நான் ரசித்த கார்த்திகாவின் நாட்டிய சங்கமம் - பாணு

.

நாட்டிய சங்கமம் என்ற நிகழ்ச்சி கடந்த 31.05.2014 அன்று Bahai Center இல் நடை பெற்றது .எமது வழமையான அரங்க நிகழ்வுகள் போலல்லாது குறிப்பிட்ட படி நிகழ்ச்சி 6.30 மணிக்கு ஆரம்பமாகி 9.30 இற்கு நிறைவேறியது. நிகழ்ச்சி அமைப்பாளர்கள் நேரத்திற்கு கொடுத்த முக்கியத்துவம் வரவேற்க வேண்டியதே .
அலாரிப்பூ என்ற சபைக்கு வந்தனத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியது .நேர்த்தியான அஞ்சலியை அடுத்து விநாயகருக்கு வணக்கம் இரு பெண்கள் அருமையாக ஆடி சபையின் கரகோசத்தை பெற்றனர் .வெண்மையான உடை நாட்டியத்திற்கு மேலும் மெருகூட்டியது. எந்தவித நேர தாமதமும் இன்றி ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ச்சி நடை பெற்ற வண்ணமே இருந்தது . அழகிய வர்ண உடைகள், வேறுபட்ட நடனங்கள் ,ஆடியவர் பெரியவரோ சிறியவரோ தமது நடனத்தை திறம்பட ஆடினார்கள்.





நடராஜர் கௌத்துவம் ஆடலிலே சிதம்பர கோவில் சிற்பங்களில் காணும் சிவனாரின் நடன நிலைகளை காணமுடிந்தது.சின்னஞ்சிறு கண்ணன்களும் கோபியரும் கோகுலத்தை ஞாபகப்படுத்தி மறைந்தனர். குச்சிப்புடி நடனங்கள் அதற்கே உரிய நளினம், துரிதம் வசீகரம் என பரதநாட்டியத்தின் ஆடலில் இருந்து வேறுபட்டு திகழ்ந்தது .குச்சுப்பிடியின் நளினத்துடன் பாலகோபாலன் தங்கத் தாம்பாளத்தின் விளிம்பிலே நின்று தலையில் செம்புடன் தாளம் தவறாது ஜதிகளை ஆடியது பலரை வியக்கவைத்தது. சிலரோ இருக்கையின் நுனிக்கே வந்துவிட்டனர். எங்கே தலையில் இருக்கும் செம்பு தவறி விழுந்து விடுமோ என்றபயம்.ஆனால் ஆடிய பெண் அனாயாசமாக ஆடி அசத்திவிட்டார் .

அடுத்துவந்த பொலிவூட் நடனம் பெயருக்கேற்ப அழகிய பெண்கள் வட இந்திய பாணியில் உடை அணிந்து தேவதாஸ் படத்தின் "டோலாரே டோலாரே"  பாடலை சினிமா மோஸ்தரில் ஆடி முடித்தனர்.ஒன்றரை மணி நேரத்தில் ஒரு நாட்டிய சங்கமத்தை கண்டு களி த்தோம். நேரம் போனதே தெரியாது நடனம் எம்மை கவர்ந்திருந்தது .


மண்டபம் நிறைந்த கூட்டம் ஆகையால் உணவு பெற்றுக்கொள்ள நீண்ட வரிசை. நிகழ்ச்சி 20 நிமிட இடை வேளையின் பின் ஆரம்பமாகியது


."தில்லை சிதம்பர குறவஞ்சி நடராஜர்  நர்த்தனம் புரிய, தேவ நர்த்தகிகள் சாமரம் வீச , ஆராத்தி எடுக்க ,நாதஸ்வர வாத்தியத்துடன் ஊர்வலம் வந்தார்.நர்த்தன மூர்த்தியான நடராஜர். பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்த இளநங்கை சிவனாரின் கம்பீர தோற்றத்தை கண்டு தன்னை இழக்கிறாள்  மோக கிழற்சியால் மன்மத பானம்  தாக்க குளிர்ந்த நிலவும் அனலாக வாட்டுகிறது.


நாட்டு வளம் கூறி வந்தனர் குறத்தியர் , நகரத்திற்கு வந்தவரை  தோழி அழைத்துச் செல்கிறாள் தலைவிக்கு குறிபார்க்க. குறும்புக்கார குறத்தியோ  பலவாறாக குறிசொல்லி கடைசியிலே சிதம்பரனாதரை நாள் மூன்றில் அடடைவாய் எனக்  கூறினாள் . இறுதியாக ஓம் நமசிவாய நாமத்துடன் தலைவி இறைவனை அடைகிறாள் . இருவரும் இணைந்ததற்கான இணை நடனத்துடன் நாட்டியம் இனிதே நிறைவேறியது .இத்தனை அழகான நாட்டியத்தை தயாரித்து மேடையேற்றி இலவசமாக ரசிகர்களை அழைத்து பார்க்கவைத்த கார்த்திகா கணேசருக்கு பாராட்டுக்கள் பல பல.













No comments: