உதவிடுமா ! - எம் . ஜெயராமசர்மா


.image1.JPG


           பிறந்திடும் போது இறப்பினைப் பற்றி 
                நினைந்திடும் மனிதர் உலகினி லுண்டா 
          பிறப்புக்கும் இறப்புக்கும் இடையினில் தானே
                  பெரும் போராட்டம் நடக்குது இங்கே 
           சொத்துக்கள் சேர்ப்பதும் சொகுசெலாம் காண்பதும் 
                    நித்தியம் என்று நினைக்கிறார் மனிதர்
            எத்தனை இடர்கள் வருமென நினையா
                     இருப்பதைப் பெருக்க நினைக்கிறார் நாளும் !

           வாழும்வரை வாழுங்கள் வகைவகையாய் சுவையுங்கள்
                    நாளைபற்றி நினைக்காமல் நன்றாக மகிழுங்கள் 
           ஊணுறக்கம் தனைமறந்து உழையுங்கள் உழையுங்கள்
                    உங்களுக்குப் பின்னாலே உங்கள்சொத்து யாருக்கு 
           உயிருடம்பில் இருக்கும்வரை உங்கள்சொத்து உங்களுக்கே
                     உயிர்பிருந்து போனபின்னால் உங்கள்சொத்து என்னவாகும்
             பிள்ளைகளும் பேரர்களும் பிய்த்தெடுத்து நிற்பார்கள்
                      அவர்களுக்குள் போராட்டம் ஆரம்பம் ஆகிவிடும் !


            மனைவி பிரிந்துவிட்டால் வாழ்க்கையே கசந்துவிடும் 
                      மகிழ்ச்சி அமைதியெல்லாம் மங்கியே இருந்துவிடும்
            சேர்த்துவைத்த சொத்தெல்லாம் பார்த்துநிற்கும் ஓரக்கண்ணால்
                        சிந்தனையோ எமைவிட்டு சிதறியே சென்றுநிற்கும்
              ஆறுதலைக் கூறிநிற்க வந்திடுவர் சிலமக்கள்
                          ஆஸ்த்திதனை மனமெண்ணி வந்தணைவார் சிலமக்கள் 
               தேறுதலும் ஆறுதலும் உயிருள்ள உடம்பினுக்கே 
                           உயிர்பிரிந்து போனபின்னர் உங்கள்சொத்து யாருக்கோ !

             இல்லறத்தில் இருந்திடுங்கள் இன்பமாய் வாழ்ந்திடுங்கள்
                     பிள்ளைச்செல்வம் பெற்றிடுங்கள் பேணி வளர்த்திடுங்கள்
              நல்லகல்வி கொடுத்திடுங்கள் நற்றுணையாய் இருந்திடுங்கள்
                       நாளுமவர் உயர்ச்சிக்காய் நாழுமே உழையுங்கள்
               ஆளாக்கி விட்டபின்னர் அன்புடனே இருந்திடுங்கள்
                          அவர்களுக்கு வேண்டியதை ஆசையுடன் கொடுத்திடுங்கள்
                 அவர்கள்தான் கதியென்று அடிமனதில் பதியாது
                            அன்றாடம் வாழ்வுதனை அகமகிழ வாழுங்கள் !


                எதிர்பார்ப்பு எப்பவுமே ஏமாற்றம் தந்துவிடும்
                          இருக்கின்ற வாழ்வுதனை பொறுப்புடனே வாழுங்கள்
                 கிடைக்கின்ற வாய்ப்புகளை முடக்கிவிட நினைக்காதீர்
                           மடைத்தனமாய் மகிழ்ச்சியினை மழுங்கடிக்க முயலாதீர்
                   கொடுத்துநிற்கத் தயங்காதீர் குதூகலத்தைத் தொலையாதீர் 
                            எடுத்துவைத்துச் சேமித்து இல்லையென வாழாதீர்
                    பிடித்தமுடன் வாழுங்கள் பேராசை விட்டிடுங்கள்
                                அடுத்தவர்கள் வியந்துநிற்க ஆனந்தமாய் வாழுங்கள் !

             
            இருக்கும் வரையினிலே இன்பமாய் வாழுங்கள்
                  கொடுக்கும் பொருளையெல்லாம் கொடுத்துமே மகிழுங்கள்
            சேர்த்துவைக்கும் எண்ணமதைச் சிந்தனையில் கொள்ளாதீர்
                    ஆர்க்குமே பாராமாய் இருந்துவிட நினையாதீர் 
            வாழுகின்ற வாழ்நாளில் வண்ணமுற வாழுங்கள்
                    செய்கின்ற அத்தனையும் சீராகச் செய்யுங்கள்
             உங்கள்வாழ்வு உங்களிடம் என்பதையே உணருங்கள் 
                    உயிர்பிரிந்தால் வாழ்வெமக்கு உதவிடுமா சிந்தியுங்கள் !


     


               எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா
                     




1 comment:

Unknown said...

What a wonderful lines..Remarkable one!
Latest World News in Tamil