எண்ணாய் இருப்பான் எழுத்தாய் இருப்பான்
கண்ணாய் இருப்பான் மணியாய் இருப்பான்
உண்ணும் உணவாய் பருகும் நீராய்
எல்லாம் ஆகி இருப்பான் கண்ணன்
கடலாய் இருப்பான் அலையாய் எழுவான்
முகிலாய் இருப்பான் மழையாய் பொழிவான்
வயலாய் இருப்பான் பயிராய் இருப்பான்
வளமாய்க் கண்ணன் நிறைந்தே இருப்பான்
ஆக்கும் சக்தியாய் அழிக்கும் சக்தியாய்
காக்கும் சக்தியாய் கண்ணன் இருப்பான்
நோக்கும் இடமெலாம் இருப்பான் கண்ணன்
எல்லாச் சுவையிலும் இருப்பான் கண்ணன்
கண்ணன் இல்லாச் சுவையே இல்லை
பாலும் அவனே தேனும் அவனே
பழத்தின் சுவையாய் இருப்பவன் அவனே
பிறப்பைக் கொடுப்பான் இறப்பைக் கொடுப்பான்
பிறவிப் பிணியை நீக்கவும் செய்வான்
அறத்தை மறந்தால் அழிக்கவும் செய்வான்
அன்பைக் காட்டி அணைத்துமே நிற்பான்
அன்பாய் அழைத்தால் அருகில் வருவான்
அமைதி தருவான் ஆறுதல் அளிப்பான்
ஆணவம் கொண்டால் ஆத்திரம் அடைவான்
அவனே ஆசான் அவனே அரசன்
நல்வழி காட்டும் நண்பனும் ஆவான்
நயமுடன் உரைக்கும் நாயகன் அவனே
தொல்லை கொடுத்தால் புகட்டுவான் பாடம்
தூய்மையாம் மனத்தில் துயிலுவான் கண்ணன்
இசையும் அவனே இலக்கியம் அவனே
இங்கிதம் அவனே சங்கீதம் அவனே
அசையும் பொருளும் அசையாப் பொருளும்
அனைத்தும் கண்ணன் இருப்பிடம் ஆகும்
கண்ணனே பரம்பொருள் கண்ணனே அனைத்தும்
கண்ணனே அனைத்துமாய் ஆகியே இருக்கிறான்
பூதல மாந்தர் புனிதமாய் இருக்க
கீதையை ஈந்ததும் கண்ணனே ஆவான்
கீதை என்பது வேதமே ஆகும்
கீதையைப் படித்தால் கீழ்க்குணம் அகலும்
கீதையில் இல்லா வழிமுறை இல்லை
கீதையைப் படிப்போம் பாதையை அறிவோம்
No comments:
Post a Comment