உலகச் செய்திகள்


கொரோனா; இத்தாலியில் பாடசாலைகளுக்கு பூட்டு

உலகெங்கும் கொரோனா வைரஸ் உயிரிழப்பு 3000ஐ தாண்டியது

உலகளாவிய ‘வைரஸ்’ அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க தயாராகும் உலக நாடுகள்

மலேசியாவின் புதிய பிரதமராக முஹ்யித்தீன் யாசின் பதவியேற்பு

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

இஸ்ரேல் பொதுத் தேர்தலில் பிரதமர் நெதன்யாகு வெற்றி



கொரோனா; இத்தாலியில் பாடசாலைகளுக்கு பூட்டு



இத்தாலியில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால், அங்குள்ள அனைத்துப் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று (05) முதல் இம்மாதம் 15ஆம் திகதி வரை பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளை மூடுவதற்கான உத்தரவை இத்தாலிய அரசாங்கம் பிறப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு அந்நாட்டில் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் எதிர்வரும் ஏப்ரல் 03ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக 107 பேர் உயிரிழந்துள்ளதோடு 3,089 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
உலகம் பூராகவும் கொரோனா வைரஸ் காரணமாக 3,254 பேர் உயிரிழந்துள்ளதோடு, 95,184 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி தினகரன் 









உலகெங்கும் கொரோனா வைரஸ் உயிரிழப்பு 3000ஐ தாண்டியது



சீனாவுக்கு வெளியில் வேகமாக பரவல்
புதிய கொரோனா வைரஸினால் சர்வதேச அளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3000ஐ தாண்டியுள்ளதோடு இந்த வைரஸ் மேலும் பல நாடுகளுக்கு பரவியுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் முதல் முறை தோன்றிய இந்த வைரஸ் தற்போது 60க்கும் அதிகமான நாடுகளில் 88,000க்கும் அதிகமானவர்களுக்கு தொற்றியுள்ளது.
சீனாவுக்கு வெளியில் தென் கொரியாவில் அதிகம் பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருப்பதோடு நேற்று மேலும் சுமார் 500 வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி அந்நாட்டில் மொத்தம் 4,000 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
உலகளாவிய வைரஸ் பாதிப்புக் குறித்த அச்சம் அதிகரித்திருக்கும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான முக்கிய செயற்கை சுவாசக் கருவிகளை கையிருப்பில் வைத்திருக்கும்படி அனைத்து நாடுகளையும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அது உலக பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து அதிகரித்துள்ளது. இது 2008 நிதி நெருக்கடிக்குப் பின் சர்வதேச சந்தை தனது மோசமான நிலையை பதிவு செய்யும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்த வைரஸினால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் சீனாவில் பல பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சீன பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வைரஸ் தாக்கிய நாடுகளுக்கு பயணக் கட்டுப்படுகள் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் என்று ஏனைய நாடுகளும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிமுகம் செய்து வருகின்றன.
இதில் உலகின் அதிகம் பேர் வருகை தரும் பிரான்ஸ் தலைநகரில் உள்ள லோவ்ரே அருங்காட்சியக ஊழியர்கள் வைரஸ் அச்சம் காரணமாக பணியாற்ற மறுத்ததை அடுத்து அந்த அருங்காட்சியகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது. இது வைரஸ் பற்றிய அச்சம் உலகெங்கும் அதிகரத்திருப்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
சீனாவில் நேற்று இந்த வைரஸினால் மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளனர். ஹுபெய் மாகாணத்திலேயே அனைத்து உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இந்த மாகாணத்தின் தலைநகரான வூஹானில் இருக்கும் காட்டு விலங்கு சந்தை ஒன்றில் இருந்தே இந்த வைரஸ் மனிதர்களுக்கு தொற்றி இருப்பதாக நம்பப்படுகிறது.
சீனாவில் இதுவரை வைரஸினால் மொத்தம் 2,912 பேர் உயிரிழந்துள்ளனர். மறுபுறம் சீனாவுக்கு வெளியிலும் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. ஈரானில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஏற்கனவே சுகாதார பிரச்சினைகள் இருப்பவர்களிடமே இந்த வைரஸ் அதிகம் தாக்கம் செலுத்துவதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதன் உயிரிழப்பு வீதம் 2 தொடக்கம் 5 ஆக பதிவாகியுள்ளது. இது காய்ச்சலினால் உயிரிழக்கும் 0.1 வீதத்தை விடவும் மிக அதிகம் என்றபோதும் மற்றொரு கொரோனா வைரஸுடன் தொடர்புடைய சார்ஸின் உயிரிழப்பு வீதமான 9.5 ஐ விடவும் குறைவாகும். 2002–2003 இல் பாதிப்பை ஏற்படுத்திய சார்ஸ் வைரஸினால் சுமார் 800 பேர் உயிரிழந்தனர்.
மறுபுறம் புதிய கொரோனா வைரஸ் தற்போது சீனாவை விடவும் வெளிநாடுகளில் வேகமாக பரவி வருகிறது. சீனா இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு ஹுபெயின் சுமார் 56 மில்லியன் மக்களை தனிமைப்படுத்தியது உட்பட் கடும் நடவடிக்கைகளால் தற்போது அங்கு வைரஸ் தொற்று வீழ்ச்சி கண்டுள்ளது.
வெளிநாட்டில் வேகமாக பரவல்
கடந்த ஞாயிற்றுக்கிழமை வைரஸ் தொற்று அதிகரித்திருந்தபோதும் நேற்று சீனாவில் 202 புதிய வைரஸ் தொற்று சம்பவங்களே பதிவாகின. கடந்த ஜனவரி பிற்பகுதி தொடக்கம் மிகக் குறைவான வைரஸ் தொற்று பதிவான தினமாக இது இருந்தது.
இதற்கு மாறாக சீனாவுக்கு வெளியில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது.
தென் கொரியாவில் மேலும் நால்வர் உயிரிழந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில் நுகர்வோர் மற்றும் ஏற்றுமதியாளர்களும் பாதிப்படைந்துள்ளனர். இது முதல் காலாண்டில் பாதகமாக வளர்ச்சியை காண்பிக்கும் என்று தென் கொரிய மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
எனினும் தென் கொரியாவில் இந்த வைரஸ் தொற்றுக்குக் காரணமான சின்சோன்ஜி கிறிஸ்தவ சமூகத்தின் 260,000க்கும் மேற்பட்டவர்கள் மீது மருத்துவ சோதனை மேற்கொள்ளப்படவிருக்கும் நிலையில் வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
வார இறுதியாகும்போதும் இத்தாலியில் வைரஸ் தொற்றியவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. ஐரோப்பாவில் அதிகம் பாதிக்கப்பட்ட இந்த நாட்டில் சுமார் 1,700 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
இந்தோனேசியாவில் இரு கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் முதல் முறை பதிவாகியுள்ளது. செக் குடியரசு, ஸ்கொட்லாந்து மற்றும் டொமினிக்கன் குடியரசில் முதல் கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அமெரிக்காவில் கொவிட்–19 என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் தொற்றிய இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார். வொஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவருக்கு ஏற்கனவே சுகாதாரப் பிரச்சினைகள் இருந்ததாக அதிகாரிகள் கூறினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த முதல் நபரும் அதே மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.
மறுபுறம் பிரான்சில் இதுவரை 130 பேருக்கு கொவிட்–19 வரைஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் அதனால் உயிரிழந்துள்ளர்.
பிரான்சின் சில பகுதிகளில் 5,000க்கும் மேலானோர் கூடும் நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வட்டாரங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. சமய நிகழ்ச்சிகள், மரதன் ஓட்ட நிகழ்ச்சி போன்றவை ரத்துசெய்யப்பட்டன.  நன்றி தினகரன் 











உலகளாவிய ‘வைரஸ்’ அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க தயாராகும் உலக நாடுகள்



சீனாவுக்கு வெளியில் வேகமாக பரவல்
புதிய கொரோனா வைரஸ் உலகெங்கும் வேகமாக பரவ ஆரம்பித்திருக்கும் நிலையில் உலகளாவிய தொற்றுநோய் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க அரசுகள் தயாராகி வருகின்றன. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் முதல் முறை சீனாவுக்கு வெளியில் அதிக பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது.
அவுஸ்திரேலியா அவசர நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதோடு, இந்தத் தொற்றுக்கு முகம்கொடுக்கும் அச்சுறுத்தல் அளவை தாய்லாந்து அதிகரித்துள்ளது. சர்வதேச சுகாதாரப் பிரச்சினையை ஏற்படுத்தும் இந்த வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்காவின் செயற்பாடுகளுக்கு அந்நாட்டு துணை ஜனாதிபதி மைக் பென்ஸை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பொறுப்பாக நியமித்துள்ளார்.
கொவிட்–19 என உலக சுகாதார அமைப்பினால் பெயரிடப்பட்டிருக்கும் இந்த வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் உள்ள காட்டு விலங்கு சந்தை ஒன்றில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் இந்த வைரஸ் மனிதர்களிடம் தொற்றியதாக நம்பப்படுகிறது.
உலகளாவிய தொற்றுநோய் என்ற அடிப்படையில் தமது நாடு இந்த வைரஸுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்வதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் 32 பேருக்கு புதிக கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி மருத்துவனைகளில் போதுமான மருத்துவ வசதிகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பணியாளர்கள் இருப்பது உறுதி செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றுநோய் நிலையை விரைவில் ஏற்படுத்தும் என்ற சமிக்ஞைகளையே காட்டி வருகிறது” என்று கன்பர்ராவில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் மொரிசன் தெரிவித்தார்.
“இதற்கு ஏற்ப கொரோனா அவசரநிலை திட்டத்தை முன்னெடுக்க இன்று நாம் இணங்கியுள்ளோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
வைரஸ் அச்சம் காரணமாக சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சி கண்டு, எண்ணெய் விலை குறைந்துள்ளது.
3.6 டிரில்லியன் டொலருக்கும் அதிகமான இழப்பை சந்தித்து உலக சந்தை தொடர்ச்சியாக ஆறாவது நாளாக சரிவை எதிர்கொண்டது.
கொரோனா வைரஸ் தற்போது 80,000க்கும் அதிகமானவர்களுக்கு தொற்றி இருப்பதோடு சுமார் 2,800 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து சீனாவிலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் குறித்து இன்றும் முழுமையான தெளிவு கிடைக்காதபோதும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமான சீனா ஒரு மாதத்திற்கு மேலாக முடக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
இந்த வைரஸ் மாறுபட்ட இடங்களுக்கு பரவியுள்ளது. குறிப்பாக இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரிய நாடுகளில் நிலைமை மோசமடைந்துள்ளது. அண்மைய தினங்களில் இது ஒரு உலகளாவிய தொற்றுநோயாக உருவெடுக்கும் ஆபத்து அதிகரித்திருக்கும் நிலையில் உசார் நிலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு வெளியில் 3,246 வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 51 பேர் உயிரிழந்திருப்பதாக ரோய்ட்டர் செய்தி நிறுவனத்தின் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
டென்மார்க்கில் முதல் முறை வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. இத்தாலியில் இருந்து வந்த ஒருவரிடமே வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. ஈரானில் இருந்து திரும்பிய ஒருவரிடம் இருந்து எஸ்தோனிய நாட்டிலும் முதல் முறை கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.
லத்தீன் அமெரிக்காவில் முதல் நாடாக பிரேசிலில் வைரஸ் தொற்று சம்பவம் கடந்த புதன்கிழமை உறுதியானது. பாகிஸ்தான், ருமேனியா மற்றும் அல்ஜீரியா உட்பட மேலும் பல நாடுகளிலும் முதல் முறை புதிய கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் நேற்று புதிதாக வைரஸ் தொற்றிய 433 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய தினத்தில் 406 வைரஸ் தொற்றியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தனர்.
எனினும் சீனாவில், இதுவரை இல்லாத வகையில் கொவிட்–19 வைரஸ் தொற்றுக்குப் பலியானோரின் எண்ணிக்கை ஆகக் குறைவாகப் பதிவாகியுள்ளது.
அண்மை நிலவரப்படி வைரஸ் தொற்றால் மேலும் 29 பேர் உயிரிழந்தனர். அவர்களையும் சேர்த்து சீன பெருநிலத்தில் மாண்டோர் எண்ணிக்கை மொத்தம் 2,744 உயர்ந்துள்ளது.
தென் கொரியாவில் புதிதாக 334 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் சீனாவுக்கு வெளியில் அதிகப்படியாக தென் கொரியாவில் மொத்தம் 1,595 பேருக்கு வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.
தென் கொரியாவில் இருக்கும் அமெரிக்க இராணுவ வீரர் ஒருவருக்கு வைரஸ் தொற்றியிருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து தென் கொரியாவுக்கான புதிய பயண எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது. தென் கொரிய நகரான டெகுவுக்கு அருகில் நிலைகொண்டிருந்த 23 வயது வீரர் ஒருவருக்கு வைரஸ் தொற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென் கொரிய இராணுவ வீரர்கள் பலருக்கு வைரஸ் தொற்றி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையிலேயே அடுத்த அறிவித்தல் வரை அமெரிக்க மற்றும் தென் கொரிய கூட்டு இராணுவ பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பயணத் தடைகள், பயணங்கள் ரத்து செய்யப்படுவது மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த வைரஸ் சர்வதேச விமானப் போக்குவரத்துகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோல் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸுக்கு இடையிலான விமானப் பயணத்தில் பணியாற்றும் விமான ஊழியர் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது பயணிகளிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய கொரோனா வைரஸ் பரவல் உலக அளவில் துரிதமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவுக்கு வெளியே உலகளவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் முதன் முறையாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
இதுவரை 40க்கும் மேற்பட்ட நாடுகளில் கொவிட்–19 வைரஸ் பரவியுள்ளது. அதை முன்னிட்டு, உலக நாடுகள் அனைத்தும் நிலைமையைச் சமாளிக்க ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ வலியுறுத்தினார்.
இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது. ஐரோப்பாவில் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தொற்று 25 வீதம் உயிர்ந்துள்ளது. இதுவரை இத்தாலியில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொழில் வளம் அதிகம் உள்ள இத்தாலியின் வடக்கு பகுதிகளில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் மோசமாக உள்ளது. மிலான் மற்றும் வெனிஸ் அருகே உள்ளே வெனிட்டா ஆகிய பகுதிகளில் இந்த வைரஸ் பாதிப்பு கடுமையாக உள்ளது.
இதனை ஒட்டி பல ஐரோப்பிய நாடுகளிலும் புதிதாக வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மத்திய கிழக்கில் வைரஸ் தொற்றின் மையப்புள்ளியாக மாறியிருக்கும் ஈரான் நாட்டில் இதுவரை 26 பேர் உயிரிழந்து 141 பேருக்கு தொற்று பதியாவிகியுள்ளது. எனினும் நகரங்களை தனிமைப்படுத்தும் எந்தத் திட்டமும் இல்லை என்று ஈரான் அரசு புதன்கிழமை குறிப்பிட்டிருந்தது.
வைரஸ் பாதிப்பின் மையமாக இருக்கும் குவாம் நகருக்கு செல்ல வேண்டாம் என்று மக்கள் அறிவுறுத்தப்பட்டபோதும் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான ஷியா முஸ்லிம்கள் வருகை தரும் அந்த நகரில் உள்ள மதத்தலம் மூடப்படவில்லை.
இதேவேளை ஜப்பானின் ஒசாக்கா பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு இரண்டாவது முறையாக கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் அவ்வாறு பாதிக்கப்பட்ட முதல் நபர் அவராவர்.
கடந்த மாதம் கடைசியில் அவருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. சிகிச்சையில் குணமாகி இம்மாதம் அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை அந்தப் பெண் தொண்டை அழற்சி, நெஞ்சு வலி ஆகியவற்றால் சிரமப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது.
ஜப்பானில் இதுவரை 186 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் அச்சம் காரணமாக ஜப்பானில் தேசிய அளவில் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
“எல்லாவற்றையும் விட சிறுவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பையே அரசு கருத்தில்கொள்கிறது” என்று ஜப்பான் பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 












மலேசியாவின் புதிய பிரதமராக முஹ்யித்தீன் யாசின் பதவியேற்பு



மலேசியாவின் புதிய பிரதமராக முஹ்யித்தீன் யாசின் நேற்று பதியேற்றபோதும் பாராளுமன்றத்தில் தமக்கே பெரும்பான்மை இருப்பதாக முன்னாள் பிரதமர் மஹதிர் மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.
“என்னிடமே பெரும்பான்மை இருப்பதை பொதுமக்களிடம் நான் கூறிக்கொள்கிறேன். என்னிடம் 114 இடங்கள் உள்ளன” என்று மஹதிர் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்துள்ளார். தமது பெரும்பான்மையை நிரூபிக்க பாராளுமன்றத்தை அவசரமாகக் கூட்டும்படியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய பகதான் ஹரபான் கூட்டணியின் பிரதமராக மஹதிர் பதவி வகித்தபோதும் அந்த கூட்டணியின் பிளவுபட்ட குழு ஒன்று தனித்து ஆட்சி அமைக்க முயற்சித்த நிலையில் அவர் தனது பதவியை கடந்த வாரம் இராஜினாமா செய்தார்.
இந்த அரசியல் இழுபறியை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் மலேசிய மன்னர் ஈடுபட்டிருந்த நிலையில் 72 வயதான முஹ்யித்தீனை புதிய பிரதமரான அரச மாளிகை கடந்த சனிக்கிழமை அறிவித்தது.
இந்நிலையில் எதிர்க்கட்சியான ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு, பீ.ஏ.எஸ் மற்றும் மலேசிய இஸ்லாமிய கட்சி ஆகியவற்றைக் கொண்ட கூட்டணியின் அரசொன்றை அமைக்கும் முயற்சியாகவே அவர் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.
தமது பகதான் ஹரப்பான் கூட்டணி அரசில் உள்நாட்டு விவகார அமைச்சராக இருந்த முஹ்யித்தீன் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக மஹதிர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் மலேசிய அரசியலில் தொடர்ந்தும் ஸ்திரமற்ற சூழல் நீடிப்பதாக அவதானிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் 94 வயதான மஹதிர் மொஹமட் மற்றும் தமது நீண்டகால அரசியல் போட்டியாளரான அன்வர் இப்ராஹிம் இருவருக்கும் இடையிலான பிரதமர் பதவிக்கான இழுபறியே கூட்டணி அரசுக்குள் பிளவு ஏற்படக் காரணமாக இருந்தது.
இந்நிலையில் இந்த இருவரும் இணைந்து மேற்கொண்ட முஹ்யித்தீன் பிரதமராவதை தடுக்கும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.   நன்றி தினகரன் 












வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை



வட கொரியா இரண்டு ஏவுகணைகளை வீசி சோதித்திருப்பதாக தென் கொரிய இராணுவம் நேற்று அறிவித்துள்ளது.
அடையாளம் காணப்படாத இந்த ஏவுகணைகள் கிழக்குக் கடற்கரையில் வொன்சான் பகுதியில் இருந்து ஜப்பான் கடலை நோக்கி நேற்று வீசப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணைகள் 35 கிலோமீற்றர் உயர்ந்து 240 கிலோமீற்றர் தூரம் சென்றதாக தென் கொரிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
18 மாதங்கள் ஸ்தம்பித்திருந்த நிலையில் கடந்த மே மாதத்தில் முதல் முறை வட கொரியா ஏவுகணை சோதனை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து பல சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
வட கொரியாவின் கோபத்தை தூண்டும் தென் கொரியா மற்றும் அமெரிக்கா இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சி கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு ஒருசில திறன்களிலேயே இந்த ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவும், வட கொரியாவும் பேச்சு வார்த்தையில் ஈட்டுப்பட்டிருந்தது. கிம் ஜொங் உன்னும், டொனால்ட் டிரம்பும் 2018 இல் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். ஆனால், இந்த பேச்சு வார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நன்றி தினகரன் 












இஸ்ரேல் பொதுத் தேர்தலில் பிரதமர் நெதன்யாகு வெற்றி



இஸ்ரேல் பொதுத் தேர்தலில் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார். அடுத்த அரசை அமைப்பதில் அவர் வலுவான நிலையில் இருப்பதாக ஆரம்பக்கட்ட தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.  
கடந்த ஏப்ரல் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் நடைபெற்ற தேர்தல்களில் எவருக்கும் ஆட்சி அமைக்க போதுமான பெரும்பான்மை இல்லாத நிலையில் ஓர் ஆண்டுக்குள் மூன்றாவது தேர்தலாகவே கடந்த திங்கட்கிழமை இந்தத் தேர்தல் நடைபெற்றது.  
இந்நிலையில் நேற்று காலையாகும்போது மத்திய தேர்தல் குழுவினால் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் 120 இடங்கள் கொண்ட பாராளுமன்றத்தில் நெதன்யாகுவின் வலதுசாரி லிகுட் கட்சி 36 மற்றும் 37 இடங்களை பெற்றிருப்பதாக ஆரம்பக் கட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி நெதன்யாகுவின் தலைமையின் கீழ் அந்தக் கட்சி பெற்ற சிறந்த பெறுபேறாக இது பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் 1996–1999 ஆம் ஆண்டுவரை பிரதமராக இருந்த நெதன்யாகு, 2009 தொடக்கம் மீண்டும் பிரதமராக செயற்பட்டு வருகிறார்.  
லிகுட் மற்றும் அதன் வலது சாரி கூட்டணி மொத்தம் 59 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் அந்தக் கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கு தேவைப்படும் பெரும்பான்மைக்கு இரண்டு ஆசனங்களே குறைவாக உள்ளது.  
லிகுட் கட்சியின் பிரதான போட்டியாளரான மையவாத நீலம் மற்றும் வெள்ளை கட்சி 32 மற்றும் 34 ஆசனங்களை வென்றுள்ளது.  
அதன் மைய இதுசாரி கூட்டணி அதேபோன்று அரபுக் கூட்டணி, நெதன்யாகு எதிர்ப்பு முகாமை ஒன்றிணைத்து பாராளுமன்றத்தில் 54 தொடக்கம் 55 இடங்கள் பதிவாகியுள்ளன.  
நெதன்யாகு இன்னும் போதிய பெரும்பான்மையை பெறாத நிலையிலும் பெரும் வெற்றி என்று இந்த தேர்தல் முடிவை அறிவித்துள்ளார். “எனது வாழ்வில் இது முக்கியமான வெற்றி” என்று அவர் டெல் அவிவில் தமது ஆதரவாளர்கள் முன் தெரிவித்துள்ளார். நெதன்யாகு தன் மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு முகம்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  
“இஸ்ரேல் தேர்தலில் குடியேற்றம், ஆக்கிரமிப்பு மற்றும் பாகுபாடு வெற்றிபெற்றுள்ளது” என்று பலஸ்தீன விடுதலை அமைப்பின் செயலாளர் நாயகம் சயெப் எரகத் இந்த வெற்றி பற்றி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.  
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் யூதக் குடியேற்றங்கள் மற்றும் ஜோர்தான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணைப்பதாக நெதன்யாகு தனது தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்திருந்தார்.      நன்றி தினகரன் 









No comments: