இலங்கைச் செய்திகள்

கூட்டமைப்பின் வேட்பாளர் வாகனத்தின் மீது தாக்குதல்

முக்கியமான கோவைகள் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பில் 4 அதிகாரிகளை இடைநிறுத்த வேண்டும் - முஸம்மில்

புலிக்கொடி விவகாரம்: 2ஆம் சந்தேகநபருக்கு பிணை வழங்க வேண்டாம்

அத்துமீறிய சிங்கள குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து த.தே.கூ ஆர்ப்பாட்டம்

எழிலன் மனைவிக்கு எதிராக யாழ். நகரில் ஆர்ப்பாட்டம்

- பி.பி.சி
=========================================================================
கூட்டமைப்பின் வேட்பாளர் வாகனத்தின் மீது தாக்குதல்

20/08/2013 வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் தம்பிராசாவின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ். மின்சார வீதியில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் வேட்பாளர் தம்பிராசாவுக்கும் சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நன்றி வீரகேசரி 





முக்கியமான கோவைகள் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பில் 4 அதிகாரிகளை இடைநிறுத்த வேண்டும் - முஸம்மில்

20/08/2013   கொழும்பு மாநகரசபையின் முக்கியமான கோவைகள் தீக்கிரையாக்கப்பட்டது தொடர்பில் நான்கு அதிகாரிகளை வேலையிலிருந்து இடைநிறுத்துமாறு கோரி மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் மேல் மாகாண உள்ளூராட்சி சபைகள் நிர்வாகச் செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த 17ஆம் திகதி கொழும்பு மாநகர செயலாளர் திணைக்களத்தின் பல்வேறுபட்ட ஆவணங்கள் அடங்கிய கோவைகள் எதுவித அனுமதியும் இன்றி பொரளை மயானத்தில் தீ வைக்கப்பட்டமை தொடர்பிலேயே மேயர் இக்கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். நன்றி வீரகேசரி  




தொழிலாளர் தேசிய சங்கத்தின் அட்டன் காரியாலயம் மீது தாக்குதல்
20/08/2013    கொட்டகலை பகுதியில் நேற்று பிற்பகல் இரண்டு கட்சிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து இரவு தொழிலாளர் தேசிய சங்கத்தின் அட்டன் காரியாலயம் தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது.


அதே நேரம் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளரான சரஸ்வதி சிவகுருவின் கொட்டகலை கொமர்ஸல் பகுதியில் அமைந்துள்ள வீடும் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது.

தாம் வீட்டினுள்ளே இருந்ததாகவும் தாக்குதலின் போது தாங்கள் மறைவாக இருந்தமையால் எவருக்கும் காயங்கள் இல்லை என அவர் தெரிவித்தார்.

மேலும் இவரின் வாகனமும் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இதே நேரம் கொட்டகலை நகரில் அமைந்துள்ள கடைகள் இரண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கடை உரிமையாளர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.    நன்றி வீரகேசரி  

 

 

 

 



புலிக்கொடி விவகாரம்: 2ஆம் சந்தேகநபருக்கு பிணை வழங்க வேண்டாம்
Ltte flaq 20/08/2013  ஐக்கிய இராஜியத்தில் கார்டிஃப் நகர மைதானத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடிய சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேகநபருக்கு பிணை வழங்கவேண்டாம் என்று குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) நீதவானிடம் கோரிநின்றனர்.

இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை பிரதான சந்தேகநபரை, மான்செஸ்டர் பொலிஸின் சர்வதேச குற்றச்செயல் கிளை தேடிவருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்பு நீதவானிடம் கடந்த 13 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தனர்.

சந்தேகநபரான லோகேஸ்வர்ன மணிமாறன் இன்னும் கைது செய்யப்படாது மறைந்து வாழ்வதால் விசாரணையை முடிக்க முடியவில்லை என்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு அன்று கொண்டுவந்திருந்தனர்.

ஆகையால், ஏற்கெனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களான குலதீபன் மற்றும் உதயனை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதியளிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் அன்று அனுமதி கோரிநின்றனர்.

இதேவேளை, புலிக்கொடியுடன் ஓடியவரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய ஜூலை மாதம் 30 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.

யசோதார சடாச்சரமூர்த்தி எனும் பெயரில் 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆம் திகதி பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டையே பறிமுதல் செய்யுமாறு நீதவான் அன்று உத்தரவிட்டிருந்தார்.

அவருக்கு எதிரான வழக்கு ஜுன் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஓகஸ்ட் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே வழக்கை நேற்று 19 ஆம் திகதி வரையிலும் நீதவான் ஒத்திவைத்தார்.

சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஜுன் மாதம் 20 ஆம் திகதி  கார்டிஃப் நகர மைதானத்தில் நடைபெற்றது.

இதன்போது மைதானத்திற்குள் புலிக்கொடியுடன் ஓடியவரையே கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்ட திறந்த பிடியாணையை ஜுலை 3 ஆம் திகதி புதன்கிழமை பிறப்பித்தார்.

இந்நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் வருகைதந்தால் கைது செய்யுமாறு ஜுன் 15 ஆம் திகதி திங்கட்கிழமை உத்தரவிட்ட நீதவான் சிவப்பு அறிவிப்பையும் விடுத்திருந்தார்.

புலிக்கொடியுடன் மைதானத்திற்குள் ஓடி குழப்பம் விளைவித்த லோகேஸ்வரின் மணிமாரன்என்பவருக்கே இவ்வாறு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான பா.உதயணன் பிரித்தானியாவில் வாழ்பவர் என்பதுடன் அவருக்கு நிரந்த வதிவிடம் இல்லை எனவே, இவரை விடுதலை செய்தால் அவரை பிணையில் விடக்கூடாதென சிஐ.டியினர் கோரிநின்றனர்.

இதனையடுத்து இரண்டாவது சந்தேகநபரான பா.உதயணன் மற்றும் ஆ. குலதீபம் ஆகியோரை எதிர்வரும் 02 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் வழக்கையும் அன்றைய தினத்திற்கே ஒத்திவைத்தார்.
நன்றி தேனீ










அத்துமீறிய சிங்கள குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து த.தே.கூ ஆர்ப்பாட்டம்
 
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட படுவான்கரை கெவிலியாமடு, புளுகுணாவை உள்ளிட்ட தமிழ் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அந்த குடியேற்றத்திற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் கோரி இன்று புதன்கிழமை மட்டக்களப்பு பட்டிப்பளைபிரதேச செயலகத்திற்குமுன்னால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்றது.



“நீதி அநீதியைக் களையட்டும் நியாயம் மலரட்டும்”எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரட்ணம், பிரசன்னா இந்திரகுமார், துரை ராஜசிங்கம், ஜனா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது “மீறாதே மீறாதே சட்டத்தை மீறாதே?, அரச அதிபரே! சோரம் போகாதே?,அத்துமீறிய குடியேற்றத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடு, கதிரைக்காக காணி அபகரிப்புக்கு துணை போகாதே?, சமாதானம் என்ன சாத்தானின் ஆக்கிரமிப்பா?, அமைச்சரின் முகஸ்துதிக்காக அநீதிக்கு துணை போகாதே?,காணி அபகரிப்பை நிறுத்து!, சட்டம் ஆளுநரிடமா? அமைச்சரிடமா? அதிகாரியிடமா? புத்தபிக்குவிடமா? இரானுவத்திடமா?எடுபிடிகளிடமா? உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய வண்ணமும் கோஷங்களை எழுப்பிய வண்ணமும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நன்றி வீரகேசரி

 

 

 

 

 

எழிலன் மனைவிக்கு எதிராக யாழ். நகரில் ஆர்ப்பாட்டம்

- பி.பி.சி

ezhilan wife122/08/2013 விடுதலைப் புலிகளின் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஐநாவின் மனித உரிமைகள் ஆணையரை சந்திக்கவும் வாய்ப்பு கேட்டிருந்மை குறிப்பிடத்தக்கது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பெண் வேட்பாளர் அனந்தி சசிகரனுக்கு (எழிலன் மனைவி) எதிராகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராகவும் இன்று புதனன்று காலை யாழ் பஸ்நிலையப் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது. வடமாகாணத்தில் சமூகத்துடன் இணைக்கப்பட்ட உறுப்பினர்களின் ஒன்றியம் என்ற பெயரிலான அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை அமைதிப் பேரணி என்ற பெயரில் ஏற்பாடு செய்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அதன் வேட்பாளரான விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி அனந்தி சசிகரனுக்கும் எதிராக எழுத்துப் பிழைகளுடன் கூடிய வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தார்கள். நேற்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்னொரு வேட்பாளரான தம்பிராசாவின் வாகனம் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, கூட்டமைப்பின் பெண் வேட்பாளரான அனந்தி சசிகரனுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது செய்தி சேகரிப்பதற்காக அங்கு சென்றிருந்த செய்தியாளர்கள், ஆர்ப்பாட்டக்காரர்களை தெளிவாகப் படம் எடுக்க முடியாதவாறு சம்பவ இடத்தில் புகை எழும்பச் செய்யப்பட்டிருந்தது. அத்துடன், தங்களைப் படம் எடுக்கக் கூடாது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்தியாளர்களைத் தடுத்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சார்பானவர்கள், வீடியோ மற்றும் சாதாரண கமராக்களைக் கொண்டு செய்தி சேகரிக்க முயன்ற செய்தியாளர்களை படம் எடுத்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது. எனினும் செய்தியாளர்கள், ஆர்பபாட்டக்காரர்களுடன் குறுக்கிட்டு பேச முடியாதவாறு தடுப்பதில் பொலிசார் பாரபட்சமாக ஈடுபட்டிருந்தாக யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.நன்றி தேனீ 

 

No comments: