வாழ்வின் சுமைகள் சுகமானது - முருகபூபதி

.
வாழ்வின்  சுமைகள்  சுகமானது  என்பதை  உணர்த்திய இலக்கிய  வாழ்வின்  முதல்  அத்தியாயம்
எனது  முதலாவது  நூல் - சுமையின் பங்காளிகள் வெளீயீட்டு  அனுபவம்



கடலும்  கடல்  சார்ந்த  நிலமும்  நெய்தல்  என  அழைக்கப்படுகிறது. ஐந்து   திணைகளில்  ஒன்றென  நெய்தல்  கருதப்பட்டாலும்,  இந்தத் தொன்மையான  தகவல்  ஏதும்  தெரியாமல் -  மழைக்கும் பாடசாலைப் பக்கம்   ஒதுங்காமல்  உழைப்பும்,  பரிசுத்த  வேதாகமும்தான் வாழ்க்கை   என  வாழ்ந்த  மக்கள்  மத்தியில்  பிறந்தேன்.
 எங்கள்  ஊரை  நீர்கொழும்பு  என  அழைப்பார்கள்.   கடலின் அலையோசையை  தினம்  தினம்  கேட்டவாறே   வளர்ந்தேன்.   எங்கள் வீட்டிலிருந்து  பார்த்தால்  கடல்  தெரியும்.   சிறுவனாக இருக்கும்பொழுது   எனது  விளையாட்டு  மைதானம்  எங்கள் கடற்கரைதான்.
இந்துசமுத்திரத்தாயின்   அரவணைப்பில்  வாழ்ந்த  கடற்றொழிலாளர் குடும்பத்துப் பிள்ளைகள்  எனது  பால்யகாலச்சிநேகிதர்கள். அவர்களின்  பேச்சுமொழியை   சிறுவயதிலேயே உள்வாங்கிக்கொண்டேன்.
சூரியன்   அஸ்தமிக்கும்  ரம்மியமான  காட்சியையும் அந்தக்கடற்கரையில்  நடு  இரவு  கடல்தொழிலுக்கு  புறப்படவிருக்கும் அந்த   ஏழைச்செம்படவர்கள்  மீன்பிடி  வலையில்  மீன்களினாலும் கடல்   பாறைகளினாலும்  அறுந்துபோன  நூல்களை இணைத்துக்கொண்டிருக்கும்  காட்சியையும்  ரசிப்பேன்.




எழுத்தாளனாக  1970   களில்   நான்  உருவானபொழுது,   நீர்கொழும்பு பிரதேசத்தின்   வீரகேசரி  நிருபராகவும்  பணிதொடங்கினேன்.   ஒரே சமயத்தில்  ஊடகவியலாளனாகவும்  படைப்பாளியாகவும்  என்னை வளர்த்துக்கொண்டமையால்   இன்றளவும்  இந்தப்பணிகள்  எனது ஆழ்ந்த   நேசத்துக்குரியன.
முதல்  கதை  கனவுகள்  ஆயிரம்.  யாழ்ப்பாணத்திலிருந்து  அன்று வெளிவந்த   மல்லிகை  இதழில்  1972  ஆம்  ஆண்டு  ஜூலை  மாதம் வெளியானது.    அக்கதை  நீர்கொழும்பு  பிரதேச  மீனவ  மக்களின் பேச்சுவழக்கையும்   அவர்களின்  வாழ்வுக்கோலங்களையும் சித்திரித்தமையால்   இலக்கிய  விமர்சகர்களின்  கவனத்தைப்பெற்றது.


எனது   கன்னிப்படைப்புக்கு   கிடைத்த  வரவேற்பினால்  மேலும்  சில சிறுகதைகளை   எழுதினேன்.   1975  ஆம்  ஆண்டிற்குள்  ஒரு தொகுதிக்குப்போதுமான   கதைகள்  எழுதிவிட்டேன்.
எனது   கதைகள்  பிரதேச மொழிவழக்கிற்கு  முக்கியத்துவம் தருவதாகக்கருதி,   பிற  பிரதேச வாசகர்கள்  அவற்றை புரிந்துகொள்வதற்கு    சிரமப்படுவார்கள்  என  நினைத்த  சில  பிரபல நளேடுகளின்  வார  இதழ்கள்  ஏற்றுக்கொள்ளவில்லை.
எனினும்   சிற்றிதழ்களான  மல்லிகை,   பூரணி,  மற்றும்  இலங்கை கம்யூனிஸ்ட்  கட்சி  இதழ்களான  புதுயுகம்,  தேசாபிமானி  என்பன அவற்றுக்கு   களம்  வழங்கியிருந்தன.
எனது   கதைகளைத் தொடர்ந்து  படித்து  ஊக்கமளித்த  மல்லிகை ஆசிரியர்   டொமினிக் ஜீவா,    ஒருநாள்  என்னை  சந்தித்தபொழுது சிறுகதைத்தொகுதியை   வெளியிடுமாறு  ஆலோசனை  வழங்கினார். ஆனால்,  அதற்குப்போதிய  பண  வசதி  என்னிடம்  இல்லை.



அச்சந்தர்ப்பத்தில்   நீர்கொழும்பில்  எனது  மாமா  முறையான மயில்வாகனன்  அவர்கள்  சாந்தி  அச்சகம் நடத்திக்கொண்டிருந்துவிட்டு,    சுகவீனம்  காரணமாக  அதனை  எனது நண்பர்கள்   யோகநாதன்,   நவரத்தினராசா  ஆகியோரிடம்  குத்தகை அடிப்படையில்   ஒப்படைத்தார்.
யோகநாதன்,    இலங்கை  சினிமாஸ்  லிமிடெட்டுக்குச் சொந்தமான  நீர்கொழும்பு  ராஜ்  சினிமா  தியேட்டரில்  இரவில்  ஓப்பரேட்டராக பணியாற்றிக்கொண்டு   சாந்தி  அச்சகத்தை  மேற்பார்வை  செய்தார். நவரத்தினராசாவுக்கு   அச்சுக்கோர்த்த  அனுபவம்  இருந்தது.   அவர் கொழும்பில்   சிலோன்  தியேட்டர்ஸ்  நிறுவனத்திற்குச்சொந்தமான அச்சகத்தில்  பணியாற்றிய  அனுபவம்  மிக்கவர்.

இந்த   நண்பர்களுடன்  இணைந்து  நாம்  முன்னர்  கல்வி  கற்ற விஜயரத்தினம்   மகா  வித்தியாலயத்தின்  பழைய மாணவர் மன்றத்தையும்   அந்தக்காலப்பகுதியில்  தொடக்கியிருந்தோம்.
நீர்கொழும்பின்   வீரகேசரி  நிருபராக  பணியாற்றிக்கொண்டே  நேரம் கிடைக்கும்   சந்தர்ப்பங்களில்   சாந்தி  அச்சகத்தில்  அச்சுக்கோர்த்துப் பழகினேன்.   அத்துடன்  அங்கு  பிரசுரங்கள்  இதழ்கள்,    மலர்கள் அச்சாகும்பொழுது   ஓப்புநோக்கியிருக்கின்றேன்.


அந்த    நண்பர்களிடம்  எனது  நூல்  வெளியிடும்  விருப்பத்தைச் சொன்னபோது   அவர்கள்  அச்சிட்டுத்தருவதற்கு  சம்மதித்தார்கள்.   சில  கதைகளை  நானே   அச்சுக்கோர்த்தேன்.   அங்கிருந்த செல்வராஜா   என்ற  அச்சுக்கோப்பாளரும்  உதவினார்.   அப்பொழுது அந்த    அச்சகத்தில்  திக்குவல்லை  எழுத்தாளர்  சங்கத்தின்  இளம் எழுத்தாளர்   ஒருவரின்  கவிதைத்தொகுப்பும்   புத்தளம் தில்லையடிச்செல்வன்   என்ற  எழுத்தாளரின்  விடிவெள்ளி  என்ற கவிதை    இதழும்  எழுத்தாளர்  சாந்தனின்  சிறுகதைத்தொகுதியும் கவிஞர்   ஈழவாணனின்  அக்னி  புதுக்கவிதை   இதழும் அச்சாகிக்கொண்டிருந்தன.
அதனால்   எனது  தொகுதி  வெளிவருவதில்  சற்று  தாமதம்  ஏற்பட்டது. கொழும்பில்  கல்வி  வெளியீட்டுத் திணைக்களத்தில்  அப்பொழுது பணியாற்றிய  ஓவியர்  ரமணி  எனது  நூலுக்கு  முகப்போவியம் வரைந்து    தருவதற்கு  சம்மதித்தார்.  எனது  முதல்  கதை   கனவுகள் ஆயிரம்.   அதனைத்தொடர்ந்து,   தரையும்  தாரகையும் ,  நான் சிரிக்கிறேன்,   அந்தப்பிறவிகள்,   எதற்காக?,   நம்பிக்கைகள் நம்பிக்கையற்றன,    சுமையின்   பங்காளிகள்,  விழிப்பு, விடிவைநோக்கி,   பேரலைகள்  மடிகின்றன  முதலான  சிறுகதைகளை 1972 - 1975   காலப்பகுதிக்குள்   எழுதியிருந்தேன்.    இதில் நம்பிக்கைகள்    நம்பிக்கையற்றன,    இலங்கை  வானொலி  சங்கநாதம்    நிகழ்ச்சியில்  நாடகமாக  நடிக்கப்பட்டு ஒலிபரப்பாகியிருந்தது.


வாழ்க்கை  அனுபவம்  மட்டுமல்ல  சுமைகளும்  நிரம்பியதுதான். அந்தச்சுமைகளை  பங்கேற்றுக்கொள்பவர்கள்  பலதரப்பட்ட இயல்புகளைக் கொண்டவர்கள்.   எனது  சுமையின்  பங்காளிகள், கடலை  நம்பி   வாழும்  ஏழைக்குடும்பத்தின்  கதை.   கணவன்  தனது உழைப்பின்   வருமானத்தை  குடித்தும்   சூதாடியும்   சீரழிக்கின்றான்.   இரண்டு குழந்தைகளுடன்   குடும்பச்சுமையை  ஏற்று  பரிதவிக்கும்  அந்த மனைவி   வருமானத்திற்காக  கசிப்பு (கள்ளச்சாராயம்)  விற்பனையில் ஈடுபடுகிறாள்.   அந்த  வருமானத்தையும்  அந்தக்கணவன் சுரண்டப்பார்க்கின்றான்.   இதனால்  அந்தக்குடிசையில்  சண்டை வருகிறது.    கணவனின்  சொற்பவருமானத்தை  நம்பி  தானும்  தனது குழந்தைகளும்   வாழவில்லை  என்ற  இறுமாப்புடன்  மனைவி சத்தம்போடுகிறாள்.    வீட்டில்  சட்டி  பானைகளும்   ஆயுதமாகின்றன. வீட்டை விட்டு    வெளியேறும்  குடிகாரக்கணவன்,  மனைவி  என்றும் பாராமல்   ஆணவத்தினால்  அவளுக்கு  பொலிஸிடம்  தண்டனை தேடித்தருவதற்காக  பொலிஸில் மனைவியின் இரகசிய கள்ளச்சாராய விற்பனை பற்றி புகாரிடுகின்றான்.
பொலிஸ்  வந்து  அவளை  ஜீப்பில்  ஏற்றிச்செல்கிறது.  ஊரே  வேடிக்கை பார்க்கிறது.  குழந்தைகள்   மண்ணில்  விழுந்து  புரண்டு   அழுது புலம்புகின்றன.   ஒரு  நாள்  கடக்கிறது.   விடிந்ததும்  குழந்தைகள் பசியில்   தாயைத்தேடுகின்றன.   குழந்தைகளின்  பசியைப்போக்க வழிதெரியாத   தந்தையான  அந்தக்குடிகாரக்கணவன்,   ஆழ்ந்து யோசிக்கின்றான்.   தனது  தவறை  உணர்ந்து,   மனைவியை சரீரப்பிணையில்   எடுத்துவருவதற்கு  பொலிஸ்   நிலையம் செல்கின்றான்.
இக்கதை   உண்மைச்சம்பவம்.   எனது  வீட்டருகில்  நடந்தது. அந்தக்குழந்தைகளின்   கண்ணீரைத்துடைத்து,  கடையில்  பாண் வாங்கிக்கொடுத்திருக்கின்றேன்.

அந்தக்கதை   நண்பர்  ஈழவாணனுக்கு  நன்கு  பிடித்துக்கொண்டது. அதனையே   தொகுதிக்கு  தலைப்பாக  வைக்குமாறு  சொன்னார். ஓவியர்   ரமணி  அந்தக்கதைக்கு  ஏற்ற  நவீன  ஓவியம்  வரைந்து தந்தார்.    அந்த  ஓவியத்தை  கொழும்பில்  புளக்செய்து  நூலை அச்சிடக்கொடுத்தேன்.

கையில்   பணம்  இல்லாமல்  எப்படியோ  அந்த  நூலை வெளிக்கொணர்ந்தேன்.   நூல்  வெளியீட்டு  விழா  நடத்தினால்  பணம் கிடைக்கும்   என்று  நண்பர்கள்  ஆலோசனை  சொன்னார்கள். மண்டபத்திற்கு   கொடுப்பதற்கும்  வாடகைப்பணம்  என்னிடம் இல்லை.
நீர்கொழும்பு   விஜயரத்தினம்  மகா  வித்தியாலயத்தின்  அப்போதைய அதிபர்   வ. சண்முகராசா  கலை,  இலக்கிய  ஆர்வலர்.   அவரிடம்  எனது நிலைமையைச் சொன்னேன்.   அவர்  பாடசாலை  மண்டபத்தில் நடத்துவதற்கு   முன்வந்ததுடன்,   நிகழ்ச்சிக்கும் தலைமைதாங்குவதற்கு    சம்மதித்தார்.    அழைப்பிதழும்  அச்சிட்டேன்.
அவருடைய    தலைமையில்  29-11-1975  ஆம்  திகதி  எனது  முதலாவது சிறுகதைத்தொகுதி   சுமையின்  பங்காளிகள்  வெளியீட்டு   விழா நடந்தது.   எனது  ஆரம்ப  வகுப்பு  ஆசிரியர்  அல்பிரட்  நிக்கலஸ் மாஸ்டர்,    அக்னி  ஆசிரியர்  ஈழவாணன்,    மல்லிகை  ஆசிரியர் டொமினிக்ஜீவா,   பூரணி  ஆசிரியர்  என்.கே. மகாலிங்கம்,   எமது நீர்கொழும்பு   இலக்கிய  வட்டத்தின்  தலைவர்  மு. பஷீர்  ஆகியோர் உரையாற்றினர்.


நண்பரும்    பின்னாளில்  தினபதி,   சிந்தாமணி   பத்திரிகையாளராக பணியாற்றியவருமான   செ. செல்வரத்தினம்  வரவேற்புரையும் கொழும்பு   விவேகானந்தா  கல்லூரி  அதிபராக  இருந்த  வ. நடராசா வாழ்த்துரையும்   நிகழ்த்தினர்.
எமது   ஊர்ப்பிரமுகர்கள்  ஜெயம்  விஜயரத்தினம்,   அ.வே. தேவராசா, பத்மநாதன்   செட்டியார்  ஆகியோர்  சிறப்புப்பிரதிகள் பெற்றுக்கொண்டு   வாழ்த்தினார்கள்.
அடுத்தடுத்த   வாரமே  மல்லிகை  ஜீவா  - யாழ்ப்பாணம்  வீரசிங்கம் மண்டபத்தில்   எனது  நூலுக்கு  அறிமுகவிழா  ஏற்பாடு  செய்து அழைப்பிதழும்    அச்சிட்டு  அனுப்பி  என்னை   வரவழைத்தார்.   நான்    1963  முதல்  1965  இறுதிவரையில்  யாழ்ப்பாணத்தில்   ஸ்ரான்லிக் கல்லூரியில்  ஆண்கள்  விடுதியில் தங்கியிருந்து    படித்திருக்கின்றேன்.   எனக்கு  அங்கு  சொந்த பந்தங்கள்   எனச்சொல்லிக்கொள்ள  எந்த  உறவும்  அன்று இருக்கவில்லை.
அதனால் Home sick  இல்   அங்கு  வாடிக்கொண்டிருந்துவிட்டு நீர்கொழும்புக்கு   திரும்பி  வந்து  படிப்பைத்தொடர்ந்தேன்.
1965   இல்  வடபகுதியை  விட்டு  ஒரு  மாணவனாக  வெளியேறிய  நான், 1975   இல் -  பத்து  ஆண்டுகளின்  பின்னர்  ஒரு  எழுத்தாளனாக திரும்பிவந்தேன்.
யாழ்ப்பாணத்தில்    எனது  நூலின்  அறிமுக  விழா  ஆசிரியர் சு. இராசநாயகம் தலைமையில்  நடந்தது.   இவர்  ஈழத்தின்  மூத்த எழுத்தாளர்.   இவர்  கொழும்பு  தினக்குரல்  ஞாயிறு  இதழின்  ஆசிரியர் பாரதியின்   தந்தை.    அந்த  விழாவில்தான்  பெரியவர் இராசநாயகத்தை   முதல்  முதலில்  சந்தித்தேன்.
அந்த   விழாவில்  மூத்த  எழுத்தாளர்கள்  மௌனகுரு,   செம்பியன் செல்வன்   ஆகியோர்  உரையாற்றினார்கள். யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த   பல  எழுத்தாளர்கள்  அன்று  வந்து  எனக்கு அறிமுகமானார்கள்.    இலக்கிய   விமர்சகர்   ஏ.ஜே. கனகரத்னா  எனது நூல்   பற்றி  அடுத்து  வந்த  மல்லிகை  இதழில்  விமர்சனம் செய்திருந்தார்.


   எனது  நூல்  வெளியிட்டிலிருந்து  கிடைத்த   பணத்தை   அச்சகத்திற்கு கொடுத்தேன்.    அன்று  எனது  நூலின்  இலங்கை  விலை  நான்கு  ரூபா. மொத்தம்  87  பக்கங்கள்.   எனது  தொகுதி  வெளிவருமுன்னரே  எனது கதைகளைப்படித்திருந்த   சிலர்  இதழ்களில்  தமது  மதிப்பீட்டை எழுதியிருக்கிறார்கள்.
எனது   முதல்  குழந்தைக்கு  ஈழத்து  இலக்கிய  உலகில்  நல்ல வரவேற்பிருந்தது.   அதனைப் படித்திருந்த  தமிழ்நாட்டின்  பிரபல இலக்கியவிமர்சகர்   பேராசிரியர்  நா. வானமாமலையும்  சிலாகித்து விமர்சனக்குறிப்பு   எழுதியிருக்கிறார்.
1976   ஆம்   ஆண்டு  ஒரு  நாள்  மாலை  7  மணியளவில்  எனது  நண்பர் செ.செல்வரத்தினம்   தனது  சைக்கிளில்  ஓடி வந்து  சொன்ன  செய்தி எனக்கு   இன்ப  அதிர்ச்சி  தந்தது.
எனது   நூலுக்கு  அந்த  ஆண்டுக்கான  சாகித்திய விருது கிடைத்திருப்பதாக   சில  நிமிடங்களுக்கு  முன்னர்  இலங்கை வானொலி   ஆறு மணி   செய்தியில்  சொல்லப்பட்டதாக  அவர் தெரிவித்தார்.
என்னால்   அதனை  நம்பமுடியவில்லை.   செய்தி  கேட்பதற்கும்  வீட்டில் வானொலிப்பெட்டி    இல்லாத  ஏழ்மை  தாண்டவமாடிய  காலம்.   அன்று   இரவு  பக்கத்து  வீட்டுக்குச்சென்று,  இரவு  ஒன்பது  மணி செய்தியில்   எனது  நூலுக்கு  கிடைத்துள்ள  விருது  பற்றிய  செய்தியை கேட்டேன்.
சாகித்திய  விழா  எமது  ஊருக்கு  அருகாமையில்  அத்தனகல்லை தொகுதியில்   பத்தலகெதர  என்ற  ஊரில் ஆசிரியபயிற்சிக்கல்லூரியில்  நடந்தபொழுது,   அன்றைய இலங்கையின்   முதல்  ஜனாதிபதி  வில்லியம்  கொபல்லாவ  சாகித்திய விருதுக்கான  காசோலையை   வழங்கினார்.
அந்த   நிகழ்ச்சிக்கு  செல்வதற்கும்  என்னிடம்  பணம்  இருக்கவில்லை. எனது   அக்காதான்  பஸ்  செலவுக்கு  பணம்  தந்து  அனுப்பினார்.
கணினி,    மின்னஞ்சல்,   டிஜிட்டல்  அச்சுமுறை   இல்லாத அந்தக்காலத்தில்   எனது  முதல்  நூல்  ஒவ்வொரு  எழுத்துக்களாகக் கோர்க்கப்பட்டு   வெளியானது.   ஆனால்,  இன்று  நிலைமை  முற்றாக மாறியிருக்கிறது.
இறுதியில்   சுமையின்  பங்காளிகள்  நூலின்  பிரதிகள்   எதுவும் கையில்   இல்லாத  நிலைக்கும்  நான்  வந்திருக்கின்றேன்.  சுமார்  500 பிரதிகள்தான்  அச்சிட்டேன்.   சில  பத்திரிகைகளுக்கும் விமர்சனத்திற்காக   கொடுத்தேன்.   ஆனால்,  எந்தப்பத்திரிகையிலும் அப்பொழுது   விமர்சனம்    வரவில்லை.   ஆனால்,  எனக்கு  சாகித்திய விருது   கிடைத்தவுடன்   பத்திரிகைகளில்  முன்பக்கத்தில்   விருது பெறும்    படத்துடன்   செய்திகள்  வெளியாகியிருந்தன.
1987   இல்  அவுஸ்திரேலியாவுக்கு  புலம்பெயர்ந்து  சுமார் 11 வருடங்களின்   பின்னர்  நீர்கொழும்பு  திரும்பியபொழுது என்னைச்சந்திக்க  வந்திருந்த  ஊடகவியலாளர்  கலாநெஞ்சன் ஷாஜகானிடம்   என்வசம்  சுமையின்  பங்காளிகள்  நூலின்  பிரதிகள் எதுவும்   இல்லை  என்று  கவலை   தெரிவித்தேன்.   அவர்  மறுநாள் திரும்பி   வந்து  தன்னிடமிருந்த  பிரதியை -  "  நூலின்  ஆசிரியருக்கே இந்த   நூல்  அன்பளிப்பு"   என்று    எழுதி  ஒப்பமிட்டு  தந்தபொழுது நெகிழ்ந்துவிட்டேன்.
 பின்னர்   அந்தத்தொகுதியின்  உதவியுடன்  இரண்டாவது  பதிப்பை 2007   ஆம்  ஆண்டு  எமது  குடும்பத்தின்  முகுந்தன்  பதிப்பகத்தின் சார்பில்   நவீன  கணினி  முறையில்  அச்சிட்டு வெளியிட்டிருக்கின்றேன்.   இதனை  கணினியில்  பதிவுசெய்து  தந்தவர்   அவுஸ்திரேலியாவில்  தற்பொழுது  95  வயதை கடந்துகொண்டிருக்கும்    இலக்கிய  ஆர்வலர்  கலைவளன்  சிசு. நாகேந்திரன்.
இரண்டாம்   பதிப்பை   கொழும்பில்  கிறிப்ஸ்  பதிப்பகம்  திரு. கிருஷ்ணமூர்த்தி   அச்சிட்டுத்தந்தார்.   இதற்கான  அட்டைப்படம் நீர்கொழும்பு   கடற்கரைக்காட்சி.   அந்த  ஒளிப்படத்தை எடுத்துத்தந்தவர்  நீர்கொழும்பைச்சேர்ந்த   நண்பர்   நாகேந்திரன்.
1975  இல்  எனது  முதலாவது  நூல்  சுமையின் பங்காளிகள் சிறுகதைத்தொகுப்பு    வெளியானது.    அதன்பின்னர்    இதுவரையில்   20   நூல்களை   வரவாக்கிவிட்டேன்.
எனினும் -  எனது  முதல் நூல்  வெளியீட்டு  அனுபவம்,   பல  முதல்  நிகழ்வுகள் வாழ்வில்   மறக்கமுடியாதிருப்பது  போன்று  நினைவில்  இன்றும் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது.
சுமைகள்   வாழ்வில்   சுகமானவை.    சுமையின்   பங்காளிகள் நினைவும்    துயரங்களைக்கடந்து    சுகமானவை.
(நன்றி:  வீரகேசரி  சங்கமம் - இலக்கியக்களம் 10-09-2016)
----0---
letchumananm@gmail.com

No comments: