மனுஷ்ய புத்திரன் மற்றும் தமிழின் தலை சிறந்த படைப்பாளிகளுக்கு இயல் விருதுகள் | ||||
| ||||
கனடாவில் இருந்து செயல்படும் தமிழ் இலக்கியத் தோட்டம் ஆண்டுதோறும் ஒரு வாழ்நாள் சாதனையாளருக்கும் சில தலைசிறந்த நூல்களுக்கும் ஆண்டுதோறும் இயல் விருதுகளை வழங்கி வருகிறது. 2010 ஆம் ஆண்டிற்கான விருதுகள் ஜூன்18 ஆம் தேதி டொரொண்டோவில் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கு பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்களும், கல்வியாளர்களும் ஆர்வலர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள். விருது தொடர்பான சுட்டிகள்:http://www.dinamalar.com/district_detail.asp?id=259999http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/62832/language/ta-IN/article.aspxhttp://thatstamil.oneindia.in/art-culture/essays/2011/canada-literary-award-manushyaputhi-aid0091.html இது பற்றி தமிழ்த் தோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள்,விமர்சகர்கள், கொடையாளர்களின் ஆதரவுடன் 2001ம் ஆண்டு ரொறொன்ரோவில்ஆரம்பிக்கப்பட்ட அறக்கொடை நிறுவனமாகும். இந்த இயக்கத்தின் பொதுவான நோக்கம், உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும். தமிழ், ஆங்கில நூல்களை மொழிபெயர்ப்பது, அரிய தமிழ் நூல்களை மீள் பதிப்பு செய்வது, தமிழ் பட்டறைகள் நடத்துவது, நூலகங்களுக்கு இலவசமாகத் தமிழ் நூல்கள் அளிப்பது,தமிழ் பயிலும் சிறந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவது, தமிழ் சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்குவது ஆகியவை இதனுள் அடங்கும். இயல் விருது: எஸ்.பொன்னுத்துரை 1932 இல் யாழ்ப்பாணத்தில் பிறந்த எஸ்.பொன்னுத்துரை சென்னைக் கிறிஸ்தவக்கல்லூரிப் பட்டதாரி. இலங்கையிலும் நைஜீரியாவிலும் ஆசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். இலங்கைப் பாட விதான சபை, திரைப்படக் கூட்டுத் தாபனம் ஆகியவற்றிலும் சில காலம் கடமை ஆற்றியவர். தன் பதின்மவயதுகளிலேயே எழுத்துத் துறையில் கால் பதித்த அவர் இன்றுவரை ஓய்வொழிச்சலின்றி எழுதி வருவதுடன் சுவைபடப் பேசும் பேச்சாளர்கூட.அவருடைய முதல் நாவல் 'தீ". மற்றவர் எவரும் எழுதத் துணியாத சுயபாலுறவை 1960 இல் சொன்னபோது பண்டிதர்கள், புனிதர்கள் அவரைத் 'துடக்கு"எனச் சொல்லித் தூர விலக்கினார்கள். அவருடைய 'வீ" சிறுகதைத் தொகுதி பல்வேறுபட்ட மொழியாளுமைகளையும் பரிசோதனைச் சிறுகதைகளையும் வெளிக்கொண்டு வந்தது. அவருடைய இரண்டாவது நாவல் 'சடங்கு." அக்காலமத்தியதர வர்க்க அரச எழுது வினைஞரின் வாழ்க்கையையும் யாழ்ப்பாணப் பின்னணியையும் அவற்றுக்கேயுரிய மொழி, அங்கதம், வாழ்வியல் கூறுகளுடன் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் யதார்த்தமாக கையாண்ட சிறிய, ஆனால் சக்திவாய்ந்த, நாவல் அது. அவரின் 'நனவிடை தோய்தல்" 1940, 50 யாழ்ப்பாண சமூகத்தை அழகாகப் படம் பிடித்த புகைப்படக் கருவி. இவரது நேர்காணல்கள்,கட்டுரைகள் அடங்கிய 'இனி ஒரு விதி செய்வோம்" என்ற நூலும் பிரசித்தமானது.சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என இருபத்தைந்துக்கு மேலான நூல்களை எழுதியுள்ள எஸ்.பொ. சமீபத்தில் வெளியிட்ட 'மாயினி"நாவல் இலங்கை அரசியல் பின்னணியைக் கொண்டது. சுமார் இரண்டாயிரம் பக்கங்களில் 'வரலாற்றில் வாழ்தல்" என்ற தமது சுயசரிதை நூலையும்எழுதியுள்ளார். ஓர் ஈழத்து எழுத்தாளரின் வாழ்வையும், சமகால இலக்கிய ஆளுமைகளையும், இலங்கை அரசியலையும் ஒருங்கே கூறுகிறது இந்நூல்.'தேடல்தான் புதிய அனுபவங்களையும் புதிய தரிசனங்களையும் புதிய விளக்கங்களையும் புதிய ஆர்வங்களையும் புதிய உற்சாகங்களையும் புதிய ஞானத்தையும் கொண்டுவந்து சேர்க்கிறது" என்று சொல்லும் எஸ்.பொ. இன்றும் தமிழுக்கு புதிய முகத்தை தந்துகொண்டிருக்கிறார். கடந்த 60 ஆண்டு காலமாகத் தமிழுக்கு ஆற்றிய சேவைக்காக திரு எஸ்.பொன்னுத்துரை அவர்களுக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்கான 2010ம் ஆண்டு இயல் விருதை வழங்குவதில் தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது தமிழ் தோட்டம் 2010 ல் சிறந்த நுல்களுக்கு வழங்கும் இயல் விருதுகள் பொ. கருணாகரமூர்த்தி புனைவுப் பரிசு - பதுங்கு குழி சிறுகதைத் தொகுப்பு Fiction Award given in honour of Professor Kanapathipillai புலம் பெயர்ந்து வாழ் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களில் ஜெர்மனியில் வாழும் பொ.கருணாகரமூர்த்தி முக்கியமானவர். 1954 ல் புத்தூர் யாழ்ப்பாணத்தில் பிறந்து சோமாஸ்கந்த கல்லூரியில் கற்ற அவர், மாணவ காலத்திலேயே சிறுகதைகள் எழுத ஆரம்பித்துள்ளார். 1980 ல் ஜெர்மனிக்குப் புலம்பெயர்ந்த பின்னர் 'கிழக்கு நோக்கி சில மேகங்கள்" "அவர்களுக்கு என்று ஒரு குடில்," "கூடு கலைதல்,""பதுங்கு குழி" என்ற சிறுகதைத் தொகுதிகளையும் 'பேர்லின் இரவுகள்" என்ற நினைவோடைத் தொகுப்பையும், " ஒரு அகதி உருவாகும் நேரம்" என்ற குறுநாவலையும் பிரசுரித்திருக்கிறார். அவர் இறுதியாக வெளியிட்ட "பதுங்கு குழிகள்" என்ற சிறுகதைத் தொகுதியில் பதினொரு சிறுகதைகள் உள்ளன. அதில் ஒன்று பதுங்கு குழி. அக்கதை முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் மக்கள் பட்ட அவலத்தைக் கூறுகிறது. அவர்கள் இடம் பெயர்க்கப்பட்டு முள்ளிவாய்க்காலை நோக்கி நகர்த்தப் படுகின்றனர். குண்டுவீச்சு, பசி, பட்டினி, சாவுஎன்ற குழப்பமான மனநிலையில் கடற்கரையில் குழிகளை வெட்டிப் பதுங்கி இருக்கிறார்கள். அப்போது, இராணுவத்தின் திசையிலிருந்து வந்த புல்டோஸர் ஒன்று திடுதிடுப்பென திரும்பி பதுங்கு குழி அருகிருந்த மண்மேட்டைத் தன் பாரிய அலகால் ஒரே உந்தில் தள்ளி பதுங்கு குழியை மூடி நிரவி விட்டு அதன் மேல் நின்றும் சுழன்றும் ஊழித்தாண்டவம் ஆடுகிறது. மனதை அசைக்கும் இது போன்றவைதான் மற்றைய கதைகளும். எளிமையாகப் பதிவு செய்யப்பட்ட இக்கதைகள் உலகை வேற்றுக் கண்களுடன் பார்ப்பதற்கான வாசலைத் திறந்துவிடுகின்றன. 'பதுங்கு குழி" என்ற தொகுப்பு நூலுக்கு 2010ம் ஆண்டுபுனைவுப் பிரிவில் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை நினைவுப் பரிசை வழங்குவதில் தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது. சு.வெங்கடேசன் புனைவுப் பரிசு – காவல் கோட்டம் – நாவல் Fiction Award given in honour of Professor Kanapathipillai சு.வெங்கடேசன் (41) தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர். இதுவரை நாலு கவிதை தொகுப்புகளும், எட்டு கட்டுரை தொகுப்புகளும் வெளியிட்டிருக்கிறார். இவருடைய "கலாச்சாரத்தின் அரசியல்" "ஒரு வரலாற்றுப் பார்வை" ஆகிய இரு ஆய்வு நூல்களும் பாராட்டுப் பெற்றவை. இவருடைய முதல் நாவல் "காவல் கோட்டம்." ஆறு நூற்றாண்டு ( 1310 - 1910)கால மதுரையின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட நாவல் இது. அரசியல்,சமூகவியல், இன வரைவியல் கண்ணோட்டங்களுடன் வரலாற்றின் முக்கிய திருப்புமுனைகளை வியப்புடன் திரும்பிப் பார்க்க வைக்கிறது. முன்னொருவரும் சொல்லியிராத வரலாறு இந்நாவலில் கிடைக்கிறது. தேர்ந்த சொற்களில்,வளமான மொழிநடையில் ஓர் இடத்தில்கூட சற்றும் தொய்வு ஏற்படாதவாறு புனையப்பட்ட 1048 பக்க நாவல் இது. வாசகரின் கற்பனைக்கு நிறைய வெளி ஏற்படுத்தியவாறு இந்நாவலின் பெரும் பகுதி செதுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் மறைக்கப்பட்டதும், திரிக்கப்பட்டதுமான வரலாற்றைக் கண்டடைய முனைந்திருப்பது இதன் சாதனை. அதுவே இதன் தனித்தன்மை. நாவல் விரிந்துகொண்டு வரவர அதன் கட்டுமானத்திலும் வெளிப்பாட்டு முறையிலும் உச்சம் பெறுகிறது. தமிழ்ப் புனை கதையின் கலாபூர்வமான வெற்றி என இதைச் சொல்லலாம். சு.வெங்கடேசன் அவர்களுக்கு தமிழ் புனைவுலகில் நெடுங்காலம் நின்று பேசப்படக் கூடியதாக படைக்கப்பட்ட 'காவல் கோட்டம்" நாவலுக்கு 2010ம் ஆண்டு புனைவு இலக்கியப் பிரிவில் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை நினைவுப் பரிசை வழங்குவதில் தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது. சச்சிதானந்தன் சுகிர்தராஜா அபுனைவுப் பரிசு – பண்பாட்டுப் பொற்கனிகள் Non-Fiction Award given in honour of Mr.T.T.Kanagasunderampillai and the Tamil Teachers of the World. கிழக்கிலங்கையில் பிறந்த சச்சிதானந்தன் சுகிர்தராஜா படித்ததும் வளர்ந்ததும் யாழ்ப்பாணத்தில். உயர்தரக் கல்விக்காக 70களின் ஆரம்பத்தில் இலங்கையைவிட்டு வெளியேறிய இவர் இங்கிலாந்தின் பர்மிங்கம் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று, அங்கேயே கல்விசார் சூழலில் இன்றும் வாழ்ந்து வருகிறார். பின் காலனியப் பார்வையுடன் அணுகும் இவரின் கட்டுரைகள் அறிவுலகத்தில் விதந்து பாராட்டப்படுபவை. பின்காலனிய காலத்தில் திருப்பிரதிகள் எவ்வாறு கையாளப்பட்டன என்று இருபதுக்கு மேற்பட்ட நூல்களும் தொகுப்புக்களும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். பர்மிங்கம் பல்கலைக்கழகம் இவரின் ஆக்கங்களை அங்கீகரித்து இவருக்குத் தனிப் பேராசிரியர் இருக்கையை அளித்துக் கௌரவித்துள்ளது. இவருடைய நூல்களை கேம்பிரிட்ஜ், ஒக்ஸ்போட் பல்கலைக்கழகங்களும் மற்றும் பிரபல வெளியீட்டாளர்களும் பிரசுரித்துள்ளனர்.பல மொழிகளில் இவரின் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டும் உள்ளன. இவர் தமிழில் எழுத ஆரம்பித்துள்ளமை தமிழர்களுக்குக் கிடைத்துள்ள பாக்கியம்.அதன் பலனே இன்று நூலாக வெளிவந்துள்ள "பண்பாட்டுப் பொற்கனிகள்."இந்நூலில் 34 கட்டுரைகள் அடங்கியுள்ளன. அரசியல், பொருளாதாரம், இலக்கியம்,திரைப்படம், இணையம், விளையாட்டு ஆகியவை பற்றி பொதுவில் கிடைக்கும் செய்திகளின் பின்னே உள்ள மறை பொருட்களை வெளிக் கொணர்பவை இவரின் கட்டுரைகள்.வாசிப்பில் இன்பம் தரும் இவரின் மொழி நடையின் அங்கதம், கட்டுரைகளின் ஆழத்துக்கும் அகலத்துக்கும் ஒழுங்குக்கும் அழகியலை அள்ளித் தெளித்திருக்கின்றது. "பண்பாட்டுக் பொற்கனிகள்" என்ற நூலை எழுதிய சச்சிதானந்தன் சுகிர்தராஜாவுக்கு 2010 ம் ஆண்டுக்கான அபுனைவுப் பரிசை வழங்குவதில் தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது. சு.தியடோர் பாஸ்கரன் அபுனைவுப் பரிசு – இன்னும் பிறக்காத தலைமுறைக்காக Non-Fiction Award given in honour of Mr.T.T.Kanagasunderampillai and the Tamil Teachers of theWorld. சு.தியடோர் பாஸ்கரன், சென்னை கிறித்துவக் கல்லூரியில் முதுகலைப்பட்டம் பெற்று முதன்மை அஞ்சல் துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இயற்கைக்கான உலக நிதியகத்தில் (WWF-India)) அறங்காவலராக உள்ளார். தமிழ்நாட்டில் மதிப்புறு காட்டுயிர் காவலராகப் பணியாற்றியவர். காட்டுயிர் பற்றி இவர் எழுதிய The Dance of the Sarus ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பதிப்பகத்தால்1996 ல் வெளியிடப்பட்டது. சென்ற ஆண்டு இவரைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு பென்குயின் பதிப்பகம் The Sprint of the Blackbuck நூலையும் வெளியிட்டது.The Way of the Tigerநூலை "கானுறை வேங்கை" என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார். ‘உயிர்மை’, ‘பசுமைவிகடன்’ பத்திரிகைகளில் இவரது பத்தி வெளியாகின்றது.தமிழ் சினிமா பற்றிய இவரது The Eye of the Serpent நூலுக்காகத் தேசியவிருதான தங்கத் தாமரை விருதை 1997ல் பெற்றிருக்கிறார். "இன்னும் பிறக்காத தலைமுறைக்காக" என்ற நூல் சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் பற்றிய அபூர்வமான தகவல்களை சுயமான பார்வையுடன் முன்வைக்கிறது. இயற்கைக்கெதிரான மனிதர்களின் குற்றங்கள் குறித்த கடுமையான கேள்விகளையும் எழுப்புகிறது. வன உயிர்கள், தாவரங்கள் ஆகியவற்றின் அழிவு தொடர்பாக இவர் எழுப்பும் குரல் இயற்கையின் அறம் குறித்து எங்களை சிந்திக்க வைக்கின்றது. சுற்றுச்சூழல் தொடர்பாக தமிழில் எழுதப்பட்ட முன்னோடியான ஆவணம் என்ற வகையில் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது. சு.தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கு 2010ம் ஆண்டுக்கான அபுனைவுப் பரிசை வழங்குவதில் தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது. திருமாவளவன் கவிதைப் பரிசு - இருள் யாழி Poetry Award given in honour Of Professor A.W.Mailvaganam திருமாவளவன் என்ற புனைபெயர் கொண்ட கனகசிங்கம் கருணாகரன் வருத்தலைவிளான் என்ற யாழ்ப்பாணக் கிராமத்தில் பிறந்து யூனியன் கல்லூரியில் கல்வி பயின்றவர். ஈழப்போரின் காரணமாக 1991ல் புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் இவர் முதன்மையாக கவிதையில் கவனம் செலுத்தி வந்தாலும் தொடர்ந்து நாடகம், சிறுகதை இதழியல் துறைகளிலும் பங்களித்து வருகிறார். ரொறொன்ரோவிலிருந்து வெளிவந்த " ழ"கரம் (1996-97)இலக்கியச் சிற்றிதழின் இணையாசிரியராகவும் சிலகாலம் கடமையாற்றியவர்.இதுவரை '"னி வயல் உழவு" (2000), "அதே இரவு அஃதே பகல்" (2002), "இருள் யாழி" (2008) ஆகிய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். இவருடைய, "அஃதே இரவு அஃதே பகல்" கவிதை தொகுப்பு சி.கனகசபாபதி நினைவுப் பரிசு -2004 பெற்றது குறிப்பிடத்தக்கது. இவருடைய கவிதைகள், சூரியன், மழை, ஆறு, பனி, மரம், மண், இரவு, காலை,மாலை, கோடை, பூமி முதலிய இயற்கைப் பொருட்களை, அந்நியனாய் அலைந்துழலும் மனதுடன் இணைத்து , அழகும், ஆழமும் கொண்டவையாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. 'வாழுமிக் கணத்தை நீந்திச் சுகிக்கும் மீன் குஞ்சு"போல் வாழும் தத்துவத்தை கைவசப்படுத்த முனைந்தவை. கவிதை அமைப்பு,மொழி நடை, அழகியல் கூறு, வாழ்க்கை குறித்தான பார்வை ஆகியவற்றில் திருமாவளவன் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறார் என்பதைக் கவிதை விமர்சகர்கள் பலரும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். இவருடைய கவிதைகளில் வெளிப்படும் இயல்பான படிமங்களும், அசாதாரணமான வெளிச்சங்களும் படிப்பவர் மனதில் இனம்புரியாத சஞ்சலத்தையும், ஒருவித தவிப்பையும் உருவாக்குபவை. "இருள் யாழி" என்ற கவிதைத் தொகுப்பிற்காக திருமாவளவனுக்கு 2010 ம் ஆண்டுக்கான பேராசிரியர் ஆ.வி.மயில்வாகனம்கவிதைப் பரிசை வழங்குவதில் தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமை அடைகிறது. மனுஷ்ய புத்திரன் கவிதைப் பரிசு - அதீதத்தின் ருசி Poetry Award given in honour Of Professor A.W.Mailvaganam மனுஷ்ய புத்திரன் என்ற பெயரில் எழுதிவரும் எஸ். அப்துல் ஹமீது திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தார். எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் துவங்கி, தொடர்ந்து கவிதைகளும் இலக்கிய, சமூக, அரசியல் விமர்சனங்களும் எழுதி வரும் இவருக்கு 2002ல் இளம் படைப்பாளிகளுக்கான உயரிய தேசிய விருதான சன்ஸ்கிருதி சம்மான் வழங்கப்பட்டது. ‘உயிர்மை பதிப்பகம்’, ‘உயிர்மை மாத இதழ்’, ‘உயிரோசை இணைய வார இதழ்’ ஆகியவற்றை நிறுவி நடத்தி வரும் மனுஷ்ய புத்திரனை ‘இந்தியா டுடே’ இதழ் தொடர்ந்து இரண்டு வருடங்களாக தமிழகத்தின் பத்து செல்வாக்குமிக்க மனிதர்களில் ஒருவராகத் தேர்வு செய்திருக்கிறது. இதுவரை எட்டு தொகுப்புகளும், மூன்று கட்டுரை தொகுப்புகளும் வெளிவந்திருக்கின்றன. ஏறக்குறைய இருபது வருடங்களாக கவிதை எழுதி வரும் மனுஷ்ய புத்திரன்'அதீதத்தின் ருசி" தொகுப்பில் உள்ள கவிதைகளை எழுதியபோது படைப்பு நிலையின் உச்சத்தில் இருந்திருக்கிறார். இந்தக் கவிதைகள் எழுதப்பட்ட காலகட்டத்தில் ஈழத்தின் மாபெரும் இனப்படுகொலை நடந்திருப்பதால் கவிதைகள் அசாதாரணமாக அமைந்திருக்கின்றன. படிக்கும்தோறும் இவை வாசகரின் மனச் சமனை குலைத்தபடியே அலைக்கழிக்கின்றன. அவற்றை விட்டு வெளியே வரமுடிவதில்லை. துன்பத்தையும் துயரத்தையும் அநீதியையும் துரோகத்தையும் சொற்களாக்கி வரலாற்றை அழியாச் சித்திரங்களாக மாற்றிவிடும் தன்மை கொண்டவை இக் கவிதைகள். 'அதீதத்தின் ருசி" என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் மனுஷய புத்திரனுக்கு2010ம் ஆண்டுக்கான பேராசிரியர் ஆ.வி.மயில்வாகனம் கவிதைப் பரிசைவழங்குவதில் தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது. முத்து நெடுமாறன் Information Technology in Tamil Award given in honour of Sundara Ramaswamy மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் தமிழ் இணையப் பரப்பில் முக்கியமானதொரு ஆளுமையாக விளங்குகிறார். 2001 ம் ஆண்டு முதல் ‘முரசு’குழுமத்தின் தலைவராகப் பணியாற்றும் இவர் கணினிகளில் தமிழை உள்ளீடு செய்யும் முரசு அஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு தமிழைப் பாவிக்கும் செல்லினம் போன்ற மென்பொருட் தயாரிப்பை முன்னின்று நடத்தியவர். முத்து நெடுமாறன் கணினிப் பொறியியல் துறையில் (Computer engineering)1985 ம் ஆண்டு பட்டம் பெற்றவர். 2002 ம் ஆண்டு மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான அதிகாரபூர்வ மென்பொருளாக முரசு அஞ்சல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு சிங்கப்பூர் கல்வி அமைச்சு அவர்களுடைய தமிழ்ப் பயன்பாட்டிற்காக அரசாங்கத்தின் சார்பில் முரசு அஞ்சலைப் பெற்று எல்லாப் பள்ளிகளுக்கும் அனுப்பிவைத்தது. 2004 ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் முரசு அஞ்சலை ஆப்பிள் கணினிகளில் இணைத்துக் கொண்டது இவருக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம்.2005 ம் ஆண்டு பொங்கலன்று சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலி நிறுவனத்துடன் இணைந்து இவரால் தமிழ் குறுஞ்செய்தி செல்லினம் அறிமுகப்படுத்தப்பட்டது.சுந்தர ராமசாமி நினைவாக வழங்கப்படும் கணிமை விருது - 2010 இம்முறை முத்து நெடுமாறனுக்கு வழங்கப்படுவதில் தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமைப்படுகிறது. சிரோதி இராமச்சந்திரன் Scholarship Award to Student for Outstanding Essay The Tamil Literary Garden Scholarship was established in order to encourage and promote Tamil Studies in the diaspora, particularly among the second generation.This year’s topic is ‘Media and Politics in Tamil Studies.’ The essay presented this year was well – written and adjudged the best. Serothy Ramachandran is a fourth year student at the University of Toronto studying History, Urban Studies, and South Asian Studies. In the future, she hopes to become a teacher at the high school level. Her research and education interests include exploring Tamil social and political history, along with issues pertaining to Tamil people in the Canadian context. This particular essay was written by her as she had a keen interest in film and its ability to be an accessible medium for the masses. Serothy enjoys reading about Tamil culture and involves herself in various charitable, social, and educational events within the Tamil community in Toronto. The essay will be published in the next issue of Kalam magazine. It is with great pleasure that theTamil Literary Garden confers the Tamil scholarship award for 2010 to Serothy Ramachandran Nantri:uyirmmai.com |
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment