உலகச் செய்திகள்


மத்தியதரைக் கடல் வழியாகப் பயணித்த 400 புகலிடக் கோரிக்கையாளர்களை லிபியா மீட்பு!!!

இஸ்ரேலிய பிரதமரின் இந்திய விஜயமும், மோடியின் விருந்துபசாரமும்....

பை பை தீவில் வெடித்த அதிவேகப் படகு : 16 பேர் காயம்



மத்தியதரைக் கடல் வழியாகப் பயணித்த 400 புகலிடக் கோரிக்கையாளர்களை லிபியா மீட்பு!!!

16/01/2018 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு புகலிடக் கோரிக்கையை முன்வைத்துப் பயணித்த 400 புகலிடக் கோரிக்கையாளர்களை லிபிய கரையோர காவல் பிரிவினர் நேற்று மீட்டுள்ளனர்.
400 புகலிடக் கோரிக்கையாளர்களுடன்  மத்தியதரைக் கடல் வழியாகப் பயணித்த 2 படகுகளின் இயந்திரங்களிலும் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடலில்  தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் இவர்களை  காப்பாற்றியுள்ளதாக லிபிய கரையோர காவல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களுள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அடங்குவதாகவும் லிபிய கரையோர காவல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.  நன்றி வீரகேசரி










இஸ்ரேலிய பிரதமரின் இந்திய விஜயமும், மோடியின் விருந்துபசாரமும்....

15/01/2018 இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று இந்தியா சென்றுள்ளார்.

130 வணிகப் பிரதிநிதிகள் மற்றும் மனைவி சாராவோடு 6 நாள் பயணமாக இந்தியா சென்றுள்ள இஸ்ரேலிய பிரதமரை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றார்.

இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இஸ்ரேல் பிரதமர், ஆக்ரா, அகதமாபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கும் விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா வந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவருடைய மனைவி சாரா ஆகியோருக்கு பிரதமர் மோடி நேற்று  இரவு  டெல்லியில் உள்ள பிரதமர் மாளிகையில் விருந்துபசாரம் வழங்கியுள்ளார்.

இவ் விஜயத்தின் போது பிரதமர் மோடியும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் இருநாட்டு வர்த்தக நடவடிக்கைக்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான  விடயங்களைப் பற்றி ஆலோசிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையில் 1,700 கோடி ரூபா பெறுமதியான பல்வேறு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அண்மையில் இடம்பெற்ற  ஜெருசலேம் விவகாரத்தில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐ.நா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் இஸ்ரேலிய பிரதமர் ஒருவர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி






பை பை தீவில் வெடித்த அதிவேகப் படகு : 16 பேர் காயம்

தாய்லாந்தின் பை பை தீவில் அதிவேகப் படகொன்று திடீரென்று வெடித்ததில் 16 பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பூகேட் தீவிலிருந்து பை பை தீவுக்கு சென்று கொண்டிருந்த குறித்த அதிவேகப்படகின் இயந்திரம் திடீரென்று  தீப்பிடித்ததைத் தொடர்ந்து படகு வெடித்துள்ளது.
குறித்த அதிவேகப்படகில் 31 பயணிகள் இருந்துள்ளனர். இவர்களில் சீனாவைச் சேர்ந்த 27 சுற்றுலாப் பயணிகள் அடங்குகின்றனர்.
14 சுற்றுலாப் பயணிகளும் 2 மாலுமிகளும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பெருமளவானோர் அடங்குகின்றனர்.
காயமடைந்தவர்களில் சிலர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டு திரும்பியுள்ளதோடு சிலர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் இதுவரையில் அறியப்படாத நிலையில் அந் நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளது.  நன்றி வீரகேசரி






No comments: