தமிழ் சினிமா - பத்மாவத் – திரை விமர்சனம்

13 மற்றும் 14-வது நூற்றாண்டு காலத்தில் சிங்களப் பேரரசை ஆண்ட மன்னரின் அழகிய மகள் இளவரசி பத்மாவதி (தீபிகா படுகோனே). சிங்கள நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்து வகைகளை கொண்டு வருவதற்காக ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த சித்தூர் மன்னர் ரத்தன் சென் (ஷாஹித் கபூர்) இலங்கை வருகிறார்.
அங்கு ஒரு காட்டில் மான் வேட்டையாடி கொண்டிருந்த பத்மாவதி செலுத்திய ஒரு அம்பு குறிதவறி, ரத்தன் சென் தோள்பட்டையை பதம் பார்க்கிறது. தனது தவறை உணர்ந்த இளவரசி பத்மாவதி ரத்தன் சென்னிடம் மன்னிப்பு கேட்பதுடன், ஒரு குகையில் வைத்து அவருக்கு சிகிச்சையும் அளித்து உதவி செய்கிறார்.
சிகிச்சைக்காக அங்கு சிலநாட்கள் தங்கி இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ள ரத்தன் சென் – பத்மாவதி இடையே காதல் அரும்புகிறது. காதல் முற்றி திருமணத்தில் முடிகிறது. தனது நாடான சித்தூருக்கு பத்மாவதியை மனைவியாக்கி அழைத்து செல்கிறார்.
சித்தூர் மக்களும் பத்மாவதியை தங்களது இளைய ராணியாக ஏற்று அவர்மீது பாசமும். மரியாதையும் காட்டி வருகின்றனர்.
இந்த சூழலில், அரண்மனையின் தலைமை ராஜகுருவுக்கு பத்மாவதியை ரத்தன் சென் அறிமுகப்படுத்தி வைக்கிறார். முதல் பார்வையிலேயே பத்மாவதியின் மீது ராஜகுருவுக்கு ஒருவித கவர்ச்சியும், ஈர்ப்பும் ஏற்பட்டு விடுகிறது. இதற்கிடையில், பத்மாவதியும் ரத்தன் சிங்கும் படுக்கையறையில் மகிழ்ச்சியாக இருக்கும் காட்சியை ஒரு மர்ம உருவம் மறைந்திருந்து ரசிக்கிறது.
மனைவியுடன் தனியாக இருப்பதை யாரோ கவனிப்பதாக உள்ளுணர்வு உணர்த்தவே தனது கைவாளை அந்த மர்ம நபரின்மீது ரத்தன் சிங் வீசுகிறார். அந்த கத்தி ஜன்னல் இடுக்குக்குள் பாய்ந்து ஒளிந்திருக்கும் மர்மநபரின் மார்பில் துளைக்கிறது. காயத்துடன் அவர் தப்பியோடிவிட அந்த இடத்தில் வந்த நறுமணத்தை வைத்து, தங்களை மறைந்திருந்து ரசித்த நபர் யார்? என்பதை பத்மாவதி யூகித்து விடுகிறார்.
இதையடுத்து, ராஜகுருவை அழைத்து வருமாறு மன்னர் ரத்தன் சென் உத்தரவிடுகிறார். படுக்கையறையில் நடந்த விவகாரங்களை வைத்து ராஜகுரு மீது மன்னர் குற்றம்சாட்டுகிறார். இதை ராஜகுரு கடுமையாக மறுக்கிறார். வாக்குவாதத்தின் இடையே ராஜகுருவின் மேலங்கியை காவலர்கள் நீக்கும்போது மன்னரின் கத்தி பாய்ந்த காயத்தை வைத்து அவர் குற்றவாளி என தீர்மானிக்கப்படுகிறது.
ராஜகுருவை சிறையில் அடைக்குமாறு மன்னர் உத்தரவிட, இடைமறித்த பத்மாவதி அவருக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையில் ராஜகுருவை நாடு கடத்த வேண்டும் என மன்னரிடம் கூற, மன்னரும் அவ்வாறே கட்டளையிடுகிறார்.
இப்படி நாடு கடத்தப்படும் ராஜகுரு, பெண் பித்தரான டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியை சந்திக்கிறார். தன்னிகரற்ற மாவீரரும் எப்படியாவது நினைத்ததை அடைந்தே தீர வேண்டும். அனைவரும் நமக்கு அடிமைப்பட்டு கிடக்க வேண்டும் என்ற வெறியும் கொண்ட அலாவுதீன் கில்ஜியிடம், சித்தூர் ராணி பத்மாவதியின் ஒப்பில்லாத அழகை புகழ்ந்து கூறி, பார்க்காமலேயே பத்மாவதி மீது காதல் வெறியையும் கடந்து காமவெறி ஏற்பட ராஜகுரு தூபம் போடுகிறார்.
அலாவுதீன் கில்ஜியின் ஆசையை தூண்டி, சித்தூர் மீது அவரை படை எடுக்க வைத்து, அந்த ஆட்சியை அழித்துவிட வேண்டும் என துடிக்கும் ராஜகுரு அலாவுதீன் கில்ஜியுடன் கைகோர்த்து கொண்டு காய் நகர்த்துகிறார்.
எப்படியாவது ஒருமுறை பத்மாவதியின் அழகை நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற மோகத்தின் முதல்கட்டமாக, டெல்லியில் உள்ள தனது அரண்மனையில் நடைபெறும் விருந்தில் பங்கேற்க குடும்பத்தாருடன் வருமாறு மன்னர் ரத்தன் செனுக்கு அலாவுதீன் ஓலை (கடிதம்) அனுப்புகிறார்.
அந்த அழைப்பை ஏற்க ரத்தன் சென் மறுத்து விடுகிறார். இதனால், பத்மாவதியை பார்க்க நினைத்த தனது எண்ணம் நிறைவேறாத காரணத்தால் ஆத்திரம் அடையும் அலாவுதீன் கில்ஜி, ரத்தன் சென்னின் ஆட்சி நடைபெறும் சித்தூர் சமஸ்தானத்தின்மீது போர் தொடுக்க முடிவு செய்கிறார்.
அலாவுதீன் கில்ஜியின் படைகள் டெல்லியில் இருந்து நகர்ந்து சித்தூர் நகரை முற்றுகையிடுகின்றன. இந்த படையை எதிர்கொண்டு ரத்தன் சிங் வெற்றி பெற்றாரா? அல்லது, அலாவுதீன் கில்ஜி தனது எண்ணப்படி பத்மாவதி அடைந்தாரா? என்பதுதான் இந்த படத்தின் பிற்பகுதி.
கதையின் நாயகியான பத்மாவதி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே ஒப்பற்ற சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு ராணிக்குண்டான அமைதி, புத்திக்கூர்மை, ஆர்வம், கோபப் பேச்சு என தனது ஒவ்வொரு அசைவிலும் ரசிக்க வைக்கிறார்.
ராணியாக அவர் பேசும் வசனங்களும், நடனமும் ரசிக்கும்படியாக இருக்கிறது. மிகை நடிப்பில்லாமல் பத்மாவதி ராணியாகவே வாழ்ந்திருக்கிறார். ராஜபுத்திரனின் வாள் வீரத்திற்கு இணையாக ராஜபுத்ரியின் வீரம் அவளது காப்பில் உள்ளது என உணர்ச்சிப்பூர்வமாக பேசும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
ராஜபுத்திரன் என்பவன் யார், அவன் எப்படி இருப்பான் என்பதை தனது, நடை, உடை, பார்வை, பேச்சின் மூலம் நிலைத்து நிற்கச் செய்திருக்கிறார் ஷாகித் கபூர். தோற்றத்திலும், உடையிலும் ஒரு ராஜபுத்திர அரசனாகவே வாழ்ந்திருக்கிறார்.
குறிப்பாக ஒரு முக்கிய காட்சியில் அலாவுதின் கில்ஜியிடம் பேசும் போது, ராஜபுத்திரனின் நேர்மையுடன் அவர் பேசும் வசனங்கள் பார்ப்போருக்கு பூரிப்பை ஏற்படுத்துகிறது. ராஜபுத்திரர்களுக்காக தன்னையே தியாகம் செய்யவும் தயங்காத காட்சிகளில் மனதில் நிற்கிறார்.
தனது தோற்றத்தின் மூலமே அனைவரையும் மிரள வைக்கும் ரன்வீர் சிங், தனது நெகட்டிவ் நடிப்பால் அனைவரையும் தன்பக்கம் கவர்கிறார். அவர் பேசும் ஆக்ரோஷமான வசனங்கள் திரையரங்கையே அதிர வைக்கும்படியாக இருக்கிறது.
நெகட்டிவ் கதாபாத்திரத்தில் இவ்வுளவு ஸ்கோர் செய்ய முடியும் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். ஒரு மாவீரனாகவும், பத்மாவதியை அடைய நினைக்கும் தந்திரவாதியாகவும் வலம் வரும் ரன்வீர், அலாவுதீன் கில்ஜியை கண்முன் கொண்டுவந்து நிறுத்துப்படியாக நடித்திருப்பது படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.
ரன்வீர் சிங்கின் மனைவியாக வரும் அதிதி ராவ் ஹிடாரி, பார்வையாலேயே தான் நினைப்பதை நடத்தக்கூடியவளாக, ரசிக்க வைத்திருக்கிறார்.
கதைக்கே முக்கிய கருவாக இருந்து பிரச்னையை தூண்டி விடும் கதாபாத்திரத்தில் ராஜ குருவாக வரும் ஜிம் சர்ப் அவரது கதாபாத்திரத்தில் விஷமமான நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார். அனுபிரியா, மஞ்சித்சிங், ரஜாமுரத் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் கதையுடன் ஒன்றி சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
சித்தூர் ராணியின் வாழ்க்கை வரலாற்றை பிரமாண்டமாக கொடுத்து இருக்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி. படத்திற்காக கடுமையாக உழைத்து சிறப்பாக திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநருக்கு பாராட்டுக்கள். ராஜபுத்திர வம்சத்தினரையும், அவர்களது புகழையும் சிறப்பாக காட்டியிருக்கிறார். அலாவுதீன், சித்தூர் ராணி பற்றி நினைப்பதாக அமைக்கப்பட்ட காட்சிகள் படத்தில் இருந்ததாகவும், அதனால் பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
தற்போது அவை நீக்கப்பட்ட பிறகும் கதை சிறிதும் பிசிறு இல்லாமல் பிரமாண்டமாக அமைந்துள்ளது சிறப்பு. படத்தில் வசனங்கள் வலு சேர்த்திருக்கின்றன. பாதிக்கு பின்னரும் கதையில் நிறைய திருப்பங்கள், கிளைமாக்ஸ் காட்சிகளில் பிரமிக்க வைக்கிறார்.
படத்தில் உடை வடிவமைப்பாளர்கள், கலை இயக்கம் என அனைத்து தரப்பினரும் படத்திற்காக கடுமையாக உழைத்திருப்பது படத்தை பார்க்கும் போதே தெரிகிறது.
சஞ்சித் பல்ஹரா, சஞ்சய் லீலா பன்சாலியின் இசையில் பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. குறிப்பாக பத்மாவதி தீம் பாடல் மனதில் பதியும்படியாக அமைந்திருக்கிறது. சுதீப் சட்டர்ஜியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன. அந்த காலத்திற்கே போன ஒரு அனுபவம் கிடைக்கிறது. படத்தின் கிராபிக்ஸ் பணிகளும் பிசிறில்லாமல் வந்திருப்பது சிறப்பு.
மொத்தத்தில் `பத்மாவத்’ ஒப்பற்ற ராணி.  நன்றி tamilcinema.news

No comments: