பளையில் மக்கள் தெங்கு பயிர்ச் செய்கை சபைக்கு எதிராக கிளர்ச்சி
பிரசாந்தனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்.!
பனாமா ஆவணகக்கசிவு இலங்கையில் விசாரணை ஆரம்பம்
பங்களாதேஷ் மத்திய வங்கியில் கொள்ளை ; 8 இலங்கையர்கள் தொடர்பு
கிராம சேவகரின் கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
தாஜுதீன் கொலை : முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது
பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
காணாமல்போன மூவர் வெலிக்கடை சிறையில்
தாஜுதீன் கொலை : பொலிஸ் பரிசோதகருக்கு விளக்கமறியல்
பளையில் மக்கள் தெங்கு பயிர்ச் செய்கை சபைக்கு எதிராக கிளர்ச்சி
19/04/2016 தமது காணிகள் தமக்கே வழங்கப்படும் எனக் காத்திருந்த காணி உரிமையாளர்கள் தமது காணிகள் தமக்கு வழங்கப்படாத நிலையில் பொறுமையிழந்தவர்களாக நேற்றைய தினம் தமது காணிகளுக்குள் நுளைந்து தமது காணிகளுக்கான எல்லைகளையிட்டு காணிகளைத் துப்புரவாக்க முற்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்குச் சென்ற பளை பொலிஸார் மக்களை உடனடியாக அக்காணிகளை விட்டு வெளியேறுமாறும் வெளியேறாது விட்டால் கைது செய்யப்படுவீர்கள் எனவும் எச்சரித்தனர்.
அதற்கு மக்கள் எதிர்ப்புக் காட்டி தமது சொந்தக் காணிகளை விட்டு தாம் ஏன் வெளியேறவேண்டும் என கேள்வியெழுப்பினர். அதனையடுத்து மக்களைக் கைது செய்வதற்காக பெண் பொலிஸார் உட்பட மேலதிக பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவளைக்கப்பட்டு மக்களைக் கைதுசெய்ய முற்பட்ட போது சம்பவத்தைக் கேள்விப்பட்டு அவ்விடத்திற்கு விரைந்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மக்களிடமிருந்து விடயத்தைக் கேட்டு ஆராய்ந்ததன் பின்னர் மக்கள் தங்களுடைய சொந்தக் காணிகளுக்குள்தான் சென்று எல்லையிட்டுக் குடியேற முயற்சிக்கிறார்கள்.
இது நியாயமானதே இதில் என்ன குற்றம் உள்ளது. மக்களது காணிகள் மக்களுக்கே சொந்தமானவை. அதற்காக மக்களை கைதுசெய்ய முடியாது.
மக்களைக் கைது செய்வதாக இருந்தால் இந்த மக்களின் பிரதிநிதியாகிய நான் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ளேன் என்னை முதலில் கைதுசெய்த பின் மக்களைக் கைதுசெய்யுங்கள். மக்கள் தமது சொந்தக் காணிகள் தமக்கே கிடைக்க வேண்டும் என்பதற்காக போராடுகின்றார்கள் எனக் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பளைப் பிரதேசத்திலுள்ள கரந்தாய் கிராமத்தில் 27 பயனாளிகளுக்குச் சொந்தமான 51 ஏக்கர் காணி 1976 ஆம் ஆண்டு காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டிருந்தது.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் தெங்கு பயிர் செய்கைச் சபை இக்காணிகளை அடாத்தாக அபகரித்து தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. அக்காணிகளை முள்வேலி அமைத்து காணிச் சொந்தக்காரர்கள் தமது காணிகளுக்குள் நுளையாத வகையில் செயற்பட்டு வருகின்றது.
இதனால் காணிகளை இழந்த மக்கள் பல்வேறு தரப்பினரிடம் தமது காணிகளை விடுவித்துத் தருமாறு கோரிவந்தனர். இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டுவந்ததையடுத்து கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இவ்விடயம் ஆராயப்பட்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அக்காணிகளை மக்களிடமே கையளிக்குமாறு தீர்மானிக்கப்பட்டது.
மேலதிகமாக மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனாலும் அக்காணிகள் மக்களுக்கே வழங்கப்படவேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்த நிலையிலும் தெங்கு அபிவிருத்திச் சபை சட்டத்திற்கு முரணாகச் செயற்பட்டமையை எதிர்த்தே மக்கள் தமது காணிகளுக்குள் நுளையும் போராட்டத்தை நடத்தினர்.
இறுதியில் மக்களின் போராட்டம் வலுப்பெற்றதை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் பொலிஸ் பொறுப்பதிகாரி கல்யாணரடணவிடம் மேற்படி நிலைமைகளைத் தெளிவுபடுத்தினார்.
அதனையடுத்து எதிர்வரும் இரண்டு வார காலத்தினுள் மக்களின் காணிகளை மக்களுக்கே பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக பொலிஸ் அதிகாரி உறுதிமொழியளித்ததனையடுத்துப் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கதாகும். நன்றி வீரகேசரி
பிரசாந்தனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்.!
19/04/2016 மட்டக்களப்பு - ஆரையம்பதியில் கடந்த 2008ம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் மற்றும் அவரது சகோதரரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று காலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 03ம் திகதி வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும்,பிரசாந்தனுக்கு பிணை வழங்கக் கோரி மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 28ம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. நன்றி வீரகேசரி
பனாமா ஆவணகக்கசிவு இலங்கையில் விசாரணை ஆரம்பம்
19/04/2016 பனாமாவில் பண மோசடியுடன் தொடர்பு கொண்ட இலங்கையர்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள அவற்றுக்குரிய திணைக்களங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வொசிங்டனில் வைத்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர் அமெரிக்கா சென்ற நிதியமைச்சர் அங்கு சர்வதேச ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட போது, பனாமா மோசடிகளுடன் தொடர்புடைய இலங்கையர்கள் குறித்த விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
வரி சலுகையை பெற்றுக் கொள்வதில் தடங்கல் இல்லை.ஆனால் உண்மையான சொத்து விபரங்களை வெளியிடாமல் பதுக்கியமையே சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
அத்துடன் பனாமா ஆவண மோசடியுடன் தொடர்பு கொண்ட நிறுவனங்கள் குறித்த தெளிவான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.என்றாலும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள உரிய திணைக்களங்களுக்கு பூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
பங்களாதேஷ் மத்திய வங்கியில் கொள்ளை ; 8 இலங்கையர்கள் தொடர்பு
20/04/2016 பங்களாதேஷ் நாட்டின் மத்திய வங்கியில் கொள்ளையிட்டதாக கூறப்படும் எட்டு இலங்கையர்கள் உட்பட 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அந்தநாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த வங்கியின் கணினி கட்டமைப்பில் இரகசியமாக ஊடுருவி பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பணத்தை பிறிதொரு வங்கிக் கணக்குக்கு மாற்றிய சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி நடைபெற்றது.
குறித்த பணம் பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கையிலுள்ள சில கணக்குகளுக்கே இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட, விசாரணைகளின் படி இந்த சம்பவம் தொடர்பில் 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்களில் 12 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டினர் எனவும் எட்டுப் பேர் இலங்கையர் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கைக்கு அனுப்பட்டுள்ளதாக, பங்களாதேஷ் பாதுகாப்புப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். நன்றி வீரகேசரி
கிராம சேவகரின் கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
20/04/2016 மட்டக்களப்பு சிவபுரத்தில் கிராமசேவை உத்தியோகத்தர் கொல்லப்பட்டமையை கண்டித்தும் இதற்கு காரணமான சூத்திரதாரிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும் இன்று புதன்கிழமை (20) கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்று அமைதியன முறையில், முன்னெடுக்கப் பட்டிருந்தது.
கடந்த 15.04.2016 சனிக்கிழமை இரவு மர்மமான முறையில் கிராமசேவை உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.
குறித்த கிராம சேவை உத்தியோகத்தரின், மரணச் சடங்கு மகிழுரில் உள்ள அன்னாரது இல்லத்தில் செவ்வாய் கிழமை நடைபெற்று பின்னர் அவர் கடமை புரிந்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திகு அவரது பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்நிலையில் புதன் கிழமை காலை மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கடமை புரிம், பிரதேச செயலாளர் கலநிதி.எம்.கோபாலரெத்தினம். அரச உத்தியோகஸ்தர்கள், அகில இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர்கள், அனைவரும் கறுப்பு பட்டி பதாகைகளை ஏந்தியவாறு அமைத்தியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மரணமடைந்த எமது சக உத்தியோகஸ்தரின் மரண விசாரணையைத் துரிதப்படுத்துங்கள், இனிமேலும் இந்த இரத்த வெறியாட்டம் வேண்டாம், அரசே கிரம உத்தியோகஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கு, பொதுமக்கள் சேவகனுக்கு கிடைத்த பரிசா இது, கயவர்களைக் கைது செய், போன்ற பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை எந்தியவாறு பிரதேச செயலகத்திலிருந்து களுவாஞ்சிகுடி நகர் வரைச் சென்று தமது எதிர்ப்பை வெளிக் காட்டினர். நன்றி வீரகேசரி
தாஜுதீன் கொலை : முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலை தொடர்பிலான ஆதாரங்களை இல்லாதொழித்த குற்றச்சாட்டின் பேரில் நாராஹென்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நன்றி வீரகேசரி
பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
20/04/2016 முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி பிள்ளையான் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டடிருந்தார்.
இந்நிலையிலே் அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி வரை அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
காணாமல்போன மூவர் வெலிக்கடை சிறையில்
21/04/2016 வவுனியா, முத்தையன்கட்டு மற்றும் புளியம்பொக்கணை ஆகிய இடங்களிலிருந்து 10 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமற்போனதாக தெரிவிக்கப்படும் 3 இளைஞர்கள் மாலைதீவிலிருந்து கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது இளைய சகோதரன் 2005 இல் வீட்டைவிட்டு வெளியே விளையாடச் சென்றிருந்த போது காணாமல் போயிருந்ததாகவும் சம்பவம் நடந்து 6 ஆண்டுகளின் பின்னர் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் மாலைதீவில் சிறையில் உள்ளதாக கூறியதாகவும் அவர்களை நேரில் சென்று பார்த்துவிட்டு திரும்பிய கௌரிராஜா கவிதா தெரிவித்தார்.
தனது சகோதரன் உட்பட 3 இளைஞர்களும் மாலைதீவு சிறை யிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதையும் அவர் உறுதிப் படுத்தினார். கணேஸ் இராமச்சந்திரன், நவரத்தினராசா ரஞ்சித், முத்துலிங்கம் யோகராஜா ஆகிய மூவரும் மாலைதீவு மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டுள்ளமைக்கான காரணங்கள் தெளிவில்லாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நன்றி வீரகேசரி
தாஜுதீன் கொலை : பொலிஸ் பரிசோதகருக்கு விளக்கமறியல்
21/04/2016 நாராஹென்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்க பெரேராவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலை தொடர்பிலான ஆதாரங்களை இல்லாதொழித்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று இவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்று புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அவரை கொழும்பு மேலதிக நீதவான் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். நன்றி வீரகேசரி