பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - அன்னைவேளாங்கண்ணி - ச. சுந்தரதாஸ் - பகுதி 24


.


தமிழ்த் திரை உலகில் பிரபல நடன ஆசிரியராகத் திகழ்ந்தவர் கே தங்கப்பன்.புதுமை இயக்குனர் ஸ்ரீதர் கலரில் இயக்கி இளைய நடிகர்கள் நடித்து வெற்றி பெற்ற காதலிக்க நேரமில்லை படத்திற்கு இவர் அமைத்த நடன அசைவுகள் இளம் ரசிகர்களை சுண்டி இழுத்தன.அப்படத்தைத் தொடர்ந்து பிசி டான்ஸ் மாஸ்டரானார் தங்கப்பன்.கிறிஸ்துவரான இவர் நாகப்பட்டணத்தில் அமைந்துள்ள அன்னைவேளாங்கண்ணி மாதா மீது கொண்ட பக்தியால் 1971ம் ஆண்டு அன்னையின் அற்புதங்களை விளக்கும் வகையில் அன்னைவேளாங்கண்ணி எனும் படத்தை தயாரித்து இயக்கினார் .அத்துடன் படத்திற்கான கதை,நடனம் இரண்டையும் உருவாக்கியிருந்தார்.

அன்று திரை உலகில் பிரபலமாக இருந்த ஜெமினி கணேசன் , ஜெயலலிதா, சிவகுமார் , பத்மினி , சுந்தரராஜன்,மனோரமா , எஸ் வீ சுப்பையா,நாகேஷ்,சச்சு ,முத்துராமன்,கே ஆர் விஜயா ,ராமாபிரபா ,மாஸ்டர் சேகர் ,தேங்காய் சீனிவாசன் ,தேவிகா ,ஸ்ரீகாந்த் ,ஸ்ரீவித்யா என்று ஏராளமான நடிகர்கள் படத்தில் நடித்தார்கள்.இவர்களுள் பலர் இலவசமாகவோ அல்லது சொற்ப ஊதியத்திலோ இதில் நடித்திருந்தார்கள்.

வண்ணப் படமாக உருவான அன்னைவேளாங்கண்ணி , அன்னையின் மகிமையை விளக்கும் மூன்று கதைகளை கொண்டு தயாரானது.கால் ஊனமுற்ற சிறுவனுக்கு நடக்கும் சக்தியை அன்னையருளிய காட்சி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.இதில் சிறுவனாக மாஸ்டர் சேகர் அருமையாக நடித்திருந்தார்.நடக்க இயலாமல் அவர் தரையில் ஊர்ந்து ஊர்ந்து நடப்பது ரசிகர்களை வாட்டியது ,அவரின் தாயாக பத்மினி நடித்தார்.




திருமணம் நடக்க வேண்டும் என எங்கும் நர்ஸ் மேரிக்கு அன்னைவேளாங்கண்ணி ஆலயத்தில் வைத்து அன்னை சரியான கணவனை அடையாளம் காட்டுவது பலரையும் கவர்ந்தது.இதில் மேரியாக ஜெயலலிதாவும்,அவர் கணவராக ஜெமினியும் நடித்தனர் .இவர்கள் இருவரும் தோன்றும் வானம் எனும் வீதியிலே குளிர் வாடை எனும் தேரினிலே பாடல் ஜேசுதாஸ் மாதுரி குரலில் தேனாக இனித்தது .பாடல் காட்சியும் நன்கு படமாக்கப் பட்டிருந்தது.



மலையாளத்தில் பிரபல இசையமைப்பாளராக திகழ்ந்த ஜீ தேவராஜன் படத்திற்கு இசையமைத்திருந்தார் அவருடன் இணை இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மானின் தந்தை ஆர் கே சேகர் பணியாற்றினார்.இவர்களின் இசையில் தேவமைந்தன் போகின்றான் ,கருணை மழையே மேரி மாதா , நீலக் கடலின் ஓரத்தில், ஆகிய பாடல்கள் இனிமையாக அமைத்தன.கண்ணதாசன்,வாலி,அய்யாப்பிள்ளை ஆகியோர் பாடல்களை இயற்றியிருந்தார்கள்.படத்திற்கான வசனங்களை சாம் டி தாஸன் எழுதியிருந்தார்.மூத்த ஒளிப்பதிவாளராக ஜி கே ராமுவின் கைவண்ணத்தில் காட்சிகள் படமாகின.

பிரபல நடிகராக உருவாகும் முன் தங்கப்பனிடம் டான்ஸ் பயின்று பின்னர் அவரிடம் உதவியாளராகவும் பணியாற்றியவர் கமல்ஹாசன்.இந்தப் படத்தில் உதவி இயக்குனராகவும் கமல் பணியாற்றியிருந்தார்.அது மற்றுமின்றி ஒரு காட்சியில் சிலுவையை சுமந்து செல்லும் யேசுவாகவும் அவர் தோன்றினார்.தமிழ் நடிகர்களுள் திரையில் முதல் தடவை யேசுவாக தோன்றிய பெருமையும் கமல்ஹாசனையே சேரும்.

எந்த வித குழப்பமும் இன்றி நேர்த்தியாக படத்தை இயக்கி இருந்தார் டான்ஸ் மாஸ்டர் தங்கப்பன்.கிருஸ்துவ கதைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழில் வெளி வந்த ஒரு சில படங்களுள் அன்னைவேளாங்கண்ணிக்கு ஓர் இடம் உண்டு.

கிறிஸ்மஸ் வாழ்த்துகள்!


No comments: