‘குலவிளக்குப் பிள்ளைகளே!’ சற்றுக் கேட்பீர்!



……………. பாரதி இளமுருகனார்

 

 



மூப்படைந்த பெற்றோரை முறையாய்த் தினமும்

    முழுவேளை பராமரிக்கப் பழுதிலா நல்ல

காப்பகமாய் விளங்குவது முதியோர்  இல்லமே

    கண்காணித் திடத்தாதி மார்களங்(கு) இருப்பரே!  

சாப்பாடொடு தக்கநேர மருத்துவ வசதியும்

     சத்தியமாய்ப் பெற்றோரைச் சாக விடாதெனக்

கூப்பாடு போட்டூரார் வாயை அடைத்திடும்;

     குலவிளக்குப் பிள்ளைகளே! சற்றுக் கேட்பீர்!

 

ஆமா!நன் றாய்க்கேட்பீர்! அமைதியாய் ஊரிலே

   அன்புபில்க வாழ்ந்தவுங்கள் பெற்றோ ரைநீவிர்

சீமான்போல்; வாழலாம் சிரமமே இராது

  செல்லமாகப் பேரனொடும் பிறக்க விருக்குமெம்

பூமாநிறப் பேர்த்தியொடும் பொழுதும் போக்கலாம்

   புறப்பட்டு;ச் சிட்னிக்குப் புலம்பெயர்ந் திடுவீர்!

ஏமாற்றிடா தீ;என்றே சொல்லிச் சொல்லி

   இங்குவர வழைத்தீரே இன்னுங் கேட்பீர்!

 

 

சிரமங்கள் பாராது பிள்ளைப்பேற் றுக்காலம் 

   சிறப்பாகப் பார்ப்பதற்குத் தாயைநீர் தேர்ந்தெடுத்தீர்!

சரக்கரைத்துப் பத்தியத்தைச் சாமர்த்திய மாய்ச்சமைத்துத்

   தகுந்தவேளை பரிமாறித் தாரத்தைப் பராமரிக்க

வரமிருந்து உமைப்பெற்று வளர்த்தோரை வரவழைத்தீர்!

   வருவித்த நோக்கத்தை நிறைவுசெய்த பெற்றோரைக்

கரம்நீட்டி அழைக்கின்ற முதியோரின் இல்லம்அதில்

    காட்சிப்பொருள்; ஆக்கியங்கே கருணையொடு சேர்த்ததேனோ?

 

எஞ்சியநாள் கழிக்கவெங்கள் இன்னரும் மகன்தான்

   தஞ்சமெனச் சிட்னிக்கு நம்பியே வந்தோம்!

அஞ்சுவதற் கொன்றுமில்லை ஆசையாய் என்மகன்

  அணைத்தினிதே ஆதரிப்பன் எனவே வாழ்ந்தோம்;;!

வஞ்சமின்றிப் பேரர்களை வளர்த்து மகிழ்ந்தோம்!

  வலிமைகுன்றும்; வரைநாமும் ஓடாய் உழைத்தோம்;!

கொஞ்சமேனும் தாய்ப்பாசம் மிஞ்ச விலையோ?

   கொண்டுசேர்த்த இடம்மூத்தோர் இல்லந் தானோ ?

 

பாலூட்டிச் சீராட்டிப் பாசமெலாம் கொட்டியுன்னைப்

   பஞ்சணையிற் படுக்கவைத்துப் பகலிரவாய்க் கண்விழித்துத்

தாலாட்டி வளர்த்துவந்தோம்! தக்ககல்வி கொடுத்துன்னைத்

   தரணிதனிற் பலர்மதிக்க உயரத்;திவிடப் பசியிருந்தோம்!

வாலாட்டும் நாய்க்குட்டி போலுன்னை மாற்றிடவே

   வந்தனளோ நீ;விரும்பி வரித்திட்ட சிங்காரி?

ஏலாத பெற்றோரை வீட்டைவிட்டு வெளியேற்றி

   ஏனோமுதி யோரில்லம் ஏற்றுமதி செய்திட்டாய்!

 

தள்ளாத காலமதில் தனித்திருக்க விட்டிடாது

   தாங்கள்கண் மூடுமட்டும் தங்கமகன் பார்த்திடுவான்

 கொள்ளையாசை யுடன்பேரப் பிள்ளைகளைக் கொஞ்சியவர்

  குழைந்துகொட்;டும் பேச்செல்லாம் மகிழ்ந்துகேட்டு விளையாடி

அள்ளியணைத் தேமகிழ ஆசையொடு காத்திருந்தோம்!

   அத்தனையும் பகற்கனவாய் ஆனதையா! என்செய்வோம்!

உள்ளமெலாம் வேகுதென்று உளஞ்சோரும் கிழடுகளின்

   ஓலங்கள் காதோரம் ஒருநாளும் கேட்கலையோ?.

 


 


 

 

 









பணம்பெருக்க வழிதெரிந்த பணக்காரப் பிள்ளைகளே! 

  பாசமிகு பெற்றோரைப் பராமரிக்;கத் தவறியதேன்?   

பிணமாக உடல்விட்டுப் பிரிந்திட்ட உயிரக்கென்றும்

  பெரும்பாடு பட்டுழைத்துச் சேர்த்தபெருஞ் செல்வத்தில்

அணாக்காசு ஒன்றையேனும் ஆசைக்குக் கொண்டுசெல

  அதற்குரிமை கிடையாதே! தெரிந்திருந்தும் திருந்தாத

குணங்கொண்டீர்! மனதினிலே குற்றவுணர் வைநீக்கிக்

  கோடிபெறும் தாயன்பை நினைந்துருக மாட்டீரோ?

 

















அப்பாடா பெற்றோரை வீட்டில்வைத்(து) அனுசரிக்க

  ஐயோவென் மனுசிக்கோ வேலைப்பளு கூடிடுமே!

தப்பில்லை! பெற்றோரைப் பராமரிக்க நேரமேது?

  தாய்தந்தை யருக்கிப்போ தடுமாற்றம் மோசமென

ஒப்பாரி வைத்தவரை ஒருவாறு அனுப்பிவைக்கும்

  உன்மத்தப் பணக்காரர் நன்மனதை என்சொல்வேன்!

இப்பிறப்பிற் கண்கண்ட தெய்வங்கள் அவரன்றோ?

  ஏனிந்த முடிவெடுப்பு? எண்ணங்கள் மாறாதோ?

  

இயன்றவரை அனுசரித்து இறுதிவரை பெற்றோரை

  என்றுமுங்கள் இல்லத்தை அலங்கரிக்கச் செய்திடுவீர்!

முயன்றிட்டால் முடியாத தென்றுமில்லை உணர்ந்திடுவீர்!

  முதியபெற்றோர் ஆசியுமை முழுமனித னாக்கிவிடும்!

தயக்கத்தை விட்டிடுவீர்! தாய்தந்தை இருக்கும்வரை

  தாரத்தின் உதவியொடு தாங்கிடுவீர் பெற்றோரை!

வியக்கவைக்கும் அவரன்புக்(கு)இணையில்லை! நீங்கள்பிழை

  விட்டிருந்தால்  மனம்மாறிப் பரிகாரஞ் செய்வீரோ?.


1 comment:

Kumaraswamipillai said...

நடைமுறையில் உள்ளதை நன்றாக எடுத்துக் கூறியதற்கு மனமார்நத பாராட்டு. காவோலை விழக் குருத்தோலை சிரிக்கும் என்பார்கள். இன்றைய இளைஞர்கள் முதியோராகும் போது தான் இந்த உண்மையை உணர்வார்கள். இது ஒரு தொடர்கதை. காலப்போக்கில் பாசத்திற்கே இடமிருக்காது.