்றி.

 நித்தி அண்ணை எப்பவுமே நாடக மேடையாக்கத்துக்கே பழக்கப்பட்டவர்.  திடீர் என அவர்  படங்கள் எடுக்கும் முறைக்கு மாறவேண்டிய தேவை ஏற்பட்டது.  ஏனெண்டால் இங்க ஒவ்வொரு பிரேம் மட்டுமே எடுத்து கொஞ்சம் கொஞ்சமாய் சேர்க்கப்படும்.  இந்த படப்பிடிப்புக்காக நாங்கள் சில வாரங்கள் Melbourne இல்  போகக்கூடிய இடங்கள் எல்லாம் போய் படமாக்கினோம்.  எனக்குத்  தேவை ஒவ்வொரு காட்சியிலும் Melbourne  க்குரிய தனித்துவம் தெரியவேணும் எண்டதுதான்.

ஒவ்வொரு  பிரேமும்  திரைப்படம்  மாதிரி இருக்கவேணும் என்கிறதே  எனது நோக்கம்.  இதுக்காக எனக்கு நண்பர் மூர்த்தி செய்த உதவிகளை  சாகும் வரைக்கும்  என்னால் மறக்க முடியாது.   இரவிரவா ரெண்டு பேரும் முழிச்சு இருந்து  முதல் நாள் பகலில எடுத்த விஷயங்களை  எடிட்டிங் செய்து அடுத்த நாள் படப்பிடிப்புக்கு தயார் ஆகிடுவோம்.

 அந்த நேரம் மூர்த்தி வீட்ல தான்  எனக்கு சீவியம் , படுக்கை சாப்பாடு எண்டு எல்லாம்.  எடுத்து ஏதாவது  மனசுக்கு பிடிக்கேல எண்டால் அடுத்த நாள்,   அண்ணை இதில சிலதை திருப்பி எடுக்கோணும் எண்டு அண்ணைக்கு அலுப்பு தருவோம்.

 அவருக்கோ  பிள்ளையளையும் பெற்றாரையும் கரைச்சல் படுத்தக் கூடாது எண்டு மனசுக்குள் ஆதங்கம்.  ஆனால்,  முதலாவது நாடகம் எடுத்து எடிட் பண்ணி காட்டின பிறகு நித்தி அண்ணை உசார் ஆகிட்டார். இது நினைக்கிற மாதிரி உலகம் எல்லாம் ஓடப் போகுது எண்டு சொன்னார், சொன்னபடியே இன்று வரை ஓடுது.

அந்த படப்பிடிப்பு காலங்கள்  கனாக் காலங்கள்தான்.   வெளிப்புற படப்பிடிப்புக்கு தேவையான சாப்பாடுகள் எல்லாம் பெற்றோரால்   கொண்டுவரப்பட்டு,  சாப்பாடுக்குக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள் . இளைஞர்கள் எங்களை தங்கள் வீட்டுப்பிள்ளைகள் போலவே உபசரிச்சு கவனிச்சுக் கொண்டதை இன்றுவரை நினைவு கூரலாம்.   

 

நாங்கள் படப்பிடிப்பை  Clayton இல்  இருந்து தொடங்கி flinders street station , வயல் காணிகள், Melbourne botanical gardens , St Kilda Beach, பிறகு சிவா விஷ்ணு கோவில் Dandenong வீடுகள் , Dandenong ranges,  அதுக்குப் பிறகு எங்கட மறைஞ்ச தங்கவேல் அண்ணையின் வீடு எண்டு  இரவு பகல் பாராமல் படப்பிடிப்பு.  இதுக்குள்ள அண்ணை மறக்காமல் வரேக்கை McDonalds இல் ஏதாவது சாப்பாடும் வாங்கிக் கொண்டு வந்து தருவார்.

 

படப்பிடிப்பில் நடந்த  அதிசயமான அனுபவமாக  மழை என்ற  பாடலுக்கு செயற்கை மழை பெய்யச்  செய்ததும் ஒன்று.  அந்த காட்சியில்  realistic வரலை எண்டு retake எடுக்கும்போது நித்தி அண்ணையோட பயங்கர பிரச்னை.  அவருக்கோ பிள்ளைகள் நனைஞ்சு வருத்தம் வரும்  எண்ட கவலை.  எனக்கோ காட்சி natural லா இருக்க வேணும் எண்ட சிந்தனை.   பிள்ளைகளுக்கு traffic lights சம்பந்தமாய் ஒரு பாடல் எடுக்க வேணும்.  அதுக்காக ஒரு ஒழுங்கையை தெரிவுசெய்து அங்க படம் பிடிச்சுக்கொண்டு நிக்கும் போது,  கொஞ்சம் கொஞ்சமாய் traffic கூடிக்கொண்டு போக , சரியாய் கரைச்சல் பட்டுப்போனோம்.  அந்த இடத்தில பெற்றோரே தங்கள் கார்களை கொண்டுவந்து வரிசையில் நிப்பாட்டி அந்த பாடலுக்கு உதவினதையும் மறக்க முடியாது

 

இதை விட  Coburg Merri creekஇல படப்பிடிப்பு நடத்தும் போது பிள்ளையள் தண்ணிக்குள்ள   கடந்தால் விழுந்து போயிடுவினம் எண்டு தடுத்தார்.  நானோ இல்ல அப்பிடி செய்தால் தான் natural ஆக இருக்கும் எண்டு படப்பிடிப்பு நடத்த,  ஒரு பிள்ளை தண்ணீக்குள விழ ,பிறகென்ன நித்தி அண்ணையும் நானும் அண்டைக்கு முழுக்க கதைக்கேல.  ஆனால் அடுத்த நாள் ஒண்டும் நடக்காத மாதிரி,   உதயன் எப்பிடி , எங்க இண்டைக்கு தொடங்குறது   எண்டார்.  இது தான்  நித்திஅண்ணை.  என்னதான் பிரச்னை எண்டாலும் அடுத்த நிமிஷம் எல்லாம் மறந்திடும் இயல்பு அவருக்கு.  இப்பிடி பலகதைகளைச்  சொல்லலாம்.

 

இந்தக்  காலத்தில்தான் நித்தி அண்ணையோட , நெருக்கம் மேலும் அதிகரிச்சு அண்ணனே எங்கட  திருமணத்துக்கு முக்கிய சொற்பொழிவு ஆற்றும் அளவுக்கு உறவுகள் பலப்பட்டது.  அதைத்  தொடர்ந்தும் எங்கள் பயணங்கள் வருஷங்களை கடந்துகொண்டே சென்றது.

 அதுக்குள்ள ரெண்டு மூண்டுதரம்  பாப்பா பாரதியின் அடுத்த பாகம் எடுக்கவேணும் எண்டு ஓடித்திரிஞ்சவர்.  ஆனாலும் காலமும் நேரமும் அதுக்கு ஏற்றாற் போல அமையவில்லை.   அதுக்குப்பிறகு நித்தி அண்ணை தனது சுய முயற்சியால் தாயகத்தில் மக்கள் எதிர்கொள்ளும் தண்ணீர் பற்றாக்குறை மற்றது செயற்கை விவசாயத்தால் மண்ணுக்கு ஏற்படும் பாதிப்பு , சுயமாக உணவுத்தேவையை பூர்த்தி செய்தல் முதலான பல நல்ல கருத்துக்களை மனசில் கொண்டு இங்கே இருக்கும் சில நல்ல உள்ளங்களோடு ஒண்டு சேர்ந்து ஒரு செயல் திட்டத்தை உருவாக்கி,  இங்கேயே நிறைய கருந்தரங்குகளை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாது ,  தனது retirement க்காக சேர்த்த superannuation காசை எடுத்துக்கொண்டு இலங்கையில் அதை ஒரு செயலாகவே அமுல்படுத்தினார்.  அங்கே  திருநாவுக்கரசு மாதிரி பண்ணைய திறம்பட நடத்தி வருகிறார்.  இந்த இடத்தில இந்த Grow என்ற concept ஐ முதலில் யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாது,  இன்றுவரை அதில் ஒரு மாற்றமும் இல்லாமல் திறம்பட விநியோகிச்சு வருகிறார் Grow bags it’s his signature product.

 

நித்தி அண்ணை 2019 ஆம் ஆண்டில் மூன்று மாசம் எங்களோட சேர்ந்து எங்கள் வீட்டில் தங்கி இருக்க ஒரு சந்தர்ப்பம் கிடைச்சது. தினமும் சமையலறை  benchtop இல ஏதாவது ஒரு discussion நடக்கும் , எங்க தொடங்கினாலும் கடைசியில்,   என்னெண்டு யாழ்ப்பாண திட்டத்தை மேம்படுத்தலாம்,  அதை என்னெண்டு promote பண்ணலாம் எண்டதில்லையே போய் நிக்கும்.   சில நாட்களில எனக்கு வேலையில் கிடைச்ச வசதிப்படி நான் working from home.   

அந்த நேரத்தில் எல்லாம் இந்த மாதிரி பண்ணை விரிவாக்கம், தற்கொலை முயற்சி தடுத்தல் சம்பந்தமாய் விவாதங்கள், Facebook , Website promotion எண்டு அண்ணையோட நிறைவே பயணிக்க கிடைச்சது.  சில நாட்களில் வேலையால  வரும் வரைக்கும் நித்தி அண்ணை ரூமில இருந்துட்டு,  வேலையால வந்த உடனையே  “ ஆ உதயன் எப்படி , இண்டைக்கு என்ன விஷேசம்   “எண்டு சொல்லிக்கொண்டு வந்து சமா தொடங்கினால் இரவு முடிய ஒரு 12-1 மணி ஆகிடும்.  அதுக்குப் பிறகு நாங்கள் நித்திரைக்குப் போன,  பிறகுதான் நிந்தியண்ணையின் ஊர் அலுவல்கள் , பள்ளிக்கூட அலுவல், நாடகம், இப்பிடி பல அலுவல்கள் நடக்கும்.  எனக்குத்  தெரிய நித்தி அண்ணை அதிகாலை  4 மணிக்கு முன்பு  நித்திரைக்கு போன காலமே இல்ல எண்டு சொல்லலாம்

 

நித்தி அண்ணை அப்பியாசக்  கொப்பி ஒண்டு வைச்சிருக்கிறார். அந்த கொப்பியில்,  தான் செய்யவேண்டிய எல்லா விடயங்களையும்  குறிச்சு கொள்ளுவது வழக்கம்.  ஒவ்வொரு விஷயங்களும் செய்து முடிக்க அதை அவர் delete பண்ணிக்கொண்டு போவது என்று தான் இந்த பழக்கமே அவரால் தொடங்க பட்டது.

 
 மற்றவைக்கு எண்டால் அந்த டயறி  விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் குறையும் .

 

 தமிழுக்கும், நாடகத்துக்கும் , பண்ணைக்கும் இடையே நடக்கும் கயிறு இழுக்கும் போட்டியில் அண்ணையின் to do list தான் அதிகரிச்சு கொண்டு போவதை கண்டேன்.  இதுக்குள்ள அண்ணை அடிக்கடி சொல்லுற விசயம், “உதயன் உந்த பழைய நாடகம் எல்லாம் எடுத்து ஒருக்கா புத்தகமாய் அடிக்கவேணும்.  நேரம்தான் வருகுதில்ல

 

நான் கேட்டன்,  “  அதையும் அந்த புத்தகத்தில எழுதுங்கோ.  அதுவும் ஒருநாள் கரை காணும்  “ எண்டு.  

கர்ணனுக்கு ஒரு கவச குண்டலம் மாதிரி அன்னைக்கு ஒரு laptop , ஒரு போன்.   அதைவிட காதுக்குள்ள செருக ஒரு Bluetooth ear piece.

 

 இவைகளோடையேதான் நித்தி அண்ணை  ஊர்  ஊராக என்ன….  உலக நாடுககளுக்கே பயணித்து கொண்டு இருக்கிறார்  . அவர் எப்பவும் எனக்கு சொல்லுறது,  உதயன் எனக்கு போற இடத்தில ஒரு மேசையும் இன்டர்நெட் connection உம் இருந்திட்டால் காணும்.  எனக்கு வேற ஒன்றுமே தேவையில்லை . 

 

 எனக்கு தெரிய அண்ணை டீவி பார்த்ததையே நான் கண்டதில்லை, அவர் டீவிக்கு வைச்ச பெயர் idiot box .

 

இன்று வரை நித்தி அண்ணை slowdown பண்ணினதை நான்  கண்டது இல்ல.  இன்னும் அவர் தொடர்ந்தும் ஓடிக்கொண்டே இருக்கவேணும் . அதுதான் அவருடைய மெண்டல் ஹெல்த்துக்கும் நல்லது.  அவரை சூழ்ந்து இருக்கும் அவர் சார்த்த சமூகத்துக்கும் நல்லது எண்டு சொல்லி, அவர் மேலும் ஆரோக்கியமாக வாழ எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

 

( கலைஞர் -  தன்னார்வத் தொண்டர் மாவை நித்தியானந்தனின் பவளவிழாவில் நிகழ்த்திய உரை )

 

No comments: