தவறுதலாக அறிவிக்கப்பட்ட ஒஸ்கார் விருது (காணொளி இணைப்பு)
36 விமானங்களில் 1500 பேருடன் சவூதி மன்னரின் ஆடம்பர சுற்றுப்பயணம்..!
கிம் ஜாங் நாம் கொலைக்கு கொடூர இரசாயனம் பயன்படுத்தப்பட்ட சம்பவம் : மலேசியா கடும் கண்டனம்
பரம்பரியமிகு பல்மைராவை கைப்பற்றிய சிரிய இராணுவம்..!
சிரியாவில் அமெரிக்காவை சரமாரியாக தாக்கிய ரஷ்யா.. !
அமெரிக்காவின் பயணத்தடையிலிருந்து ஒரு நாட்டிற்கு தற்காலிக விலக்கு..!
தவறுதலாக அறிவிக்கப்பட்ட ஒஸ்கார் விருது (காணொளி இணைப்பு)
27/02/2017 89ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் வருடத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருதானது மூன்லைட்(Moonlight) பதிலாக தவறுதலாக லாலா லேண்ட் (La La Land) திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
![](http://cdn.virakesari.lk/uploads/medium/file/29706/oscar-nom.jpg)
திரைப்பட கலைஞர்களின் உயரிய விருதான 89 ஆவது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லொஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடந்து வருகின்றது. குறித்த நிகழ்வில் ஹொலிவுட் நடிகர்கள் உள்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் பங்கு பற்றி வருகின்றனர்.
![](http://cdn.virakesari.lk/uploads/medium/file/29708/moonlight-la-la-land-dominate-oscars-2017-mistake-2-ef2c6667-5489-4339-bf18-08f587cdb259.jpg)
இந்நிலையில் வருடத்தின் சிறந்த திரைப்படத்திற்கான விருதானது முதலில் லாலா லேண்ட் படத்திற்கு அறிவிக்கப்பட்டு, குறித்த பட குழுவானது கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில் தொகுப்பாளரினால் வருடத்தின் சிறந்த திரைப்படம் மூன்லைட்(Moonlight) , எனவும் லாலா லேண்ட் தவறுதலாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த விருது தொகுப்பாளராக இருந்த ஜிம்மி கீமேல், தான் வழங்கப்பட்டிருந்த சீட்டில் தடுமாறியவாறு அறிவித்துவிட்டதாகவும், பின் விருது அறிவிப்பு அட்டையை கெமரா முன் காட்டி, மூன் லைட்தான் சிறந்த திரைப்படமாக தெரிவாகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
![](http://cdn.virakesari.lk/uploads/medium/file/29707/Moonlight-2016--Front-Cover-115558.jpg)
அத்தோடு குறித்த ஒஸ்கார் விருது விழாவில், லாலா லேண்ட் படத்திற்கு மொத்தமாக 6 விருதுகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், மூன்று விருதுகளை மாத்திரமே வென்ற மூன் லைட் திரைப்படம் வருடத்தின் சிறந்த திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
36 விமானங்களில் 1500 பேருடன் சவூதி மன்னரின் ஆடம்பர சுற்றுப்பயணம்..!
02/03/2017 சவூதி அரேபிய மன்னர் சல்மான்பின் அப்துல் அஜீஸ் 50 வருடங்களுக்கு பிறகு இந்தோனேசியாவிற்கு 1500 பேர்களுடன் 36 விமானங்களின் சேவைகளுடன் ஆடம்பர சுற்று பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.
![](http://cdn.virakesari.lk/uploads/medium/file/30163/saudi-prince-arrives.jpg)
இந்தோனேசியாவிற்கு 9 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ள மன்னர் சல்மான், பயன்படுத்து வதற்கு தேவையான பொருட்கள் 460 டன், 800 பிரதிநிதிகள், இரண்டு பென்ஸ் சொகுசு கார்கள் மற்றும் 572 பணியாட்கள் என அனைத்தும் 36 விமானங்கள் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன.
![](http://cdn.virakesari.lk/uploads/medium/file/30161/1f8d713e25fa7cedb0a60ce3b350-grande.jpg)
மன்னரின் விஜயத்திற்கு மூன்று நாட்களுக்கு முதலில் இருந்தே அவருக்கான பொருட்கள் மற்றும் பணியாளர்கள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, தலைநகர் ஜகர்த்தாவிலுள்ள மூன்று அதிசொகுசு நட்சத்திர விடுதிகள் தங்குவதற்காக பதிவுசெய்யப்பட்டுள்ளன.
![](http://cdn.virakesari.lk/uploads/medium/file/30162/170301135003-mercedes-benz-s600-exlarge-169.jpg)
உலகில் முஸ்லிம்கள் அதிகமுள்ள நாடான இந்தோனேசியாவில் சுற்று பயணத்தை முடித்தப்பிறகு, மன்னர் சல்மான் மலேசியா, சீனா, மாலைத்தீவு மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
கிம் ஜாங் நாம் கொலைக்கு கொடூர இரசாயனம் பயன்படுத்தப்பட்ட சம்பவம் : மலேசியா கடும் கண்டனம்
03/03/2017 உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கொடிய இரசாயனத்தை மக்கள் அதிகமாக நடமாடும் இடத்தில் பயன்படுத்தி, வடகொரிய ஜனாதிபதியின் சகோதரரை கொலை செய்தமைக்கு, மலேசியா தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
![](http://cdn.virakesari.lk/uploads/medium/file/30200/north-korea-kim-jong-nam-death-female-spy-agent-un-848159.jpg)
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின், சகோதரரான கிம் ஜாங் நாம், கடந்த மாதம் மலேசிய விமான நிலையத்தில் வைத்து உலக நாடுகளால் தடை விதிக்கப்பட்டுள்ள வி எக்ஸ் (VX) என்ற இரசாயனத்தை பயன்படுத்தி இனம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனைகள் மூலம் தெளிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கொலை சம்பவம் தொடர்பாக இரு பெண்கள் மற்றும் வட கொரிய அதிகாரி என்போரை, மலேசிய பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
![](http://cdn.virakesari.lk/uploads/medium/file/30201/_94861095_038145385-1.jpg)
இந்நிலையில் கிம் ஜாங் நாம்மை கொல்வதற்காக, உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட வி எக்ஸ் என்ற கொடிய நச்சு இரசாயனம் பயன்படுத்தியுள்ளமை, அவரது பிரேத பரிசோதனையின் மூலம் தெரிய வந்துள்ளது, குறித்த சம்பவத்திற்காக கொடிய ரசாயனத்தை பயன்படுத்தியுள்ளமை மிகவும் அதிர்ச்சி அளிப்பதோடு, மிகவும் கண்டனத்துக்குரிய விடயமென மலேசிய அரசதரப்பு அறிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
அத்தோடு எவ்விதமான நோக்கத்திலும், எந்த சூழ்நிலையிலும் மக்கள் அதிகமாக நடமாடும் பொது இடங்களில் மிகவும் கொடிய நச்சு இரசாயனத்தை பயன்படுத்தப்படுவதை தமது அரசு வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் குறித்த வகை ஆபத்தான இரசாயனங்களை அந்நாடு உற்பத்தியோ, இறக்குமதியோ செய்வது கிடையாது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
03/03/2017 ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடந்த 2015ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட, சிரியாவின் பாரம்பரியமிகு பல்மைரா நகரை ரஷ்ய படைகளின் உதவியுடன் சிரிய இராணுவம் கைப்பற்றியுள்ளது.
![](http://cdn.virakesari.lk/uploads/medium/file/30260/94ee60dc51bb4c11bbe8dbd514cd5df0_18.jpg)
சிரியாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாத அமைப்பினரால் கைப்பற்றப்பட்ட, அந்நாட்டின் பழமையான பாரம்பரியம் மிக்க பல்மைரா நகரானது தற்போது முழுமையாக சிரிய இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2015 ஆம் ஆண்டு தீவிரவாதிகள் கைப்பற்றிய பல்மைரா, 2016 மார்ச் மாதம் சிரிய இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது. பிறகு டிசம்பர் மாதமளவில் மீண்டும் தீவிரவாதிகள், அந்நகரை கைப்பற்றி அந்நகரிலிருந்த புராதன சின்னங்களை உடைத்து அழித்தனர்.
![](http://cdn.virakesari.lk/uploads/medium/file/30261/AFP_M917C.jpg)
![](http://cdn.virakesari.lk/uploads/medium/file/30264/ap_palmyra_theater_jc_150824_4x3_992.jpg)
இந்நிலையில் தீவிரவாதிகளை, பல்மைராவிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றும் முயற்சியில் ரஷ்ய ஆதரவு படையுடன் இணைந்து சிரிய இராணுவம் நடத்திய உச்சகட்ட தாக்குதலினால், குறித்த நகரிலிருந்து ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த அனைவரும் வெளியேறியுள்ளனர்.
![](http://cdn.virakesari.lk/uploads/medium/file/30263/32b6f3e300000578-3518271-image-a-20_1459468062315.jpg)
இருப்பினும் குறித்த நகரை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக, நகரின் பல முக்கிய இடங்களில் கண்ணி வெடிகளை புதைத்து வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
தற்போது பல்மைரா நகரம் முழுமையாக கைப்பற்றப்பட்டுள்ள விடயத்தை, சிரிய மற்றும் ரஷ்ய தரப்புகள் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
சிரியாவில் அமெரிக்காவை சரமாரியாக தாக்கிய ரஷ்யா.. !
02/03/2017 சிரியாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படைகளை, ஐ.எஸ் தீவிரவாதிகள் எனக் கருதி, ரஷ்ய விமானப்படை தவறுதலான வான் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
![](http://cdn.virakesari.lk/uploads/medium/file/30059/maxresdefault__1_.jpg)
சிரியாவில் இயங்கும் ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்க படைகளும், அந்நாட்டு ஜனாதிபதியிற்கெதிரான கிளர்ச்சியாளர்களை எதிர்த்து ரஷ்ய படைகளும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரஷ்ய விமானப்படைகள், அமெரிக்க படையினரை தீவிரவாதிகள் என நினைத்து, வான் வழி தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளதாக அமெரிக்க தரப்பு படைகள் தெரிவித்துள்ளன.
சிரியாவில் உள்ள கிராமமொன்றை குறிவைத்து ரஷ்ய இராணுவம் நடத்திய தாக்குதலில், சிரிய மற்றும் அமெரிக்க கூட்டு படையியினர் சிலர் காயமடைந்ததாக அமெரிக்காவின் சிரியாவிற்கான இராணுவ தலைமை கட்டளைத் தளபதி ஸ்டீபன் டவுண்சென்ட் தெரிவித்துள்ளார்.
வான்வழி இலக்குகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதல் சம்பவமானது படையினரை காயப்படுத்திய நிலையில், ரஷ்ய இராணுவத்தை தொடர்பு கொண்டு, குறித்த தாக்குதலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறையினர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
அமெரிக்காவின் பயணத்தடையிலிருந்து ஒரு நாட்டிற்கு தற்காலிக விலக்கு..!
01/03/2017 அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பயணத் தடையிலிருந்து, ஈராக்கை தற்காலிகமாக விலக்கி கொள்வதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
![](http://cdn.virakesari.lk/uploads/medium/file/29977/3DD2E0CA00000578-4269814-image-a-126_1488336688977.jpg)
அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்கு ஏழு முஸ்லிம் நாடுகளுக்கு விசா தடையை ஏற்படுத்தியமை தொடர்பில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது குடிவரவு கொள்கையில் மாற்றமொன்றை ஏற்படுத்தியுள்ளார்.
குறித்த தீர்மானத்திற்கமைவாக அமெரிக்காவின் பயணத்தடை பட்டியலிலுள்ள நாடுகளிலிருந்து, ஈராக் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் குறித்த்க தீர்மானமானது அமெரிக்க பாதுகாப்புதுறையான பெண்டகன் மற்றும் அந்நாட்டு மாநில துறைகளின் பரிந்துரைகளுக்கமைய உத்தரவிடப்பட்டுள்ளதாக, அந்நாட்டு குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளிலிருந்து, ஏழு முஸ்லீம் நாடுகளுக்கு பயணத்தடை விதித்தல் மற்றும் மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் திட்டம் என குடியுரிமை மற்றும் வெளியுறவு கொள்கையில் புதிய உத்தரவுகளை பிறப்பித்து, மக்களின் விமர்சனக்கலை போட்டிருந்த நிலையில் தற்போது ஈராக் மீதான தடையை தகர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி