ஒருகணம்நாம் சிந்திப்போம் !


     பரந்திருக்கும் கடலதனை
     பலருக்கும் உவமிப்பர்
     பட்டம்பல பெற்றவரை
     பதவியிலே உயர்ந்தவரை
     பெட்டிநிறை பணம்கொண்டார்
      அத்தனபேர் தனையுலகில்
     கடலெனவே பெயர்சூட்டிக்
      களிப்புடனே அழைத்திடுவர் !

     உவமிக்கும் உவமானம்
     உயர்வினையே தரவேண்டும்
     உவர்நிறைந்த கடலதனை
     உவமித்தல் உகந்ததன்றோ
     உவர்நிறைந்த கடலதனை
     உவமானம் ஆக்கிவிடின்
     உயர்வென்று கருதுவதில்
     ஒருகுறைவு வருமன்றோ !

     தந்தாலும் பலவளத்தை
     தாகமதைத் தீர்க்காத
     கடலதனை உவமித்தல்
     கற்பனைக்கே பொருத்தமில்லை
     பசுமைதனைத் தருவதற்கும்
     பயிர்வளர்ச்சி யடைவதற்கும்
     ஒருபொழுதும் உதவாமல்
     இருக்குதன்றோ உவர்கடலும் !


     மேலிருக்கும் மேகமது
     கீழிருக்கும் கடல்தன்னுள்
      ஆதவனின் உதவியுடன்
      ஆவியென நீரெடுத்து
      பூமிதனைக் குளிர்விக்க
       பொழிகின்ற மழையெனவே
      மாறிவிட்டால் பின்னால்த்தான்
       மற்றவர்க்கு உதவுதது !

       பட்டம்பல பெற்றவர்கள்
       பண்புநிலை உயர்வதில்லை
       பணம்கொண்ட பலபேர்கள்
        குணம்கூட மாறமாட்டார்
        உவர்கொண்ட கடல்போல
         உளமெல்லாம் உயிர்ப்பின்றி
         அவர்வாழும் நிலையினைநாம்
         அகிலத்தில் காணுகிறோம் !

         கருணைக் கடலென
         கடவுளைக் கூறுகிறோம்
         கற்பனைக் கடலென்று
         கவிஞர்தமை அழைக்கின்றோம் 
         பரந்திருக்கும் காரணத்தால்
         பெருவாழம் கொண்டதனால்
         கடலெனவே கருதிநின்று
         உலகிலுள்ளோர் அழைக்கின்றார் !

         ஆழத்தை நோக்கிடினும்
         அகலத்தை நோக்கிடினும்
         மாக்கடலின் உவர்தன்மை
         மாறிவிட மாட்டாது
         உவர்தன்மை கொண்டகடல்
         உயர்வுக்குப் பொருத்தமன்று
         உள்ளமதில் அதையெண்ணி
        ஒருகணம்நாம் சிந்திப்போம் !

           மேலிருக்கும் மேகம்தான்
           கீழ்கடலை பயன்படுத்தும்
           மேலான பணிதன்னை
            மேதினியில் செய்கிறது
            மேலான குணமுடையார்
            வெளிவந்து நின்றுவிடின்
             கீழான குணமெல்லாம் 
             கிறுகிறுத்து ஓடிவிடும் !
   ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா ) 


image1.JPG