கெடுதலில்லாத தொழில் செய் - அன்பு ஜெயா கழி நெடிலடி ஆசிரிய எழுசீர் விருத்தம்

 

எங்கெங்கே திரும்பினாலும் புகைதான் வானில்,

    எக்காலம் முடியுமிந்த இழிவாம் செய்கை?

தங்களது தொழில்மட்டும் செழிக்க எண்ணித்

    தந்நலமே கருதிடுவோர் திருந்து வாரோ!

தங்களது நலம்மட்டும் நினைப்போர் தம்மின்

    தந்நலத்தை வேரறுத்து புவியைக் காப்போம்!

மங்கிவரும் மக்கள்தம் நலம்தான் அன்று

    மாசின்றி இவ்வுலகில் சிறப்பாய் மாறும்! (1)

 

இன்றுநீயும் தொழில்செய்ய விருப்பம் கொண்டால்

    இனிமையான தொழில்களிங்கே மிகையாய் உண்டே;

தொன்றுதொட்டு நம்மக்கள் நலமே காக்கும்

    தொழில்களையும் தெரிவுசெய்தே வளமாய் வாழ்வாய்!

நன்றாய்நம் முன்னோர்கள் வழியில் சென்று

    நம்மாழ்வார் போல்நாட்டை நலமாய்க் காப்பாய்;

இன்றேநீ ஏற்றிடுவாய் உறுதி தன்னை

    இவ்வுலகின் நலமேயென் வழிதான் என்றே! (2)

 

No comments: