தமிழ் சினிமா



மரியான்

ஆழ்கடலில் மூச்சை அடக்கி ஒரு ஈட்டி மட்டுமே துணை கொண்டு சுறாவையே வேட்டையாடுபவன் மரியான்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகான மீனவ கிராமத்தில் மீனவராக இருக்கின்றார் தனுஷ் (மரியான்).
அந்த கிராமத்தில் தனது நண்பர்களான அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சி ஆகியோருடன் சேர்ந்து மீன் பிடித் தொழிலை செய்து வருகின்றார்.
அதே ஊரில் மீனவப் பெண்ணாக வரும் பார்வதி (பனிமலர்) தனுஷை ஒரு தலையாக காதலித்து வருகின்றார்.
தன்னுடைய தொழிலால் எப்போதும் சாவை எதிர்நோக்கி காத்திருக்கும் தனக்கு காதல் தேவையில்லை என்று பார்வதியில் காதலை புறக்கணித்துவிடுகின்றார்.
பின்பு நண்பர்களின் வற்புறுத்தல்களால் ஒரு கட்டத்தில் பார்வதியின் மீது காதல் வசப்படுகின்றார் தனுஷ். இதனைத் தொடர்ந்து இருவரும் காதலித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதே ஊரில் வட்டிக்கு பணம் கொடுக்கும் ரவுடியிடம் பார்வதியின் தந்தை கடன் வாங்கியுள்ளார்.
வாங்கிய கடனை திருப்பித் தர இயலாமல் திணரும் தந்தையிடம் பணத்துக்கு பதிலாக உனது பெண்ணை கொடு என்று பேரம் பேசி பிரச்சனை செய்கின்றார் வட்டிக்கார ரவுடி.
மறுமுனையில் நடுக்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தன் நண்பன் அப்புக்குட்டி குண்டடிபட்டு சடலமாக அவரது உடல் கரை ஒதுங்குகின்றது.
இதனைப் பார்த்து கதறி அழுதுக் கொண்டிருக்கும் தனுஷிடம் பார்வதி நேரில் வந்து ரவுடி பெண்கேட்டு வந்திருப்பதாக அழுது புலம்புகின்றார்.
இந்த செய்தியை கேட்ட தனுஷ் பார்வதியுடன் வீட்டிற்கு சென்று ரவுடியை அடித்து விரட்டுகின்றார்.
இதனால் கோபமடைந்த ரவுடி கொடுத்த பணத்தை திருப்பித் தராவிடில் குடும்பத்தோடு கொன்றுவிடுவேன் என்று பார்வதியின் தந்தையை மிரட்டி விட்டு செல்கின்றார்.
இதனால் தர்மசங்கடத்திற்கு ஆழாகி நிற்கும் தனது காதலியின் குடும்ப கடனை அடைப்பதற்காக 2 வருட ஒப்பந்தத்தில் சூடான் நாட்டிற்கு செல்கின்றார் தனுஷ்.
இரண்டு வருடமும் இவர்களின் காதலானது கண்ணீரும் கடிதமுமாக தொடர்கிறது.
கடனையெல்லாம் ஒரு வழியாக அடைத்துவிட்டு காதலியை காண வரும் தனுஷ் தீவிரவாதிகளால் கடத்தப்படுகின்றார்.
இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகளால் கடத்தப்படும் தனுஷ் மீண்டு வந்து தன் காதலியை கைபிடிப்பாரா? என்ற மீதிக்கதையுடன் படமானது நகர்கிறது.
தனுஷ் இப்படத்தில் மீனவ நடிகராக இல்லாமல் வாழ்ந்தே இருக்கின்றார். பார்வதி மீதான காதல் காட்சிகள் மற்றும் சூடானில் தீவிரவாதிகளிடம் மாட்டித் தவிக்கும் ஏரியாவிலும் சரி தன் தேசிய விருது தகுதியை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றார்.
நடிகை பார்வதி படம் முழுவதும் மேக்கப் இல்லாவிட்டாலும் அழகாக இருக்கின்றார். மீனவ பெண் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கின்றார்.
தனுஷிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் காட்சியிலும், அவரை பிரிந்து இருக்கும் காலங்களில் டெலிபோன் மணி அடிக்கும் போதெல்லாம் பதறி அடித்து ஒடுவது போன்ற காட்சிகளில் தனது ஆட்சியை நிறுவியுள்ளார்.
இயக்குனர் பரத்பாலா இப்படத்தை ஒரு பொழுதுபோக்கு படமாக இல்லாமல், ஆவணப் படம் போல் படமாக்கியுள்ளார்.
முதல் பாதி விறுவிறுப்பாக நகர்ந்தாலும், இரண்டாவது பாதியில் படம் மெதுவாக நகர்கின்றது. திரைக்கதையில் இயக்குனர் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஏ.ஆர்.ரகுமான் வழக்கம் போல் தனது இசையால் மக்களை தாளம் போட வைத்துள்ளார். பின்னணி இசையிலும் தனது திறமையை நிரூபித்திருக்கின்றார்.
நண்பர்களாக வரும் அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சி, சூடான் நண்பராக வரும் ஜெகன், தனுஷின் அம்மாவாக வரும் உமா ரியாஸ்கான் ஆகியோர் படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
மார்க்கோனிக்ஸ் ஒளிப்பதிவில் கன்னியாகுமரி பகுதி மீனவ கிராமம் மற்றும் தென் ஆப்ரிக்காவின் பாலைவனம் ஆகியவை நாம் அதற்குள் நுழைந்த உணர்வை ஏற்படுத்துகின்றது.
மொத்தத்தில் வழக்கமான காதல் கதையை பிரம்மாண்டமாக மக்களுக்கு தந்துள்ளனர்.  நன்றி விடுப்பு

No comments: