16/01/2018 யாழ். பொது நூலகத்துக்கு ஒரு இலட்சம் புத்தகங்களை அன்பளிப்புச் செய்யும் முயற்சியில் 40 ஆயிரம் புத்தகங்களைத் திரட்டியிருப்பதாக தமிழகம் தெரிவித்துள்ளது.
90 ஆயிரம் அரிய வகைப் புத்தகங்கள் மற்றும் ஓலைச் சுவடிகள் அடங்கிய யாழ் பொது நூலகம் 1981ஆம் ஆண்டு விஷமிகளால் எரிக்கப்பட்டது. சர்வதேச புத்திஜீவிகளையும் கல்வியியலாளர்களையும் கடும் கவலைக்குள்ளாக்கியிருந்தது இச்சம்பவம்.
யுத்தத்தின் பின் மீண்டும் நூலகம் திருத்தியமைக்கப்பட்டாலும் அதில் உள்ள நூல்களின் வகைகளும் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கின்றன.
இந்த நிலையில், யாழ். பொது நூலகத்துக்கு ஒரு இலட்சம் புத்தகங்களைத் திரட்டித் தரும் முயற்சியில் தமிழகத்தின் நூலகங்களின் இயக்குனரகம் இறங்கியுள்ளது.
தமிழகமெங்கிலும் இருந்தும் நூலகங்கள், பதிப்பகங்கள், புத்தக விற்பனை நிலையங்கள் மற்றும் நலன்விரும்பிகளிடமிருந்து இதுவரை 40 ஆயிரம் புத்தகங்களைச் சேகரித்திருப்பதாக இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
தற்போது சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்றுள்ள பதிப்பகங்களிடமும் புதிய தலைப்புகளிலான புத்தகங்களைத் தந்துதவுமாறும் இயக்குனரகம் கேட்டுள்ளது.
முன்னதாக, இரண்டு தொகுதிகளாகப் புத்தகங்களை அனுப்பத் திட்டமிடப்பட்டிருந்தபோதும் தற்போது ஒரே தொகுதியில் புத்தகங்களை அனுப்பவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, பெப்ரவரி மாதமளவில் யாழ். நூலகத்துக்கு குறித்த புத்தகங்கள் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  நன்றி வீரகேசரி