புள்ளிகளும் கோலங்களும் ! - எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் ...

.

                        
   வெள்ளை மனத்தினிலே கறுத்தப்புள்ளி வந்துவிட்டால்
   வினையாவும் குடிபுகுந்து விட்டதென  நாம்நினைப்போம்
    புள்ளியினால் கோலங்கள் மாறுவதைக் கண்டுவிட்டால்
    நல்லபுள்ளி வருவதற்கு நாம்முயற்சி செய்துநிற்போம் !

   புள்ளியினால் கோலங்கள் புறப்பட்டு வந்துநிற்கும்
   புள்ளியது பிழைத்துவிடின் அலங்கோலம் ஆகிவிடும்
   புள்ளியினை நாமென்றும் எள்ளிநகை யாடிவிடின்
   நல்லகோல மெல்லாமே நரகலோக மாகிவிடும் !

   நல்லவராய் இருப்போரை நல்லபுள்ளி எனவழைப்போம்
   வல்லவராய் இருப்போரும் நல்லபுள்ளி ஆகிடுவார்
   சொல்லவல்ல விஷயமெல்லாம் நல்லபுள்ளி பெற்றுவிடும்
   நல்லபுள்ளி நிறைந்துவிடின் நன்மையங்கே குவிந்துவிடும் !

  எழுத்துக்குப் புள்ளிவைத்தால் மெய்யெழுத்தாய் மிளிர்ந்துவிடும்
  இழுக்குடைய செயல்செய்தால் மெய்மையங்கே அழிந்துவிடும்
  புள்ளிவைத்த மானைத்தான் யாவருமே விரும்பிடுவார்
  கள்ளநிறை நரியதனை காதலிப்பார் யாருமுண்டோ !



  புள்ளியது இடம்மாறின் கோலமெல்லாம் மாறிவிடும்
  கரும்புள்ளி செம்புள்ளி காறியே உமிழவைக்கும்
  நெற்றியிலே வைக்கும்புள்ளி வெற்றியினைக் காட்டிநிற்கும்
  நற்றமிழில் புள்ளியது நவின்றுவிடும் இலக்கணமே !

  ஏட்டினிலே புள்ளிவைத்தால் எல்லாமே கிழிந்துவிடும்
  புள்ளியில்லா எழுத்தினிலே தெள்ளுதமிழ் வளர்ந்ததுவே
  பிற்காலப் பெரும்புலவோர் புள்ளியினைத் தான்புகுத்தி
  இக்காலத் தமிழெழுத்தை எமக்களித்தார் ஏற்றமுடன் !

 பொட்டென்னும் பேரினிலே புள்ளிவைப்பார் தமிழ்மக்கள்
 கட்டழைக் காட்டியது களிப்பினையே நல்கிநிற்கும்
 மங்கலத்தைக் காட்டுதற்கு குங்குமத்தைப் பொட்டுவைத்து
 சந்தனமும் சேர்த்திடுவார் சந்தோஷம் கூடிவரும் !

பெரும்பணத்தைக் கொண்டாரை பெரும்புள்ளி எனவழைப்போம்
அரசியலில் பெரும்புள்ளி அனைத்தையுமே அள்ளிவிடும் 
பெரும்புள்ளி பலபேரும் பேயாட்டம் ஆடிடுவார்
புள்ளியது பெயராலே புரட்சியே வெடித்தும்விடும் !

வாசலிலே கோலமிட்டு மங்கலத்தைக் காட்டிடுவோம்
மாக்கோலம் பூக்கோலம் வகைவகையாய் போட்டிடுவோம் 
புள்ளிவைத்துக் கோலமிடும் புள்ளிமானைக் குறிபார்க்கும்
நல்லபுள்ளி கெட்டபுள்ளி நாமறிந்தால் நல்லதன்றோ !

  நல்லபுள்ளி நல்லகோலம் நலம்பயங்கும் யாவருக்கும்
  அல்லல்தரும் புள்ளியினால் அவதூறே வந்துநிற்கும் 
  புள்ளியினைத் தேர்ந்தெடுத்து புதுக்கோலம் அமைத்திடுவோம்
  நல்லதெல்லாம் எம்வாழ்வில் அமைந்துவிடும் புள்ளியினால் !

No comments: