“என்ன பெத்த ஆத்தா... கண்ணீரதான் பார்த்தா!”


26 ஆண்டுகள் சிறை வாழ்க்கை. சுமார் பத்தாயிரம் இரவுகள், பகல்கள்! ஒவ்வொரு நாளும் எத்தனை கொடூரமானதாய் நகர்ந்திருக்கும்?

19 வயதில் இழுத்துச் செல்லப்பட்ட அறிவு, 45 வயதில் பரோலில் வந்துள்ளார்.  கால் நூற்றாண்டு காலம் என்பது மனித இனத்தின் வரலாற்றில் மிக நீண்டதுதான். 26 ஆண்டுகளுக்கு முன், கைபேசி கிடையாது; இணையம் கிடையாது; நால்வழிச் சாலைகள் கிடையாது; வானளாவிய கட்டடங்கள் கிடையாது. இவை எதையுமே அறிவு பார்த்ததில்லை. அறிந்திருக்கலாம். ஆனால், அனுபவித்ததில்லை.


வெளியில் வாழ்ந்த 19 ஆண்டு காலத்தில், தான் பார்த்த, அனுபவித்த பலவற்றையும் கடந்த 26 ஆண்டுகளில் அவர் பார்க்கவில்லை. அந்தப் பட்டியலில் முதன்மையாக வருவது இரவு வானும், நிலவும், நட்சத்திரங்களும்தான். சிறைக்குள் மாலை ஆறு மணிக்குப் பிறகு, அவர் கண்டதெல்லாம் மூன்று சுவர்களும் ஒரு கம்பிக் கதவும்தான். ஆகஸ்ட் 24-ம் தேதி, பரோலில் வீட்டுக்கு வந்த நாளில், ஆசை ஆசையாக நிலாவைப் பார்த்தார், அறிவு. ஒளிரும் அமைதியுடன் அப்படியே இருந்தது, நிலா. ஆனால், மனிதர்களின் முகங்கள் மாறிப்போயிருந்தன.

தினந்தோறும் அறிவு எதிர்கொள்ளும் கேள்வி, “என்னை அடையாளம் தெரிகிறதா?” என்பதுதான். தான் பழகிய அத்தனை முகங்களுடனும் ஒப்பிட்டு ஒப்பிட்டுக் களைத்துப்போகிறது அறிவின் மூளை. யாரென அடையாளப்படுத்திக்கொண்ட அடுத்த கணம் கட்டித் தழுவி, “என்னை மறந்துவிட்டாயா அறிவு?” என்று கண்ணீர் விடுகின்றனர். அறிவுடன் பள்ளியில் படித்த நண்பர் ஒருவர், தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வருகிறார். அனைவரையும் அறிமுகப்படுத்திய அவர், தன் மகனை மட்டும் அறிமுகப்படுத்தவில்லை. அந்தச் சிறுவனைப் பார்த்து, ‘‘உன் பெயர் என்ன?” என்று அறிவு கேட்கிறார். ‘‘பேரறிவாளன்’’ என்று சொன்னதும், அவனை கண்ணீர்மல்கக் கட்டியணைத்துக்கொள்கிறார் அறிவு.
முன்பின் அறிவைச் சந்தித்திராத எத்தனையோ பேர், அறிவின் கையைப் பிடித்துக்கொண்டு, “அண்ணா உங்களைப் பார்க்கத்தான் வெகுதொலைவிலிருந்து வந்துள்ளோம்” என்று நெகிழ்கின்றனர். அந்தத் தருணத்தில், அற்புதம் - குயில்தாசனின் மகனாக மட்டுமல்ல... உலகெங்கும் உள்ள பல தமிழ்க் குடும்பங்களுக்கு உறவாகி நின்றார், அறிவு.

அத்தனை பேரின் அன்பையும் ஒரே மாதிரியாக வாஞ்சையுடன் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் அறிவின் பக்குவம் வியப்பூட்டுகிறது. மரண தண்டனை சிறைவாசியாக தனிமைச் சிறையில் இருந்தபோது, பல முறை தூக்கிலிடுவதற்கான நாள் குறிக்கப்பட்ட ஒரு சிறைவாசியாக, காவல் துறையின் கொடூரமான சித்ரவதைகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அனுபவித்த ஒருவராக இருந்தபோதும், அறிவிடமிருந்து அந்தப் புன்னகையை மட்டும் எவராலும் பறிக்க முடியவில்லை.

அவருக்குப் பிடித்த உணவைச் சமைத்துத் தருவதில் உறவுகளுக்குள் போட்டி. பக்கத்து வீட்டு இஸ்லாமிய குடும்பத்தினர், வீட்டுக்கே வந்து பிரியாணி சமைத்துக் கொடுக்கிறார்கள். அறிவுக்கு மிகவும் பிடித்தது மீன் உணவு. ஆனால், சிறைச் சட்டங்களின்படி, சிறைக்குள் மீன் சமைப்பதில்லை. 26 ஆண்டுகளுக்குப்பின் மீன் உணவைச் சாப்பிட்டார். “அம்மா... இது நீங்க செஞ்சதுதானே? அதே சுவை...” என்றதும், தாயின் கண்களில் கண்ணீர் கசிகிறது.

தந்தையின் சிகிச்சைக்காக வந்த மகன், படுத்தப் படுக்கையாக இருக்கும் தந்தையை இந்த ஒரு மாத காலத்தில் எழுந்து அமரும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளார். ஆனால், மகனை மீண்டும் சிறைக்கு அனுப்புவது என்பது அந்தத் தந்தையின் மனநிலையையும் உடல் நிலையையும் எப்படி பாதிக்கப்போகிறதோ தெரியவில்லை.
இரவு நேரத்தில் மட்டுமே குடும்பத்தினருடன் உரையாட அவருக்கு நேரம் கிடைக்கிறது. அந்த நேரத்தில், சிறுவயது நிகழ்வுகளை நினைவு கூர்வதும், சகோதரிகளுடனும் அவர்களின் குழந்தைகளுடனும் கேலி பேசி சிரிப்பதும் எனப் பொழுதுபோகிறது. அறிவு நன்றாகப் பாடுவார். இளையராஜாவின் குரல், அறிவுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். அறிவின் அக்கா மகன் ஒரு குண்டானைக் கவிழ்த்துப்போட்டுத் தாளம்போட, பாட்டுக் கச்சேரி இரவில் தொடங்குகிறது. அப்போது, இளையராஜாவின் குரலில் அறிவு பாடிய பாடல்களில் ஒன்று...

பொன்னப் போல ஆத்தா
என்னப் பெத்து போட்டா...
என்னப் பெத்த ஆத்தா
கண்ணீரதான் பார்த்தா...
சொல்லி சொல்லி ஆறாது
சொன்னா துயர் தீராது...


 எத்தனை பொருத்தமானப் பாடல்! அந்தத் தாய் - மகன் உறவு நம்மை கலங்கவைக்கிறது.

‘அவ்வளவுதான். எல்லாம் முடிந்தது’ என முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட தன் கதைக்கு, வலிக்க வலிக்க அடுத்தடுத்த அத்தியாயங்களை எழுதி உயிர் கொடுத்தார் பேரறிவாளன். சிறையின் கொடூரங்களுக்கு மத்தியிலும், நீதியைத் தேடியடையும் துடிப்பு அவரை நகர்த்திச் சென்றது. நடுக்கடலில் மூழ்கிவிட்ட நீதி எனும் கப்பலை, சிறிது சிறிதாய் நகர்த்தி, கரைக்கு மிக அருகில் நிறுத்தியிருக்கிறார். அது கரையேற வேண்டும். பேரறிவாளன், 30 நாள்கள் கண்ட இந்த நிலா, பேரொளி மிக்க சூரியனாய், அவர் வாழ்வின் நிரந்தர விடியலாய் மாற வேண்டும்.
http://www.vikatan.com/juniorvikatan/2017-sep-27/society/134703-poonguzhali-discuss-about-perarivalan.html 
19 வயதில் இழுத்துச் செல்லப்பட்ட அறிவு, 45 வயதில் பரோலில் வந்துள்ளார். கால் நூற்றாண்டு காலம் என்பது மனித இனத்தின் வரலாற்றில் மிக நீண்டதுதான். 26 ஆண்டுகளுக்கு முன், கைபேசி கிடையாது; இணையம் கிடையாது;

No comments: