தைமலர்ந்து வருக வருகவே

 


இயற்றியவர்

பல்மருத்துவக் கலாநிதி சிவஞானச்சுடர் பாரதி இளமுருகனார்

                                (வாழ்நாட் சாதனையாளர்)





முந்துதமிழ் முச்சங்கம் எல்லாம் கண்டு

    முதுசொம்பல கொண்டதமிழ் எல்லாம் பெருமை! 

சந்ததிக்குத் தமிழைநாம் தருதல் விடுத்துத்

    தமிழின்புகழ் பேசுவதில் அர்த்தம் உண்டோ?

எந்தநாட்டில் வாழ்ந்தாலும் மானம் இருந்தால்

    என்னசொன்னாய்?   தமிழன்நான் என்று பொங்கி

வந்திடுமெம் சந்ததிக்கு ;தமிழ்கொடுப் போரை

    வாழவைக்கத் தைமலர்ந்து வருக வருகவே!

 

 


 










பொங்கல்தனை இனிமைபொங்கப் பொங்கலோ பொங்கல்

      பொலிந்திடுக என்றேபுத் தரிசி கொண்டு

பொங்கியதைப் புடவிவாழப் பொற்கதிர் வழங்கும்

     பொற்புமிகு பரிதிக்குப் படையல் செய்து

பொங்கpநிற்கும் இந்நாளில் தமிழ ரெல்லாம்

     புகலரிய ஒற்றுமையை மனதிற் பொங்கிப்

பொங்குமின்பத் தமிழனென்ற தனித்து வத்தைப்

      போற்றிடவே தைமலர்ந்து வருக வருகவே!

 

  அழிவிலாது தமிழ்மரபு காப்போம் என்று

        அன்றுமார்பு தட்டிநின்றோர் பலரில் இன்று

   உளிதேய்ந்து உளிப்பிடியாய்ப் போன கதைபோல்

        உண்மையிலே தமிழ்உணர்வு மங்கக் காண்பாய்     

   வழிவழியாய்ப் புத்தாண்டாய்க் கொண்டாடி மகிழும்

         வரலாற்றுப் பொங்கல்விழா நனிசிறக்க இன்று

   களிப்புடனே கவிபொங்கிச் சுவைக்கும் வேளை

      காதலொடு  தைமலர்ந்து வருக வருகவே!

  

 

 கோளறுபதி கம்பாடிக் கும்பிட்டு வரஇந்தக் 

      கோள்என்செயும்? என்றுசொன்னால் எள்ளிநகை ஆடும்பலர்

  நாளோடு நட்சத்திரம் நன்றாகப் பார்த்தபின்னர்

        நாடியொரு குருவினிடம் நாநூறு வெள்ளிகளை

  ஊழ்அதுதான் உறுத்துதென உளக்கவலை யுடன்கொடுத்து

        ஒருபொருளும் விளங்காத மந்திரங்கள் காதில்விழ

  மாழ்வோர்மூட நம்பிக்கை மனம்புகுந்து மாற்றிவிட  

       மகிழ்ச்சியொடு; தைமகளே மலர்ந்துநீயும்  வருவாயே!

 

 

                    பொங்கல் வாழ்த்து

 

அவனியெலாம் தூயஅன்பு அறுவடையாய்ப் பொங்கட்டும்! 

    அடுத்தவரைத் துன்புறுத்தா அன்புமனம் பொங்கட்டும்!

புவனமெலாம் போர்மறக்கும் புத்துணர்வு பொங்கட்டும்!

    போற்றிவந்த விழுமியங்கள் பொலிந்தோங்கிப் பொங்கட்டும்! தவங்கருணை தானங்கள் தரணியிலே பொங்கட்டும்!  

     தமிழரெலாம் ஒன்றிணையும் தனிமுயற்சி பொங்கட்டும்! சிவமென்ற மெய்ப்பொருளே சீரிலங்கிப் பொங்கிநிற்கச்

    செந்தமிழோ டெம்கலைகள் சிறந்தோங்க வாழ்த்துகிறேன்!








No comments: