இரண்டாயிரத்து இருபதை இன்முகமாய் வரவோற்போம் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் ... அவுஸ்திரேலியா


இரண்டாயிரத்து பத்தொன்பது எமைவிட்டு செல்கிறது
இரண்டாயிரத்து இருபது எம்மிடத்து வருகிறது
பட்டவெங்கள் துயரனைத்தும் பறந்தோடிப் போகவென்று

இஷ்டமாய் இறைவனிடம் எல்லோரும் வேண்டிடுவோம்

இனமோதல் மதமோதல் இல்லாமல் போகவென்று
எல்லோரும் மனமார இறைவனிடம் இறைஞ்சிடுவோம்
பணமுள்ளார் மனமெல்லாம் பசித்தவரை பார்ப்பதற்கு
படைத்தவனே உதவிடென பக்குவமாய் வேண்டிடுவோம்

சதைவெறியால் அலைகின்ற சண்டாளர் திருந்துதற்கு
உதவுகின்ற வழிவகையை  உயர்சட்ட  மாக்கிடுவோம்
தெருவழியே மதுவரக்கன் திரிகின்ற நிலையதனை
உருதெரியா தாக்குதற்கு ஒன்றிணைவோம் வாருங்கள்


அரக்ககுண முள்ளார்கள் அரசுகட்டில் ஏறாமல்
ஆக்குகின்ற விழிப்புணர்வை அனைவருமே பெற்றிடுவோம்
அறவாட்சி செய்திடுவார் எனவெண்ணும் ஆளுமையை
ஆராய்ந்து ஆராய்ந்து அரசுகட்டில் அமர்த்திடுவோம்

பொய்முகத்தைக் காட்டிடுதல் போலிவேசம் போட்டிடுதல்
நல்லதல்ல என்பதனை நாமுணர்தல் நலம்பயக்கும்
வல்லவராய் இருந்தாலும் நல்லவராய் இருந்திடலே
வாழ்வாங்கு வாழ்வதற்கு வழியாகும் எனமுணர்வோம்

பெற்றவரைப் பேணிடுவோம்  பெரியவரை மதித்திடுவோம்
கற்றபடி நடந்திடுவோம்  கசடதனை களைந்தெறிவோம்
சென்ற வருடத்தை சிந்தையின்று அகற்றிவிட்டு
இந்த வருடத்தை இன்முகமாய் வரவோற்போம்

சமயமெனும் சன்மார்க்க நெறியதனை பாழ்படுத்தும்
சதிகாரக் கும்பலினை தானொதுக்கி வைத்திடுவோம்
மனமதனில் நல்லெண்ணம் தோன்றுதற்கு வழிகாட்டும்
தலைசிறந்த பெரியோரை தானணுகி இருந்திடுவோம்


மணம்பரப்பும் மலராக மலரட்டும் புதுவருடம்
மாசெல்லாம் மனமகன்று மருளகன்று ஓடட்டும்
துணிவு மனமேறட்டும் தொண்டுமனம் நிறையட்டும்
மனமகிழ்வு கொண்டுநாம் வரவேற்போம் வாருங்கள்

-->















No comments: