பரந்தமனம் எழவேண்டும் !எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண்

.

                  



   குடிப்பதற்கு நீரின்றிக் குவலயத்தில் பலபேர்கள்
   தவிக்கின்ற நிலையிப்போ தானெழுந்து நிற்கிறது
   அதைப்போக்க வழிகாண ஆராய்ச்சி செய்துவிடின்
   அவலமுறும் அனைவருமே ஆறுதலை அடைந்திடுவார் !

   அணுபற்றி ஆராய்ச்சி அகிலத்தில் நடக்கிறது
   ஆயுதங்கள் புதுப்புதிதாய் அதனூடாய் வருகிறது
   அருந்துவதற்கு நீரின்றி அவதியுறும் நிலைபற்றி
   ஆயுதத்தை சிந்திப்பார் அரைக்கணமும் நினைப்பதில்லை !

  ஆண்டவனின் படைப்பினிலே அரும்படைப்பு மனிதவினம்
  அவ்வினத்தின் துயர்பற்றி அக்கறையைச் செலுத்தாமல்
  ஆயுதங்கள் செய்வதிலே ஆசையுடன் செயற்பட்டால்
  அகிலத்தின் அமைதியெலாம் அத்தனையும் அழியுமன்றோ !

  நீரில்லா நிலையினிலே நிலம்வரண்டு வீணாகும்
  போர்வந்து சேர்ந்துவிடின் பொலிவெல்லாம் மறைந்தொழியும்
  பார்செழிக்க வேண்டுமெனில் பரந்தமனம் எழவேண்டும்
  ஊரழிக்கும் நினைப்பொழிந்தால் உலகவளம் உயிர்த்துவிடும் !

 குண்டுமழை பொழிவதனால் குடிதண்ணீர் பாழாகும்
 குடிதண்ணீர் இல்லையெனில் குடிகள்நிலை என்னாகும்
 வளங்கொழிக்கும் வயலனைத்தும் வரண்டவனம் போலாகும்
 நிலமிருக்கும் மாந்தர்நிலை நினைப்பதற்கே பயமாகும் !


 காடுகள் அழியும் களனிகளும் சேதமுறும்
 மாடுமனை அத்தனையும் மண்ணுக்குள் மாய்ந்துவிடும்
 கேடுநிறை அத்தனையும் கிடுகிடென வந்துவிடும்
 நாடுகின்ற ஆராய்ச்சி நல்வழியை மறந்துவிட்டால் !

 ஆணவத்தின் வசத்துக்கு ஆராய்ச்சி ஆள்பட்டால்
 அகிலத்தின் துன்பமெலாம் அப்பக்கம் தெரியாது
 ஆக்கத்தின் பக்கமாய் ஆராய்ச்சி அமைவதுதான்
 அகிலத்தில் வெளிச்சம்வர அருந்துணையாய் அமையுமன்றோ ! 

No comments: