உலகச் செய்திகள்

 .
 உலகின் பாரிய கடற்படை பயிற்சி பேர்ள் துறைமுகத்தில் ஆரம்பம்

பிரிட்டன் பிரஜைகளாக விரும்புவோர் “தேசப்பற்று’ பரீட்சைக்குத் தோற்ற வேண்டும் ராணியை கடவுள் காப்பார் என்றும் உச்சாடனம் செய்ய வேண்டும்

எப்படியிருக்கும் எகிப்தின் எதிர்காலம்?

 உலகின் பாரிய கடற்படை பயிற்சி பேர்ள் துறைமுகத்தில் ஆரம்பம்
  Monday, 02 July 2012 
வாஷிங்டன்:  சர்வதேச அளவில் மிகவும் பாரியளவிலான கடற்படைப் பயிற்சி ஹவாய் தீவில் உள்ள பேர்ள் துறைமுகத்தில் நடைபெற்று வருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இந்தப் பயிற்சி எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதிவரை நடைபெறுகின்றது.
அமெரிக்க கடற்படை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதுபோன்ற பயிற்சியை நடத்தி வருகிறது. உலகின் மிகப் பெரிய கடற்படை பயிற்சியான இதில் 22 நாடுகளைச் சேர்ந்த 25 ஆயிரம் மாலுமிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.
கடந்த 2010 இல் நடைபெற்ற பயிற்சியில் 14 நாடுகள் பங்கேற்றன. ரஷ்யா, ஜப்பான் ஆகிய வல்லரசு முதல் சிலி, டோங்கா உள்ளிட்ட சிறிய நாடுகளைச் சேர்ந்த 42 போர்க்கப்பல்கள், 6 நீர் மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 200 போர் விமானங்கள் பங்கேற்கின்றன.
வெடி குண்டுகளை செயலிழக்கச் செய்தல், இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு உதவுதல் உள்ளிட்ட பல பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக பசுபிக் போர்க்கப்பல் கமாண்டர் செசில் ஹானே தெரிவித்துள்ளார்.
இதன்  மூலம் ஒத்த கருத்து உடைய நாடுகள் கூட்டாக செயல்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி தினக்குரல் 

பிரிட்டன் பிரஜைகளாக விரும்புவோர் “தேசப்பற்று’ பரீட்சைக்குத் தோற்ற வேண்டும் ராணியை கடவுள் காப்பார் என்றும் உச்சாடனம் செய்ய வேண்டும்
uk_flag_பிரிட்டனுக்கு குடியேற்றவாசிகளாகச் செல்வதற்கு விரும்புவோர் இனிமேல் “தேசப்பற்று பரீட்சை’யை எதிர்கொள்ள வேண்டும். அந்நாட்டு குடிவரவுத் துறை அமைச்சர் தெரேசா மே அதிகளவான “பிரிட்டிஷ் கலாசாரப் பரீட்சையை’ அறிமுகப்படுத்த விருப்பதாக “த கார்டியன்’ பத்திரிகை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
பிரிட்டிஷ் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிப்போர், ராணியை கடவுள் காப்பாற்றுவார்’ என்ற வசனத்தை உச்சாடனம் செய்ய வேண்டும்.
அத்துடன் வின்ஸ்டன் சேர்ச்சில், பைரன்பிரபு, புளோரன் நைற்றிங்கேல், வில்லியம் ஷேக்ஸ்பியர் பற்றி அறிந்திருக்க வேண்டும்.
பிரிட்டனின் புதிய பிரஜைகளாக வரவிரும்புவோருக்கு இந்தத் தேசப்பற்று வழிகாட்டல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அதேவேளை பிரிட்டனின் தற்போதைய நடைமுறையிலுள்ள உத்தியோகபூர்வமான விடயங்களில் சிலவற்றை தெரேசா மே நீக்கியுள்ளார். மனித உரிமைகள் சட்டம் மற்றும் நலன்புரி அனுகூலங்களைப் பெற்றுக்கொள்வது எவ்வாறு என்பது தொடர்பான வழிகாட்டல்கள் நீக்கப்படவுள்ளது. மேலும் காஸ் மீற்றரை வாசிப்பது, வீட்டுக்கான காப்புறுதிகளை பெற்றுக்கொள்வது, உள்ளூராட்சி சபையுடன் விடயங்களைக் கையாள்வது  போன்ற விடயங்களும் வழிகாட்டல் குறிப்பில் கைவிடப்படவுள்ளது.
இதற்குப் பதிலாக பிரிட்டன் வரலாற்று ரீதியாக “கிறிஸ்தவ நாடு’ என்றும் “நீண்ட புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டது என்பது பற்றியும் கன்சர் வேட்டிவ்  கட்சி அமைச்சர்கள் புதிய குடியேற்றவாசிகளுக்கு கூற விரும்புவதாக கார்டியன் குறிப்பிட்டிருக்கிறது.
வருடாந்தம் 80 ஆயிரம் பேர் பிரிட்டிஷ் பிரஜாவுரிமைக்கான பரீட்சைக்கு தோற்றுகின்றனர். 2003 இல் இதனை தொழில் கட்சி அரசு அறிமுகப்படுத்தியிருந்தது.
நன்றி தினக்குரல்

 எப்படியிருக்கும் எகிப்தின் எதிர்காலம்?
சு.வெங்கடேஸ்வரன்
பொதுவாக எந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், அனைத்து நாடுகளும் அதனை உன்னிப்பாகக் கவனிப்பது வழக்கம். ஏனெனில், அங்கு ஆட்சியைப் பிடிக்கும் கட்சி, அதிகாரத்துக்கு வரும் நபர்களின் கொள்கைகள் தங்கள் நாட்டுக்கு எந்த அளவுக்குச் சாதகமாக அல்லது பாதகமாக அமையும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இதற்குக் காரணம்.
அந்த வகையில் இப்போது அனைத்து நாடுகளின் கவனத்துக்கு உள்ளாகியிருப்பது எகிப்து. அங்கு ஹோஸ்னி முபாரக்கின் 30 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்து முதல்முறையாக சுதந்திரமான முறையில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சியின் முகமது முர்ஷி அதிபராகியுள்ளார். பொறியியலாளரும், அமெரிக்காவில் சென்று உயர்கல்வி பயின்றவருமான முர்ஷி அதிபராகியுள்ளது பெரும்பாலான நாடுகளுக்குத் திருப்தியை அளித்துள்ளது.
எனினும், தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே ''எகிப்தில் இஸ்லாமிய ஆட்சி' என்று கூறி, பாலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்க ஆதரவாளர்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இது இஸ்ரேலுக்கு நெருடலை ஏற்படுத்திவிட்டது. ஏனெனில், அண்டை நாடான இஸ்ரேலுடன் எகிப்து அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில்தான் இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சி குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. எகிப்தில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, சர்வதேச அளவில் பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் கட்சியாகவும், அமைப்பாகவும் செல்வாக்கு பெற்றுள்ளது. இஸ்லாமியக் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ''இஸ்லாமே அனைத்துக்கும் தீர்வு' என்ற முழக்கத்துடன் தொடக்கத்தில் மத நீதிநெறிகளை மாணவர்களுக்குக் கற்பித்து வந்தது.
சமய, சமூக அமைப்பாக பல்வேறு இஸ்லாமிய நாடுகளுக்கும் பரவி வலுப்பெற்றது. உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் பெரும்பான்மையான இஸ்லாமிய நாடுகளில் அரசியல் அமைப்பாக உருவெடுத்தது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்த அமைப்பினர் ஆயுதம் ஏந்தி போராடத் தொடங்கினர். இதனால், பல்வேறு மோதல்கள், உயிரிழப்புகள், பிளவுகளைச் சந்தித்தபோதிலும் பல நாடுகளில் வலுவான அரசியல் சக்தியாக வளர்ந்துள்ளது. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் கூட இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ரஷ்யாவில் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. மேற்கு ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் வலுவான அடித்தளத்துடன் செயல்பட்டு வருகிறது. பிறந்த இடமான எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சி பல ஆண்டுகள் தடை செய்யப்பட்டு, மீண்டும் அங்கீகாரம் பெற்றது. இப்போது ஆட்சியைப் பிடித்துள்ளது. எகிப்தில் அதிபரின் அதிகாரங்களை வரையறை செய்து அரசியல் சாசன சட்டம் ஏதும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. பாராளுமன்றம், அரசியல் சாசன சட்டம் ஏதுமின்றி அதிபராகியுள்ள முர்ஷி, உள்நாட்டில் உள்ள பிரச்சினைகள் மட்டுமின்றி, வெளிநாட்டுக் கொள்கைகளையும் கவனமாகக் கையாள வேண்டிய நிலையில் உள்ளார்.
அரபு உலகில் சவூதி அரேபியாவுக்கு அடுத்ததாக இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியாக எகிப்து உள்ளது. அதே நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகளுடன் இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சிக்கு நல்லுறவு இல்லை. பல்வேறு விஷயங்களில் இருதரப்புக்கும் கருத்து வேறுபாடுகளும், வார்த்தைப் போர்களும் நடைபெற்று வருகின்றன. அமீரக மதத் தலைவருக்கு எதிராக அந்நாட்டு அரசு தெரிவித்த சில கருத்துகளே இதற்கு முக்கிய காரணம்.
அடுத்ததாக அமெரிக்க உறவு, முபாரக் ஆட்சிக் காலத்தில் ''அமெரிக்காவுக்கு அடங்கிய பிள்ளை'யாகவே எகிப்து இருந்தது. மேற்கத்திய நாடுகள் எதையும் முபாரக் பகைத்துக் கொள்ளவில்லை. அமெரிக்காவுடன் அனுசரித்துச் செல்கிறது என்பதற்காகவே முபாரக்கை இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சி கடுமையாகச் சாடிவந்தது. இப்போது ஆளும் கட்சியாகியுள்ள நிலையில் அதன் தலைவர்கள் நிச்சயமாக அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவே வலியுறுத்துவர்.
ஆனால், கடந்த ஆட்சியில் பிற நாடுகளுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்கள் எதுவும் திடீரென ரத்து செய்யப்படமாட்டாது என்று முர்ஷி ஏற்கெனவே அறிவித்துள்ளது அவரை மேலும் சிக்கலில் தள்ளும். இஸ்ரேலுடன் எகிப்து மேற்கொண்டுள்ள அமைதி ஒப்பந்தமும் பிரச்சினைக்குரிய விஷயமாகும். ஏனெனில், பல்வேறு இஸ்லாமிய நாடுகள், இஸ்ரேல்  எகிப்து அமைதி ஒப்பந்தத்துக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளால் குரோத மனப்பான்மையுடன் பார்க்கப்படும் ஈரானுடனான உறவை முர்ஷி எப்படிக் கையாளுவார் என்பது அடுத்த முக்கிய விஷயம். ஈரானுக்கு நட்புக்கரம் நீட்டினால், அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். அதே நேரம் ஈரானுடன் நல்லுறவு என்பது அவரது கட்சியின் கட்டாயம்.
''நாங்கள் எந்த நாட்டின் உள்விவகாரத்திலும் தலையிட மாட்டோம். அதே போல எந்த நாடும் எங்களது உள்விவகாரத்தில் தலையிட அனுமதிக்க மாட்டோம்' என்று அதிபரான பின் நிகழ்த்திய முதல் உரையில் முர்ஷி தெரிவித்துள்ளார்.
முபாரக்குக்கு எதிராக புரட்சி ஏற்பட்டபோதும் கூட ''ஜனநாயகத்தை நிலை நிறுத்துவோம்' என்ற கோஷத்தைவிட, ''இஸ்லாமிய எகிப்தை உருவாக்குவோம்' என்பதுதான் இஸ்லாமிய சகோதரத்துவத்தின் முக்கிய கோஷமாக இருந்தது. எனவே, அவர் ஏற்றுக் கொண்ட கொள்கையை முர்ஷியால் எளிதில் கைவிட முடியாது.
வெளியில் இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், உள்நாட்டில் முபாரக்கின் ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதாரச் சீர்கேடு, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளால் கொதித்தெழுந்து போராட்டம் நடத்திய மக்கள், மிகுந்த நம்பிக்கையுடன் இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சியைத் தேர்வு செய்துள்ளனர். எனவே, உள்நாட்டுச் சீர்திருத்தத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
துணை அதிபர்களாக ஒரு பெண், எகிப்தில் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களில் ஒருவர், தனது கட்சியின் இளைஞர் பிரிவைச் சேர்ந்தவரை நியமிக்க முர்ஷி முடிவு செய்துள்ளார். எகிப்தில் பெண் ஒருவர் இத்தகைய உயர்ந்த பொறுப்புக்கு நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தவிர வெளியுறவு அமைச்சராக அரசியல் கட்சிகளைச் சேராத கல்வியாளர் நியமிக்கப்படுவார் என்பது அவரது அடுத்த அறிவிப்பு.
இத்தகைய தொடக்க நடவடிக்கைகள் மூலம் அனைவரையும் அரவணைத்துச் செல்வதே தனது கொள்கை என்பதை முர்ஷி தெளிவுபடுத்தியுள்ளார். எனினும் உள்கட்சியில் அவரது நடவடிக்கைகளுக்கு எந்த அளவுக்கு ஆதரவு கிடைக்கிறது என்பதைப் பொறுத்தும், அதிபர் தேர்தலில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ள முன்னாள் பிரதமர் அகமது ஷாபிக் கட்சியின் செயல்பாடுகளைப் பொறுத்தும் எகிப்தின் எதிர்காலம் அமையும்.
தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே “எகிப்தில்
இஸ்லாமிய ஆட்சி' என்று கூறி, பாலஸ்தீனத்தில்
ஹமாஸ் இயக்க ஆதரவாளர்கள் பெரும் கொண்டாட்டத்தில்
ஈடுபட்டனர். இது இஸ்ரேலுக்கு நெருடலை ஏற்படுத்திவிட்டது.
நன்றி தினக்குரல்

No comments: