உலகச் செய்திகள்


இந்தியாவின் குடியுரிமை திருத்த சட்டம்- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜேர்மன் மாணவன் வெளியேற்றப்பட்டார்.

பத்திரிகையாளர் கசோகி கொலை விவகாரம் : ஐந்து பேருக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பு

100 பேருடன் பயணித்த விமானம் கட்டிடம் மீது மோதி விபத்து!

பிலிப்பைன்ஸில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நிலைக்குலைத்த சூறாவளி: 16 பேர் பலி 

பட்டமளிப்பு விழாவில் இந்தியாவின் புதியசட்டத்தினை கிழித்தெறிந்த மாணவி

ட்ரம்­பிற்கு 2020 இல் மூளையில் கட்டி ஏற்­பட்டு உயி­ருக்­காகப் போராடும் நிலை ஏற்­படும்: கண்­பார்­வை­யற்ற தீர்க்­க­த­ரி­சி­யின் எதிர்­வு­கூறல்

நீங்கள் இங்கு வாழவிரும்பாவிட்டால் பாக்கிஸ்தான் செல்லுங்கள் - உத்தரபிரதேசத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை மிரட்டிய காவல்துறை அதிகாரி

வட தாய்லாந்தில் 12 சிறுவர்களை குகையில் இருந்து மீட்ட சுழியோடி உயிரிழப்பு!

ஓமான் வளைகுடாவில் சீனா ரஸ்யா ஈரான் கடற்படையினர் கூட்டு ஒத்திகை- அமெரிக்காவிற்கு செய்தி?

'பிரபலமான பதின்ம பருவ நபர் மலாலா': ஐ.நா அறிவிப்பு



இந்தியாவின் குடியுரிமை திருத்த சட்டம்- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜேர்மன் மாணவன் வெளியேற்றப்பட்டார்.

25/12/2019  இந்தியாவின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜேர்மனியை சேர்ந்த மாணவனை இந்திய அதிகாரிகள் நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.
ஜகோப் லிடென்தால் என்ற மாணவனே இவ்வாறு இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளான்.
சென்னை ஐஐடியில் கல்வி கற்ற ஜேர்மனியை சேர்ந்த மாணவனே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளான்.
குடிவரவு துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் லின்டென்தால் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார் என ஐஐடியின் சர்வதேச கற்கைகளிற்கான பீடாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜேர்மனி மாணவன் குடியுரிமை திருத்த சட்டங்களிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதை காண்பிக்கும் படங்கள் செய்தித்தாள்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியானதை தொடர்ந்தே அவர் வெளியேற்றப்பட்டுள்ளார் என பீடாதிபதி தெரிவித்துள்ளார்.
1935 முதல் 45 வரை நாங்களும் இதனை அனுபவித்தோம்,என்ற பதாகையுடன் அவர் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை தான் பங்குபற்றிய ஆர்ப்பாட்டங்கள் சட்டவிரோதமானவை என்பது குறித்தோ தான் மாணவர் விசா குறித்த சட்டங்களை மீறினார்  என்பது குறித்தோ தான் அறிந்திருக்கவில்லை என அந்த மாணவன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குடிவரவு அதிகாரிகள் நான் அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோனா என கேட்டனர் நான் உண்மையை தெரிவித்தேன்,அதன் பின்னர் ஒரு சில நிமிடங்களில் நான் இந்தியாவை விட்டு வெளியேறவேண்டும் என பெண் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என அவர் டெக்கான் ஹெரால்டிற்கு தெரிவித்துள்ளார்.
அவர் நாஜி காலத்தில் நடந்தவைகளை இந்தியாவில் தற்போது நடப்பவைகளை ஓப்பிட்டமையே அவர் வெளியேற்றப்பட்டமைக்கான காரணமாகயிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  நன்றி வீரகேசரி 









பத்திரிகையாளர் கசோகி கொலை விவகாரம் : ஐந்து பேருக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பு

23/12/2019  பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையுடன் தொடர்புடைய ஐந்து பேருக்கு சவூதி அரேபியா நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி துருக்கியின்  இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதிஅரேபிய தூதரகத்திற்கு சென்ற அவர் மர்மமாக கொலை  செய்யப்பட்டார்.
சவூதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோகி  துருக்கியில் உள்ள தூதரகத்திற்குள் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட நிலையில் அதற்கான பல ஆதாரங்கள் சிக்கின.
அந்நாட்டு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் 11 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேருக்கு சவூதி அரேபிய நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.  நன்றி வீரகேசரி 










100 பேருடன் பயணித்த விமானம் கட்டிடம் மீது மோதி விபத்து!

27/12/2019  கசகஸ்தானில் 100 பேருடன் பயணித்த விமானம் ஒன்று கட்டிடம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கசகஸ்தானின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டிக்கு அருகிலிருந்து தலைநகர் நூர் சுல்தானுக்கு புறப்பட்ட 'The Bek Air' என்ற விமானமே சிறுது நேரத்தில் (அந் நாட்டு நேரப்படி இன்று காலை 7.22) இவ்வாறு இரண்டு மாடிக் கட்டிடம் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது விமானத்தில் 95 பயணிகள், 5 விமான ஊழியர்கள் உட்பட 100 பேர் இருந்துள்ளனர்.
இந்த விபத்துக் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அனேகமானோர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  நன்றி வீரகேசரி 











பிலிப்பைன்ஸில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நிலைக்குலைத்த சூறாவளி: 16 பேர் பலி 

26/12/2019  கிறிஸ்துமஸ் தினத்தன்று மத்திய பிலிப்பைன்ஸை தாக்கிய பான்போன்  சூறாவளியால் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட 16 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன்  10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 
ஒரு மணி நேரத்திற்கு 195 கிலோமீட்டர்  வேகத்தில்  தாக்கிய  பான்போன்  சூறாவளி  பிலிப்பைன்ஸின் போன்பே, கொரோன்  ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய தொலைதூர கிராமங்கள், பிரபலமான சுற்றுலாத்தலங்கள் மற்றும் கரையோர பகுதிகளை தாக்கியுள்ளது.
இதன் காரணமாக பிலிப்பைன்ஸின் சில பகுதிகளில் இணையம் மற்றும் மின்சாரம்  துட்டிக்கப்பட்டதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 
சேதம் குறித்து முழுவிபரம் அறிவிக்கப்படாத நிலையில், விசயாஸில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாக பிலிப்பைன்ஸின் அனர்த்த நிறுவன அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
கலிபோவில் உள்ள விமான நிலையம் பாரிய சேதத்துக்குள்ளான நிலையில்,  விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விமான நிலையத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. 
குறித்தப்புயல் காரணமாக பிலிப்பைன்ஸ் மக்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியும் இன்னும் பலர் படகுகள் மற்றும் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டதன் காரணமாக தங்கள் வீடுகளுக்கு  திரும்ப முடியாமலும் அவதியுற்றுள்ளனர். 
இதே போன்று  2013 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளியால் 7,300 க்கும் மேற்பட்டவர்கள்  பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
நன்றி வீரகேசரி













பட்டமளிப்பு விழாவில் இந்தியாவின் புதியசட்டத்தினை கிழித்தெறிந்த மாணவி

மேற்குவங்காளத்தின்    கல்லூரியொன்றின் பட்டமளிப்பு விழாவில் மாணவியொருவர் குடியுரிமை திருத்த சட்டத்தின் நகல்வடிவை கிழிந்து எறிந்து  தனது சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேற்கு வங்காளத்தின்  ஜாதவ்பூர் பல்கலைகழகத்தை சேர்ந்த டெபொஸ்மிட்டா சௌத்திரி என்ற மாணவியே இவ்வாறு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
வேந்தர் துணைவேந்தர் பதிவாளர் மத்தியில் குடியுரிமை சட்டத்தின் நகலை கிழித்து எறிந்துள்ள மாணவி  தனது எதிர்ப்பை வெளிப்படுத்தவே இவ்வாறு செய்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்டம் இந்த நாட்டின் உண்மையான பிரஜைகள் தங்களை நிருபிக்கவேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது என அவர்குறிப்பிட்டுள்ளார்.
நான் பல்கலைகழகத்தை அவமதிக்கவில்லை புதியசட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இதனை செய்தேன் என குறிப்பிட்டுள்ள அவர் இன்குலாப் ஜிந்தாபாத் எனவும் முழக்கமிட்டுள்ளார்.

நன்றி வீரகேசரி














ட்ரம்­பிற்கு 2020 இல் மூளையில் கட்டி ஏற்­பட்டு உயி­ருக்­காகப் போராடும் நிலை ஏற்­படும்: கண்­பார்­வை­யற்ற தீர்க்­க­த­ரி­சி­யின் எதிர்­வு­கூறல்

26/12/2019  எதிர்­வரும் 2020ஆம் ஆண்டில்   அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட ட்ரம்ப் செவிட்டுத் தன்மை மற்றும் உயி­ரா­பத்­தான நோய் என்­ப­னவற்றால் துன்­பப்­படும் அதே­ச­மயம்  ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்­டி­னுக்கு ஒரு படு­கொலை முயற்­சியை தடுக்க வேண்­டி­யி­ருக்கும் என எதிர்­காலம் குறித்து கணித்துக் கூறு­வதில் வல்­ல­மையைக் கொண்ட பல்­கே­ரி­யாவைச் சேர்ந்த கண்­பார்­வை­யற்ற  தீர்க்­க­த­ரி­சி­யான பாபா வக்னா  எதிர்­வு­கூறி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
அமெ­ரிக்க இரட்டைக் கோபு­ரங்கள் மீது நடத்­தப்­பட்ட  செப்­டெம்பர் 11 ஆம் திகதி தாக்­கு­தலை சரி­யாக கணித்துக் கூறி­ய­வ­ராக கரு­தப்­படும் பாபா வக்னா, ஐரோப்­பா­வா­னது எதிர்­வரும் ஆண்டில்  முஸ்லிம் தீவி­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்­தான இர­சா­யனத் தாக்­கு­த­லொன்றை எதிர்­கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்­டி­யுள்­ள­தாகக் குறிப்­பிட்­டுள்ளார். 
கண்­பார்­வை­யற்ற பாபா வக்னா 1996 ஆம் ஆண்டு தனது 85 ஆவது வயதில் மர­ண­மா­கி­யி­ருந்த போதும் அவரால்  எதிர்­வரும் 5079 ஆம் ஆண்டுவரை  நிகழ­வுள்ள முக்­கிய சம்­ப­வங்கள் குறித்து எதிர்­வு­கூ­றப்­பட்­டுள்­ள­தாக  கூறப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் அவரால் எதிர்­வரும் வருடம் தொடர்பில் எதிர்­வு­கூ­றப்­பட்­ட­வைகள் அமெ­ரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்­பா­வுக்கு கவலை தரு­வ­ன­வாக உள்­ளன.


2020ஆம் ஆண்டில் ட்ரம்பின் மூளையில் கட்டி ஏற்­பட்டு அவ­ரது காது செவி­டா­வ­துடன் அவர் அந்த நோய்ப் பாதிப்பால் இறக்க நேரி­டலாம் என  பாபா வக்னா எதிர்­வு­ கூ­றி­யுள்­ள­தாக அவ­ரது எதிர்­வு­கூ­றல்­களை பர­ிசீ­ல­னைக்­குட்­ப­டுத்­தி­ய­வர்கள் கூறு­கின்­றனர்.
அத்­துடன்  எதிர்­வரும் ஆண்டில் முஸ்லிம் தீவி­ர­வாத படை­யொன்று இர­சா­யன ஆயு­தத்­துடன் ஐரோப்­பா­வுக்குள் ஊடு­ருவும் என  பாபா வக்னா எதிர்­வு ­கூ­றி­யுள்ளார். 
 அதேசமயம் விளா­டிமிர் புட்­டினை ரஷ்­யாவில் வைத்துப் படு­கொலை செய்­வ­தற்கு    முயற்­சி­யொன்று மேற்­கொள்­ளப்­படும் எனத் தெரி­வித்­துள்ள பாபா வக்னா, அந்தப் படு­கொலை முயற்­சியில் புட்டின் உயிர் பிழைப்­பாரா இல்­லையா என்­பது தொடர்பில் எத­னையும் குறிப்­பிட்டுக் கூற­வில்லை.
ஆனால் இந்த 2019ஆம் ஆண்டு தொடர்பில் கடந்த ஆண்டில்  எதிர்வு கூறப்­பட்­ட­வையும் மேற்­படி எதிர்­வு­கூ­றலை ஒத்­த­ன­வா­க­வுள்ள நிலையில் அவ்­வா­றான அசம்­பா­வி­தங்கள் எதுவும்  இந்த ஆண்டில் இடம்­பெ­ற­வில்லை என்­பது டொனால்ட் ட்ரம்­பிற்கும் புட்­டி­னுக்கும் ஆறு­த­ல­ளிப்­ப­தாக உள்­ள­தாக  தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
பாபா வக்னா தனது 12 ஆவது வயதில் பாரிய புயல் தாக்­க­மொன்றின்போது மர்­ம­மான முறையில் தன் கண் பார்­வையை இழந்­தி­ருந்தார்.  புயலில் சிக்கி காணா­மல்­போன அவரை பல நாட்கள் கழித்து அழுக்கால் கண்கள் மூடப்­பட்டு மர­ணத்தின் விளிம்பில் இருந்த நிலையில்  அவ­ரது குடும்­பத்­தினர் கண்­டு­பி­டித்து மீட்­டனர். அதன் பின்­னரே அவ­ருக்கு எதிர்­காலம் தொடர்பில் எதிர்வு கூறும் ஆற்­றலும் மற்­ற­வர்­களைக் குணப்­ப­டுத்தும் வல்­ல­மையும் கிடைக்­கப்­பெற்­ற­தாக கூறப்­ப­டு­கி­றது.
 2028ஆம் ஆண்­டுக்குள் உலகம் பட்­டி­னியால் முடி­வுக்கு வரும், 2256 ஆம் ஆண்­டுக்குள்  செவ்­வாய்க்­கி­ர­கத்­தி­லான கால­னித்­துவ குடி­யேற்­றங்கள் அணு ஆயு­தங்­களைப் பெற்றுக்கொள்ளும், 2341 ஆம் ஆண்­டுக்குள் உலகம் உயிர் வாழ்க்­கை­க்கு உகந்­த­தற்ற கோளாக மாறும் எனவும்  பாபா வக்னா எதிர்­வு­ கூ­றி­யுள்ளார்.
அதே­ச­மயம் பாபா வக்­னாவால் கூறப்­பட்ட எதிர்­வு­ கூ­றல்­க­ளுக்கு ஆதாரம் எதுவும் இல்லை எனவும் அவை ரஷ்ய சமூக வலைத்­த­ளங்கள் மூலம் பரப்­பப்­பட்ட வதந்­தி­க­ளாக இருக்­கலாம் என நிபு­ணர்கள்  தெரி­விக்­கின்­றனர். 
அமெ­ரிக்­காவின் இறுதி ஜனா­தி­ப­தி­யாக  பராக் ஒபாமா இருப்பார் என்ற பாபா வக்­னாவின் எதிர்­வு­கூ­றலை 2017 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம்  டொனால்ட் ட்ரம்ப்  ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்று பொய்­யாக்­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.  நன்றி வீரகேசரி 













நீங்கள் இங்கு வாழவிரும்பாவிட்டால் பாக்கிஸ்தான் செல்லுங்கள் - உத்தரபிரதேசத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை மிரட்டிய காவல்துறை அதிகாரி

28/12/2019   இந்தியாவின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை  நீங்கள் பாக்கிஸ்தான் செல்லுங்கள் என இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் மீரட்டை சேர்ந்த காவல்துறை அதிகாரியொருவர் அச்சுறுத்துவதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போதே காவல்துறை அதிகாரி ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
என்டிரீவி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.மீரூட் காவல்துறையின் முக்கிய அதிகாரியான அகிலேஸ் நாரணயன் சிங் என்பவரே இவ்வாறு தெரிவிப்பதை வீடியோ காண்பித்துள்ளது.
குறிப்பிட்ட காவல்துறை அதிகாரி குறுகிய பகுதிஊடாக செல்வதையும் அங்கு சில முஸ்லீமமக்கள்  காணப்படுவதையும் குறிப்பிட்ட அதிகாரி அவர்களுடன்உரையாடுவதையும் அதற்கு நாங்கள் தொழுகையில் ஈடுபட்டிருக்கின்றோம் என அவர்கள்  தெரிவிப்பதையும்காணமுடிகின்றது.
இதற்கு அந்தஅதிகாரி நீங்கள் நீல கறுப்பு நிற பதக்கம் போன்றவற்றை  நீங்கள் அணிந்திருக்கின்றீர்கள் என தெரிவிப்பதுடன் அவர்களை பாக்கிஸ்தானிற்கு போகுமாறு சொல்லுங்கள் என குறிப்பிடுகின்றார்.
நீங்கள் இங்கு வாழவிரும்பாவிட்டால் பாக்கிஸ்தான் செல்லுங்கள் நீங்கள் இங்கு வந்து வேறு எதனையோ போற்றி பாடுகின்றீர்கள் எனவும்அந்த அதிகாரி தெரிவிக்கின்றார்.
இதன் பின்னர் முன்னோக்கி செல்லும் அவர் ஆனால் சீற்றத்துடன் திரும்பி வந்து அந்த முஸ்லீம் இளைஞர்களிடம் நான் இந்த வீடுகளில் உள்ள அனைவரையும் சிறையில் போடுவேன் என தெரிவிக்கின்றார்.

நான் அனைவரையும் அழித்துவிடுவேன் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.   நன்றி வீரகேசரி 











வட தாய்லாந்தில் 12 சிறுவர்களை குகையில் இருந்து மீட்ட சுழியோடி உயிரிழப்பு!

28/12/2019  வட தாய்லந்தில் கடந்த ஆண்டு குகையில் 12 இளம் காற்பந்தாட்ட வீரர்களையும் அவர்களின் பயிற்றுவிப்பாளரையும் காப்பாற்றிய மீட்புபணியைச் சேர்ந்த கடற்படை வீரர் இரத்தத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
உலகின் கவனத்தை ஈர்த்த அந்த மீட்பு பணியின்போது அவருக்கு அந்த தொற்று ஏற்பட்டதாகவும் அதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தாய்லந்தின் கடற்படை நேற்று தெரிவித்தது.
கடந்த ஆண்டு ஜூன் 23 ஆம் திகதி, 12 சிறுவர்களும் அவர்களின் பயிற்றுவிப்பாளரும் வெள்ளம் சூழ்ந்த குகையில் சிக்கிக்கொண்டனர்.
அவர்களைக் காப்பாற்ற புகழ்பெற்ற சுழியோடிகளுகம் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சவாலான மீட்புப் பணியில், குகையில் சிக்கிய அனைவரும் உயிருடன் பின்னர் மீட்கப்பட்டனர்.
மீட்புப் பணியின்போது சுழியோடிகளில் ஒருவரான ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி சமான் குணான் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையி அவர் உயிரிழந்துள்ளமை அணைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 











ஓமான் வளைகுடாவில் சீனா ரஸ்யா ஈரான் கடற்படையினர் கூட்டு ஒத்திகை- அமெரிக்காவிற்கு செய்தி?

27/12/2019  சீனா ரஸ்யா ஈரான் ஆகிய மூன்று நாடுகளும் தங்கள் கடல்வலிமையை வெளிப்படுத்துவதற்கான கூட்டு ஒத்திகையை இன்று ஆரம்பிக்கவுள்ளன.
ஓமான் வளைகுடாவில் இந்த ஒத்திகை ஆரம்பமாகவுள்ளது.
டிசம்பர் 27 ம் திகதி முதல் 30 திகதி வரை இடம்பெறவுள்ள இந்த கூட்டு ஒத்திகை மூன்று நாடுகளின் கடற்படையினர் மத்தியிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டது என சீனா தெரிவித்துள்ளது.
சீனா இந்த ஒத்திகையில் தனது  கப்பல்களை தாக்ககூடிய தரை தாக்குதல்களிற்கு பயன்படக்கூடிய குறூஸ் ஏவுகணைகளை இந்த கூட்டு ஒத்திகையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் இந்த ஏவுகணைகளிற்கு பாதுகாப்பாக ஏவுகணை அழிப்பு நாசகாரியை அனுப்பவுள்ளதாகவும்தெரிவித்துள்ளது.
எனினும் எத்தனை கப்பல்கள் மற்றும் படையினர் ஒத்திகையில் ஈடுபடுத்துவது குறித்த விபரங்களை சீனா வெளியிடவில்லை.
இந்த ஒத்திகை வழமையானது,சர்வதேச சட்டங்கள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றிமுன்னெடுக்கப்படுகின்றது என சீனா தெரிவித்துள்ளது.
இந்த ஒத்திகை பிராந்திய நிலைமையுடன் தொடர்புபட்டதல்ல எனவும் சீனா தெரிவித்துள்ளது.
ஈரானுடனான அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளதால் பதட்டம் நிலவும் சூழ்நிலையிலேயே இந்த கூட்டு ஒத்திகை இடம்பெறுகின்றது.
யூன் மாதம் இரு எண்ணெய்கப்பல்கள் இனந்தெரியாதவர்களின் தாக்குதலால் சேதமடைந்ததை தொடர்ந்து ஓமான் வளைகுடா பதட்டம்மிகுந்த பகுதியாககாணப்படுகின்ற நிலையிலேயே இந்த ஒத்திகைகள் ஆரம்பமாகவுள்ளன.
இந்த தாக்குதல்களிற்கு அமெரிக்கா ஈரான் மீது குற்றம்சாட்டியிருந்தது , இதன் பின்னர் பிரிட்டனில் பதிவு செய்யபபட்டஇரு எண்ணெய்கப்பல்களை ஈரான் அந்த பகுதியில் தடுத்து கைப்பற்றியிருந்தது.
ஹார்முஸ் ஜலசந்தியுடன் இணையும் ஓமான் வளைகுடாவின் ஊடாகவே கடல்வழியாக எடுத்து செல்லப்படும் கச்சா எண்ணெயின் 30 சதவீதம் கொண்டு செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த கூட்டு ஒத்திகையை  அமெரிக்காவும் ஜனாதிபதி டிரம்பும்  சீற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக கருதலாம் என சிஎன்என் தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி 












'பிரபலமான பதின்ம பருவ நபர் மலாலா': ஐ.நா அறிவிப்பு


27/12/2019  கடந்த பத்தாண்டுகளில் பதின்ம வயதில் உலகப் புகழ்பெற்றவர் (most famous teenager) என்ற பட்டத்தை பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா மலாலா யூசுப்சாயை தேர்வு செய்து ஐக்கிய நாடுகள் சபை வழங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை “பத்தாண்டு கால மதிப்பீடு” (Decade in Review) என்ற பெயரில் கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகளாக, ஹைதி நிலநடுக்கம்(2010), சிரிய உள்நாட்டுப்போர் துவக்கம் (2011), பெண்களின் கல்விக்கு ஆதரவாக மலாலாவின் பணிகள் (2012), எபோலா வைரஸ் தாக்குதல் (2014), காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது (2015) ஆகியவற்றை ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.
மலாலா பற்றி குறிப்பிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை '2012 இல் பெண்களின் கல்வியில் மும்முரம் காட்டிய மலாலா யூசுப்சாயை தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கி குண்டுகளால் துளைத்தனர். அவர் மீதான தாக்குதல் உலகை உலுக்கியது. மலாலா நலம் பெற உலகெங்கும் பிரார்த்தனைகள் நடந்தன. யுனெஸ்கோவின் பாரிஸ் தலைமையகத்திலும் அவருக்கு பிரார்த்தனை நடந்தது. அவர் உயிர்பிழைத்து மீண்டு வந்து, பெண் கல்வி மீதான தனது செயலில் வேகமெடுத்தார்.
2014 இல் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அமைதிக்கான தூதரானார். அவரது அயராத உழைப்பு, கடந்த 10 ஆண்டுகளில், உலகின் மிகவும் பிரபலமான பதின்ம பருவ நபராக அவரை உருவாக்கி உள்ளது.' என கூறியுள்ளது.  நன்றி வீரகேசரி 









No comments: