குழலூதும் மாமனையும் வேலேந்தும் மருகனையும் இசையால் துதித்த இளையோர்

.
                                                                                    திருமதி பராசக்தி  சுந்தரலிங்கம்   


சிட்னியில் இயங்கும் லக்ஷ்மி பைன் ஆர்ட்ஸ் கல்லூரி மாணவ மாணவியர் சென்ற வாரம் ஏப்ரல் மாதம் 21  ம்   தேதி 2017 அன்று  பரமற்றா       ரிவர்சைட் கலையரங்கிலே ஓர் இன்னிசை நிகழ்ச்சியை அரங்கேற்றினார்கள் 

 வேலை ஏந்திய முருகப் பெருமான்   மீதும்    குழலூதும் கண்ணபிரான்  மீதும்   சான்றோர் பலர் பாடியருளிய  துதிப் பாடல்களை  இம்மாணவர்கள்  மாறி மாறிப் பாடி கேட்போரை   மகிழ்வித்தனர் 

 இந்த இசைக்கல்லூரி ஆசிரியர் திருமதி கேதீஸ்வரி பகீரதன் அவர்கள் தனது மாணவர்    எல்லோருக்குமே சிறியவர் முதல் பெரியவர் வரை - பாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியிருந்தார் 
வெவ்வேறு தரத்திலே   தன்னிடம் இசை பயிலும் மாணவர்கள் எல்லோரையுமே   பயிற்றுவித்து   மேடையேற்றுவது என்பது சாதாரண செயலல்ல ஆனால் இதனை அவர் சாதித்துக் காட்டிவிட்டார் 


இரண்டு மணி நேரம் தொடர்ந்து இடைவேளையின்றி இந்தச் சிறார்கள் பாடினார்கள் என்பது சாதனை !ஆசிரியை நல்லதோர் உத்தியைக் கையாண்டதை வரவேற்க வேண்டும் உயர்ந்த தரத்திலுள்ள மேல்வகுப்பு  மாணவர் இரண்டுமணிநேரமும் தொடர்ந்து மேடையிலேஅமர்ந்திருக்க,, ,சிறார் அவரவர் தரத்திற்கேற்ப  ஒழுங்காக வரிசையாக  வந்து அவர்களுக்குப்

பின்னாலே நின்று பாடிவிட்டுச் சென்றார்கள் இதனால் மேடையிலே குழப்பம் மற்றும் தாமதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது இந்தச் சிறுவர்களுக்கு அனுசரணையாக  மேல்வகுப்பு மாணவர்கள் சேர்ந்து பாடியதால் சிறுவர்கள் பயமோ தயக்கமோ இன்றிப் பாடுவதை அவதானிக்க முடிந்தது 



நிகழ்ச்சியின்பிற்பகுதியிலே  மேல்வகுப்பு மாணவர்களின் இசை தொடர்ந்தது 
அவர்கள் பாபநாசம் சிவன் மற்றும்  தியாகராஜ சுவாமிகளின் பாடல்களை பாடி சபையோரை மகிழ்வித்தார்கள்-  மாணவியர்   மாறி மாறியும் தனியாகவும்   ராகஆலாபனை  செய்து தமது திறமையைக்காட்டியபோது அவர்களின் ஆழமான இசை அறிவும் பயிற்சியும்  மனதுக்கு இதமாக இருந்தன 

  பக்கவாத்தியக் கலைஞர்களான வயலின் வித்துவான் திரு சுரேஷ் பாபு, மிருதங்க வித்துவான்திரு பல்லவராஜன்நாகேந்திரன்  ,புல்லாங்குழல் கலைஞர் சுரேஷ் தியாகராஜன் , கடம் மற்றும் முகர்சிங்  வாசித்த திரு ஜெயராம் ஜெகதீசன் .,கெஞ்சிரா வாசித்த சுபாங்கன் நிர்மலேஸ்வரக் குருக்கள் ஆகியோர்  இசை உலகிலே மிகவும்  உயர்ந்த இடத்திலே இருந்தாலும்  குழந்தைகளையும் ஏனைய மாணவரையும் ஊக்குவிக்கும் வகையிலே தாமும் ரசித்து பாடுபவர்களையும் உற்சாகப்படுத்தி நேயர்களையும்      ரசிக்கவைத்து  வாசித்ததை நாம் மெச்ச வேண்டும் இந்த இசை நிகழ்ச்சிக்கு இவர்களது வாசிப்பு உயிர்நாடியாக இருந்தது என்பதை மறுக்க முடியாது




மேடை நிர்வாகம் ஒலி ஒளி அமைப்பு என்பன நன்றாக இருந்தன திரு மகேஸ்வரன் பிரபாகரன் அவர்கள்ஜனரஞ்சகமாக  நிகழ்ச்சியைத்  தொகுத்தளித்தார் பெண் பிள்ளைகளே பெருமளவில்  வாய்ப்பாட்டிசை பழகுபவராக  இருந்தாலும்  இன்று  ஆண் பிள்ளைகள் பலரும் முறையாக வாய்ப்பாட்டிசை பயிலுவது மனதுக்கு மகிழ்வாக இருக்கிறது 


 இந்தக் குழுவிலே   பல ஆண் பிள்ளைகளும்   இருந்தார்கள் இவர்களும்  தமது தனித்துவத்தைக் காண்பிப்பதற்கு அவர்களுக்குச் சந்தர்ப்பம் அளித்திருந்திருக்கலாம் மாணவியரோடு சேர்ந்து பாடாமல் பாடல்கள் சிலவற்றை அவர்கள் தனித்தோ  கூட்டாகவோ இசைத்திருந்தால் ஒரு மாறுதலாகவும்  அதே வேளை அவர்களையும்  உற்சாகப்படுத்துவதாகவும் அமைந்திருக்கும்   அதே போல மாணவியரும்   எல்லாப் பாடல்களையும் எல்லோரும்தொடர்ச்சியாகச் சேர்ந்து குழுவாக   பாடாமல் பகுதி பகுதியாகப் பிரித்துப் பாடியிருந்தால் நிகழ்ச்சி மேலும் சோபித்திருக்கும் 
சின்னன்  சிறார்களையும் இப்பொழுதே மேடை ஏற்ற வேண்டுமா ? 

பிரதம விருந்தினராக   இலங்கையிலிருந்து  வருகை தந்திருந்த  திரு ஆறு திருமுருகன் அவர்கள்   புலம் பெயர்ந்த நாட்டிலே இசையும் தமிழும் வளர்கிறது  வாழ்கிறது என்று மிகவும் பெருமைப்பட்டார்  -  ஊருக்கும் வாருங்கள் 
எங்களுடைய பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுங்கள் என்று    அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்த பொழுது எமது இனத்தின்  இன்றைய நிலைமையை  நினைத்து  மனம் வலித்தது என்பது உண்மை 

இவர்களைப்   பயிற்றுவிக்க ஆசிரியருக்கு உறு துணையாக விளங்கிய கலைமாமணி திருமதி லலிதா  சிவகுமார்அவர்களும் தமது வாழ்த்துரையிலே  இம்மாணவர்களின் கடினமான பயிற்சியையும் ஆசிரியரின் அன்பான வழிகாட்டலையும்  பாராட்டி ஆசி வழங்கி  மகிழ்ந்தார் 


திருமதி கேதீஸ்வரி பகீரதன்  அவர்களையும்      அவர் மாணவர்களையும்
இச்சான்றோர்களுடன் சேர்ந்து நாமும்  ஊக்குவித்து வாழ்த்துவோம் 






5 comments:

putthan said...
This comment has been removed by the author.
putthan said...


''சின்னன் சிறார்களையும் இப்பொழுதே மேடை ஏற்ற வேண்டுமா?''

சிறுவர்களை சிறு வயதிலயே மேடை ஏற்றுவதன் மூலம் அவர்களின் மேடை கூச்சத்தை குறைக்கலாம்.மேலும் இந்தமாதிரியான நிகழ்சிகளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்களால் நடத்த முடியாது.அதற்கு முக்கிய காரணம் பொருளாதர நிலமைகள்.அடுத்த நிகழ்சி இன்னும் இரண்டு மூன்று வருடங்களின் பின்பு தான் நடக்கும் என நினக்கிறேன்.சிறு துளி பெரு வெள்ளம் என்ற வகையில் இந்த சிறுவர்களின் பங்களிப்பு நிச்சயம் தேவை.

மேடை ஏறிய சகல சிறுவர்களும் தொடர்ந்து சங்கீதம் பயிலமாட்டார்கள்.பெற்றோரின் விருப்பத்திற்கு பயில வந்த சிறுவர்கள் சங்கீதம் பயில்வதை இடையிலயே நிறுத்திவிடுவார்கள்.தமிழ்,சமயம் ,சங்கீதம் எல்லாம் ஆறாம் வகுப்பு செலக்டீவ் பரீட்சையுடன் கை விடுகிறார்கள்.மீண்டும் தொடர்ந்து பயில வருவது மிகவும் குறைவாகவே இருக்கின்றது .நான் கண்ட அனுபவத்தில் கூறுகிறேன்.

Anonymous said...

கட்டுரை ஆசிரியர், குழு குழுவாக மேடை ஏற்றினால் நன்றாக இருந்திருக்கும். உண்மை தான்.

புத்தன், சிறுவர்களின் கூச்சம் குறையும் என்றாலும், பெற்றோரின் வற்புறுத்தலால் மேடை ஏறும் சிறுவர்களின் நிலை பாவம்.

அனாமிகா

Anonymous said...

கட்டுரையாளர் நன்றாக எழுதி உள்ளார் . சிறார்களின் படங்களை ஆசிரியர் போடாமல் விட்டதற்கு எதாவது காரணம் உள்ளதா ?

நிமலன்

Anonymous said...

You are not allowed to post kids pictures, if they are under 13. In some countries, if the kids are under 17.