அப்பா எனும் பொழுது ஆண்டவனே தெரிகிறார் !

 


























மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா



அப்பா எனும் பொழுது
        அன்பு தெரிகிறது
அப்பா எனும் பொழுது
       கருணை தெரிகிறது
அப்பா எனும் பொழுது
       ஆண்டவனே தெரிகிறார்
அப்பா எனும் வார்த்தை
       அனைவர்க்கும் மந்திரமே !

அன்னையால் நாம் பிறந்தோம்
       அப்பாதான் வேராவார்
அவரருகில் இல்லை என்றால்
       அனைத்துமே அகன்றிடுமே
வழித் துணையும் அவரே
         மருத்துவரும்  அவரே
மா மருந்தாய் இருந்து
      காத்திடுவார் அப்பா !


பெருமை கொள்வார் அப்பா
      பிறந்ததுமே பார்த்து
மழலை குரல் கேட்டு
      மயங்கிடுவார் அப்பா
உச்சி தொட்டுக் கொஞ்சி
       உருகிடுவார் அப்பா
உள்ள வரம் அனைத்தும்
      பிள்ளையென நினைப்பார் !


தன் முகத்தைப் பார்த்து
    மழலையைப் பார்ப்பார்
தனை மறந்து அப்பா
     மூழ்கிடுவார் மகிழ்வில்
இறை கொடுத்த வரமாய்
       எண்ணிடுவார் அப்பா
இவ் உலகு அவர்க்கு
       இன்பமாய் தெரியும் ! 


பிள்ளை மனம் அறிந்து
    பேணிடுவார் அப்பா
உள்ளம் எலாம் பிள்ளை
     நினைவுடனே இருப்பார்
அள்ள அள்ள குறையா
     அன்பினையே கொடுப்பார்
அவர் என்றும் துணையாக
      ஆகியே இருப்பார்  !


கற்கின்ற கரு அதனை
      கருத்திலே கொள்வார்
கல்வி கற்க வாழ்வினிலே
        கண்ணாக இருப்பார்
தன் பிள்ளை ஆளுமையாய்
     வரவெண்ணி உழைப்பார்
கற்றவர்கள் சபை அமரக்
     காத்திருப்பார் அப்பா ! 


நல்லவனாய் வல்லவனாய் வர
   அப்பா நினைப்பார்
எல்லையில்லாப் புகழ் பெறவே
     எல்லாமே கொடுப்பார்
நல்ல பிள்ளை என்று
      நாடெல்லாம் சொல்ல
நாழும்  எண்ணி அப்பா
     வாழ்ந்திடுவார் மண்ணில்  !

No comments: