இலங்கைச் செய்திகள்


தண்ணீர் உரிமம் தருவதாகக் கூறி பணம் வசூலித்த கும்பலுக்கு யாழில் நடந்த கதி

தொடர்ந்தும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை : 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..!

மூதூர் மாணவிகள் துஷ்பிரயோகத்தை கண்டித்து வித்தியானந்தா கல்லூரி மாணவர்களால் ஆர்ப்பாட்டம் !

வடக்கின் காங்கேசன்துறையிலிருந்து தெற்கின் தெய்வேந்திர முனை நோக்கிய மனிதாபிமான ரயில் பயணம்

தெற்கில் அனாதரவாகியுள்ள மக்களுக்கு வடக்கிலிருந்து நிவாரணங்கள்

ஜோசப் பரராஜசிங்கம் கொலை : பிள்ளையான் உட்பட 5 பேரின் விளக்கமறியல் நீடிப்பு.!

நாமலுக்கு பிணை












தண்ணீர் உரிமம் தருவதாகக் கூறி பணம் வசூலித்த கும்பலுக்கு யாழில் நடந்த கதி

05/06/2017 யாழ்.மாவட்டத்திற்கு தண்ணீர் விநியோகஸ்த்தர் உரிமம் தருகிறோம் எனக் கூறி பலரிடம் பணத்தை கொள்ளையிட்டவர்கள் யாழ்.நல்லூர் சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து பாதிக்கப்பட்டவர்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.
“அக்குவா சேவ்” என்ற பெயரில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனத்தைச் சார்ந்தவர்கள். தமது தண்ணீரை யாழ்.மாவட்டம் முழுவதற்கும் விநியோகம் செய்வதற்கான உரிமத்தை வழங்குவதாகக் கூறி யாழ்.மாவட்டத்தில் சுமார் 30 பேருக்கு மேற்பட்டவர்களிடம் பணத்தை பெற்றுள்ளனர்.
அவ்வாறு பணம் வழங்கிய பலருக்கு தண்ணீர் வழங்கப்படாததுடன் சிலருக்கு வழங்கப்பட்ட தண்ணீர் சுகாதார நியமங்களுக்கு அமைவாக இல்லை எனக்கூறி நுகர்வோர் அதிகாரசபையினால் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த நிறுவனத்துடன் தொடர்பு கொண்டபோது பலர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பணத்தை இழந்த பலர் அமைதியாக இருந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அண்மையில் ஒன்று கூடி எடுக்கப்பட்ட தீர்மானித்திற்கு அமைவாக மேற்படி தண்ணீர் தயாரிப்பு நிறுவத்தை சேர்ந்தவர்களை யாழ்.நல்லூர் சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்து ஒருவருக்கு புதிதாக வியோகஸ்த்தர் உரிமம் பெறுவது போல் பாவனை செய்து மேற்படி நிறுவனத்தின் முக்கியஸ்த்தர்கள் இருவரை பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
நேற்று மாலை 7 மணிக்கு குறித்த நிறுவனத்தை சார்ந்தவர்களை மடக்கிப் பிடித்த பாதிக்கப்பட்டவர்கள் அவர்களை நையப்புடைத்ததன் பின்னர் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் 2011 ஆம் ஆண்டு தொடக்கம் மேற்படி தண்ணீர் தயாரிப்பு நிறுவனம் இவ்வாறு விநியோகஸ்தர் உரிமம் வழங்குவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் பணம் செலுத்தியமைக்கான சான்றுகள் மற்றும் வழங்கப்பட்ட தண்ணீர் விற்பனைக்கு தடை செய்யப்பட்டமைக்கான சான்றுகள் அனைத்தையும் வைத்திருக்கின்றனர். அதேபோல் யாழ்.மாவட்டத்தில் மட்டும் அண்ணளவாக சுமார் 3 தொடக்கம் 4 கோடி ரூபா பணத்தை மேற்படி தண்ணீர் நிறுவனம் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது தொடர்பில் யாழ் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ள நிலையில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 














தொடர்ந்தும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை : 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை..!

06/06/2017 நாட்டில் தென்னிலங்கை மற்றும் மலையாக பகுதிகளில் தொடர்ந்தும் மலையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்வதுடன் ஏழு மாவட்டங்களின் மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அனர்த்தத்தில் காணமால் போன  79 பேரை தேடும் பணிகள்  தொடர்ந்த வண்ணம் உள்ளது. பாதிக்கப்பட்ட 21 ஆயிரத்து  681 பேர் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 
Image result for 7 மாவட்டங்களின் மண்சரிவு எச்சரிக்கை
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 6  இலட்சத்து 83 ஆயிரத்து 831 ஆக உள்ளதுடன் 6 ஆயிரத்து 270 குடும்பங்களை சேர்ந்த 21 ஆயிரத்து  681 பேர் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த அனர்த்தங்களில் சிக்குண்டு பலியானவர்களின் எண்ணிக்கை 224 ஆக உள்ள நிலையில் காணாமால் போனார்  79 பேரை தேடும் பணிகளை பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். 
இதனிடையே ஏழு மாவட்டங்களுக்கான அனர்த்த எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களால் நீடிக்கப்பட்டுள்ளது.  இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, மாத்தறை, ஹம்பந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கையே இவ்வாறு தொடர்கின்றது. குறித்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் பட்சத்தில் அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டிட ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.அதேபோல் மண்சரிவு எச்சரிக்கை காரணமாக களுத்துறை - புளத்சிங்கள  திப்பொட்டாவ மலை பகுதியில் இருந்து 22 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.
இதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் தொடர்ந்தும் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
தென்னிலங்கையின் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பெரும்பாலும் சாதாரண நிலைமையை அடைந்துள்ளது. பாதிக்குக்கு உள்ளான சப்ரகமுவ மாகாணத்தின் சேதமடைந்த 10 பாடசாலைகள், கிழக்கு மாகாணத்தின்  சேதமடைந்த 10 பாடசாலைகள் மற்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ள 25 பாடசாலைகளை தவிர்ந்த ஏனைய  பாடசாலைகள் அனைத்தும் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை ஹம்பாந்தோட்டை, காலி ஆகிய மாவட்டங்களின் வெள்ள நீர் வடிந்தோடியுள்ள போதிலும் ஒருசில பகுதிகளில் நான்கு அடி அளவில் நீர் தேங்கி நிற்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
அதேபோல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான மருத்துவ வசதிகளையும், முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான நிவாரண பொருட்களையும் வழங்கும் நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் தமது மீட்பு மற்றும் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.   நன்றி வீரகேசரி 












மூதூர் மாணவிகள் துஷ்பிரயோகத்தை கண்டித்து வித்தியானந்தா கல்லூரி மாணவர்களால் ஆர்ப்பாட்டம் !

06/06/2017 திருகோணமலை மூதூர் பகுதியில் கடந்தவாரம் பாடசாலை வளாகத்தில் வைத்து மூன்று பாடசாலை சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை கண்டித்து முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மாணவர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
காலை ஒன்றுகூடலுக்கு பின்னர் கல்லூரிக்கு முன்பாக வீதியோரமாக கூடிய மாணவர்கள் இந்த கண்டன ஆர்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் "மாணவர்களை துஷ்பிரயோகம் செய்யாதீர்" பிஞ்சுகளின் வாழ்க்கையில் நஞ்சுவேலை செய்யாதே" நீதி வேண்டும் மாணவர்களுக்கு நீதி வேண்டும்" மாணவர்களை சுயமரியாதையோடு வாழ விடுங்கள்" போன்ற கோஷங்களை எழுப்பியவாறும் சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை தங்கியவாறும் கண்டன ஆர்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
உடனடியாக குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தகுந்த தண்டனை என்பதோடு இவ்வாறு பலமுறை பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவர்களுக்காக நாம் வீதியில் இறங்கி நீதி கேட்டும் இன்னும் அந்த குற்றங்களை இழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படாத நிலையில் இன்னும் இவ்வாறான குற்றங்கள் மாணவர்களுக்கு எதிராக இழைக்கப்படுவதை எம்மால் இனியும் பொறுக்க முடியாது எனவும் குற்றங்களை புரியும் பாதகர்களுக்கு விடுதலைப்புலிகளின் காலத்தில் வழங்கப்பட்டது போன்று உடனடியாக மரணதண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.
நன்றி வீரகேசரி















வடக்கின் காங்கேசன்துறையிலிருந்து தெற்கின் தெய்வேந்திர முனை நோக்கிய மனிதாபிமான ரயில் பயணம்

06/06/2017 நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மிக மோசமாக பாதிக்கபட்ட தென்பகுதிக்கு உதவும் நோக்குடன் மனிதாபிமான ரயில் பயணமொன்றை வடக்கின் காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு  'மக்கள் தொடர்பாடல்' என்ற இந்த செயற்திட்டத்தை மொபிடெல் மற்றும் புகையிரத திணைக்களத்தின் அனுசரணையுடனும் ரூபவாகினி வலையமைப்பின் ஊடக அனுசரணையுடனும் செயற்படுத்தப்படவுள்ளது. 
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மிக மோசமாக பாதிக்கபட்ட மாத்தறை பிட்டபத்தர டட்லி சேனாநாயக்க மகா வித்தியாலயத்தினை சுத்தப்படுத்தி பாடசாலை சமூகத்திற்கு மீள கையளிக்கவும் அம்மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் தேவையான அத்தியாவசிப் பொருட்கள் மற்றும் மருத்துவ, உளவள ஆலோசனைகளை வழங்குவதற்கும், இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்ட மக்களுக்கு வழங்க முடிந்தளவு உதவிகளை வழங்குவதற்குமாக இந்த மனிதாபிமான ரயில் பயணமானது எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை காலை 6 மணிக்கு வடக்கின் காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. 
மக்களிடம் இருந்து பாடசாலை உபகரணங்கள் மற்றும் அப்பியாசக் கொப்பி, புத்தகங்கள், தலையணை, மெத்தை, நுளம்பு வலை, சவர்க்காரம், பற்பசை, சுத்தப்படுத்தும் உபகரணங்கள், கட்டில் விரிப்புக்கள், துவாய், பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஆடைகள், பாடசாலை சீருடைகள், புத்தகப் பைகள், சப்பாத்துக்கள், செருப்புக்கள் மற்றும் சமயலறை உபகரணங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
குறித்த மனிதாபிமான ரயில் பயணமானது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மதவாச்சி, அனுராதபுரம், மாஹோ, கணேவத்த, குருணாகல், பொல்காவல, அலவ்வ, அம்பேபுஸ்ஸ, மீரிகம, வெயங்கொட, கணேமுல்ல, கம்பஹா, ராகம, களனி, ஹுணுப்பிட்டிய, தெமட்டகொட, மருதானை, கொழும்பு கோட்டை, கல்கிசை, மொரட்டுவ, பாணந்துறை ஆகிய ரயில் நிலையங்களில் உதவிப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக நிறுத்தப்படவுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை  மனிதாபிமான ரயிலானது ரயில் நிலையத்திற்கு வரும்வரை மேற்குறிப்பிடப்பட்டுள்ள ரயில் நிலையங்களில் உங்கள் உதவிப் பொருட்களை கையளிக்க முடியும்.
இந்த புகையிரத்தில் மாத்தறைக்கு பயணித்து மனிதாபிமான உதவிகளை தொண்டரடிப்படையில் மேற்கொள்ள ஆர்வமுள்ளோர்  0771910630  என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும், தங்குமிடம், உணவு மற்றும் மீள் திரும்புவதற்கான பயண வசதிகள் இலவசமாக ஏற்படுத்தி கொடுக்கப்படுமெனவும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி















தெற்கில் அனாதரவாகியுள்ள மக்களுக்கு வடக்கிலிருந்து நிவாரணங்கள்

07/06/2017 வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவால் பாதிப்புற்றுள்ள தெற்கு மக்களிற்கு நிவாரணங்கள் வழங்கும் நோக்குடன் யாழ் மாவட்ட மக்களால் சேகரிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களை யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனினால் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடம் நாளை கையளிக்கப்படவுள்ளது. 
வடக்கு மற்றும் தெற்கு மக்களிடையே சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்பின் ஒரு அங்கமாகவே மேற்படி நிகழ்வு  முன்னெடுக்கப்படுகின்றது. 
வழங்கப்பட்ட அனைத்து பொருட்களும் களுத்தரை, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்புற்றுள்ள மக்களிற்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக கப்பற்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி












ஜோசப் பரராஜசிங்கம் கொலை : பிள்ளையான் உட்பட 5 பேரின் விளக்கமறியல் நீடிப்பு.!

07/06/2017 தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட 5 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
Image result for பிள்ளையான் விளக்கமறியல் நீடிப்பு virakesari
சந்தேகநபர்கள் இன்று காலை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் ஜுலை மாதம் 25ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், அந்த கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஷ்டர் என்றழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா என்றழைக்கப்படுகின்ற கனநாயகம், இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் எம்.கலீல் மற்றும் கடந்த மாதம் கைதுசெய்யப்பட்ட வினோத் எனப்படும் வெலிக்கந்தையை சேர்ந்த மதுசங்க ஆகியோரே தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் வினோத் எனப்படும் வெலிக்கந்தையை சேர்ந்த மதுசங்க கடந்த மாதம் கைதுசெய்யப்பட்டிருந்தார். நன்றி வீரகேசரி











நாமலுக்கு பிணை

06/06/2016 பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் நிதி மோசடி தொடர்பிலான வழக்கில் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
Image result for நாமலுக்கு பிணை 
மேல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது. 
நாமலுக்கு சொந்தமான நிறுவனம் ஒன்று பிறிதொரு நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 30 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டதாக இவ்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி







No comments: