உலகச் செய்திகள்


ஜெருசலேமில் தூதரகத்தை திறந்தது அமெரிக்கா : எதிர்ப்பிலீடுபட்டோரில் 41 பேர் பலி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம்

இளவரசர் ஹரி-மேகன் திருமணம் : மணமகளுக்கும் தந்தை ஸ்தானத்திலிருந்து திருமணத்தை நிறைவேற்றிய ஹரியின் தந்தை

கியூபாவில் பயணிகள் விமானம் விபத்து ; 110 பேர் பலி

அமெரிக்க பாடசாலையொன்றில் துப்பாக்கிப் பிரயோகம் : 10 பேர் பலி, 12 பேர் காயம்

மலேசியாவின் முன்னாள் பிரதமரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டவற்றை வெளியிட்ட மலேசிய பொலிஸ்




ஜெருசலேமில் தூதரகத்தை திறந்தது அமெரிக்கா : எதிர்ப்பிலீடுபட்டோரில் 41 பேர் பலி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம்

15/05/2018 பாலஸ்தீனர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இஸ்ரேலின் தலைநகரரான ஜெருசலேமில் அமெரிக்கா  புதிய தூதரகத்தை திறந்துள்ளது. 
பாலஸ்தீனர்கள்  கிழக்கு ஜெருசலேமை பாலஸ்தீனின் தலைநகரமாக உரிமை கோரி வந்தனர். ஆனால் ஜெருசலேமையே எப்போதும் தங்கள் தலைநகரமாக இஸ்ரேல் கருதி வந்த நிலையில் கடந்த வருடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரித்தார்.
மேலும், டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் ஜெருசலேமுக்கு மாற்றப்படும் என்று உறுதியளித்தார். அவரது இந்த அறிவிப்புக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.இந்நிலையில், கிழக்கு ஜெருசலேம் நகரில் கட்டப்பட்டுள்ள அமெரிக்க தூதரகம் நேற்று திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் மற்றும் டிரம்பின் முக்கிய ஆலோசகரும் மருமகனுமாகிய ஜெரார்ட் குஷ்னர், அந்நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர், உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். 
அமெரிக்க தூதரகம் திறப்பதை கண்டித்து காஸா மற்றும் மேற்குக்கரை எல்லையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், இஸ்ரேல் இராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டில் 41 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன் 1800 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
நன்றி வீரகேசரி 












இளவரசர் ஹரி-மேகன் திருமணம் : மணமகளுக்கும் தந்தை ஸ்தானத்திலிருந்து திருமணத்தை நிறைவேற்றிய ஹரியின் தந்தை

19/05/2018 இங்கிலாந்து இளவரசர் ஹரி - மேகன் மார்க்லே திருமணம் விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஹரியின் தந்தையும், இளவரசருமான சார்லஸ் மணமகள் மேகனுக்கும் தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
இளவரசர் சார்லஸ் டயானா தம்பதியின் இளையமகன் ஹரி (33) க்கும் மேகன் மார்க்லேக்கும் (36) இன்று விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.  நன்றி வீரகேசரி 









கியூபாவில் பயணிகள் விமானம் விபத்து ; 110 பேர் பலி

19/05/2018 கியூபாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 110 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த விமானத்தில்  104 பயணிகளும் 9 விமான சிப்பந்திகளும் இருந்துள்ளனர்.
கியூபாவில் ஹவானா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அரச விமான நிறுவனமான ஏர்லைன் கியூபானாவின் விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.  நன்றி வீரகேசரி 









 அமெரிக்க பாடசாலையொன்றில் துப்பாக்கிப் பிரயோகம் : 10 பேர் பலி, 12 பேர் காயம்

19/05/2018 அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சாண்டா பே என்னும் பகுதியில் இயங்கிவந்த பாடசாலையொன்றில் மர்ம நபர் இன்று திடீரென நுழைந்துள்ளார். குறித்த மர்ம நபர் பாடசாலையில் இருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்தார்.
இந்த தாக்குதலில் சுமார் 10 மாணவர்கள் பலியாகியுள்ளதாகவும் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் கயமடைந்தவர்களில் ஒரு பொலிஸ் அதிகாரியும் அடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தாக்குதலை மேற்கொண்டநபர் 17 வயதுடைய குறித்த பாடசாலையின் பழைய மாணவரென பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
ஆயுததாரியை அமெரிக்க பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் தெரிவிக்கையில், டெக்சாசில் இருந்து கிடைக்கும் தகவல்கள் வருத்தம் அளிக்கின்றன என பதிவிட்டுள்ளார். 
நன்றி வீரகேசரி










மலேசியாவின் முன்னாள் பிரதமரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டவற்றை வெளியிட்ட மலேசிய பொலிஸ்

18/05/2018 மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் நடைபெற்ற சோதனையில், பல இலட்சம் மதிப்பிலான பணம், நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பணமோசடி வழக்கில், மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீடு மற்றும் அலுவலகம் என 6 இடங்களில் மலேசிய பொலிஸார் கடந்த 2 நாட்களாக சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, சுமார் 284 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த நவீன கைப்பைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். அந்த பைகள் பலவற்றில் நகைகளும், பல இலட்சம் மதிப்பிலான பணமும் வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பில் மலேசிய பொலிஸார் தெரிவிக்கையில், 
நஜீப் ரசாக்கிற்கு சொந்தமான இடத்திலிருந்து விலையுயர்ந்த கைப்பைகள், நகைகள், கைக்கடிகாரம் போன்றன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, இது தொடர்பில் மலேசிய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கையில், கைப்பற்றபட்ட பணம், நகைகளின் மதிப்பை தற்போது வெளியிட முடியாது, மீதமுள்ள பைகளையும் சோதனை செய்து அவற்றின் மதிப்பையும் கண்டறிய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நஜீப் ரசாக் நிறுவிய மலேசியா வளர்ச்சி நிறுவனம் மூலம் பல கோடி டொலர்கள் பண மோசடியில் நஜீப் ஈடுபட்டதாக பல்வேறு நாடுகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது நஜீப் ரசாக்கும் அவரது மனைவியும் மலேசியாவை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 



No comments: