ரணிலை பிரதமராக நியமித்தமை தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு
வவுனியாவில் பௌத்த வழிபாட்டு தலம் அமைக்கும் முயற்சியால் குழப்ப நிலை
இலங்கையின் சமாதானம் - நல்லிணக்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு - அவுஸ்திரோலியா
பாராளுமன்ற மோதல் தொடர்பில் சீ.சி.ரி.வி. காணொளிகள் பரீசீலனை
சம்பள உயர்வு கோரி உண்ணாவிரதம் ; கோட்டை புகையிரத நிலையப்பகுதியில் பதற்றம்
அமைச்சரவை விபரங்கள் இதோ !
யாழ். பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
1000 ரூபா சம்பள விவகாரம் :இளைஞர்களின் உடல் நிலை பாதிப்பு : மரணிக்கும் வரை தொடருவோம் என்கின்றனர்
ரஞ்ஜித் சொய்சா கைது
வளிமண்டலத்தில் தளம்பல் : வடக்கில் அதிக மழைவீழ்ச்சி
உணவு தவிர்ப்புப் போராட்டம் இடைநிறுத்தம் : மூவர் வைத்தியசாலையில், சம்பளப் பிரச்சினைக்கு காலக்கெடு
9 மாகாணங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல்
பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் ; விபரங்கள் இதோ !
சர்வாதிகாரிகளை நிராகரிக்கக்கோரி வவுனியாவில் ஊர்வலம்
கடற்படை உளவாளிகள் நீதிமன்றத்திற்குள் வந்தது எதற்காக?
ரணிலை பிரதமராக நியமித்தமை தொடர்பான வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு
17/12/2018 இலங்கை அரசியலில் கடந்த இரு மாதங்களாக ஏற்பட்டுவந்த மாற்றங்கள், குழறுபடிகள் அனைத்தும் நீங்கி நேற்றைய தினம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியால் தனக்கு வழங்கப்பட்டிருந்த பிரதமர் பதவியை இராஜனாமா செய்ததையடுத்தே, ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
அத்தோடு, ரணில் விக்ரமசிங்க ஐந்தாவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றுள்ளதுடன் ரணில் விக்ரமசிங்கவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்து உரையாற்றும் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில முக்கிய நிபந்தனைகளை வெளியிட்டிருந்தை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்தமை குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
வவுனியாவில் பௌத்த வழிபாட்டு தலம் அமைக்கும் முயற்சியால் குழப்ப நிலை
17/12/2018 வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் கோவிலில் தொல்பொருட் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடு காரணமாக கிராம மக்கள் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இவ் விடயம் பற்றி தெரிய வருவதாவது,
வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயம் கடந்த 1952ம் ஆண்டு அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களினால் வழிபாடு செய்யப்பட்டு வரப்பட்டது. இதே வேளை இவ் கோவில் அமைந்துள்ள மலையில் தொல்பொருள் சின்னங்களான பண்டைய கற் தூண்கள், பாழடைந்த செங்கல் படிவங்கள், கட்டடங்கள் என பல காணப்படுகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களிற்கு முன்னர் தொல்பொருள் திணைக்களத்தினால் கல் ,மணல் மற்றும் பல கட்டடபொருட்கள் இவ்வளாகத்தில் இறக்கி தமது வேலைகளை முன்னெடுத்திருந்த நிலையில் பொதுமக்களினால் இவ்வேலைகளை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தமையினையடுத்து வேலைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
அதன் பின்னர் இன்றைய தினம் (17.12) மீண்டும் தொல்பொருள் திணைக்களத்தினால் பொலிஸார் வரவழைக்கப்பட்டு பொலிஸாரின் பாதுகாப்புடன் வேலைகள் ஆரம்பக்கப்பட்ட நிலையில் அவ்விடத்திற்கு வருகைதந்த கிராமவாசிகள் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததுடன் வேலைகளை இடைநிறுத்துமாறு கூறியிருந்தனர்.
இதேவேளை சம்பவ இடத்திற்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் ஆகியோர் வருகைதந்து இது தொடர்பாக அப்பிரதேச மக்களுடனும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளிடனும் கலந்துரையாடியதுடன் இதனை புனரமைப்பு செய்யலாமே தவிர புதிதாக கட்ட முடியாதெனவும், தற்போது வேலைகளை நிறுத்துமாறும் இவ்வாறாக கடிதத்தில் உறுதிபடுத்தப்பட்டு வழங்கிய பின்னர் புனரமைப்பு செய்யுமாறு கூறியதன் அடிப்படையில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிந்தது இதனையடுத்து தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள் அவ்விடத்தில் இருந்து விலகி சென்றிருந்தனர். .
இதேவேளை இது தொடர்பாக தொல்பொருள் திணைக்கள அலுவலகத்திற்கு சென்று பிராந்திய முகாமையாளரிடம் வினவ முற்பட்ட போது கருத்து கூற முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
இலங்கையின் சமாதானம் - நல்லிணக்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு - அவுஸ்திரோலியா
17/12/2018 இலங்கையில் அரசியல் சிக்கல் நிலை தீர்க்கப்பட்டமையை தொடர்ந்து சமாதானத்தை நிலைநாட்டல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்தல் ஆகியவற்றுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளதாக இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகம் அறிவித்துள்ளது.

நாட்டில் கடந்த ஒருமாத காலமாக தொடர்ந்து வந்த அரசியல் நெருக்கடி தொடர்பில் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்கள் தமது அக்கறையினை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வந்தன.
இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷவின் இராஜினாமாவை தொடர்ந்து, மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதுடன் அரசியல் சிக்கல்நிலை முடிவிற்கு வந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அவுஸ்திரேலிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்படுப்பட்டுள்ளதாவது,
இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் நீண்டகால நட்புறவு நாடு என்ற வகையில் இலங்கையில் நிலவி வந்த அரசியல் சிக்கல் நிலை அரசியலமைப்பிற்கு அமைவாகத் தீர்க்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது. அத்தோடு இலங்கையின் ஜனநாயக அமைப்புக்களின் மீளெழுச்சியினையும் வரவேற்கின்றோம்.
அமைதியையும், சமாதானத்தையும் நிலைநாட்டல், நாட்டில் நல்லிணக்கத்தையும் செழிப்பையும் ஏற்படுத்தல் மற்றும் இலங்கை – அவுஸ்திரேலிய நாடுகளுக்கிடையிலான இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தல் ஆகியவற்றுக்காக எமது பூரண ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
பாராளுமன்ற மோதல் தொடர்பில் சீ.சி.ரி.வி. காணொளிகள் பரீசீலனை
17/12/2018 பாராளுமன்றத்தில் நவம்பர் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்களால் தொடர்பில் விசாரணை செய்ய சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட குழுவினால், இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் சம்பவத்துடன் தொடர்புடைய சி.சி.ரி.வி காணொளிகள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

குறித்த விசாரணைக் குழுவிலுள்ள பிமல் ரத்னாயக்க மற்றும் மாவை சேனாதிராஜா இருவரினால் சி.சி.ரி.வி காணொளிகள் தனித்தனியாக பரிசீலிக்கப்பட உள்ளது.
அத்துடன் குறித்த மோதல் சம்பவங்கள் தொடர்பான காணொளிகளை தனியார் ஊடகங்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தனியார் ஊடங்களிலிருந்து பெறப்படும் காணொளிகள் பாராளுமன்ற சிரேஷ்ட அதிகாரியொருவரினாலும் மற்றும் விஷேட பொலிஸ் குழுவினராலும் பரிசீலிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
சம்பள உயர்வு கோரி உண்ணாவிரதம் ; கோட்டை புகையிரத நிலையப்பகுதியில் பதற்றம்
19/12/2019 தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக மலையக இளைஞர்கள் மூவர் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்த நிலையில், சற்று சுமார் 9.30 மணியளவில் அவர்களை அங்கிருந்து பொலிஸார் அகற் முற்பட்டமையின் காரணமாக அங்கு பதற்றமானதொரு சூழ்நிலை தோன்றியது.

மலையக தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்ளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி தலவாக்கலையை சேர்ந்த கணேஷன் உதயகுமார் மற்றும் ஹப்புத்தளையை சேர்ந்த கந்தையா அஷோக்குமார் ஆகிய இரு இளைஞர்களும் நேற்று செவ்வாய்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். இந்நிலையில் இன்று புதன்கிழமை பொகவந்தலாவையை சேர்ந்த கனகரத்தினம் ராஜா என்ற இளைஞர் மூன்றாவதாக மேற்படி போராட்டத்தில் இணைந்து கொண்டார்.
கூட்டுஒப்பந்தத்தின் மூலம் தோட்டத் தொழலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். முதலாளிமார் சம்மேளனம், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கம் ஆகிய மூன்று தரப்பினதும் கவனத்தை ஈர்க்கும் வகையிலேயே இங்கு போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். வாக்குறுதிகளை வழங்கிவிட்டு இனியும் ஏமாற்றலாம் என அரசியல்வாதிகள் நினைக்க கூடாது. எமக்கான சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்படாவிட்டால், தேர்தல்களின் மக்கள் தமது பிரதிநிதிகள் என ஏற்காது நிராகரித்து, அரசியல் அநாதைகளாக்குவார்கள். எனவே சம்பள உயர்வை பெற்றுத்தர வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி இருந்தனர்.
இந்நிலையிலேயே சற்றுமுன்னர் இரவு 9.30 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர்களை பொலிஸார் அங்கிருந்து அகற்ற முற்பட்டுள்ளனர். அதனால் அங்கு பதற்றமானதொரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
அமைச்சரவை விபரங்கள் இதோ !
20/12/2019 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில், ஜனாதிபதி குறித்த அமைச்சுப்புபொறுப்புக்களை ஒவ்வொருவராக தனது உத்தியோகபூர்வ செயலகத்திற்கு அழைத்து பதவிப்பிரமாணம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொருளாதார, மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சராகவும், ஜோன் அமரதுங்க சுற்றுலாத்துறை, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சராகவும், காமினி ஜயவிக்ரம பெரேரா புத்தசாசனம் வடமேல் விவகார அமைச்சராகவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
அத்துடன் மங்கள சமரவீர நிதிமற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சராகவும், லக்ஷ்மன் கிரியெல்ல அரச விவகாரம் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சராகவும், ரவூப் ஹக்கீம் நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சராகவும், திலக் மாரப்பன வெளிவிவகார அமைச்சராகவும், ராஜித சேனாரத்ன சுகாதாரம், போசனை, சுதேச வைத்திய அமைச்சராகவும், ரவி கருணாநாயக்க மின்சாரம் மீள் புதுப்பிக்கத்தக்க அமைச்சராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் வஜிர அபேவர்தன உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சராகவும், ரிஷாத் பதியூதின் கைத்தொழில் வணிக விவகார அமைச்சராகவும், பட்டாலி சம்பிக்க ரணவக்க நகர திட்டமிடல் மற்றும் மேற்குப் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராகவும், நவீன் திஸாநாயக்க கைத்தொழில் அமைச்சராகவும், பி.ஹரிஸன் விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சராகவும், கபீர் ஹாசிம் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராகவும், ரஞ்சித் மத்தும பண்டார அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகவும், கயந்த கருணாதிலக்க காணி மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சராகவும், சஜித் பிரேமதாஸ வீடமைப்புத்துறை மற்றும் கலாசார அமைச்சராகவும், அர்ஜூண ரணதுங்க போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராகவும், பழனி திகாம்பரம் மலை நாட்டுப் புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சராகவும், சந்திராணி பண்டார மகளிர் விவகார மற்றும் சிறுவர் விவகார அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.
அத்துடன் தலதா அத்துக்கோரள நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராகவும், அகிலவிராஜ் காரியவசம் கல்வி அமைச்சராகவும், அப்துல் ஹலீம் மொஹமட் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சராகவும், சகால ரத்னாயக்க துறைமுகங்கள் மற்றும் தென்மாகாண பிராந்திய அபிவிருத்தி அமைச்சராகவும், ஹரீன் பெர்னாண்டோ தொலைத் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும், மனோகணேசன் தேசிய நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சராகவும், தயாகமகே தொழிலுறவு அமைச்சராகவும், மலிக் சமரவிக்ரம சர்வதேச வர்த்தக முதலீட்டு அமைச்சராகவும் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
எனினும் இந்த சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கான அமைச்சர் இதன்போது நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


யாழ். பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
20/12/2018 சிங்களத்தில் தண்டப்பத்திரம் எழுதிக்கொடுத்தமைக்காக வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா யாழ்.பிராந்திய மனிதவுரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் இன்றைய தினம் மனிதவுரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் பிராந்திய பணிப்பாளர் த.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது.
அதன் போது , கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , மற்றும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் பிரசன்னமாகி இருந்தனர்.
இன்றைய தினம் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்ட நிலையில் விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த விசாரணைகளின் பின்னர் சி.தவராசா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ,
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நான் காரில் பயணித்த போது , திருநெல்வேலி பகுதியில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த போக்குவரத்து பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மறித்து காரின் முன்பக்க கண்ணாடியில். வரி அனுமதிப்பத்திரம் ஒட்டப்பட்டு காட்சிப்படுத்தவில்லை என கூறி தண்டம் எழுத முற்பட்டனர்.
அதற்கு நான் கண்ணாடியில் ஒட்டி காட்சிப்படுத்த வேண்டும் என கட்டாயம் இல்லை. நீங்கள் வரி அனுமதி பத்திரத்தை கேட்டால் அதனை நான் காண்பிக்க முடியும் என்றேன்.
பின்னர் நான் ஆசனப்பட்டி அணிய வில்லை என தண்டம் எழுத முற்பட்ட போது , நான் அதற்கு அனுமதித்தேன். அப்போது அவர்கள் சிங்களத்தில் ஆசனப்பட்டி அணியாமை என தண்டம் எழுதி தந்தார்கள்.
அத்தோடு தமது பொறுப்பதிகாரி நாளொன்றுக்கு குறைந்தது ஐந்து தண்டம் ஆவது எழுத வேண்டும் என எமக்கு பணித்துள்ளார். அதனாலே தாம் தண்டம் எழுத வேண்டிய நிர்பந்ததில் உள்ளோம் என எழுதி தந்தார்கள்.
எனக்கு சிங்கள மொழி தெரியாதமையால் சிங்கள மொழியில் எழுதி இருந்தமையை வாசிக்க முடியவில்லை. அதனால் என் மொழியுரிமை மீறப்பட்டமை தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தேன்.
எனது முறைப்பாட்டின் பிரகாரம் இன்றைய தினம் விசாரணைகள் நடைபெற்றது. அதில் வாகன அனுமதிப்பத்திரம் காட்சிப்படுத்தாமை தண்டப்பணம் செலுத்த வேண்டிய குற்ற மில்லை என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏற்றுக்கொண்டார்.
சிங்கள மொழியில் எழுத காரணம் தமிழ் மொழி எழுத தெரிந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இல்லாமையே காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
அதற்கு நான் பொலிஸார் பதவி உயர்வு பெற இரண்டாம் மொழி தெரிந்திருக்க வேண்டும் என இருக்கும் போது இரண்டாம் மொழி தெரியவில்லை என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினேன்.
தமிழ் மொழியில் எழுதி கொடுப்பது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறினார்.
அதனை தொடர்ந்து விசாரணைகளை ஜனவரி மாதத்திற்கு மனிதவுரிமை ஆணைக்குழு பணிப்பாளர் ஒத்திவைத்தார். நன்றி வீரகேசரி
1000 ரூபா சம்பள விவகாரம் :இளைஞர்களின் உடல் நிலை பாதிப்பு : மரணிக்கும் வரை தொடருவோம் என்கின்றனர்
20/12/2018 தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோட்டைப் புகையிரத நிலையத்திற்கு முன்பாக மூன்று இளைஞர்கள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தது.

நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு போராட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு முற்பட்ட போதிலும் கூட, இன்றைய தினமும் போராட்டம் இடம்பெற்றது.
மலையகத் தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனக்கோரி மலையக மக்களால் ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்தப் போராட்டம் என்பன முன்னெடுக்கப்பட்ட போதிலும் இதுவரையில் தோட்டத்தொழிலாளர்களுக்கான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை.
இந்நிலையிலேயே மலையக இளைஞர்கள் இருவர் ஒன்றிணைந்து கடந்த செவ்வாய்கிழமை கொழும்பு கோட்டைப் புகையிரத நிலையத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
தலவாக்கலையைச் சேர்ந்த கணேஷன் உதயகுமார், கந்தையா அஷோக்குமார் ஆகிய இரு இளைஞர்கள் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று புதன்கிழமை கனகரத்தினம் ராஜா என்பவர் மூன்றாவது நபராக இணைந்து கொண்டார்.
இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டக்காரர்களுக்கான கூடாரம் அமைப்பதற்கு முற்பட்ட வேளையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களையும், ஆதரவாளர்களையும் அங்கிருந்து அகற்றுவதற்கு பொலிஸார் முயற்சித்துள்ளனர். இதனையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. நன்றி வீரகேசரி
ரஞ்ஜித் சொய்சா கைது
20/12/2019 பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்சா உட்பட நால்வர் கொடக்கவெல பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 16 ஆம் திகதி கொட்டகலை பகுதியில் வைத்த நபரொருவரை தாக்கியமை தொடர்பில் நேற்று மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்சா உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதனையடுத்து கொடக்க வெல பொலிசாரால் சந்தேக நபர்கள் நால்வரும் பல்மடுல்ல நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் ஜனவரி 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். நன்றி வீரகேசரி
வளிமண்டலத்தில் தளம்பல் : வடக்கில் அதிக மழைவீழ்ச்சி
22/12/2018 இலங்கைக்கு தென்கிழக்காக வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் வடக்கில் அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என வளிமண்டளவியல் திணைக்கள யாழ்ப்பாண பிரதிப் பணிப்பாளர் பிரதீபன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளத்தில் அதிகளவிலான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
இன்றைய வானிலையைப் பொறுத்தவரையில் 21ஆம் திகதி மற்றும் 22ஆம் திகதிகளில் மழை
யுடன் கூடிய வானிலை காணப்படுமென நாம் ஏற்கனவே அறிவித்ததன் பிரகாரம் நேற்று பல இடங்களிலும் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகியது. அதே போன்று இன்றும் பல இடங்களிலும் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
வடக்கு மற்றும், வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய நிலமை காணப்படுகிறது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வாறான நிலமைகள் காணப்படுகின்றது.
ஆகவே இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்றும் வீசக் கூடும். இடியுடன் கூடிய மழை, காற்று ஏற்படுமென்பதால் பொது மக்கள் இடி மின்னலால் ஏற்படும் தாக்கத்தை தவிர்ப்பதற்காக முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேறகொள்ள வேண்டும்.
நேற்று 21 ஆம் திகதி காலை 8.30 மணி தொடக்கம் இன்று 22 ஆம் திகதி காலை 8.30 மணி வரை பதிவாகிய மழை வீழ்ச்சியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியிலையே 360.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதே போன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரிப் பிரதேசத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சியாக 89.3 மில்லி மீற்றர் பதிவாகியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் ஆனையிறவுப் பிரதேசத்தில் 220.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் அதிகளிவில் பதிவாகியுள்ளன.
அச்சுவேலியில் 70.4 மில்லி மீற்றரும், பருத்தித்துறைப் பகுதியில் 74.8 மில்லி மீற்றரும் நயினாதீவுப் பபுகுதியில் 44.3 மில்லி மீற்றரும், முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் பகுதியில் 158.2 மில்லி மீற்றரும் மாவட்டத்தில் வள்ளிபுனம் பகுதியில் 195.3 மில்லி மீற்றரும் யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் 36.7 மில்லி மீற்றரும் நெடுந்தீவுப் பிரதேசத்தில் 40.9 மில்லி மீற்றரும்,
கிளிநொச்சி இரணைமடுப் பிரதேசத்தில் 237.3 மில்லி மீற்றரும் ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் 301 மில்லி மீற்றரும் ஆணையிறவுப் பிரதேசத்தில் 220.1 மில்லி மீற்றரும் சாவகச்சேரிப் பிரதேசத்தில் 89.3 மில்லி மீற்றரும் யாழ்ப்பானம் கச்சேரிப் பகுதியில் 59.8 மில்லி மீற்றரும் யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் 69.3 மில்லி மீற்றரும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
உணவு தவிர்ப்புப் போராட்டம் இடைநிறுத்தம் : மூவர் வைத்தியசாலையில், சம்பளப் பிரச்சினைக்கு காலக்கெடு
22/12/2018 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நான்கு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட தன்னெழுச்சியான உணவுத் தவிர்ப்புப் போராட்டமானது எதிர்வரும் தைப்பொங்கல் வரையான 15 நாட்கள் அரசாங்கத்திற்கு காலக்கெடு வழங்கப்பட்டு இன்றைய தினத்துடன் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பதினைந்து நாட்களுக்குள் இப்பிரச்சைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படாவிட்டால் மீளவும் போராட்டம் உக்கிரமடையும் எனவும் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போராட்டம் இடைநிறுத்தப்பட்டமையைத் தொடர்ந்து நான்கு இளைஞர்களும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், அவர்களில் மூவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளமையின் காரணமாக மேலதிக சிகிச்சைகளுக்காக அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 18ஆம் திகதி செவ்வாய்கிழமை கணேசன் உதயகுமார், கந்தையா அசோக் என்ற இரு இளைஞர்கள் ஆரம்பித்த தன்னெழுச்சி உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் பின்னர் கனகரத்தினம் ராஜா, வீரக்குமார் மனோஜ் ஆகிய இரு இளைஞர்களும் இணைந்து கொண்டனர்.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை தொடர்ந்து ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்த உணவுத் தவிர்;ப்புப் போராட்டத்திற்கு பல சிவில் சமூக அமைப்புக்கள் நேரில் சென்றுஆதரவு வழங்கியதுடன், ஏராளமான மலையக இளைஞர்களும் கலந்து கொண்டு தன்னெழுச்சி கவனயீர்ப்பு போராட்டமாக மாறியிருந்தது.

9 மாகாணங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல்
22/12/2018 ஒன்பது மாகாணசபைகளுக்குமான தேர்தல்கள் ஒரே நாளில் தாமதமின்றி நடக்கும் என அமைச்சர் வஜிர அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.
தேர்தல்களில் வெற்றிபெறும் நோக்கத்துடன் கடந்த காலங்களில் பொதுச்சொத்துக்களை தவறாக பயன்படுத்தி வெவ்வேறு நாட்களில் மாகாணசபை தேர்தல்கள் இடம்பெற்றன என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் நாங்கள் இந்த பாராம்பரியத்தினை மாற்றுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகளிற்கான தேர்தல்கள் ஒரே நாளில் இடம்பெறும் முடிந்தால் ஜனாதிபதி தேர்தல் பொதுத்தேர்தலையும் கூட ஒரே நாளில் நடத்துவோம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த 52 நாட்கள் நீடித்த அரசியல் நெருக்கடி நாட்டின் பொதுச்சேவையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார் நன்றி வீரகேசரி
பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் ; விபரங்கள் இதோ !
21/12/2018 அமைச்சரவை அந்தஸ்து இல்லாத 3 அமைச்சர்கள், 17 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 7 பிரதி அமைச்சர்கள் இன்றைய தினம் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21-12-2018) மாலை குறித்த சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது.
இதேவேளை, இவ்வாறு அமைச்சுப்பொறுப்புக்களை ஏற்றவர்களுள் எவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்கள்
பொருளாதார சீர்திருத்தம் மற்றும் பொது விநியோக அமைச்சராக ஹர்ஷ டி சில்வா சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக அஜித் பி பெரேரா சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சராக சுஜீவ சேனசிங்க சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இராஜாங்க அமைச்சர்கள்
கல்வி இராஜாங்க அமைச்சராக விஜயகலா மகேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபை இராஜாங்க அமைச்சராக ஜே.சி. அலவத்துவல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
நெடுஞ்சாலை மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக ருவான் விஜேவர்தன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதாரத்துறை இராஜாங்க அமைச்சராக நிரோஷன் பெரேரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சராக சம்பிக்க பிரேமதாஸ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
நிதி இராஜாங்க அமைச்சராக எரான் விக்ரமரத்ன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக அலி சாஹிர் மௌலானா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
விவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக அமீர் அலி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சுற்றுலா அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக ரஞ்சன் அலுவிஹார ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக வசந்த அலுவிஹார ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
நகர திட்டமிடல், நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சராக லக்கி ஜயவர்தன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
போக்குவரத்து சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராக அசோக்க அபேசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சுகாதார போசனை, சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சராக பைசல் காசிம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக எச்.எம்.எம். ஹரீஸ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
மீன்பிடி, நீரியல்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக திலிப் வெதஆரச்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக ஏ.இசட்.எம். செயிட் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக வடிவேல் சுரேஷ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பிரதி அமைச்சர்கள்
அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக நளின் பண்டார ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக புத்திக பத்திரண ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பெற்றோலிய வள அபிருத்தி பிரதி அமைச்சராக அனோமா கமகே அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அலுவல்கள் பிரதி அமைச்சராக எட்வட் குணசேகர மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சுற்றாடல்துறை பிரதி அமைச்சராக அஜித் மான்னப்பெரும மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
திறன் விருத்தி, தொழிற்பயிற்சி பிரதி அமைச்சராக கருணாரத்ன பரனவிதான மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சராக பாலித குமார தெவரப்பெரும மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். நன்றி வீரகேசரி
சர்வாதிகாரிகளை நிராகரிக்கக்கோரி வவுனியாவில் ஊர்வலம்
23/12/2018 ஜனநாயத்திற்கான இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று வவுனியாவில் சர்வாதிகாரிகளை நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு ஊர்வலமொன்று இடம்பெற்றது.
இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வருகை தந்திருந்த சுமார் 250 இளைஞர்கள் ஒன்றுதிரண்டு வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக இருந்து ஊர்வலமாக இலுப்பையடியை சென்றடைந்து அங்கிருந்து வைத்தியசாலை சுற்றுவட்டத்தின் ஊடாக குள வீதியையடைந்து மீண்டும் பாடசாலை முன்றலை வந்தடைந்திருந்தனர்.
இதன்போது இலங்கையில் சர்வாதிகாரத்தினை நிராகரிப்போம் என கொடிகளை தாங்கியவாறு சென்று இளைஞர்கள் ஜனநாயகம் வேண்டும் சர்வாதிகாரம் வேண்டாம் என்ற கோசத்தினையும் எழுப்பியிருந்தனர். நன்றி வீரகேசரி
கடற்படை உளவாளிகள் நீதிமன்றத்திற்குள் வந்தது எதற்காக?
23/12/2018 கடற்படையை சேர்ந்த இரு உளவாளிகளை காவல்துறையினர் கொழும்பு நீதிமன்றத்தில் வைத்து கைதுசெய்துள்ளனர்.
ஆங்கில ஊடகமொன்று இதனை தெரிவித்துள்ளது.
பதினொரு தமிழ் இளைஞர்கள் கொழும்பில் கடத்தப்பட்ட காணாமலாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள அதிகாரிக்கு உயிராபத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள சூழ்நிலையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
ஜனக டொனி என்ற இரு உளவாளிகள் நீதிமன்றத்தில் அமர்ந்திருப்பதை காவல்துறையினர் கண்டுள்ளனர்.
இதன் பின்னர் அவர்களை விசாரணை செய்யுமாறு காவல்துறையினர் நீதவானை கேட்டுக்கொண்டுள்ளனர்
இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைதுசெய்த காவல்துறையினர் நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள காவல்துறை அலுவலகத்திற்குள் வைத்து விசாரணை செய்துள்ளனர்.
வெலிசர கடற்படை முகாமில் பணிபுரியும் இரு கடற்படையினரும் நீதிமன்றத்திற்கு எதற்காக வந்தனர் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை கொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டது உட்பட முக்கிய சம்பவங்கள் குறித்து விசாரணை செய்துவரும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி நிசாந்த சில்வாவும் கடற்படையை சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் காணப்படுவது குறித்து நீதிமன்றதின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார் நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment