பாரைவிட்டுப் போனதேனோ ! - ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )


             குங்குமம் பொட்டும் குறுகுறுத்த பார்வையும் 
image1.JPG                   எங்குமே பரந்துநிற்கும் எழிலார்ந்த கற்பனையும்
             பொங்கிவரும் தமிழுணர்வும் பொறுப்பான எழுத்துக்களும் 
                  எங்களுக்கு அளித்துவிட்டு எங்குசென்றீர் சித்தரையா   ! 

            எழுதிக் குவித்தகை எப்படித்தான் ஓய்ந்ததுவோ 
                  அளவின்றி  பலவற்றை ஆர்வமுடன் தந்தீர்கள் 
            வழுவின்றி வைகத்தில் வாழும்வகை எழுத்தாக்கி 
                   வழங்கிவிட்டு ஏனையா மனமேங்க வைத்துவிட்டீர்        ! 

           வெள்ளுடையில் மேடையேறி வெளியாகும் கருத்துக்களை 
                அள்ளிநாம் பருகிவிட ஆசையுடன் இருக்கின்றோம் 
           வெண்தாடி வெள்ளுடையில் வேறுயார் இங்குள்ளார் 
                  வித்தகரே சித்தரையா விரைவாகச் சென்றதேனோ     !
            
             பரிசுபல பெற்றாலும் பல்லக்கில் ஏறாமல் 
                   பக்குவத்தைக் கடைப்பிடித்து பலபேரும் மதிக்கநின்றாய் 
             படைக்கின்ற அத்தனையும் பயனாகும் பாங்கினிலே
                    படைத்தளித்து விட்டுத்தான் பாரைவிட்டு அகன்றனையோ    ! 



             உன்நாவல் அத்தனையும் உரமாக இருக்குமையா
                    வெவ்வேறு விதமாக விறுவிறுப்பாய் தந்துநின்றாய் 
              தமிழ்படிப்பார் யாவருமே தலைமீது வைப்பார்கள் 
                     அறிவான எழுத்தாலே அனைவரையும் ஆண்டுவிட்டாய்   !

            முக்காலமாய் உந்தன் எழுத்துக்களை பார்த்திடலாம்
                  முதற்காலம் முற்போக்கு முகிழ்த்ததையே பார்க்கின்றோம்
            இடைக்காலம் வெள்ளித்திரை ஈர்த்துவிட இருந்துவிட்டாய் 
                   இக்காலம் இறைபக்தி எழுத்தாக்கி எழுச்சிபெற்றாய்     ! 


           குடும்பத்தை உயர்த்துதற்கு கொடுத்துநின்றாய் பலகருத்தை
                   குலவிளக்காம் பெண்கள்தமை குன்றேத்திப் பலபுகன்றாய் 
           நலமிக்க சமுதாயம் நாட்டில் வரவேண்டுமென்று 
                     நாளெல்லாம் எழுதிவிட்டு நாயகரே சென்றதேனோ        ! 


                படைப்புலம் அழுகிறது பத்திரிகை அழுகிறது
                       பாலகுமாரன் ஐயா பசுந்தமிழும் அழுகிறது            
                பரவசமும் பக்குவமும் பாங்காக படைத்தளித்த
                        பாலகுமாரன் ஐயா பாரைவிட்டுப் போனதேனோ    ! 
           







No comments: