காசேதான் கடவுளடா - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 தமிழில் ஏராளமான படங்களை தயாரித்து புகழ் பெற்ற ஏ வி எம்


புரடக்சன்ஸ் நிறுவனம் 1972ம் வருடம் நகைச்சுவை படம் ஒன்றை தயாரித்தது.ரசிகர்களின் வரவேற்பை பெற்ற மேடை நாடகங்களை படமாக்கி வெற்றி பெறுவதில் திறமை பெற்றிருந்த ஏவி மெய்யப்ப செட்டியார்,நாடகமாக நடிக்கப் பட்ட காசேதான் கடவுளடா நாடகத்தை அதே பெயரில் படமாக தயாரித்தார்.நாடகத்தை எழுதிய சித்ராலயா கோபு படத்தையும் இயக்கும் வாய்ப்பை பெற்றார்.பிரபல இயக்குனர் ஸ்ரீதரிடம் வசனகர்த்தாவாகவும் உதவி டைரக்டராகவும் நீண்ட காலம் பணியாற்றிய கோபுவுக்கு இப் படத்தின் மூலம் முதல் முதலாக டைரக்டராகும் வாய்ப்பு கிட்டியது.


செல்வந்தரான சிவசாமியின் இரண்டாவது மனைவியான லஷ்மி தன்

கணவனையும் , மூத்த தாரத்தின் பிள்ளைகளையும் அடக்கி ஆள்கிறாள்.அதே சமயம் தன்னுடைய ஆடம்பர செலவுக்கு பணத்தை வாரி இறைக்கிறாள்.செலவுக்கு பணம் இல்லாமல் தடுமாறும் சிவசாமி,மகன் ராமு,மாலி,ஆகியோர் அப்பாசாமி என்ற போக்கிரியை ,போலி சாமியாராக்கி அவன் உதவியுடன் லக்ஷ்மியின் பணத்தை கொள்ளையிட திட்டமிடுகிறார்கள்.இதற்கிடையில் லக்ஷ்மிக்கு காரியதரிசியாக வரும் ரமாவுக்கும் ராமுவுக்கு இடையே காதல் உருவாகிறது. அதே சமயம் மனநலம் குன்றிய ரமா என்ற பெண்ணும் தன் தந்தையுடன் சிவசாமியின் வீட்டிற்கு வந்து சேர்கிறாள்.


பொதுவாக ஒரு படத்தில் ஏதாவது ஒன்றோ இரண்டோ கதாபாத்திரங்கள் அசடுகளாக வருவதுண்டு.ஆனால் இந்தப் படத்தில் வரும் எல்லா பாத்திரங்களும் அசடுகளாகவும்,பித்துக்குளிகளாகவும் வருகிறார்கள்.நகைச்சுவை என்ற பெயரில் அனைவரும் கிறுக்குத்தனமாக இயங்குகிறார்கள்.ஓரளவு நிதானமாக வருபவர் லட்சுமியாக வரும் மனோரமாத்தான்.அழகாகவும் இளமையாகவும் காட்டியளிக்கும் மனோரமா இந்தப் படத்தினில் மிடுக்காக நடிக்கிறார்.கதாநாயகி லஷ்மியின் நடிப்பு கூட மனோரமாவுக்கு பிறகுதான்.


கதாநாயகனாக முத்துராமன்,இவருடன் ஸ்ரீகாந்த்,வெண்ணிற ஆடை மூர்த்தி,ரமாபிரபா,டைப்பிஸ்ட் கோபு,எம் ஆர் ஆர் வாசு,ஜெயக்குமாரி,செந்தாமரை,சுருளிராஜன் என்று பலரும் நடித்திருந்தார்கள்.ஆனாலும் போலி சாமியாராக வரும் தேங்காய் சீனிவாசன் ஒரு கலக்கு கலக்கியிருந்தார்.சாமியாராக வரும் அவர் மெட்ராஸ் தமிழ் பேசுவது வேடிக்கை.படத்துக்கு தெம்பாக அமைந்தது அவரின் நடிப்பு.ஏற்கனவே கோபு எழுதிய ஒரு படத்தில் மன நோயாளியாக நடித்த ரமாபிரபா இதிலும் அதே போன்ற

வேடத்தை ஏற்று அதே போல் நடித்திருந்தார்.

படத்தின் பாடல்களை வாலி எழுத எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்தார்,மெல்லப் பேசுங்கள் பிறர் கேட்க கூடாது,இன்று வந்த இந்த மயக்கம்,ஆண்டவன் தொடங்கி ஆண்டிகள் வரையில் காசேதான் கடவுளடா,ஆகிய பாடல்கள் பிரபலமடைந்தன.கோவை சௌந்தரராஜன் என்ற புதிய பாடகர் இந்த படத்தில் பாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.படத்தின் ஒளிப்பதிவு கே எஸ் பாஸ்கர்.

இந்தப் படம் உருவானதில் இரண்டு முத்துராமன்கள் மனம்

வேதனைப் பட்டார்கள்.ஒருவர் இயக்குனர் முத்துராமன்,மற்றையவர் நடிகர் முத்துராமன்.ஏவி எம் நிறுவனத்தில் நீண்ட காலம் உதவி இயக்குனராக பணியாற்றிய முத்துராமன் இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்று எதிர் பார்த்தார்.ஆனால் வாய்ப்பு கோபுவுக்கு போனதன்றி அவருக்கு உதவியாளராக வேலைசெய்ய வேண்டிய நிலை அவருக்கு ஏற்படவே மன உளைச்சலுக்கு ஆளான முத்துராமன் தன் வேலையை ஏவி எம்மில் இருந்து ராஜினாமா செய்தார்.


அதே போல் படம் வெளிவந்ததும் தியேட்டர் வாசலில் தேங்காய் சீனிவாசனுக்கு 16 அடியில் கட் அவுட் வைக்கப்பட்டது.இது படத்தில் கதாநாயகனாக நடித்த முத்துராமனுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது.என்றாலும் காசேதான் கடவுளடா 100 நாட்கள் ஓடி வெற்றி படமாகி ஏவி எம் நிறுவனத்துக்கு இலாபத்தை ஈட்டி கொடுத்தது. அத்துடன் ஏ வி எம் தயாரித்த கடைசி கருப்பு வெள்ளை படமாகவும் இது அமைந்தது.

ஆனாலும் இந்தப் படத்துக்கு பிறகு ஏவி எம் நிறுவனம் ஏழு ஆண்டுகளுக்கு நேரடியாக தமிழ் படங்களை தயாரிக்கவில்லை.ஏவி எம் செட்டியாரின் மறைவுக்கு பிறகு 1979ம் ஆண்டு தான் மீண்டும் அவர்கள் தமிழ் படங்களை தயாரிக்கத் தொடங்கினார்கள்.

No comments: