தமிழ் சினிமா

கறுப்பன்


தமிழ் சினிமா ஹீரோக்கள் மாஸ் ஹீரோவாக எடுக்கும் அவதாரம் போலீஸ் அல்லது கிராமத்து கதைக்களம். இந்த இரண்டிலுமே நடித்து ஹிட் அடித்துவிட்டால் அனைத்து தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்கள் தங்களை என்று ஒரு நம்பிக்கை. அப்படி சேதுபதியில் போலீஸாக ஜெயித்த விஜய் சேதுபதி, கிராமத்து இளைஞனாக கருப்பனிலும் ஜெயித்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்

Karuppanவாடி வாசலில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் இருந்து ஆரம்பிக்கின்றது கதை. ஊரில் பெரிய தலைக்கட்டு பசுபதி, அவருடைய காளையை இதுவரை யாரும் அடக்கியது இல்லை என்ற கர்வத்தில் இருக்க, அவரிடம் வாயை கொடுத்து இந்த காளையை அடக்குபவருக்கே தன் தங்கையை திருமணம் செய்து வைக்கின்றேன் என சொல்ல வைக்கின்றனர்.
அதை தொடர்ந்து அந்த காளையை விஜய் சேதுபதி அடக்கி ஒரு சில பிரச்சனைகளை கடந்து தான்யாவை கரம் பிடிக்கின்றார். பசுபதிக்கும் ஒரு வீரனுக்கு தான் தன் தங்கையை கொடுக்கின்றோம் என மன நிம்மதியுடன் இருக்கின்றார்.
ஆனால், அதே வீட்டில் சிறு வயதில் இருந்து வளரும் பசுபதி மனைவியின் தம்பி பாபி சிம்ஹாவிற்கு தான்யா மீது காதல் இருக்க, இவர்களை பிரித்தாவது தான்யாவுடன் வாழவேண்டும் என்று அவர் ஆட்டத்தை ஆரம்பிக்க, பிறகு என்ன ஆகின்றது என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

விஜய் சேதுபதி இதுவரை சென்னை வட்டார மொழியில் கலக்கியவர் மதுரை தமிழிலும் மிரட்டுகின்றார். உருவம் பெரிதாக இருந்தாலும் கிராமத்தில் இருப்பவர்களை அப்படியே நம் கண்முன் கொண்டு வருகின்றார். குடித்துவிட்டு பாபி சிம்ஹா அனுப்பும் ஆட்களை நடனமாடிக்கொண்டே அடிக்கும் இடத்திலும் சரி, தான்யாவுடன் ஒரு கணவனாக அவர் செய்யும் கலாட்டாவும் சரி எப்போதும் போல் சூப்பர் ஜி சூப்பர் ஜி.
தான்யா என்ன தான் முன்பு இரண்டு படம் நடித்திருந்தாலும், இந்த படத்திற்கு பிறகு தான் மார்க்கெட் சூடுபிடிக்கும் போல, கணவராக இருந்தாலும் தவறு என்ற இடத்தில் விஜய் சேதுபதியை செல்லமாக அதட்டும் இடத்தில் எல்லோரையும் கவர்கின்றார். அடுத்தடுத்து பல முன்னணி ஹீரோக்களின் படத்தில் இனி இவர் கமிட் ஆனாலும் ஆச்சரியமில்லை.
இறைவி படத்தில் என்ன செய்தாரோ அதை தான் இதிலும் செய்துள்ளார் பாபிசிம்ஹா. ஆனால், நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல ரோல், திருமணமாகி சென்றாலும் அடைந்தே தீருவேன் என்று அவர் செய்யும் வில்லத்தனம், கடைசி நொடியில் கூட ஐ லவ் யூ என்று அவர் சொல்வது செம்ம. ஹீரோ ஆசையை ஒதுக்கி இப்படி தேர்ந்தெடுத்து நடித்தால் மீண்டும் நல்ல எதிர்காலம் தான்.
அதே நேரத்தில் ஒரு வில்லன் என்றால் நேரடியாக ஹீரோவிடம் மோதினால் தான் அனல் பறக்கும். ஆனால், பாபி சிம்ஹா கிளைமேக்ஸ் வரை விஜய் சேதுபதியிடம் நட்பாகவே தான் இருக்கின்றார். இருவருக்குமிடையே இன்னும் கொஞ்சம் மோதல் அதிகமாகியிருந்தால் படம் மேலும் பரபரப்பாகியிருக்கும்.
படத்தின் ஆரம்பத்திலேயே ஜல்லிக்கட்டு காட்சிகளை காட்டுகின்றனர். அதை எடுத்த விதம், CG Work என படக்குழு மிகவும் சிரமப்பட்டுள்ளது. ரேணிகுண்டா படத்திற்கு பிறகு பன்னீர் செல்வம் எங்கு சென்றார் என்று தேட, கருப்பனாக மீண்டு வந்துள்ளார்.
சக்திவேலின் ஒளிப்பதிவில் மதுரை பகுதிகளின் சுற்று வட்டாரத்தை அழகாக படம் பிடித்துள்ளனர். அதிலும் ஜல்லிக்கட்டு காட்சி, கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி மிரட்டல், மிகவும் ஏமாற்றியது டி.இமான் தான்.

க்ளாப்ஸ்

விஜய் சேதுபதி- தான்யா இருவருக்குமிடையே உள்ள காட்சிகள், மிக யதார்த்தமாக பதிவு செய்துள்ளனர்.
இத்தனை நாட்கள் ஒரு தரப்பினரை மட்டும் திருப்திப்படுத்திய விஜய் சேதுபதி இதில் B,C என இறங்கி அடித்துள்ளார்.

பல்ப்ஸ்

எப்போதும் கேட்டவுடன் பிடிக்கும் இமான் பாடல்கள் இதில் மிஸ்ஸிங்.
ஹீரோ- வில்லனுக்கான மோதலை கொஞ்சம் சுவாரசியப்படுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் சென்னை விஜய் சேதுபதியாக மட்டுமில்லை, மதுரையிலும் மீசையை முறுக்கியுள்ளார்.

நன்றி CineUlagam


No comments: