15/04/2016 வடக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் மூலம் வீடுகளைப் பெற்றுக்கொள்ளும் பயனாளிகளின் பெயர் விபரங்கள் இணையத்தளம் ஊடாக பகிரப்பட்டுள்ளன. 
இந்த பெயர் விபரங்கள் மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத விவகார அமைச்சின் ( resettlementmin.gov.lk ) இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 
இதன் முதல் கட்டமாக யாழ். மாவட்டத்தின் சாவகச்சேரி, ஊர்காவற்றுறை, மருதங்கேணி மற்றும் சண்டிலிப்பாய் பிரதேசங்களுக்கான வீட்டுப் பயனாளிகளின் பெயர் விபரங்கள் இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 
65 ஆயிரம் வீடுகளுக்கு உரித்துடைய பயனாளிகளை தெரிவு செய்யும் பணிகள் பிரதேச செயலக மட்டத்தில் அந்தந்த மாவட்ட செயலகங்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 
வீடமைப்புத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள பயனாளிகள் தொடர்பிலான மீளாய்வுக்காகவும், உறுதிப்படுத்தலுக்காகவும், அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையை எடுத்துக் காட்டுவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நன்றி வீரகேசரி