உல்லாசப் பயணம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 உல்லாசப் பயணம் போவதென்றால் எல்லோருக்கும் பிடிக்கும்.


ஆனால் போகும் பயணத்தில் எதிர்பாராத திருப்பங்கள் , சம்பவங்கள் ஏற்பட்டால் சில சமயம் அது கொண்டாட்டம் சில சமயம் அது திண்டாட்டம் . இப் படத்தின் கதாநாயகனுக்கு அதுதான் நடக்கிறது. அறுபது ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு ஜாலியான பேரை சூட்டி எடுத்த படத்தின் ஹீரோ இலட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன். அப்படி என்றால் கதாநாயகி விஜயகுமாரிதானே!


பணக்கார குடும்பத்தை சேர்ந்த செல்வத்தை அவன் அத்தை பலத்த

கட்டுப்பாட்டுடன் வீட்டுப் பிள்ளையாக வளர்க்கிறாள் . அப்படி வளர்பவனுக்கு உல்லாசப் பயணம் போக வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது . வேறு வழியின்றி அத்தை அனுமதிக்க பயணம் தொடங்குகிறது. அப் பயணத்தில் செல்வத்துக்கு ஒரு காதலி கிடைக்கிறாள், வில்லன் குறுக்கிடுகிறான், ஒரு மர்ம மனிதன் தொடர்கிறான் இவற்றுக்கு மத்தியில் அவனது உல்லாசப் பயணம் நிறைவேறியதா என்பதே கதை.

பொதுவாக சீரியஸான படங்களில் நடிக்கும் எஸ் எஸ் ஆருக்கு இப் படத்தில் ஈசியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை அவரும் தவற விடவில்லை. தமாஷாக நடிக்கும் அவர் சில காட்சிகளில் உணர்ச்சிகரமாகவும் நடித்திருந்தார். விஜயகுமாரி அழகாகவும் வருகிறார் நன்றாகவும் நடிக்கிறார். தாயாக வரும் எஸ் வரலஷ்மி படம் முழுவதும் டென்ஷானாக காணப்படுகிறார்.

படத்துக்கு மகிழ்ச்சியை கொடுப்பது கே ஏ தங்கவேலுதான் . படம் முழுதும் அவரின் காமடி கை கொடுக்கிறது. அவருக்கு இணை புஷ்பமாலா. 64ம் வருட படம் என்றால் நடிகவேள் எம் ஆர் ராதா இல்லாத படமே இல்லை எனலாம். இதிலும் இருக்கிறார் , படம் முழுதும் சதித் திட்டம் தீட்டுகிறார் . தத்துவங்களாக உதிர்க்கிறார் . சாமி கிட்டே பக்தன் நடிக்கிறான், இன் கம் டக்ஸ்காரன்கிட்டே இருக்கிறவன் நடிக்கிறான், ஒரு நைலான் சேலைகிட்ட நாலைந்து டெர்லின் ஷேர்ட் நடிக்குது, சர்கஸ்காரன்கிட்ட சிங்கம் நடிக்குது , பொய் கணக்கு எழுத உனக்கு தெரியவில்லை என்றால் பொருளாதாரம் படித்த நல்ல சட்ட நிபுணர்கள் இருக்கிறார்கள் அவர்களை பயன்படுத்தலாம் என்று அவர் சொல்லும் போது கொட்டகை அதிர்கிறது. அவருடன் வரும் அசோகன் நடிப்பும் அட்டகாசம்.

இவர்களுடன் குமாரி ருக்மணி, மாலி, கே கே சௌந்தர், மீராதேவி ஆகியோரும் நடித்திருந்தனர்.

படத்துக்கு கதை வசனம் எழுதியவர் க . தேவராஜன். நகைச்சுவை வசனங்களில் அவர் திறமை பளிச்சிட்டது. ராமசந்திரன் ஒளிப்பதிவை கையாண்டார். ஆர் தேவராஜன் படத் தொகுப்பை கவனித்துக் கொண்டார் . நடனம் சின்னி சம்பத்.


படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியவர் புதுக் கவிஞரான திருச்சி தியாகராஜன். ஒவ்வோர் ஆண்டும் சித்திரை வருடப் பிறப்போடு வரும் பன்னிரண்டு மாதங்களையும் குறித்து அவர் எழுதிய சித்திரை பெண்ணே சித்திரை பெண்ணே சிங்கார கண்ணே கண்ணே பாடல் எஸ் ஜானகி குரலில் இனிமையாக பொருள் பொதிந்து ஒலித்தது. இது தவிர பார்த்த கண்கள் நான்கு, போடா போடா பைத்தியமே , பூட்டிய கதவை திறந்து விடு ஆகிய பாடல்களும் சோடை போகவில்லை. படத்துக்கு இசை கே வி மகாதேவன். பாடல்களில் மட்டுமன்றி டைட்டில் இசையிலும் தன் திறனை கட்டியிருந்தார் அவர்.

குறைந்த பட்ஜெட்டில் தொடர்ந்து படங்களை தயாரித்து வந்த சேலம்
எம் ஏ வேணு இந்தப் படத்தையும் தான் குத்தகைக்கு எடுத்திருந்த சேலம் ரத்னா ஸ்டுடியோவில் படமாக்கியிருந்தார். புது இயக்குனரான சத்யம் படத்தை குறை சொல்ல முடியா வண்ணம் டைரக்ட் செய்திருந்தார். உல்லாசப் பயணம் , மிக அவசியமான பயணம்!















No comments: