கிளிக்கண்ணிகள் -- ( பழித்தறிவுறுத்தல்)

                                                                                                           









மகாகவி சுப்பிரமணிய பாரதி அவர்கள் இயற்றியவை  

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,

வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!

வாய்ச் சொல்லில் வீரரடி.

 

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,

நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!

நாளில் மறப்பா ரடீ

 

சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும்

அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே!

அகலிகளுக் கின்ப முண்டோ ?

 

கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற

பெண்களின் கூட்டமடீ! - கிளியே!

பேசிப் பயனென் னடீ

 

யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார்,

மந்திரத் தாலே யெங்கும் - கிளியே!

மாங்கனி வீழ்வ துண்டோ !

 

உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்

செப்பித் திரிவா ரடீ! - கிளியே!

செய்வ தறியா ரடீ!

 

தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்

நாவினாற் சொல்வ தல்லால் - கிளியே!

நம்புத லற்றா ரடீ!

 

மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்

பேதைகள் போலு யிரைக் - கிளியே

பேணி யிருந்தா ரடீ!

 

தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய

ஆவி பெரிதென் றெண்ணிக் - கிளியே

அஞ்சிக் கிடந்தா ரடீ!

 

அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்

உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ - கிளியே

ஊமைச் சனங்க ளடீ!

 

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா

மாக்களுக் கோர் கணமும் - கிளியே

வாழத் தகுதி யுண்டோ ?

 

மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்

ஈனர்க் குலகந் தனில் - கிளியே!

இருக்க நிலைமை யுண்டோ ?

 

சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல்

வந்தே மாதர மென்பார்! - கிளியே!

மனத்தி லதனைக் கொள்ளார்

 

பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்

பழமை இருந்த நிலை! - கிளியே!

பாமர ரேதறி வார்!

 

நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்

தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே!

சிறுமை யடைவா ரடீ!

 

சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்

சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!

செம்மை மறந்தா ரடீ!

 

பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்

துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே!

சோம்பிக் கிடப்பா ரடீ!

 

தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார்

வாயைத் திறந்து சும்மா - கிளியே!

வந்தே மாதர மென்பார்!



















----------------------------------------------------------------------------------------------------------------------------------



                                                                                                                           
 








கலாநிதி பாரதி இளமுருகனார் அவர்கள் இயற்றியவை

 

கிளிக்கண்ணிகள்  - பழித்றிவுறுத்தல்

 

பண்டைய தமிழர்தம்   பாரம்பரிய மெல்லாம்

விண்டவர் யாரு ளரோ? – கிளியே

வீண்சொல்லில் வீர ரடீ!

                          

அன்றைய அம்பெரும் விழுமியப் பண்பையெலாம்

இன்று மறந்தா ரடீ! கிளியே

என்றுதான் உணர்வா ரோடீ!

 

இல்லத்தில் விருந்தோம்பும் இனிய பண்பதனை

மெல்லத்தான் விட்டா ரடீ! கிளியே

மீண்டும்கைக் கொள்வா ரோடீ!

 

கண்டவுடன் காதலித்துக் கைவிட்டுப் பிரிந்தவரைத்

தண்டிக்க எவருமுண்டோ? – கிளியே

தவிப்பவரின் நிலையு மேதோ?

 

சிவால யத்திலவர் திருமணம் செய்தபின்பு

விவாக ரத்துஞ் செய்வா ரடீ! கிளியே

வீணரின் செயலிதுதா னோடீ?

 

நஞ்சையவர் நெஞ்சில் வைத்து நகையை உதட்டில்வைத்து

வஞ்சனை செய்வா ரடீ! கிளியே

 வசதிக்கு நடிப்பா ரடீ!

 

செந்தமிழோ டாங்கிலத்தைச் சேர்த்தே எழுதிடுவோர்

மந்த புத்தி கொண்டோ ரடீ! கிளியே

மாந்தர்களில் ஈன ரடீ!

 

பைந்தமிழில் இனிய சொற்கள் பல்லாயிரம் இருந்தும்

செந்தமிழைப் படிக்கா ரடீ! கிளியே

சிந்தைதான் நோகு தடீ!

 

நிலம்விட்டுப் புலம்பெயர்ந்து நிலைகொண்ட தமிழரவர்

கலங்கிடுவா ரோடீ கிளியே

காதரம் கொள்ளா ரடீ!

 

தோத்திரம் தரும் பலனைத் துளியேனும் நம்பாது

சாத்திரம் பார்ப்பா ரடீ!  - கிளியே

பார்த்தவைதான் பலிக்கு மோடீ!

 

பலனை எதிர் நோக்கிப் பணத்தை இழந்தோர்கள்

இலவு காத்த கிளியாமோ கிளியே

ஏமாற்றும் உலக மடீ!

 

சுதந்திரம் தலைவிரித்து ஆடிடத் துயரிங்கு

நிரந்தரம் பெருகு தடீ! கிளியே 

நீக்கிட வழிதா னுண்டோ?

 

பெருமையாய் உயிர்களில் உயர்சிவம் காண்பது 

அருமையாய் விட்டு தடீ! கிளியே

 அஞ்ஞானம் பெருகு தடீ

 

கள்ளமாய்ப் பொருளீட்டிக் காலங் கழிப்பவர்

புள்ளகம் கொள்ளாரடீ கிளியே

போங்காலம் காண்பா ரோடீ?

 

அஞ்சிஅஞ்சிச் சாவது அறியாமை அல்லவோ?

அஞ்சாமை வேண்டு மடீ! கிளியே

ஐந்தெழுத்தை மறப்பா ரடீ

 

ஆவி பிரியும்போது அம்மாவெனக் கதறும் ஆட்டைப்

பாவியர் வெட்டுவா ரடீ கிளியே

பழிக்கவர் அஞ்சா ரடீ

 

அன்புக்கு விலைபேசும் அறிவிலிகள் கூடுகையில்

துன்பந்தான் பெருகு தடீ கிளியே

சோதனைக் கால மடீ

 

 

விண்டவர் - அறிந்தவர் 

ஈனர் - இழிந்தவர்

காதரம் - அச்சம்

இலவு காத்த கிளி - இலவங்காய் முற்றியதும்  வெடித்துப் பஞ்சு காற்றிலே பறந்துவிடுமன்றோ?

அதனை எடுக்கலாம் என்று பலனை எதிர்பார்த்துக் காத்திருந்து ஏமாந்த கிளி போல

நிரந்தரம் - என்றும்

புள்ளகம் - மகிழ்ச்சி

போங்காலம் -- அழிவுக்காலம்

ஐந்தெழுத்து பஞ்சாட்சர மந்திரம் சிவாயநம

No comments: