வள்ளலாம் இறைவன் வந்துமே அமர்ந்திடுவான் !














மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ் மொழிக்  கல்வி இயக்குநர் 
மெல்பேண்   …… அவுஸ்திரேலியா 



உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
தெள்ளத் தெளிவாய் செப்பினார் திருமூலர் 
கள்ளமிலா உள்ளம் கருணையுடை உள்ளம்
கடவுளுமே வந்து தங்கிவிடும்  இல்லம் 

வெள்ளத் தனையது மலர் நீட்டம்
மாந்தரின் உள்ளத் தனையது உயர்வென
தெள்ளத் தெளிவாய் செப்பிய வள்ளுவனார்
கருத்திலும் கடவுள் தெரிகிறார் தேடுங்கள் 

வெள்ளை நிறமலருமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது
தெள்ளத் தெளிவாய் செப்பினார் விபுலாநந்தர்
உள்ளத்தில் இறைவான் உறைவது நிச்சயமே 

கள்ள மனத்தைக் கலைத்திடவே வேண்டுமென
தெள்ளத் தெளியாவாய் தேர்ந்துமே செப்பினார்
கள்ளமிலா உள்ளமே கடவுளுக்குக் கருவறையே
வெள்ளை மனமே விடிவுக்கு விளக்காகும்

உள்ளந் தெளிந்தால் உணரலாம் உண்மையினை
உள்ளந் தெளிந்தால் உயிர்ப்போடு வாழ்ந்திடலாம்
உள்ளங் கலங்காமல் உயர்வினை உன்னினால்
வள்ளலாம் இறைவன் வந்துமே அமர்ந்திடுவான் !



 

No comments: