இலங்கைச் செய்திகள்


முன்னாள் போராளிகளுக்கு விசேட மருத்துவ பரிசோதனை

பம்­ப­லப்­பிட்டி குடி­யி­ருப்­பி­லி­ருந்து வெளி­யே­று­மாறு எமக்கு அழுத்தம் : தொடர்­மாடி குடி­யி­ருப்பு மக்கள் விசனம் (காணொளி இணைப்பு)

இலங்கையில்  காணாமல்போனோர் குறித்த விசேட உபகுழு  கூட்டம் ஜெனிவாவில்

இலங்கை தொடர்பில் எதனையும்  குறிப்பிடாத செய்ட்  அல் ஹூசேன் 

புதிய அதிபர் நியமனம் சட்டரீதியாகவே மேற்கொள்ளப்பட்டது கிளர்ச்சிக்கு பிள்ளைகளை பயன்படுத்தவேண்டாம்

24 வருடங்களின் பின்னர் மீன்பிடிக்க அனுமதி.!

இலங்கை அகதிகள் 90 பேர் நாடு திரும்பினர்














முன்னாள் போராளிகளுக்கு விசேட மருத்துவ பரிசோதனை

12/09/2016 வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற முன்னாள் போராளிகளுக்கான விசேட மருத்துவ பரிசோதனைகள் எதிர்வரும் வியாழன்(15) மற்றும் வெள்ளிக்கிழமைகளில்(16) முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.
இதனடிப்படையில் வியாழக்கிழமை மு.ப 8 மணிக்கு முல்லைத்தீவிலும் வெள்ளிக்கிழமையன்று பி.ப. 1 மணிக்கு வவுனியாவிலும், மு.ப. 8 மணிக்கு மன்னாரிலும், பி.ப. 4 மணிக்கு கிளிநொச்சியிலும் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாண வைத்தியசாலையில் இவ்வாரம் மருத்துவ பரிசோதனைகள் நடைபெறமாட்டாது.
இதேவேளை எதிர்காலத்தில்  வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மேற்படி மருத்துவ பரிசோதனைகள் நடைபெறவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி 














பம்­ப­லப்­பிட்டி குடி­யி­ருப்­பி­லி­ருந்து வெளி­யே­று­மாறு எமக்கு அழுத்தம் : தொடர்­மாடி குடி­யி­ருப்பு மக்கள் விசனம் (காணொளி இணைப்பு)

12/09/2016 பம்­ப­லப்­பிட்டி குடி­யி­ருப்­பி­லி­ருந்து வெளி­யே­று­மாறு எமக்கு அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றது. எவ்­வி­த­மான கரி­ச­னை­யு­மற்ற வகையில் 64 மாடி­களை கொண்ட தொடர்­மாடி குடி­யி­ருப்பில் எம்மை அடைத்து துன்­பு­றுத்­தவே அர­சாங்கம் விரும்­பு­கின்­றது என்று பம்­ப­ல­ப்பிட்டி தொடர்­மாடி குடி­யி­ருப்பு மக்கள் விசனம் தெரி­வித்­தனர்.
இந்தக் குடி­யி­ருப்பு தொகு­தியை வர்த்­தக நட­வ­டிக்­கை­க­க­ளுக்­காக பயன்­ப­டுத்­திக்­கொண்டு முதி­யோரையும் சிறு­வர்­க­ளையும் அநா­த­ர­வா­கவே பலரும் முயற்­சிக்­கின்­றனர். குறித்த விவ­கா­ரத்தில் உட­ன­டி­யாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­யிட்டு பிரச்­சி­னை­களை தீர்க்க முன்­வ­ர­வேண்டும் எனவும் அங்­குள்ள மக்கள் வேண்­டுகோள் விடுத்­தனர்.

குறித்த விடயம் தொடர்பில் பம்­ப­லப் பிட்டி குடி­யி­ருப்பு நலன்­புரி சங்கத் தலைவர் என்.ரகு­நந்தன், பம்­ப­லப்­பிட்­டியில் வசிக்­கின்ற சுமார் 300 குடும்­பங்கள் 10.5 ஏக்கர் நிலப்­ப­ரப்பில் பல தொகு­தி­க­ளாக வாழ்ந்து வரு­கின்­றனர்.
குறித்த மக்­களை தற்­போது புதிய வேலைத்­திட்­டத்­தின்கீழ் ஒரு ஏக்கர் நிலப்­ப­ரப்­புக்குள் 64 மாடி­களை கொண்ட தொடர்­மாடி குடி­யி­ருப்­புக்குள் முடக்க வேலைத்­திட்டம் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.
இது மிகவும் மோச­மான நட­வ­டிக்­கை­யாகும். இரு தலை­மு­றை­க­ளுக்கு மேற்­பட்ட காலம் வாழ்ந்த மக்­களை எவ்­வி­த­மான தூர­நோக்­கு­மின்றி ஒரு ஏக்கர் நிலப்­ப­ரப்­புக்குள் முடக்க நினைப்­பது மிகவும் வேத­னை­யான விட­ய­மாகும்.
மேலும் புதிய வீட­மைப்புத் திட்டம் மூல­மாக எங்­க­ளுக்­கான அடிப்­படை வச­திகள் எவையும் பூர்த்தி செய்­யப்­ப­டாது என்­பது எமக்குத் தெரியும். அவ்­வா­றி­ருக்கும் போது இத்­திட்­டத்தை ஆரம்­ பிப்­ப­தற்கு ஏன் இவ்­வாறு பிர­யத்­த­னங்­களை மேற்­கொள்­கின்­றார்கள் என்­பது தெரி­யா­ம­லுள்­ளது.
கொழும்பு மாந­கர சபை மற்றும் தேசிய வீட­மைப்பு அதி­கா­ர­சபை போன்­ற­வற்றின் ஊடாக அடிக்­கடி அறி­வித்­தல்­களும் அனுப்­பப்­ப­டு­கின்­றனர். இவை எல்லாம் சட்­டத்­துக்கு முர­ணா­ன­வை­யாகும். குறித்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து பிர­தமர் மற்றும் ஜனா­தி­ப­திக்கு கடிதம் அனுப்­பி­யுள்ளோம். பல அமைச்­சர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை மேற்­கொள்ள நட­வ­டிக்­கைகள் மேற்­கொண்டும் எவையும் பய­ன­ளிக்­க­வில்லை. இந்த நிலம் எங்­க­ளுக்குச் சொந்­த­மா­னது.
எங்­க­ளது உரித்­தின்றி எங்­க­ளுக்கு அழுத்தம் கொடுக்க முடி­யாது. குறித்த புதிய வீட­மைப்புத் திட்டம் மூலம் சுமார் 1098க்கும் மேற்­பட்ட மக்கள் பெரும் பாதிப்­ப­டைவர். முழு மை­யான எங்­க­ளது அடை­யா­ள­மாக உள்ள இந்­நி­லத்தை சூறை­யாட முயற்­சிக்க வேண்டாம்.
சிறு­வர்­களும் முதி­யோருமே அதி­க­மாக இக்­கு­டி­யி­ருப்பில் உள்­ளனர். அவர்களால் புதிய குடியிருப்பில் வாழ்வதென்பது மிகவும் கடினமாகும். இது மனிதாபிமானமற்ற செயற்பாடாகும். இந்த நிலப்பரப்பில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அறிகின்றோம். அப்படியாயின் அதற்கு ஏன் எங்களது குடியிருப்பை தேர்ந்தெடுத்தார்கள்? இவற்றுக்கெல்லாம் கூடிய விரைவில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்றார்.    நன்றி வீரகேசரி 














இலங்கையில்  காணாமல்போனோர் குறித்த விசேட உபகுழு  கூட்டம் ஜெனிவாவில்

13/09/2016 ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்  33 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை  தொடர்பில் நான்கு  உபகுழுக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. 
அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் நிறுவனம் பிரான்ஸ் நாட்டின் நிறுவனம் பசுமை தாயகம் அமைப்பு மற்றும் அனைத்து விதமான அநீதிகளுக்கும் எதிரான சர்வதேச இயக்கம் ஆகிய  அமைப்புக்களே  இலங்கை தொடர்பான உபகுழுக் கூட்டங்களை ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் நடத்தவுள்ளன. 
இலங்கையில் காணாமல் போனோர் குறித்த விவகாரம்  தொடர்பில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவை  வளாகத்தின் 27 ஆவது அறையில்  உபகுழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.  
அனைத்து விதமான அநீதிகளுக்கும் எதிரான சர்வதேச  இயக்கம்  என்ற அமைப்பு  நடத்தவுள்ள இந்த உபகுழுக் கூட்டத்தில் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின்  பிரதிநிதிகளுக்கும் இலங்கை பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். 
அத்துடன் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள்  இலங்கையிலிருந்து  ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும்  அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள்  இராஜதந்திரிகள் என  பலர் இந்த உபகுழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். 
இந்த உபகுழுக் கூட்டத்தில் இலங்கையில் காணாமல் போனோர் குறித்த  நிலைமைகள் மற்றும்  அதற்கான தீர்வு விவகாரம் குறித்து  கலந்துரையாடப்படும்.    இதில் தமிழர் தரப்பு  பிரதிநிதிகள் கலந்துகொண்டு   உரையாற்றவுள்ளனர்.   குறிப்பாக   வட மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன் மற்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோரும் இந்த உபகுழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 
நன்றி வீரகேசரி 














இலங்கை தொடர்பில் எதனையும்  குறிப்பிடாத செய்ட்  அல் ஹூசேன் 

13/09/2016 ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்  33 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமான  நிலையில்  ஆரம்ப உரையை நிகழ்த்திய   மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹூசேன்    இலங்கை குறித்து  எதனையும் பிரஸ்தாபிக்கவில்லை. 
இலங்கைக்கு கடந்த வருடம் விஜயம் செய்திருந்த பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான  ஐக்கிய நாடுகளின் செயற்குழு   தமது அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையிலும் அதற்கு இலங்கை பதிலளித்துள் சூழலிலும்  அது  தொடர்பில் எந்தவொரு விடயத்தையும் செய்ட் அல் ஹூசேன்  இன்று குறிப்பிடவில்லை.  
இன்றைய உரையில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த  செய்ட் அல் ஹூசேன்  பல்வேறு நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து  சுட்டிக்காட்டியிருந்தார். எனினும் இலங்கை  தொடர்பில்  ஹூசேன்  எதனையும் பிரஸ்தாபிக்கவில்லை.    நன்றி வீரகேசரி 











புதிய அதிபர் நியமனம் சட்டரீதியாகவே மேற்கொள்ளப்பட்டது கிளர்ச்சிக்கு பிள்ளைகளை பயன்படுத்தவேண்டாம்

13/09/2016 உடுவில் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய அதிபர் நியமனம் சட்டரீதியாகவே மேற்கொள்ளப்பட்டது.  இந்நியமனத்தில் எவ்விதமான அரசியல் தலையீடுகளும் இல்லை என தென்னிந்திய திருச்சபையின் பேராயர் டானியல் எஸ்.தியாகராஜா தெரிவித்தார்.
உடுவில் மகளிர் கல்லூரி புதிய அதிபர் நியமனம் தொடர்பில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை வட்டுக்கோட்டை தென்னிந்திய திருச்சபையின் பேராலயத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
பேராயர் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உடுவில் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய அதிபர் நியமனம் சட்டரீதியாகவே இடம்பெற்றது. மூன்றாம் தரப்பினரால் எங்களுடைய முயற்சிகளைக் கேலிக்கூத்தாக்குவதும் இடர் விளைவிப்பதும் வருந்தத்தக்க விடயமாகும். தவறான புரிந்துகொள்ளுதல், உண்மையை மறைத்தல்,  உண்மையை மூடுதல் காரணமாகவே இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 
192 வருட பாரம்பரிய மிக்க கல்லூரியில் சுமார் ஆயிரத்து 300 மாணவிகள் கல்வி கற்று வரும் நிலையில் 20, 30 பிள்ளைகளை வைத்துக்கொண்டு மூன்றாம் தரப்பினரால் எங்களுடைய முயற்சிகளைக் கேலிக்கூத்தாக்குவதும் இடர் விளைவிப்பதும் வருந்தத்தக்க விடயமாகும்.
இம்மாதம் 7ஆம் திகதி புதிய அதிபர் திருமதி ஜெபரட்ணத்திற்கு நியமன ஆராதனை வழிபாடு நடைபெற்றது. இதன்போது மூன்று அல்லது நான்கு ஆசிரியர்களைத் தவிர ஏனைய ஆசிரியர்கள், தென்னிந்திய திருச்சபையின் செயற்குழு உறுப்பினர்கள், ஆளுநர் சபை உறுப்பினர்கள்,  துறைத்தலைவர்கள் மற்றும் இதர நிறுவனங்களின் அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள். 

எனவே பிள்ளைகளை நீங்கள் படிக்க அனுப்புங்கள். பிள்ளைகளை நீங்கள் உங்களுடைய கிளர்ச்சிகளுக்காக பயன்படுத்தாதீர்கள். இங்கே பிள்ளைகள் ஏதாவது குறைகளில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு எவ்விதமான தண்டனையோ கண்டிப்புக்களோ இருக்கமாட்டாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அமைதிக்கு யாராவது பங்கம் விளைவித்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 
உடுவில் மகளிர் கல்லூரி பிரச்சினையானது ஒரு உள்வீட்டுப் பிரச்சினை. இதில் வெ ளியார் தலையீடு செய்து அதை பூதாகரமாக வெளிப்படுத்தி பிள்ளைகளை தெருவிலே வைத்து பிள்ளைகளுடைய நல் வாழ்க்கையை குலைத்திருப்பது வேதனைக்குரியது. அது தவிர எங்களுடைய தென்னிந்திய திருச்சபையைச் சேராத குருமார்களுக்கு இதிலே எந்தவிதமான தொடர்பும் இல்லை. உரித்துமில்லை. அவர்கள் தான் இதனை முன்னின்று நடத்துகிறார்கள். அவர்களிலே ஒரு குருவானவர் அரசாங்க பாடசாலையிலே கல்வி கற்பிக்கின்ற ஒரு ஆசிரியராவார்.  
எனவே மாணவ சமூகம் மற்றும் பெற்றோர் சமூகத்தை அன்போடு கேட்டுக் கொள்வது என்னவெனில்  எமக்கு ஒத்துழைப்புத்தாருங்கள். புதிய அதிபருடைய வழிகாட்டலின் கீழ் பிள்ளைகள் வளப்படுத்தப்பட இடம்கொடுங்கள். 
இதேவேளை இன்று (நேற்று) காலையிலே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் என்னைச் சந்தித்து கலந்துரையாடினார்கள். இவர்களுடன் எமது செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதன்போது குறித்த பெற்றோர்கள் மூன்று கோரிக்கைகளை விடுத்தார்கள். 
முதலாவதாக பழைய அதிபரை இரண்டு வருடங்களுக்கு வைத்திருங்கள் என்று கேட்டார்கள்.   இரண்டாவது பிள்ளைகளுக்கு ஏதாவது பழிவாங்கல்கள் இருக்கக்கூடாது என்று கூறினார்கள். மூன்றாவது ஆசிரியர்கள் யாராவது இதில் தவறாக சம்பந்தப்பட்டிருந்தால் நீங்கள்  நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.  
இதற்கு தெளிவாக அவர்களுக்குக்கு நான் பதிலளித்தேன். புதிய அதிபர் நியமிக்கப்பட்டு விட்டார். பொறுப்பெடுத்துவிட்டார். பழைய அதிபர் இழைப்பாறி விட்டார். ஆகவே முதலாவது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படமுடியாது என்று கூறினேன். . அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டார்கள். இரண்டாவது மூன்றாவது கோரிக்கைகள் நிச்சயமாக கவனத்தில் எடுப்பதாக உறுதியளித்தேன். 
அதுமட்டுமன்றி பெற்றோரின் பங்களிப்பை வைத்து கல்லூரியினை நடாத்துவதற்குரிய திட்டங்களை உருவாக்குவீர்களா எனக் கேட்டபோது இதற்கு மனப்பூர்வமான சம்மதத்தை நான் கொடுத்திருக்கிறேன். கல்லூரி தொடர்பான தவறுகள் பிரச்சினைகள் இருந்தால் அதனுடைய முகாமையாளர் இருக்கின்றார். அதற்குமேல் தலைவராகிய நான் இருக்கின்றேன். என்னுடைய கவனத்திற்கு எப்பொழுதும் கொண்டு வரலாம். அதற்கேற்ற நடவடிக்கை எடுத்து நல்ல முறையிலே கல்லூரி நடைபெறுவதற்கு ஒழுங்கு செய்வோம் எனத்  தெளிவாகக் கூறிக் கொள்கிறேன். 
இது தென்னிந்திய திருச்சபைப் பாடசாலை. தென்னிந்திய திருச்சபையின் பேராயருக்கே இறுதியான முடிவு எடுக்க முடியும்.  இப்பொழுது பேராயர் நான். எனக்கு முன்பிருந்த பேராயர்களும் கல்லூரிக்கு அதிபர்களை நியமித்தார்கள். தற்போது என்னுடைய பொறுப்பு. நான் நியமித்திருக்கிறேன் என்றார். நேற்று மாலை 5 மணியளவில்  புதிய அதிபரிடம் தனது கடமைகளையும் பொறுப்புக்களையும் முன்னாள் அதிபர் ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று வழமைபோல் பாடசாலை நடைபெறும்.   நன்றி வீரகேசரி 










24 வருடங்களின் பின்னர் மீன்பிடிக்க அனுமதி.!

14/09/2016 கிளிநொச்சி - இரணைதீவில் 24 வருடங்களின் பின்னர் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
இரணைதீவு மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக, நேற்று மாலை முதல் மீனவர்கள் அங்கு தங்கியிருந்து தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
யுத்தம் காரணமாக 1992 ஆம் ஆண்டின் பின்னர் இரணைத்தீவில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி 












இலங்கை அகதிகள் 90 பேர் நாடு திரும்பினர்

14/09/2016 இந்தியாவின் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் 90 பேர் இன்று (13) இலங்கை வந்தடைந்துள்ளனர்.
இதில் 45 பெண்கள் உட்பட 90 பேர் இலங்கை வந்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு இலங்கை வந்துள்ளவர்கள்யாழ்பாணம், அம்பாறை , மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 90 பேரையும் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி 






No comments: