விகடன் மேடை - அ.முத்துலிங்கம் பதில்கள்

.

p19.jpg

விகடன் மேடை - அ.முத்துலிங்கம் பதில்கள்
’எப்படியிருக்கு?’
வாசகர் கேள்விகள்...

 கபிலன், திருத்துறைப்பூண்டி.
'' 'நாட்டியப் பேரொளி’ பத்மினி பற்றி எழுதும்போது மட்டும் உங்கள் எழுத்துகளில் காதல் ததும்புகிறதே... என்ன சங்கதி?''
''அவர் என் கனவுக்கன்னி ஆயிற்றே... காதல் ததும்பாமல் இருக்குமா?!
ரொறொன்ரோவில் என் வீட்டில் சில நாட்கள் பத்மினி தங்கியிருந்தபோது, வாலிபப் பருவத்தில் அவரைப் பார்ப்பதற்காக கொழும்பில் திரை அரங்கத்தின் முன்னே பல மணி நேரம் காத்திருந் ததைச் சொன்னேன். 'வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் சிரித்ததுபோல கலகலவெனச் சிரித்தார்.
அவர் வந்து இரண்டு நிமிடங்களிலேயே அவரும் என் மனைவியும் உற்ற சிநேகிதிகள் ஆகிவிட்டனர். அன்றைய விழாவுக்கு அணியவேண்டிய சேலைகளையும் நகைகளையும் எடுத்து வெளியே வைத்தார். பதக்கம் சங்கிலியா, முத்துமாலையா, மணியாரமா அல்லது நீலக்கல் அட்டிகையா என்று நீண்ட விவாதம் நடந்தது. பொற்சரிகை வைத்த நீலப் பட்டாடையா அல்லது சிவப்பா அல்லது ஊதா கலரா என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை.



சேலையை எடுத்து இரண்டு கைகளாலும் பிடித்துப் பாதி முகத்தை மனைவிக்குக் காட்டினார். எனக்குக் காட்டி, 'எப்படியிருக்கு?’ என்று கேட்டார். பின்னர், தான் நினைத்ததை அணிந்துகொண்டார். இரண்டு கைகளிலும் வளையல்களை முழங்கை வரை நிரப்பிவிட்டு, அவற்றைத் திரும்பத் திரும்ப எண்ணியபடியே இருந்தார். பத்மினி, நல்லவர்; பெருமை இல்லாதவர்; கருணையானவர். விடைபெற்றபோது கண்கலங்கினார்.


P38.jpgமீண்டும் ஒருமுறை அவரை நியூயோர்க்கில் சந்தித்தேன். சுதா ரகுநாதன்,
'பாற்கடல் அலைமேலே
பாம்பணையின் மீதே
பள்ளிகொண்டாய் ரங்கநாதா’ 
என்று பாட, பத்மினி அபிநயம் பிடித்தார். இசை அரசியின் பாடலுக்கு நாட்டிய அரசியின் நடனம். அதுவே அவர் ஆடிய கடைசி நடனம். அவருக்கு 72 வயது. விடைபெறும்போது முத்தம் தந்தார் கனவுக்கன்னி. சில மாதங்களில் இறந்துபோனார்.
இப்போதும் பத்மினியைப் பற்றி நினைக்கும்போது 'மணமகள்’ பத்மினியோ, 'தில்லானா மோகனாம்பாள்’ பத்மினியோ நினைவுக்கு வருவது இல்லை. பழைய கால நாடகத்தில் ராஜா மேடைக்கு வரும்போது திரையினால் பாதி முகத்தை மூடியபடி ஆடிக்கொண்டே வருவதுபோல பத்மினி சேலையைக் குறுக்காகப் பிடித்து பாதி முகத்தை மறைத்துக்கொண்டு, 'எப்படியிருக்கு?’ என்று கேட்டதுதான் மனக்கண் முன் வருகிறது!''
அ.ஜெயராஜ், திருமுக்காடு.
''பல எழுத்தாளர்களை நேரில் சந்தித்து இருக்கிறீர்கள். அப்படியான சந்திப்பில் உங்களை ஆச்சரியப்படுத்திய எழுத்தாளர் யார்?''
''ஆச்சரியப்படுத்திய எழுத்தாளர் என்றால்,  அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் எந்திரனியல் பேராசிரியராக இருக்கும் கார்ல் இயெக்மென்னா! அவர் ஒரு சிறுகதை ஆசிரியர். ஆனால், அங்கே உள்ள மாணவர்களுக்கோ பேராசிரியர்களுக்கோ, அவர் எழுத்தாளர் என்பது தெரியாது.
முன்பின் வேறு எழுத்தாளர்கள் கையாண்டிருக்க முடியாத கருவை எடுத்து, அற்புதமான முறையில் விருத்திசெய்து சிறுகதையாக்குவார். ஒவ்வொரு வசனமும் பெரும் கவனத்தோடு செதுக்கப்பட்டு கூராக இருக்கும். அதனால் படிக்கும்போது பல வசனங்களை அதன் அழகுக்காகத் திரும்பத் திரும்பப் படிப்பேன். அவரைப்போல இலகுவாக எழுதிவிட முடியும் என்றுதான் நினைத்தேன். ஆனால், அது எத்தனை கடினமானது என்பது அவரைச் சந்தித்தபோதுதான் புரிந்தது.
கார்ல் இயெக்மென்னாவின் மேசையில் பல கதைகள் பூர்த்திசெய்யப்படாமல் பாதிப் பாதியாகக் கிடந்தன. ஒரு சிறுகதை எழுதுவதற்கு மூன்று மாதங்கள் தொடங்கி ஆறு மாதங்கள் வரை எடுப்பதாகக் கூறினார். முழுத் திருப்தி கிடைக்கும் வரை செம்மைப்படுத்துவார். 'எழுதுவது ஒரு தவம். நாவல் எழுதுவது, மாரத்தான் ஓட்டம் போல. சிறுகதை 100 மீட்டர் ஓட்டம்போல. உன்னிடம் இருக்கும் அத்தனையையும் கொடுத்து சிறுகதை எழுதவேண்டும்’ என்று சொன்னார். எந்திரனை உருவாக்கும் அதீதக் கவனத்துடன் சிறுகதைகளைப் புனைகிறார் அந்தப் பேராசிரியர்!''
P38A.jpg

யூ.ஏ.ஜோசப் ராஜ், பயமறியானேந்தல்.
''சங்க இலக்கியப் பாடல்களில் நீங்கள் ஆச்சரியப்பட்ட பாடல் எது?''
''புறநானூறு (187) ஒளவையாருடைய 'நாடா கொன்றோ; காடா கொன்றோ...’ எனத் தொடங்கும் பாடலைத்தான் என் இணையதளத்தின் (amuttu.net) முகப்புப் பாடாலாக வைத்திருக்கிறேன். கருத்து, மிக எளிமையானது. ஒரு நாட்டின் சிறப்பை அதன் காடுகளோ, சமதரைகளோ, மலைகளோ, பள்ளத்தாக்குகளோ தீர்மானிப்பது இல்லை. அந்த நாட்டு மக்களே அதன் சிறப்புக்குக் காரணம்!
ஆனால், உங்கள் கேள்வியைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது புறநானூற்றில் காணப்படும் ஒரு கதைதான். பெண் கேட்டு வந்த அரசன் கோபத்தில் நெற்றி வியர்வையை வேல் கம்பினால் வழித்தபடி நிற்கிறான். பெண்ணின் தந்தை பணியவும் இல்லை; எதிர்க்கவும் இல்லை; சாந்தமாக மறுக்கிறார். இதுதான் முடிவு என்றால், கூரிய பற்களும், ஈரமான கண்களும் கொண்ட இந்த அழகியப் பெண், சிறு நெருப்பு பெருங்காட்டை அழிப்பதுபோல தான் பிறந்த ஊரையே அழித்துவிடுவாள்!
புறநானூறு-349.
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார்.
'நுதிவேல் கொண்டு நுதல்வியர் தொடையாக்
கடிய கூறும் வேந்தே; தந்தையும்
நெடிய அல்லது பணிந்துமொழி யலனே;
இதுஇவர் படிவம்; ஆயின் வைஎயிற்று
அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை
மரம்படு சிறுதீப் போல,
அணங்கா யினள், தான் பிறந்த ஊர்க்கே..’
பெண்கேட்டு வந்த அரசன் கோபத்துடன் இருக்கிறான். வேல் நுனியினால் நெற்றி வியர்வையை வழிக்கிறான். முதல் வரியிலேயே கிடைக்கும் படிமம் பாடலின் வெற்றியை நிச்சயமாக்கிவிடுகிறது. செக்கோவின் சிறுகதை போல ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை. இதுதான் சங்கப்பாடல்!''
ஆத்தியப்பன், திருக்கோவிலூர்.
''தங்களால் மறக்க முடியாத பயணம்..?''
''அமெரிக்காவின் மொன்ரானா மாநிலத்துக்கு சமீபத்தில் சென்று வந்தது சுவாரஸ்யமாகப்பட்டது. உலகத்திலேயே ஆதித் திருட்டு, மாட்டுத் திருட்டுதான். 3,000 வருடங்களுக்கு முந்தைய ரிக் வேதம்கூட மாட்டுத் திருட்டு பற்றிச் சொல்கிறது.
புறநானூற்றில் உலோச்சனார் 'காரைப்பழ மது உண்டு, மாமிசம் தின்று தன்னுடைய எச்சில் கையை வில்லிலே துடைப்பவன் மறுபடியும் புறப்படுகிறான். தான் கவர்ந்த ஆநிரைகளை ஊருக்கெல்லாம் தந்துவிடுவான்’ என்கிறார். எதிரி நாட்டின் மாடுகளைக் கவர்ந்து தன்னுடைய குடிமக்களுக்குக் கொடுக்கும் அரசர்கள் இருந்திருக்கிறார்கள் போலும்.
அமெரிக்காவில், ஒருகாலத்தில் மாட்டுக் காவலர்களின் (cowboys) ஆட்சிதான் நடந்தது. அவர்கள் மாடுகளைக் காவல் காப்பதும், திருடர்கள் திருடுவதும், இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடப்பதும் திருடர்களைப் பிடித்துத் தூக்கில் தொங்கவிடுவதும் சகஜம். அந்தக் காலம் முடிந்துவிட்டது என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால், இன்றும் திறந்தவெளி மாட்டுப் பண்ணைகள் பல முன்னர் போல இயங்கியதை மொன்ரானாவில் பார்க்க முடிந்தது.
அங்கே வேலை செய்த மாட்டுக்காவலர், விளிம்பு தொப்பியும், நீண்ட பூட்ஸும், இடையில் துப்பாக்கியும் அணிந்து இருந்ததைக் கண்டேன். அவர் சொன்னார், 'சில நாட்கள் முன்னர் திருடர்கள் இரவு பெரிய ட்ரக் வண்டியில் வந்து 50 மாடுகளைக் கவர்ந்து சென்றுவிட்டார்கள்’ என்று. 250,000 டொலர் நட்டம். திருட்டு நிற்கவில்லை; திருடும் முறைதான் மாறி இருக்கிறது!''
கிருத்திகா, திருமழபாடி.
''நீங்கள் பிறந்து வளர்ந்த இலங்கையின் 'கொக்குவில்’ குறித்த உங்கள் பால்ய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?''
''ஆகச் சிறுவயது ஞாபகம் என்று ஒன்றைச் சொல்லலாம்.
இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டு இருந்தது. எங்கள் கிராமத்தில் உணவுத் தட்டுப்பாடு. பல குடும்பங்களில் ஒரு நேரச் சாப்பாடுதான். எங்கள் குடும்பத்தில் 10 பேர். ஐயாவுக்குக் கவலை, எங்கேயிருந்து தினமும் உணவு கொண்டுவருவது என்பது. அம்மாவின் யோசனை, அன்று என்ன சமைப்பது... எப்படிப் பசி ஆற்றுவது?
ஒரு நாள், ஐயா எப்படியோ ஒரு மூட்டை நெல் சம்பாதித்து வந்து அதைக் குப்பைமேட்டின் அடியில் புதைத்துவைத்தார். தேவைக்கு அதிகமான உணவு வைத்திருக்கக் கூடாது என்பது சட்டம். அடுத்த நாள் அதிகாலை பொலீஸ் வாகனம் வந்தது. ஐந்தாறு பொலீஸ்காரர்கள் குண்டாந்தடியுடன் டப்புடப்பென்று குதித்து வீட்டைச் சோதனை போட்டு, ஒன்றையும் கண்டுபிடிக்க முடியாமல் திரும்பினார்கள். அம்மாவின் சேலையைப் பிடித்துக்கொண்டு நடுங்கியபடி நின்ற என் கண்களைப் பார்த்திருந்தால், அவர்கள் இலகுவாக வெற்றி கண்டிருக்கலாம். நான் குப்பை மேட்டைவிட்டு கண்களை எடுக்கவில்லை. அந்தக் கிராமத்தில் 50, 100 என்று நெல் மூட்டைகள் பதுக்கிவைத்திருந்த வியாபாரிகள் இருந்தார்கள். அவர்களை விட்டுவிட்டு எங்கள் வீட்டைச் சோதனை செய்ததுதான் இன்றைக்கும் எனக்கு வியப்பு அளிக்கும் விஷயம்.
அந்த வயதில் வாசிப்புக்காக ஏங்கி அலைந்தது இன்னொரு ஞாபகம். கிராமம் கிராமமாகத் திரிந்து புத்தகங்கள் இரவல் வாங்கினேன். கொஞ்சம் பெரியவனானதும் யாழ் நூலகம் சென்று படித்தேன். கல்கியின் 'மகுடபதி’யை ஒரு முழு நாள் வாசித்தது அங்கேதான். 100,000 புத்தகங்கள் கொண்ட அந்த நூலகத்தைத்தான் சிங்கள அரசு 1981-ம் ஆண்டு மே 31 - அன்று இரவு எரித்தது. சமீபத்தில் அங்கு போன நேஷனல் ஜியோகிராபி புகைப்படக்காரர், புத்தகம் படிக்கும் ஒரு பெண்ணைப் படம்பிடித்து எனக்கு அனுப்பினார். அவர் படிப்பது நான் எழுதிய புத்தகம்தான். திகடசக்கரம்!''

Nantri yarl.com
- அடுத்த வார



No comments: