ராஜபார்ட் ரங்கதுரை - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்


 நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95வது பிறந்த தினம் இவ்வாண்டு அக்டோபர் முதல் தேதி ஆகும். எடுத்த ஒரு பிறவியிலேயே ஏராளமான வேடங்களில் நடித்து ரசிகர்களளை பிரமிக்க வைத்த சிவாஜி நாடக நடிகனாக ஒரு படத்தில் வாழ்ந்து காட்டினார். அந்தப் படம்தான் 1973ம் ஆண்டு வெளிவந்த ராஜபார்ட் ரங்கதுரை. இலங்கை புங்குடுதீவில் பிறந்து இளம் வயதிலேயே தமிழ் திரையுலகில் பிரபல கதாசிரியராக, வசனகர்த்தாவாக, தயாரிப்பாளராக உருவாகியிருந்த வி சி குகநாதன் , வி சி கணேசனின் நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் இப் படத்தை கலரில் தயாரித்திருந்தார் .



தானே ஒரு கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் விளங்கிய போதும் தான் தயாரிக்கும் சிவாஜியின் படத்தில் தயாரிப்பாளராக மட்டும் நின்று கொண்டு கதைவசனம் எழுதும் பொறுப்பை பலமுருகனிடம் விட்டிருந்தார் குகநாதன். நாடகப் பின்னணியில் இருந்து வந்திருந்த பாலமுருகனும் அதனை ஏற்று திறமையாக கதைவசனத்தை அமைத்திருந்தார். நாடக மன்றம் ஒன்றை நடத்திக் கொண்டு அதனை மட்டும் நம்பி தானும் தன் குடும்பமும் மட்டுமன்றி தன் நாடக மன்ற அங்கத்தவர்களையும் எவ்வாறு ஒரு தனி கலைஞன் சுமந்து நிற்கிறான் என்பதே படத்தின் கதையாகும். இதனால் ரங்கதுரையாக வரும் சிவாஜி படம் முழுவதும் தன் நடிப்பால் வியாபித்திருந்தார் . மற்றைய கலைஞர்கள் எல்லாம் அவர் பின்னாலேயே மேடையிலும் , படத்திலும் நிற்கிறார்கள்!

அரிச்சந்திரன்,ஹேம்லட், திருப்பூர் குமரன், வேலன்,பகத்சிங் , இப்படி பல பாத்திரங்களில் தோன்றும் சிவாஜி, ஜெமின்தாராக மிடுக்குடன் வரும் போது மலைப்பாக இருக்கிறது. மறு காட்சியில் ராஜபார்ட்டாக மாறும் போது அவர் மீது பச்சாதாபம் ஏற்படுகிறது. என்ன நடிப்பு!

சிவாஜியின் நிரந்தர கதாநாயகியாகி விட்ட உஷா நந்தினி இதிலும் அவருக்கு ஜோடி. மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் பாடலில் அழகாக தோன்றுகிறார். மற்றபடி அவருக்கும் சேர்த்து சிவாஜியின் தங்கையாக வரும் ஜெயா உணர்ச்சிகரமாக நடிக்கிறார். ஸ்ரீகாந்த் நடிப்பில் முதிர்ச்சி தென்படுகிறது. வில்லனாக வரும் நம்பியாரை விட அவருடனேயே வரும் ராமதாஸ் தான் சைலன்ட் வில்லன். இவர்களுடன் வி கே ராமசாமி, டி கே பகவதி, குமாரி பத்மினி, சுருளிராஜன், மனோரமா, சசிகுமார், சி கே சரஸ்வதி, சாமிக்கண்ணு, அங்கமுத்து, பகோடா காதர், இன்னும் ஏராளமான நாடக நடிகர்களும் படத்தில் பங்கேற்றார்கள் .

அம்மம்மா தம்பி என்று நம்பி உன்னை வளர்த்தேன், ஜின்ஜினுக்கா

சின்னக்கிளி இரண்டும் உருக்கமான பாடல்கள். மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் ரொமான்ஸ் பாடல். படத்தில் சின்னதும், பெரிதுமாக பல பாடல்கள் , அவற்றை எல்லாம் உணர்ச்சிகரமாக பாடிய டீ எம் சௌந்தர்ராஜனை குறிப்பிட்டே ஆக வேண்டும். இசை விஸ்வநாதன், பாடல்கள் கண்ணதாசன்.கூட்டணி வெற்றி.

பி என் சுந்தரம் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆர் தேவராஜன் படத் தொகுப்பை கவனித்தார். சிவாஜியின் ஆஸ்தான இயக்குனராக திகழ்ந்த பி மாதவன் படத்தை சீராக இயக்கியிருந்தார். படத்தில் சில காட்சிகள் நாடக முகாமில் நடப்பது போன்று காட்டப்படும் போதும், பின்னணி காட்சியில் நாடக பயிற்சி நடப்பது போல் சித்தரிக்கப்படுவது டைரக்டருக்கு பலே போட வைக்கிறது.


ஒரு நாடகக் கலைஞனின் வாழ்க்கையை சித்தரித்து எடுக்கப்பட்ட படம் தயாரிப்பாளரான குகநாதனுக்கு பொருளாதார ரீதியில் நட்டத்தையே பெற்று தந்தது. படம் வெளிவந்த போது சிவாஜி ரசிகர்கள் கலாசார , கிராமிய பின்னணியில் உருவான இப் படத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. அது மட்டுமன்றி படத்தின் முடிவும் அவர்களுக்கு திருப்தியைத் தரவில்லை.

ஆரம்பத்தில் இரட்டை வேடத்தில் வக்கீல்களாக சிவாஜி நடிப்பது

போல் ஒரு கதையே குகநாதனால் எழுதப்பட்டு மூன்று நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால் இரண்டு வக்கீல்களில் ஒரு குடிகார வக்கீலின் பாத்திரத்தை தான் நடிக்கும் கௌரவம் படத்தில் பயன்படுத்திக் கொள்ள சிவாஜி விரும்பியதால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப் பட்டது. பின்னர் சிவாஜியின் ஆலோசனைப் படி பாலமுருகன் கதைவசனம் எழுத ராஜபார்ட் ரங்கதுரை எனும் நாடக நடிகனின் கதை படமானது. ஆனால் கௌரவத்துக்கு கிடைத்த வெற்றி ரங்கதுரைக்கு கிடைக்கவில்லை!

No comments: