நிறைவு 🖌 (சிறுகதை) - கானா பிரபா


மடிக்கணினியை வெறித்துப் பார்த்துக் கொண்டே எவ்வளவு நேரம் இருப்பது....
கண் பூசலாடுவது போல இருக்கிறது, மேலதிகாரி தந்த
கடிதத்தைத் திரும்பத் திரும்பப் படித்தாலும் சொல்லியிருப்பது ஒன்று தானே?

“இன்றுடன் உங்கள் பணி இடை நிறுத்தப்படுகிறது.  
இந்த முடிவு உங்களின் தனிப்பட்ட திறமையை முன் வைத்து எடுக்கப்பட்டதன்று. நிறுவனத்தின் நிர்வாக மாறுதலுக்கு ஏற்பவே நாம் பணிக்குறைப்பு செய்ய வேண்டியுள்ளது. இதுவரை காலமும் எங்கள் நிறுவனத்துக்கு நீங்கள் வழங்கிய பங்களிப்புக்கு நன்றி.”

எட்டு வருடமாக வேலை பார்த்த நிறுவனம் இன்று ஒற்றை வார்த்தையோடு வழியனுப்புகிறது. இன்னும் இரண்டு வருடங்கள் இழுத்திருந்தால் நீண்ட காலப் பணிக்கான படியளிப்பும் கிட்டிருக்கும். திடீரென்று இப்படியொரு கடிதத்தை எதிர்பார்த்த அதிர்ச்சி ஒரு பக்கமிருக்க இன்னொரு பக்கம் கோபம் கோபமாக வந்தது.  

“ கிரி! முக்கியமான ஒரு நிறுவனத்தோடு செய்ய வேண்டிய உடன்படிக்கைக்காக Slide Pack செய்ய வேண்டும் வார இறுதியில் செய்து முடிக்க வேண்டும் நீங்கள்” 
வெள்ளிக்கிழமை பின்னேரம் தான் மேலதிகாரி வந்து சொல்கிறார். சனிக்கிழமை மகனின் நான்காவது பிறந்த நாளுக்குப் போட்ட திட்டமெல்லாத்தையும் மூட்டை கட்டி விட்டு PowerPoint slides உடன் மல்லுக் கட்டி வேலையை முடிச்ச திருப்தியோடு வந்தால் இப்படிக் கடைசி நேரத்திலும் வேலை வாங்கி விட்டுக் கழுத்தறுத்திட்டாங்களே என்ற ஆத்திரம் தான் உள்ளூரக் குமுறிக் கொண்டிருந்தது. 
“திங்கட்கிழமை என் வேலை பறி போகும் என்று மேலதிகாரிக்கு வெள்ளியே தெரிந்திருக்குமே?
படு சுயநலவாதி இவன்” என்று திட்டிக் கொண்டிருந்தது மனம்.

கொஞ்சம் தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொள்வோம் என்று விட்டு உணவு அருந்தும் பகுதிக்கு வந்தால் வழி நெடுகக் கடக்கும் சக மனிதர்கள் அனுதாபப் பார்வையோடு கடக்கிறார்கள். சிலர் வலிந்த சிரிப்பை மட்டும் போட்டு விட்டு நகர்கிறார்கள். 
“ஹும் எனக்கு வேலை போனது என்னை விட எல்லோருக்குமே முதலிலேயே தெரிந்து விட்டது போல” இப்போது விரக்தியான சிரிப்புத் தான் வந்தது.

கை கழுவும் இடத்தின் ஓரத்தில் நீர்த்தாங்கி, சூழவும் கோப்பி மக்கிப் போன கோப்பைகள், அரைகுறைச் சாப்பாட்டுடன் அப்படியே போட்ட தட்டுகள் என்று நிறைந்திருந்தது. இம்மாதிரியான பொறுப்பற்ற வேலைகளைச் செய்பவர்களை எட்டு வருடமாகப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். கையெட்டும் தூரத்தில் இருக்கும் கோப்பை கழுவும் இயந்திரத்தில் தாம் குடித்த, சாப்பிட்ட பாத்திரங்களைப் போடுவதற்குக் கூட சோம்பேறித்தனத்தை வைத்திருப்பவர்களா இந்தப் பெரிய நிறுவனத்தைப் பொறுப்போடு கட்டியெழுப்பப் போகிறார்கள்? என்று ஒவ்வொரு தடவையும் இவற்றைக் காணும் போது முணுமுணுத்தாலும் பின்னர் சேர்ட்டின் கையை முழங்கை வரை இழுத்து விட்டு ஒவ்வொன்றாக எடுத்து அந்தக் கோப்பை கழுவும் இயந்திரத்தின் வயிற்றில் செருகி விட்டு, சோப்புத் தூளைப் போட்டு இயங்க வைத்து விட்டுத்தான் நகர்வான். இன்றும் அப்படியே. இயந்திரத்தை இயக்கி விட்டுத் திரும்பினால் துப்பரவுப் பணியாளர் பின்னுக்கு நின்று நன்றிப் புன்னகையை உதிர்க்கிறார்.

தண்ணீர் குவளையில் இருந்து மடக்கு மடக்கென்று குடித்து விட்டு மீண்டும் அந்தக் கடிதத்தை இன்னொரு தடவை பாடமாக்குமாற் போலப் படித்துக் கொண்டே கடைக் கண்ணால் தன் சக பணியாளர்களைப் பார்த்தால் தங்களுக்குள் குசுகுசுப்பது தெரிகிறது. 
ஒவ்வொரு நாளும் சிரித்துப் பேசி மகிழும் இவர்களுக்கு இன்று நான் அந்நியன். 

“வார இறுதியில் நானே செய்தேன் 
எப்பிடி இருக்கிறது?” 
என்று பெருமைபடச் சொல்லிக் கொண்டு திங்கட்கிழமைகளில் கேக், இனிப்பு வகைகளை நீட்டும் நிக்கோலா இன்று இந்தப் பக்கமே வரவில்லை.

கிறிக்கெற், சினிமா என்று குட்டி அரட்டை போடும் மார்ட்டினும் தன் இருக்கைக்குள் ஒடுங்கிப் போய் விட்டான்.

“கோப்பி அருந்தப் போகலாமா?” என்று பத்து மணிக்கு மணியடிக்கும் மைக்கேலும் தனியாகப் போய் விட்டு வந்து விட்டான். 

என்னைத் தொந்தரவு படுத்தக் கூடாது என்றா?
அல்லது என்னுடன் பேசினால் தங்களின் வேலையும் பறி போய்விடும் என்ற சுயநலமா?

Messenger இல் கூட வந்து ஏன் எப்படி என்று சுகம் விசாரிக்கப் பயம் போல அவர்களுக்கு, எங்கே அதைக் கூட கொம்பனிக்காறன் கண்டு பிடித்து விசாரிப்பானோ இதென்ன கொலைக் குற்றமா செய்து விட்டேன்?

இன்றும் இன்னுமொரு காலை என்று நினைத்து வந்தவனுக்குக் காலையிலேயே அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்பட்டு விட்டது.

சாப்பிடப் போகவும் மனமில்லை. மின்னஞ்சல் பெட்டியில் அதுவரை தேங்கியிருந்த அஞ்சல்களில் ஏதும் முக்கியமான ஆவணங்கள் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே வந்தால்....
முன்னால் நிற்கிறார் மேலதிகாரி, பக்கத்தில் மனித வளப் பிரிவில் இருந்து குட்டைப் பாவாடைப் பெண்ணொருத்தி.

“நல்லது கிரி, நாங்கள் உங்களிடமிருக்கும் எங்கள் நிறுவனத்தின் உடமைகளைச் சரி பார்க்கப் போகிறோம்” என்று விட்டுக் கையில் இருந்த துண்டுச் சீட்டில் கணிணிப் பிரிவுக்காறர் எழுதிக் கொடுத்த  சொத்து விபரத்தை ஒப்பிட்டுப் பார்க்கிறார்.

கொழும்பிலிருந்து வட பகுதி போகும் போது ஓமந்தை இராணுவச் சாவடியில் வைத்து சூட்கேசில் ஆசையாக அடுக்கிக் கொண்டு போன உடு பிடவைகளைக் கலைத்து போட்டுச் சோதிப்பது போன்றதொரு நிலை.

“ஒரு ஐந்து நிமிடம் தருகிறீர்களா என்னுடைய குழந்தையின் படங்கள் நிறைய இந்த laptop இல் இருக்கு எடுத்து விட்டுத் தருகிறேன்?”

“மன்னிக்கவும் அதற்கு நீங்கள் IT Security இல் முன்னமே விண்ணப்பித்து அனுமதி பெற்றிருக்க வேண்டும் இப்போது நேரம் கடந்து விட்டதே?” மனத வளப் பிரிவுப் பெண்மணியின் வாய் மட்டும் உணர்ச்சியில்லாமல் அசைகிறது. 

“சரி நல்லது” 

மேசையின் லாச்சிகளைத் திறந்து அவற்றில் தேங்கியிருந்த கற்றைக் காகிதங்களைக் குப்பைக் கூடைக்குள் திணித்து விட்டு மேலதிகாரிக்கும் கைலாகு கொடுத்து விட்டு வெறும் மடிக்கணனிப் பையுடன் வெளியேறுகிறேன்.

இந்த அலுவலகத்தில் எத்தனை பேருக்குச் சீரும் சிறப்புமாகப் பிரியாவிடை செய்திருக்கிறேன், எத்தனை பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்குச் சொந்தக் காசைப் போட்டுக் கொண்டாடியிருக்கிறேன். இன்று ஏதோ அயல் நாட்டு உளவாளி போல ஒதுக்கப்பட்டுவிட்டேனே? மனம் இன்னும் வலித்தது.

அலுவலகத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும்  தேநீர்க் கடைக்குப் போவோம் என்று மனம் உந்தியது.
இனி எப்போது வேலை கிடைக்குமோ? கிடைக்கும் வேலையும் இந்தப் பக்கம் வருமோ? என்ற குழப்பங்களை ஒதுக்கி விட்டு வழக்கமாகச் செல்லும்  தேநீர்க் கடையில் கொஞ்சம் இளைப்பாறத் தோன்றியது. அந்தக் கடை உரிமையாளர் அப்பாஸ் அறுபதைக் கடந்த ஒரு லெபனான் நாட்டவர். அந்தப் பரபரப்பான காலை வேளையிலும் ஐந்து நிமிடமாதல் என்னுடன் கதைத்து விட்டுத்தான் மறு வேலை என்ற அளவுக்குப் பழக்கம்.
தூரத்திலேயே கண்டு “கிரி” என்று ஆனந்தக் குரல் அது அப்பாஸ் தான். 

சனக் கூட்டம் அதிகமில்லை. ஓரமான இருக்கையில் அமர்ந்து விட்டு ஒரு கேக் துண்டுக்கும், கப்பச்சினோவுக்கும் Order கொடுத்து விட்டுத் திரும்பினால் அப்பாஸ் முன்னால். வழக்கம் போலக் குசலம் விசாரித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். விடை பெறும் போது வேலை போன கதையைச் சொல்லலாம் என்று மனம் ஆறுதல் படுத்தியது.

கேக் துண்டும் கப்பச்சினோவும் வந்து விட்டது. சரி இந்த எட்டு வருட காலப் பணி நிறைவை எனக்கு நானே பிரியாவிடை கொடுத்துக் கொண்டாடுவோம் உள்ளுக்குள் விரக்தியாகச் சொல்லிச் சிரித்துக் கொள்கிறேன்.

ஒரு விள்ளல் கேக் ஐக் கரண்டியால் கிள்ளி வாயில் போடும் போது 
“ஆஹ்ஹ் ஊஊஊஊ” என்றொரு பெருங்குரல் கேட்டுத் திரும்பினால் என்னைப் போலவே வளர்ந்த வெள்ளையின வாலிபன் ஒருவன். அவனை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள் பக்கத்தில் இருக்கும் ஒரு அழகான வெள்ளையினப் பெண்மணி.
பின்னர் சிறு துண்டு கேக் ஐ அவன் வாயில் ஊட்டி விட்டு வாயைத் துடைக்கிறாள். அவளைப் பார்த்து விநோதமாகச் சிரித்து விட்டு மீண்டும் பெருங்குரல் எடுத்துக் கத்துகிறான். மீண்டும் அவன் முதுகைத் தடவி ஆசுவாசப்படுத்துகிறாள் அவள். அந்தச் செய்கையில் எந்தவிதமான அலுப்போ சலிப்போ இருப்பதாகத் தெரியவில்லை. தனக்காக order செய்த கோப்பியும், கேக்கும் காய்ந்து கொண்டிருக்கிறது. அவனுக்கு ஊட்டி விடுவதிலேயே மும்முரமாக இருக்கிறாள் அவள்.

தன்னுடைய தோள்ப்பட்டையில் அவனைச் சாய்த்து உச்சிமோந்து விடுகிறாள். அவன் குலுங்கிக் குலுங்கிக் குழந்தை மாதிரிச் சிரிக்கிறான். இப்படியான குழந்தை ஆகிப் போன மனிதர்களைக் காண்பது முதல் தடவையல்ல. பிறக்கும் போதே அப்படியே பிறந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சிலரோ கால ஓட்டத்தில் நிகழும் வாழ்க்கை மாற்றங்களால் மனச் சிதைவுக்கு ஆளானவர்கள். அவர்கள் குடும்பம், குழந்தை குட்டி என்று ஆனதுக்குப் பின் தான் இவ்விதம் மாறிப் போனவர்கள். Parramatta ரயில் நிலையத்தில் நின்று 
தானே ஸ்டேசன் மாஸ்டர் போன்ற பாவனை பிடித்து
ஒவ்வொரு ரயிலையும் வழியனுப்பும் ஒரு வாட்டசாட்டமான சிங்களவரைக் கண்டிருக்கிறார். 
இவளுடைய இளமைக்கும், அழகுக்கும் இவள் நினைத்திருந்தால் இன்னொருவனிடம் அடைக்கலம் புகுந்திருக்கலாம். காலாகாலமாக எங்களவர்கள் தான் குடும்ப நெறியைப் பின்பற்றுகிறார்கள் என்ற பிம்பம் உடைவது இந்த மாதிரியான செய்கைகளைப் பார்க்கும் போது தான். 
எவ்வளவு வேலைக்களைப்போடு வீடு திரும்பினாலும் “அப்பா அப்பா” என்று சிரித்துக் கொண்டு ஓடி வந்து விளையாட்டுக் காட்டும் மகனும், “போய் றெஸ்ட் எடுங்கோ” என்று நிலைமையை உணர்ந்து ஆறுதல்படுத்தும் மனைவியும் மங்கலாகத் தெரிவது போல ஒரு பிரமை.
பாதி தின்ற கேக்கையும், கோப்பியையும் விட்டு விட்டு உடனேயே ஓடிப் போய் மனைவியையும், பிள்ளையையும் பார்க்க வேண்டும் என்று மனம் உந்துகிறது. 
“அவர்களுக்கு என் கவலையைக் காட்டக் கூடாது, இந்த வேலை போனால் இன்னொரு வேலை” என்று சமாதானப்படுத்த வேண்டும் மனம் கங்கணம் கட்டிக் கொண்டது. 
எழும்பி வந்து காசாளர் பக்கம் போனால் 
“Hello Young man!” 
 அறுபது வயது அப்பாஸை அழைக்கிறது ஒரு குரல். 

திரும்பிப் பார்த்தால் எண்பதுகளின் விளிம்பில் நிற்கும் ஒரு பழுத்த மூதாட்டி, கூனிக்குறுகிய தன் உடலைப் புதைத்துக் கொண்டு சக்கர வண்டியில் இருந்து தானே உந்தித் தள்ளி இழுத்து இழுத்து வருகிறாள்.
அப்பாஸ் அவளை எதிர்பார்த்தது போல கன்னங்கள் உப்பி, குலுங்கிக் குலுங்கிச் சிரித்து வரவேற்கிறார்.

“I’m not ready to die”
“I’m not ready to die”
திரும்பத் திரும்ப மந்திரம் போலச் சொல்லிக் கொண்டே தேநீர்ச் சாலைக்குள் நுழைகிறாள் அந்த மூதாட்டி.
நெஞ்சத்தில் இருந்து ஏதோவொரு பந்து வெளியே கிளம்பிப் பாய்வது போல உணர்கிறேன் நான்.

கானா பிரபா

No comments: