உலகச் செய்திகள்


சிரிய எல்லைப் பகுதியில் தாக்குதல்; 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி

டி.டி.வி.தினகரனுக்கு நீதிமன்ற காவல் ; டில்லி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

 ‘நிர்பயா’ கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை

எய்ட்ஸ் நோயை தடுப்பதற்கு புதிய வழியை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள்..! 










சிரிய எல்லைப் பகுதியில் தாக்குதல்; 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி

03/05/2017 சிரிய - ஈராக் எல்லைப் பகுதியில் குர்திஷ் தலைமையிலான ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் முப்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், முப்பதுக்கும் அதிகமானோர் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.
ஹஸ்ஸாகே மானிலத்தில் ஈராக் மற்றும் சிரிய அகதிகளுக்காக அமைக்கப்பட்ட முகாமைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து அங்கிருந்த உள்ளூர் பாதுகாப்பு வீரர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குண்டுத் தாக்குதலும் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளபோதும், இது தற்கொலைத் தாக்குதலாக இருக்குமா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.   நன்றி வீரகேசரி 









டி.டி.வி.தினகரனுக்கு நீதிமன்ற காவல் ; டில்லி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

01/05/2017 தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி.தினகரனுக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து தீர்ப்பளித்துள்ளது டெல்லி மாவட்ட நீதிமன்றம்.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக இடைத்தரகர் சுகேஷ் சந்தரை டில்லி காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து டில்லி குற்றப்பிரிவு பொலிஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. 
இதனிடையே 5 நாள் விசாரணை முடிந்த பின்பு இன்று டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
மே 15 வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் திகார் சிறையில் அடைக்கப்படுகிறார் டி.டி.வி.தினகரன்.    நன்றி வீரகேசரி 










 ‘நிர்பயா’ கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை

05/05/2017 பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘நிர்பயா’ கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில், குற்றவாளிகள் நால்வருக்கும் மரண தண்டனையை உறுதிசெய்தது டெல்லி மீயுயர் நீதிமன்றம்.
வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் நுணுக்கங்களைப் பயன்படுத்தி இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நடைபெற்றதாகவும், மரணத் தறுவாயில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலம் பிரதிவாதிகள் நால்வரும் குற்றவாளிகளே எனச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிப்பதாகவும் தெரிவித்தனர்.
டெல்லியில், தனது நண்பர் ஒருவருடன் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி பேருந்து ஒன்றில் பயணித்துக்கொண்டிருக்கையில், ஆறு பேரடங்கிய குழுவால் கொடூரமான முறையில்  23 வயதேயான நிர்பயா வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். இந்த ஆறு பேரில் ஒருவர் இளம் பராயத்தைச் சேர்ந்தவர்.
சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்பயா, பதின்மூன்று நாட்களின் பின் 29ஆம் திகதி மரணமடைந்தார். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இதையடுத்து பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கான எதிரான புதிய சட்டங்களும் பிறப்பிக்கப்பட்டன. 
குற்றவாளிகள் ஆறு பேரில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இளம் பராயக் குற்றவாளி போதுமான நன்னடத்தைக் காலத்தை சீர்திருத்தப் பள்ளியில் கழித்ததனால் விடுதலை செய்யப்பட்டார். 
பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்கள் எதுவும் வெளிவராதிருக்க அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, ‘நிர்பயா’ என்று பெயர் சூட்டி அந்தப் பேரிலேயே இந்த வழக்கு விசாரணை நடைபெற்று முடிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி













எய்ட்ஸ் நோயை தடுப்பதற்கு புதிய வழியை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள்..! 

04/05/2017 எய்ட்ஸ் நோயை குணப்படுத்துவதற்கு விலங்குகளின் உடல்களை கொண்டு, புதிய மரபணு சிகிச்சை முறை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். 
எய்ட்ஸ் நோயை குணப்படுத்துவது தொடர்பாக அமெரிக்காவின் டெம்பிள் மற்றும் பீட்டர் பல்கலைக்கழகங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் பல வருடங்களாக ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் எலி உடலில் எய்ட்ஸ் கிருமியை செலுத்தி அதை குணப்படுத்தும் வகையில் சிகிச்சையை மேற்கொள்வதற்காக, மனிதனின் மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தி, குறித்த எலியின் உடல்கூறுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி அளிக்கப்பட சிகிச்சை முறை காரணமாக எலியின் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அது எய்ட்ஸ் கிருமியை முற்றாக அழித்துள்ளதாக குறித்த பல்கலைக்கழக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மனித உடம்பில் படிமுறையாக பரவும் எய்ட்ஸ் நோயானது, மேற்குறித்த மரபணு மாற்ற சிகிச்சையின் மூலம் எச்.ஐ.வி. கிருமியாக இருக்கும் போதே இல்லது செய்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு விலங்குகளின் உடல்களில் பரிசோதிக்கப்பட்டுள்ள குறித்த மரபணுமாற்ற சிகிச்சை முறையானது, விரைவில் மனித உடல்களில் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டதன் பின்னர் மருத்துவ உலகிற்கு அறிமுகப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி









No comments: