இலங்கைச் செய்திகள்

 சிவனொளிபாத மலையில் நல்லிணக்க வேலைத்திட்டம்

தினகரனின் பங்களிப்பு அளப்பரியதாகும்

புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை வரவேற்கிறோம்

வெடுக்குநாறி மலை விவகாரம்: குற்றச்சாட்டை நிரூபிக்க தவறிய பொலிஸார்

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான கும்பாபிஷேகம்


சிவனொளிபாத மலையில் நல்லிணக்க வேலைத்திட்டம்


March 22, 2024 9:00 am 

னங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சிவனொளிபாத மலையில் விசேட வேலைத்திட்டம் நேற்று முன்தினம் புதன்கிழமை (20) முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் நல்லதண்ணீர் சிவனொளிபாத மலையின் அடிவாரத்திலிருந்து சிவனொளிபாத மலை உச்சிவரை சமாதான விழுமியப் பண்புகள் அடங்கிய சுமார் 30 பெயர்ப்பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

சிவனொளிபாத மலை பருவ காலத்தின் போது பல்லாயிரக்கணக்கான யாத்திரிகர்கள் தரிசனம் செய்வதற்காக சிவனொளிபாத மலைக்கு வந்து செல்கின்றனர். சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், சகவாழ்வு, சமத்துவத்தை யாத்திரிகர்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதற்கான நிகழ்வின் போது நல்லதண்ணீர் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக சர்வமத வழிபாடு நடைபெற்றது. இதன்போது சாந்தி, சமாதானம், சகவாழ்வு, விழுமியப்பண்பு ஆகிய விடயங்களை உள்ளடக்கிய நூல்கள் மற்றும் கையேடுகள் யாத்திரிகர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.  இதனைத் தொடர்ந்து சிவனொளிபாத மலைவரை சர்வமத குழுவினர் பாத யாத்திரை சென்றனர்.

தேசிய சமாதான பேரவையின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் ஈரேசாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட தேசிய சமாதான பேரவைத் தலைவர் பிரம்மஸ்ரீ கலாநிதி நந்தகுமார் குருக்கள், ரத்தின தேரர், போதகர் ஜெரி ஆனந்தராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கினிகத்தேனை தினகரன், ஹட்டன் விசேட நிருபர்கள்

நன்றி தினகரன் 




தினகரனின் பங்களிப்பு அளப்பரியதாகும்

மாத்தளை முத்துமாரியம்மன் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர்

March 22, 2024 6:58 am 

ஒன்பது தசாப்தகாலமாக தமிழ் மக்களுக்கு பெரும் சேவையாற்றி, இலங்கையின் சுதந்திரம், சமூக, பொருளாதார, கலை, கலாசார அறிவியல், இலக்கிய மேம்பாட்டுக்கு தினகரன் அளித்து வரும் பங்களிப்புகள் அளப்பரியதென,   மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் தேவஸ்தான அறங்காவலர் சபையின்  தலைவர் விக்நேஷ்வர சர்வானந்தா தெரிவித்தார்.

தினகரன் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டு அதன் 92ஆவது வருடத்தில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்த போது, “இலங்கையின் வரலாற்றிலும் பத்திரிகை உலகிலும் அழியாத்தடத்தை தினகரன் பதிப்பதுடன்,  தமிழ் பேசும் மக்களின் அறிவை திரட்டுகின்ற சான்றிதழ்களாக திகழும் தினகரனின் ஒன்பது தசாப்த முயற்சியை எம் மனமாற வாழ்த்துகிறோம்.

மென்மேலும் முதன்மை செய்தி பத்திரிகையாக  திகழ அப்பத்திரிகையில் தொழில் புரியும் அனைவருக்கும் நல்வாழ்த்து தெரிவிக்கிறோம்.

எமது ஆலயத்தில் வருடம் தோறும் நடைபெறும் மாசிமக தேர் திருவிழாவுக்கு தினகரன் பூரண ஊடக அனுசரணை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது” என்றார்.   நன்றி தினகரன் 






புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை வரவேற்கிறோம்

நியூஸிலாந்து துணை உயர்ஸ்தானிகரிடம் வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

March 22, 2024 6:44 am 

புலம்பெயர் தேசத்திலுள்ள உறவுகளின் முதலீடுகளை தாம்  வரவேற்பதாக நியூஸிலாந்து துணை உயர்ஸ்தானிகர் அன்ரூ ட்ரவெல்லருக்கு (Andrew Traveller)  வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான நியூஸிலாந்து துணை உயர்ஸ்தானிகருக்கும்  வடமாகாண  ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு, யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை (21) நடைபெற்றது. வடமாகாண  ஆளுநரை சந்தித்த நியூஸிலாந்து துணை உயர்ஸ்தானிகரிடம் பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் பரிமாறப்பட்டன.

வடமாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆளுநரிடம்  நியூஸிலாந்து துணை உயர்ஸ்தானிகர் கேட்டறிந்தார்.

வடமாகாணத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி, முதலீட்டு வலயங்களை ஸ்தாபித்தல்,  கல்வி, பொருளாதாரம், வாழ்வியல் நிலை,   காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம் ஆகியவை தொடர்பாகவும் இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

பருத்தித்துறை விசேட நிருபர் - நன்றி தினகரன் 




வெடுக்குநாறி மலை விவகாரம்: குற்றச்சாட்டை நிரூபிக்க தவறிய பொலிஸார்

- ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் விடுதலை; வழக்கும் தள்ளுபடி

March 20, 2024 11:48 am 

வவுனியா வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் சிவாரத்திரி பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் வவுனியா நீதிமன்றத்தால் நேற்று (19) விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி பூஜை வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் வைத்து ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 9 ஆம் திகதி வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

கடந்த 12 ஆம் திகதி வழக்கு விசாரணை மீள எடுக்கப்பட்டபோது, நேற்று வரை பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பொலிஸார் அவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க தவறிய காரணத்தால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு 8 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

இது தொடர்பில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா கருத்து தெரிவிக்கையில்,

கடந்த சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதி சிவலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பொலிஸ் தரப்பில் தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் வவுனியா நீதிமன்றம் அனைவரையும் கடந்த 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கின்ற உத்தரவை வழங்கியிருந்தது.

பொலிஸாரையும் விசாரணையை துரிதப்படுத்தி பூரணமான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யுமாறு தெரிவித்திருந்தது. கடந்த 12 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேகநபர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் பொலிஸ் தரப்பில் சொல்லப்பட்ட பல்வேறு விடயங்களையும் ஆட்சேபித்து, எந்தவொரு இடத்திலும் சட்டம் மீறப்படுவில்லை என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தி,தொல்பொருட்கள் கட்டளைச்சட்டம் பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அவதானிக்கின்றபோது இதற்கு பொருந்தாது என்று சுட்டிக் காட்டப்பட்டு அவர்களுக்கு பிணை வழங்குமாறு வாதிட்டோம்.ஆயினும், பொலிஸ் தரப்பில் குறித்த கட்டளைச் சட்டத்தின் பிரிவு 15 உப பிரிவு C இனை சுட்டிக்காட்டி அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும் என மீண்டும் கோரப்பட்டது. அந்நிலையில் அறிவு சார் நீதவான் இந்த விசாரணை முடிவுறுத்தப்பட்டு பொலிஸ் தரப்பில் இறுதி அறிக்கை வடிவில் பிராத்து எனப்படும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதற்கு பொலிஸார் கோரியவாறு ஏற்றுக் கொண்ட ஒருவார கால அவகாசத்தை வழங்கியிருந்தார்.

நேற்று வரை சந்தேகநபர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைக்கும் உத்தரவை வழங்கியிருந்தார். மீண்டும் நேற்று வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபருடைய ஆலோசனையையும், அறுவுறுத்தல்களையும் பெறுவதற்காக வழக்கின் விசாரணை கோவையையும், தங்கள் வசம் இருக்கும் அனைத்து கோவைகளையும் சட்டமா அதிபரின் பரிசீலனைக்காக தாங்கள் அனுப்ப வேண்டி இருப்பதால் இன்று (19) குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்ய முடியவில்லை எனவும் மன்றில் தெரியப்படுத்தினர்.இந்த அடிப்படையில் சந்தேகநபர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைப்பதற்கான விண்ணப்பதை முன்வைத்தனர். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சந்தேகநபர்கள் அனைவரும் இந்த நாட்டின் பிரஜைகள். நீதிமன்ற கட்டளை ஊடாக விளக்கமறியலில் வைப்பதனால் அவர்களின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது. அது சட்டத்திற்கு அமைவாகவே இருக்க வேண்டும் என தெரிவித்தோம்.

பொலிஸ் தரப்பின் விண்ணப்பம், குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்ய தாங்கள் ஒத்துக் கொண்ட இன்றைய தினம் (19) தாக்கல் செய்யாமல் சட்டா அதிபரின் அறிவுரையை இப்போது நாடியிருப்பது இந்த வழக்கின் சட்ட அடிப்படை தொடர்பிலே அவர்கள் திட்டவட்டமான தெளிவான நிலைப்பாட்டில் இல்லை என்பதை முன்வைத்தோம். இருட்டு அறை ஒன்றில் கறுப்பு பூனையை தேடுவது போன்று தான் சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை வடிவமைக்கும் விதமாக செயற்படுகிறார்கள் என்பதையும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.

எங்கள் தரப்பில் செய்யப்பட்ட பல்வேறு சமர்ப்பணங்கள் தொடர்பாக பரிசீலித்த நீதிமன்றம், குற்றப்பத்திரம் தாக்கல் செய்யாது சட்டமா அதிபரிடம் தற்போது ஆலோசனை பெறுவது தொடர்பில் பல கேள்விகளை பொலிஸாரிடம் கேட்டிருந்தது. இறுதியில் விபரமான தீர்ப்பினை வழங்கியிருக்கின்றது. சந்தேகநபர்கள் பிணை மறுக்கப்படும் தொல்பொருள் கட்டளைச் சட்டம் 15 Cஇன் கீழ் பொலிஸார் தாக்கல் செய்துள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டிய மன்று, பிரஜைகள் சுதந்திரத்தை கட்டுப்படுத்த முடியாது. இது சட்டத்திற்கோ, நீதிக்குகோ ஏற்புடையது அல்ல. குற்றச்சாட்டு நிருப்பிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகளே. அதனடிப்படையில் நாங்கள் கோரியவாறு உகந்த கட்டளை ஒன்றை வழங்குமாறு முன்வைத்த கருத்தினை எடுத்து இந்த வழக்கில் இருந்து அனைத்து சந்தேகநபர்களையும் விடுதலை செய்து வழக்கினையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.குறித்த வழக்கில் சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா, அன்ரன் புனிதநாயகம், க.சுகாஸ், தி.திருஅருள், அ.திலீப்குமார், நிவிதா, கிசான், தர்சா, நிதர்சன், கொன்சியஸ், சாருகேசி உள்ளிட்ட பலர் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா விசேட நிருபர் - நன்றி தினகரன் 





தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான கும்பாபிஷேகம்

March 20, 2024 11:30 am

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 25ஆம் திகதி (திங்கட்கிழமை) பங்குனி உத்தர நன்னாளில் நடைபெறவுள்ளது.

இதனையிட்டு இன்று புதன்கிழமை காலை கும்பாபிஷேகத்துக்கான சமய கிரியைகள் ஆரம்பமாவதுடன், நாளை வியாழக்கிழமை நண்பகல் 12 மணி முதல் ஞாயிறு பிற்பகல் 2.00 மணிவரை அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்துதல் நடைபெறவுள்ளது.எதிர்வரும் திங்களன்று காலை 9.25 மணி முதல் முற்பகல் 10.33 மணிவரையான சுபமுகூர்த்த வேளையில் துர்க்காதேவிக்கு பெரும் சாந்தி விழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் அன்றையதினம் காலை 6.00 மணி முதல் 7.10 மணிவரை இராஜகோபுர கும்பாபிஷேகமும் காலை 9.25 மணி முதல் 10.33 மணிவரை மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது.

இதில் தேவஸ்தானத்துக்கு வருகை தரும் அடியார்கள் அனைவரும் தமது தமிழ் கலாசார முறைப்படி வருகை தந்து வழிபாட்டில் ஈடுபடுமாறு, தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். விசேட நிருபர் - நன்றி தினகரன் 





No comments: