ரஷ்ய போர் விமானம் துருக்கிய வான் பரப்பில் மீண்டும் அத்துமீறி பிரவேசம்
ஸிகா வைரஸ் பரவல் தொடர்பில் அவசரகால நிலைமை : வெளிநாட்டடு பயணங்கள் ரத்து
கிரேக்கத் தீவில் குவிந்துள்ள உயிர்காப்பு மேலங்கிகள்
தொழுகையில் கலந்துகொள்ளத் தவறிய 14 வயது சிறுவனுக்கு பெற்றோர் முன்னிலையில் மரணதண்டனை
தாய்வானில் பயங்கர நிலநடுக்கம்: இடிபாடுகளிலிருந்து 221 பேர் மீட்பு
பீஜிங்கில் நிலநடுக்கம்: இருவர் பலி, 34 பேர் படுகாயம்
ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 37 பேர் பலி!
ரஷ்ய போர் விமானம் துருக்கிய வான் பரப்பில் மீண்டும் அத்துமீறி பிரவேசம்
01/02/2016 ரஷ்யாவானது துருக்கிய வான் பரப்பில் மீண்டும் அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது எனவும் இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில் பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் துருக்கி எச்சரித்துள்ளது.
சிரிய எல்லையுடனான தனது வான் பரப்பில் ரஷ்யாவின் போர் விமானமொன்று பறந்ததாக துருக்கிய வெளிநாட்டு அமைச்சு தெரிவித்தது. இந்நிலையில் ரஷ்யாவானது இது எந்த அடிப்படையும் அற்ற குற்றச்சாட்டு என மறுப்புத் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் தனது வான் பரப்பில் அத்துமீறிப் பிரவேசித்த குற்றச்சாட்டில் ரஷ்ய போர் விமானமொன்றை துருக்கி சுட்டு வீழ்த்தியதையடுத்து இரு நாடுகளுக்குமிடையிலான பதற்ற நிலை அதிகரித்துள்ளது. ரஷ்யா சிரிய அரசாங்கத்திற்கு ஆதரவாக அந்நாட்டிலுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் ஏனைய போராளி குழுக்களுக்கும் எதிராக கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அந்நாட்டு நேரப்படி 11.46 மணிக்கு குறிப்பிட்ட ரஷ்ய எஸ்.யு-–34 விமானம், ரஷ்ய மொழியிலும் ஆங்கிலத்திலும் தம்மால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை அலட்சியம் செய்து துருக்கிய வான் பரப்பைக் கடந்து சென்றதாக துருக்கிய வெளிநாட்டு அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஆஜராகி விளக்கமளிக்க துருக்கியிலுள்ள ரஷ்ய தூதருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இத்தகைய அத்துமீறல்கள் தொடருமானால் ரஷ்யா கடும் பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என துருக்கிய ஜனாதிபதி தாயிப் எர்டோகன் சனிக்கிழமை எச்சரித்துள்ளார். நன்றி வீரகேசரி
ஸிகா வைரஸ் பரவல் தொடர்பில் அவசரகால நிலைமை : வெளிநாட்டடு பயணங்கள் ரத்து
03/02/2016 சர்வதேச சுகாதார ஸ்தாபனமானது ஸிகா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதையொட்டி சர்வதேச பொது சுகாதார அவசரகால நிலைமையொன்றை திங்கட்கிழமை பிரகடனப்படுத்தியுள்ளது.
நுளம்புகளால் பரவும் இந்த வைரஸ் தாக்கம் காரணமாக குழந்தைகள் குறைபாடுகளுடனும் சிறிய தலைகளுடனும் பிறப்பதாக நம்பப்படுகின்ற நிலையிலேயே மேற்படி பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வைரஸ் எல் சல்வாடோர், பிரேசில், பிரெஞ் பொலினேசியா ஆகிய நாடுகளில் மிக மோசமாக பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தைச் சேர்ந்த மருத்துவ கலாநிதி புரூஸ் அயில்வார்ட் தெரிவித்தார்.
மேற்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ளல் மற்றும் தொற்றைத் தடுத்தல் உள்ளடங்கலான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த அவசர காலநிலை பிரகடனம் தேவையாகவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
அதன் பிரகாரம் இந்தப் பிரகடனம் வைரஸை இனங்காணல், வைரஸ் பரவலை முறியடிப்பதற்கும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குணப்படுத்துவதற்குமான ஆய்வுகளை மேற்கொள்ளல் என்பவற்றை முன்னெடுக்க வழிவகை செய்வதாக உள்ளது.
சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் இடம்பெற்ற சர்வதேச உலக சுகாதார ஒழுங்குபடுத்தல் அவசரகால சபையின் முதலாவது கூட்டத்தின் போது ஸிகா வைரஸ் பரவல் வழமைக்கு மாறான நிகழ்வொன்றாகக் விபரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அந்த சபையின் கூட்டத்தின் போது ஸிகா வைரஸ் சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசரகால நிலைமையொன்றை தோற்றுவித்துள்ளதை அதன் உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
கர்ப்பிணி பெண்கள் அல்லது கர்ப்பம் தரிக்க முயற்சிக்கும் பெண்கள் ஸிக்கா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் அல்லது தள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஸிகா வைரஸ் அபாயகரமான நிலையிலுள்ளதாக கடந்த வாரம் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
கிரேக்கத் தீவில் குவிந்துள்ள உயிர்காப்பு மேலங்கிகள்
03/02/2016 ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஆபத்து மிக்க படகு பயணத்தை மேற்கொண்டு கிரேக்கத் தீவான லெஸ்பொஸை வந்தடையும் குடியேற்றவாசிகளின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மேற்படி குடியேற்றவாசிகளால் அணியப்பட்டு கைவிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிர் காப்பு மேலங்கிகள் அந்த தீவுப் பிராந்தியத்திலுள்ள மொலிவொஸ் கிராமத்தில் 10 ஏக்கர் நிலப் பரப்பில் 5 மீற்றர் உயரத்துக்கு குவிந்திருக்கும் காட்சி ஆளற்ற விமானத்தைப் பயன்படுத்தி படமாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் கிரேக்கத் தீவுகளை தினசரி சுமார் 2,000 குடியேற்றவாசிகள் வந்தடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் கூறுகின்றன.
நன்றி வீரகேசரி
தொழுகையில் கலந்துகொள்ளத் தவறிய 14 வயது சிறுவனுக்கு பெற்றோர் முன்னிலையில் மரணதண்டனை
06/02/2016 ஐ.எஸ். தீவிரவாதிகள் தொழுகையில் கலந்து கொள்ளத் தவறிய 14 வயது சிறுவன் ஒருவனுக்கு அவனது பெற்றோர் முன்னிலையில் தலையைத் துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை நிறைவேற்றப்பட்ட இந்த மரணதண்டனை குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று வெள்ளிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
வட சிரியாவிலுள்ள ஜராபுலஸ் நகரைச் சேர்ந்த மேற்படி சிறுவன் அந்நகரிலுள்ள மத்திய பள்ளிவாசலில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தொழுகையில் கலந்து கொள்ளத் தவறியதையடுத்து கைது செய்யப்பட்டான்.
அவன் மீது மத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை மற்றும் மதத்தைக் கைவிட்டமை போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
இதனையடுத்து அந்த சிறுவனுக்கு அவன் தாய் மற்றும் தந்தை உள்ளடங்கலான பெருந்தொகையான மக்கள் முன்னிலையில் தலையைத் துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நன்றி வீரகேசரி
தாய்வானில் பயங்கர நிலநடுக்கம்: இடிபாடுகளிலிருந்து 221 பேர் மீட்பு
07/02/2016 தாய்வானில் நேற்று சனிக்கிழமை அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. 6.4 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பதிவானதாக தாய்வான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 11 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், 475 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். யூஜிங் நகரின் தென்கிழக்கே 36 கி.மீ தொலைவில் உள்ள இடத்தில் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நன்றி வீரகேசரி
பீஜிங்கில் நிலநடுக்கம்: இருவர் பலி, 34 பேர் படுகாயம்
07/02/2016 பீஜிங்கில் நேற்றுக் காலை 03:30 மணியளவில் 6.7 ரிச்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்படி நிலநடுக்கமானது, பீஜிங் கௌசிங் என்ற இடத்திலேயே இடம்பெற்றுள்ளது. இதனால் பாரிய சேதங்கள் இடம்பெற்றுள்ளன.
இரு சடலங்கள் மீட்கப்பட்டதுடன், இதுவரை 34 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து முற்றாக விழுந்துள்ளமையால் அதில் வசிக்கும் சுமார் 123 பேரின் நிலை இன்னும் வெளியாகவில்லை.
இதனடிப்படையில் மீட்பு பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், கன ரக இயந்திரங்களின் உதவி கொண்டு மேலும் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நன்றி வீரகேசரி
ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 37 பேர் பலி!
07/02/2016 குஜராத்தில் ஆற்றில் அரச பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 37 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள நவ்சாரி நகரில் இருந்து உகாய் பகுதிக்கு அரச பேருந்து ஒன்று சென்றுள்ளது. பேருந்தில் சுமார் 60 பயணிகள் பயணித்துள்ளனர். பேரூந்து சுபா கிராமத்தில் உள்ள பூர்ணா நதிக்கு மேல் கட்டப்பட்டுள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடுவதற்காக ஓட்டுநர் பேருந்தை இடதுபுறமாக திருப்பியுள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து நீரில் மூழ்கியது. இந்தக் கோர விபத்தில் 20 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், ஏராளமானோர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்புக்குழுவினரால் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உட்பட 15 பேர் பேருந்திலேயே சிக்கியிருப்பதால், அவர்கள் உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37 ஐ தாண்டி உள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு 4 இலட்சம் ரூபா நிவாரணம் வழங்கப்படும் என்று குஜராத் மாநில முதல்வர் ஆனந்திபென் பட்டேல் தெரி வித்துள்ளார். நன்றி வீரகேசரி