பொங்கல் தினத்தில் பொங்கும் உணர்வுகள்!!

.

வாடையும் சோளகமும் துள்ளிக் குதித்தோட
வடக்கன் காளைகளும் நுகம்புகுந்து ஏரிழுக்க - தனக்கென்ற
விதைநிலத்தில் உழைப்பேற்றி நெல்போட்டுப் பயிராக்கி - மகிழ்வுடனே
கதிரறுத்து உரலிட்டுப் பிடைத்தெடுத்து தன்னுழைப்பின் பயன்கண்டு
மண்பானை அடுப்பேற்றி பயறிட்டுப் பாலூற்றிப் பொங்கலோ பொங்கலென்று
சர்க்கரையும் நெய்யும் வாழ்வின் சுவைசெப்ப 
கதிரவனின் கரம்பற்றித் தொழுதேற்றி
நன்றியுடன் மனங்குளிரும் பொங்கலிது.

தமிழினத்தின் வேரறுக்க ஆதியிலே படையுடனே
தொடைதட்டிப் புகுந்தவர்கள்
சமயத்தின் துணைகொண்டு சதிசெய்து பலமாற்றி
புதுவருசத்தைப் பொங்கலிடம் பறித்தெடுத்து 
விரட்டி விபரீதம் செய்த கதை
தமிழ் வருசம்தான் பொங்கலென்ற 
கருத்தினையே புரளியாக்கி மலடியாக்க...


பொலிவிழந்து சீரிழந்து இன்று
நாடிழந்து ஊரிழந்து தனித்தன்மையற்று
அடையாளக் குறியீடாய் புலத்தினிலே புகுந்துவிட்ட
தொன்மைத் தமிழினத்தின் தனித்துவத்தைச் சாற்றும் பொங்கல்!

பொங்கலையா ஐயா பொங்கலையா

பண்டைத் தமிழினத்தின் வாழ்வும் வளமும் கலையும் கடனும்
இன்றுவரையும் இடையிடையே இடிந்தழிந்து
இல்லாத பல சேர்ந்து குழப்பிக் கூத்தடிக்க
உண்மை எதுவென்று உற்று நோக்கியின்று
உய்ய வேண்டுமென்ற எண்ணம் பொங்கலையா?

பொங்கலையா ஐயா பொங்கலையா

குருதியாய் சதையாய் பிணமாய் மலிவாய்
தமிழினம் இன்று நாதியற்ற நிலையாய்
துணிவாய் வார்த்தையில் உரிமையைக் கேட்டவர்
துப்பாக்கி ரவைகளில் துவம்சம் ஆகினர்
பேரினவாதப் பேடிகள் செயலால்
பொங்கலையா ஐயா பொங்கலையா?

சுதந்திரம் வேண்டிச் சுகத்தையே தொலைத்து
மண்ணில் புழுதியுள் வாழ்வைத் தேடும்
உறவுக் கொடிகளின் கரங்களோடிணைந்து 
பொங்குவோம் ஐயா பொங்குவோம்!
உலகம் நோக்க மறுக்கும் நிலையை
உரக்கச் சொல்ல ஓரணி நின்று
கொடுங்கோல் ஆட்சி கொணரும் செயல்கள்
நடுங்கி நலிந்து ஒழிந்து போக
பொங்குவோம் ஐயா பொங்குவோம்!

பொங்கல் தினத்தில் பொங்கும் உணர்வுகள்
புனிதம் பெறட்டும்மனிதம் வாழட்டும்!! 

(என்றோ எழுதியது.. என்ன செய்வது.. இன்றும் பொங்கல் வருகிறதே!!   :D )
Nantri:yarl.com

No comments: