உலகச் செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தில் வேட்பாளரானது உக்ரைன்

ஆப்கான் பூகம்பம்: மீட்புக் குழு பாதிப்புற்ற பகுதிகளை அடைவதில் சிரமம்

உலகின் மிகப்பெரிய மிதக்கும் உணவு விடுதி கடலில் மூழ்கியது

ரஷ்யாவுக்கு ஆதரவை வழங்க சீனா தயக்கம்

ஐரோப்பாவுக்கு எரிவாயு: ரஷ்யா முழுமையாக நிறுத்தும் அச்சம்

வற்றிய நீரில் தோன்றிய 3,400 ஆண்டு பழைய நகர்


ஐரோப்பிய ஒன்றியத்தில் வேட்பாளரானது உக்ரைன்

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனும் மோல்டோவாவும் வேட்பாளர் என்ற நிலையில் சேர்ந்துகொள்ள, ஒன்றியத் தலைவர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர். 

அந்த முடிவைத் தனித்துவமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி பாராட்டினார்.

ரஷ்யாவின் படையெடுப்பிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ளவும் ஐரோப்பாவில் இடம்பிடிக்கவும் உக்ரைன் முயன்றுவருகிறது.

உக்ரைனின் எதிர்காலம், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஒன்றியத்தின் பாராளுமன்றக் கட்டடத்தின் முன்புறத்தில் 30 மீற்றர் உயரமுள்ள கம்பத்தில் உக்ரைனியக் கொடி நிறுவப்பட்டுள்ளது. 

உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகாரபூர்வமாக இணைய இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். ஆனால் ரஷ்யாவின் நடவடிக்கையைக் கண்டிப்பதற்காக, ஒன்றியத்தில் உக்ரேனைச் சேர்த்துக்கொள்வது துரிதப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த வேட்பாளர் அந்தஸ்து என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை இணைத்துவிடாது மேலும் பாதுகாப்பு உத்தரவாதங்களையும் இதன் மூலமாக உக்ரைனால் பெற முடியாது.

அதே நேரம் இந்த அந்தஸ்து கொண்ட நாட்டுக்கு தொழில்நுட்ப மற்றும் பொருளாதார உதவிகளை ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்க முடியும். இந்த அந்தஸ்து வழங்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேற்றப்படாவிட்டால் வேட்பாளர் அந்தஸ்தை திரும்பப்பெறவும் சட்டம் வகை செய்வது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 




ஆப்கான் பூகம்பம்: மீட்புக் குழு பாதிப்புற்ற பகுதிகளை அடைவதில் சிரமம்

சர்வதேச உதவி கோரும் தலிபான்: உயிரிழப்பு அதிகரிக்கும் அச்சம்

தென் கிழக்கு பாகிஸ்தானில் 1000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தின் மீட்பு நடவடிக்கைகள் கடும் மழை, கரடுமுரடான நிலப்பரப்பு மற்றும் போதிய வளங்கள் இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளன.

6.1 ரிச்டர் அளவில் கடந்த புதன்கிழமை பதிவான இந்த பூகம்பத்தை அடுத்து கட்டட இடிபாடுகளில் பலரும் சிக்கி இருப்பதாக அஞ்சப்படுகிறது. இங்கு பெரும்பாலும் சேற்று மண்ணாலேயே கட்டடங்கள் எழுப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கானின் சுகாதார கட்டமைப்பு முன்னர் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டிருக்கும் நிலையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

ஆப்கானில் ஆட்சியில் இருக்கும் தலிபான் நிர்வாகம் அதிக சர்வதேச உதவிகளை கோரியுள்ளது. தொலைத்தொடர்பு வலையமைப்புகளும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

“எம்மால் அந்தப் பகுதிகளை அடைய முடியாதிருக்கிறது. வலையமைப்புகள் மிக மோசமாக உள்ளன” என்று தலிபான் பேச்சாளர் ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

இதில் மோசமாக பதிக்கப்பட்ட பக்திகா மாகாணத்தின் தொலைதூர பகுதிகளுக்கு அவசர முகாம்கள் மற்றும் உணவு வழங்குவதில் ஐக்கிய நாடுகள் நிறுவனமும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது.

இந்த பூகம்பத்தின் மையப் பகுதிக்கு அருகில் இருக்கும் கிராமங்கள் முற்றாக அழிந்துள்ளன. வீதிகள் மற்றும் தொலைபேசி கோபுரங்கள் சிதைந்து காணப்படுவதோடு உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று உயிர் தப்பியவர்கள் மற்றும் மீட்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் சுமார் 1,500 பேர் காயமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு தசாப்தங்களில் ஆப்கானில் இடம்பெற்றிருக்கும் அதிக உயிரிழப்புக் கொண்ட பூகம்பம் ஆட்சியில் இருக்கும் தலிபான்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. வெளிநாட்டு துருப்புகள் வெளியேறியதை அடுத்து தலிபான்கள் கடந்த ஆண்டு ஆட்சியை கைப்பற்றினர்.

கோஸ்ட் நகரில் இருந்து சுமார் 44 கிலோமீற்றர் தொலைவில் கடந்த புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்த பூகம்பத்தின் அதிர்வு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் உணரப்பட்டது.

ஆப்கான் ஏற்கனவே மனிதாபிமான மற்றும் பொருளாதார நெருக்கடியை சந்தித்திருக்கும் நிலையில் உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவி அளிப்பதற்கு அரசினால் முடியாதிருப்பதாக மூத்த தலிபான் அதிகாரியான அப்துல் கஹர் பல்கி குறிப்பிட்டுள்ளார். இந்த அனர்த்தம் தொடர்பில் தமது நிறுவனம் முழுமையாக அணிதிரட்டப்பட்டிருப்பதாக ஐ.நா தலைவர் அன்டொனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். பூகம்பம் ஏற்பட்ட பகுதிக்கு சுகாதார குழுக்கள், மருத்துவ விநியோகங்கள், உணவு மற்றும் அவசர முகாம்கள் அனுப்பப்பட்டிருப்பதாக ஐ.நா அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் இரவு பெய்த கடும் மழையால் உணவுகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மீட்பாளர்கள் அங்கு வர சிரமத்தை எதிர்கொண்டிருப்பதாகவும் பக்தியா மாகாணத்திற்கான தகவல்துறை தலைவர் முஹமது அமீன் ஹுதைபா தெரிவித்துள்ளார்.

பக்தியாவின் கயான் மற்றும் பர்மால் மாவட்டங்களிலேயே அதி கம் பேர் உயிரிழந்துள்ளனர். கயானில் கிராமம் ஒன்று முழுமையாக அழிந்துள்ளது.

“ஒரு சத்தம் கேட்டது. எனது படுக்கை குலுங்க ஆரம்பித்தது” என்று உயிர் தப்பிய ஷபீர் என்பவர் பி.பி.சி செய்தி நிறுவனத்திற்கு கூறினார். “உட்கூரை கீழே இடிந்து விழுந்தது. நான் சிக்கிக் கொண்டேன், ஆனால் என்னால் வானத்தைப் பார்க்க முடிந்தது. எனது தோள்பட்டை பெயர்ந்துவிட்டது, எனது தலையிலும் காயம் ஏற்பட்டது, ஆனால் என்னால் வெளியே வர முடிந்தது. என்னைப்போல் என்னுடன் ஒரே அறையில் இருந்த எனது குடும்பத்தின் ஏழு அல்லது ஒன்பது பேர் உயிரிழந்திருப்பார்கள் என்பது உறுதி” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பூகம்பத்தை அடுத்து தொலைபேசி கோபுரங்கள் சேதம் அடைந்திருப்பதால் பாதிக்கப்பட்ட பகுதிகளுடன் தொடர்பை ஏற்படுத்த முடியாதுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று அங்குள்ள ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

“தமது உறவினர்களின் நிலை குறித்து பலருக்கு தெரியாதுள்ளது. ஏனென்றால் அவர்களின் தொலைபேசிகள் செயற்பாடதுள்ளன. எனது சகோதரர் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்துள்ளனர்.

இதனை பல மணி நேரத்திற்கு பின்னரே தெரிந்துகொண்டேன். பல கிராமங்களும் அழிந்துவிட்டன” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த பூகம்பத்தில் 3,000க்கும் அதிகமான வீடுகள் அழிந்துள்ளன. கடந்த புதன்கிழமை இரவு வரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 600 பேர் மீட்கப்பட்டிருப்பதாக பக்திகா மாகாண தலிபான்களின் மூத்த இராணுவ தளபதியின் செய்தித் தொடர்பாளர் முஹமது இஸ்மைல் முஆவியா குறிப்பிட்டுள்ளார்.

இதில் குறைந்தது 200,000 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் மதிப்பிடுகிறது.   நன்றி தினகரன் 





உலகின் மிகப்பெரிய மிதக்கும் உணவு விடுதி கடலில் மூழ்கியது

ஹொங்கொங்கில் இயங்கிவந்த உலகின் மிகப் பெரிய மிதக்கும் உணவு விடுதி, தென் சீனக் கடலில் மூழ்கியுள்ளது. ‘ஜம்போ புளோட்டிங் ரெஸ்டோரண்ட்’ (Jumbo Floating Restaurant) எனும் இந்த உணவு விடுதி 46 வருடங்கள் பழைமையானதாகும்.

80 மீற்றர் (260 அடி) நீளமும் 4200 சதுரமீற்றர் பரப்பளவும் கொண்ட இந்த மிதக்கும் உணவு விடுதி, 3 மா‍டிகளைக் கொண்டது. உலகின் மிகப் பெரிய மிதக்கும் உணவு விடுதியாக விளங்கியது.

ஹொங்கொங்கின் உள்ளூர் மக்களையும் உல்லாசப் பயணிகளையும் கவரும் பிரதான அம்சங்களில் ஒன்றாக இந்த உணவு விடுதி விளங்கியது.

கொரோனா பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டு இதன் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன. எனினும் பராமரிப்பு செலவுகளைக் குறைப்பதற்காகவும், புனரமைப்பதற்காகவும் ஹொங்கொங்கிலிருந்து இந்த மிதக்கும் உணவகத்தை அப்புறப்படுத்துவற்கு அதன் நிர்வாகம் தீர்மானித்தது.

இந்த விடுதியை வேறு இடத்துக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கைகள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டன. தென் சீனக் கடலின் பராசல் தீவுகளுக்கு அருகில் செல்லும்போது இந்த உணவு விடுதி கவிழ்ந்தது. அதன்பின் திங்கட்கிழமை இரவு அது கடலில் மூழ்கிவிட்டது என அவ்விடுதியின் உரிமையாளர்களான அபேர்தீன் ரெஸ்டோரென்ட் என்ரபிரைசஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 





ரஷ்யாவுக்கு ஆதரவை வழங்க சீனா தயக்கம்

வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட பிற விடயங்களில் தனது சொந்த நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, உக்ரைன் மீதான போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவுக்கு அதிக ஆதரவை வழங்குவதில் சீனா மீண்டும் மீண்டும் தயக்கம் காட்டி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ‘ஹொங்கொங் போஸ்ட்’ குறிப்பிட்டிருப்பதாவது, உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவுக்கு அதிக ஆதரவை வழங்க சீனா வெளிப்படையாக மறுத்துள்ளது. இதனையிட்டு ரஷ்ய அதிகாரிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 





ஐரோப்பாவுக்கு எரிவாயு: ரஷ்யா முழுமையாக நிறுத்தும் அச்சம்

உக்ரைன் நெருக்கடியில் தனது அரசியல் செல்வாக்கை பலப்படுத்த ஐரோப்பாவுக்கான எரிவாயுவை ரஷ்யா முழுமையாக நிறுத்தக் கூடும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு உக்ரைன் இப்போதே தயாராக வேண்டும் என்றும் அது அறிவுறுத்தியுள்ளது.

“ரஷ்யா தொடர்ந்து அங்கும் இங்கும் பல்வேறு சிக்கல்களைக் கண்டறிவதையும், ஐரோப்பாவுக்கு எரிவாயு விநியோகத்தை மேலும் குறைப்பதற்கான சாக்குகளைத் தொடர்ந்து தேடுவதையும் மறுக்க முடியாது. சிலவேளை அதனை முழுமையாக நிறுத்தக் கூடும்” என்று சர்வதேச எரிசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் பாதிஹ் பிரோல் கடந்த புதனன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தக் காரணத்தால் ஐரோப்பாவுக்கு அவசரநிலை திட்டங்கள் தேவைப்படும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் நிலக்கரிக்கு தடை விதித்தபோதும் எரிவாயு இறக்குமதியை நிறுத்தவில்லை. ரஷ்ய எரிவாயுவில் ஐரோப்பா பெரிதும் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி தினகரன் 




வற்றிய நீரில் தோன்றிய 3,400 ஆண்டு பழைய நகர்

ஈராக்கிலுள்ள நீர்த்தேக்கத்துக்கு அடியில் மறைந்திருந்த 3,400 ஆண்டு பழைமைவாய்ந்த நகரம் ஒன்று வரட்சியால் மீண்டும் தோன்றியுள்ளது. 

மொசூல் நீர்த்தேக்கத்தில் குர்திய, ஜெர்மானியத் தொல்பொருள் ஆய்வாளர்கள் அந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை நடத்தினர். 

கி.மு. 1550ஆம் ஆண்டுக்கும் கி.மு. 1350ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மிட்டானிப் பேரரசின் முக்கிய மையமாக அந்த நகரம் விளங்கியதாக நம்பப்படுகிறது. அதன் பெயர் ஸாஹிக்கு என்றும் நிபுணர்கள் கூறினர். இவ்வாண்டு ஜனவரி மாதத்திலும் பெப்ரவரி மாதத்திலும் அத்தகைய பணிகள் இடம்பெற்றன. இந்த நகரம் வட ஈராக்கின் குர்திஸ்தான் வட்டாரத்திலுள்ள திக்ரிஸ் நதிக்கு அருகில் உள்ளது.

ஈராக்கிய அரசாங்கம் 1980களில் மொசுல் நீரணையைக் கட்டியபோது அந்த நகரம் நீருக்கடியில் மூழ்கியதாக நம்பப்படுகிறது. அது மீண்டும் இவ்வாண்டுதான் தோன்றியதாகக் கூறப்படுகிறது. 

நீர்மட்டம் எப்போது மீண்டும் உயரும் என்பது தெரியவில்லை என்பதால் நிபுணர் குழு இவ்வாண்டே அகழ்வாராய்ச்சிப் பணிகளை நடத்தியதாக குறிப்பிடப்பட்டது.     நன்றி தினகரன் 



No comments: